நாட்டின் விடுதலைக்காகப் போராடிய சுதந்திரப் போராட்ட வீரரொருவர், மத்திய அரசின் பென்ஷனுக்காக 40 ஆண்டுகளாகக் காத்திருப்பதைக் கண்டறிந்த டெல்லி உயர் நீதிமன்றம், சம்பந்தப்பட்ட நபருக்கு வட்டியுடன் சேர்த்து மொத்த பென்ஷனையும் வழங்குமாறு மத்திய அரசுக்கு ரூ.20,000 அபராதத்துடன் உத்தரவிட்டிருக்கிறது. இந்த வழக்கு தொடர்பாக வெளியான தகவலின்படி, சுதந்திரப் போராட்ட வீரரின் பெயர் உத்தம் லால் சிங் (96). 1927-ல் பிறந்த இவர், வெள்ளையனே வெளியேறு இயக்கம் உட்பட பல பல சுதந்திரப் போராட்டங்களில் கலந்துகொண்டதாகவும், 1943-ல் பிரிட்டிஷ் அரசாங்கத்தால் குற்றவாளியாகப் பிரகடனப்படுத்தப்பட்டவர் என்றும், நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.


முன்னதாக, 1982-ல் மத்திய அரசின் ஸ்வதந்த்ரதா சைனிக் சம்மன் பென்ஷனுக்கு இவர் விண்ணப்பித்திருக்கிறார். அதையடுத்து, 1983-ல் பீகார் அரசால் இவரின் பெயர் மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டிருக்கிறது. பின்னர், 2009-ல் மீண்டும் வலியுறுத்தப்பட்டிருக்கிறது. இருப்பினும் 2017-ல், உத்தம் லால் சிங்கின் பதிவுகள் எதுவும் உள்துறை அமைச்சகத்திடம் இல்லை என்று கூறிய மத்திய அரசு, அது தொடர்பான ஆவணங்களின் சரிபார்க்கப்பட்ட நகல்களை மீண்டும் அனுப்புமாறு பீகார் அரசிடம் கூறியிருக்கிறது. அதைத் தொடர்ந்து, 2022-ல் ஜூலை 14-ம் தேதி, ஆவணங்களைச் சரிபார்த்து அவற்றை மீண்டும் மத்திய அரசுக்கு அனுப்பியது பீகார் அரசு. ஆனாலும், சுதந்திரப் போராட்ட வீரருக்கு பென்ஷன் கிடைக்கவில்லை.
நன்றி
Publisher: www.vikatan.com