இந்த நிலையில், திருவண்ணாலை எஸ்.பி கார்த்திகேயனின் பரிந்துரையின்படி, சிறையில் அடைக்கப்பட்டிருந்தவர்களில் அருள், பச்சையப்பன், தேவன், சோழன், திருமால், மாசிலாமணி, பாக்கியராஜ் ஆகிய 7 பேர்மீதும் குண்டர் சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுத்திருக்கிறார் மாவட்ட ஆட்சியர் முருகேஷ். இவர்கள் 7 பேருமே சிப்காட் எதிர்ப்பு இயக்க நிர்வாகிகளாகக் கருதப்படுவதால், போராட்டத்தை ஒடுக்கும் நோக்கத்துடன் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாகக் குற்றஞ்சாட்டி, குண்டர் சட்டத்துக்கு எதிராக கடும் எதிர்ப்புகளும் கிளம்பியிருக்கின்றன.


இதுதொடர்பாக, குண்டர் சட்டம் பாய்ந்திருக்கும் 7 பேரின் வீடுகளுக்கும், திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து அறிவிப்புக் கடிதம் ஒன்றும் அனுப்பி வைக்கப்பட்டிருக்கிறது. மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) வெற்றிவேல் என்பவர் கையொப்பமிட்டபடி, அந்தக் கடிதம் அனுப்பப்பட்டிருக்கிறது.
அதில், சம்பந்தப்பட்ட நபர்களின் பெயர்களைக் குறிப்பிட்டு ‘‘இவர் ஒரு ‘குண்டர்’ எனத் தீர்மானித்து, 1982-ம் ஆண்டு தமிழ்நாடு கள்ளச்சாராயக்காரர்கள், கணினிவெளிச் சட்டக் குற்றவாளிகள், மருந்து சரக்கு குற்றவாளிகள், வனக்குற்றவாளிகள், பாலியல் குற்றவாளிகள், குடிசைப்பகுதி நில ஆக்கிரமிப்பாளர்கள் மற்றும் காணொலி திருடர்கள் ஆகியோரின் அபாயகரமான நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின்கீழ் சம்பந்தப்ப நபர் பொதுஒழுங்கு மற்றும் பொது அமைதி பராமரிப்புக்கு குந்தமாக செயல்பட்டிருக்கிறார். ஆகையால், இதனை தடுக்கும் பொருட்டு மதுரை மற்றும் பாளையங்கோட்டை ஆகிய மத்திய சிறைச்சாலைகளிளுக்கு மாற்றப்பட்டு, தடுப்புக்காவலில் 15-11-2023 அன்று முதல், அடைக்கப்பட்டுள்ளார்’’ என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது.
இந்தக் கடிதம் கிடைக்கப் பெற்ற பிறகே, மதுரை மற்றும் பாளையங்கோட்டைச் சிறைகளுக்கு, அவர்கள் மாற்றப்பட்டிருக்கும் விவரமே 7 பேரின் குடும்பங்களுக்கும், போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளுக்கும் தெரியவந்திருக்கிறது. அந்த அளவுக்கு ரகசியமாக, இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வந்ததாகவும் சர்ச்சை வெடித்திருக்கிறது.
நன்றி
Publisher: www.vikatan.com