கடந்த டிச.3, 4ம் தேதிகளில் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரத்தை புரட்டி எடுத்தது, மிக்ஜாம் புயல். இந்த சுவடு காய்வதற்குள் டிசம்பர் 17, 18 தேதிகளில் நெல்லை, குமரி, தென்காசி, தூத்துக்குடியில் கொட்டிய கனமழையின் காரணமாக சம்பந்தப்பட்ட மாவட்டங்கள் தத்தளித்து வருகிறது. வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்ததால் பொதுமக்களின் இயல்பு வாழ்கை பெரிதும் பாதிக்கப்பட்டிருக்கிறது. பொதுமக்கள் மீட்கப்பட்டு ஆங்காங்கு அமைக்கப்பட்டுள்ள முகாம்களில் தங்கவைக்கப்பட்டிருக்கிறார்கள். சில பகுதிகளில் உணவு ஹெலிகாப்டரில் விநியோகிக்கும் நிலை ஏற்பட்டிருக்கிறது. இதற்கிடையில் டெல்லி சென்ற முதல்வர் மு.க.ஸ்டாலின், அங்கு செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

அப்போது, “கடந்த 17, 18ம் தேதிகளில் நெல்லை, குமரி, தென்காசி, தூத்துக்குடியில் கடுமையான மழை பெய்தது. தூத்துக்குடி, திருநெல்வேலியில் பாதிப்பு அதிகம். ஆனால் டிசம்பர் 17, 18-ம் தேதிகளில் கடுமையான மழை பெய்யும் என்பதை 17-ம் தேதி தான் சென்னை வானிலை ஆய்வு மையம் தகவலாக அளித்தது. அவர்கள் கணித்த அளவை விடபல மடங்கு அதிகமாக பெய்தது மழை. இவ்வாறு வானிலை ஆய்வு மையத்தின் எச்சரிக்கை தாமதமாக கிடைத்தாலும், மழை பொழிவு கணித்ததை விட அதிகமாக இருந்தாலும், தமிழக அரசு மீட்பு பணிகளை விரைந்து செயல்படுத்தி வருகிறது. 12 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டும் 141 முகாம்களில் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டுள்ளனர்” என்றார்.
இதேபோல் பால்வளத் துறை அமைச்சர் மனோதங்கராஜ், “இந்திய வானிலை ஆய்வு மையத்தின் கணிப்புகள் துல்லியமாகவும், சரியான நேரத்திலும் கொடுக்கப்பட்டிருக்க வேண்டும். அப்படி நடந்திருந்தால் எதிர்பாராத பாதிப்பும், அதன் தீவிரத்தன்மையும் குறைக்கப்பட்டிருக்கும். ஆனால் மிக குறுகிய காலத்திலேயே ரெட் அலர்ட் கொடுக்கப்பட்டது. உடனேயே வெள்ளப்பெருக்கு தொடங்கிவிட்டது. நமது வானிலை முன்னெச்சரிக்கை அறிவிப்புகளில் ஏற்படும் முக்கியமான தாமதம், நமக்கு இன்னும் துரிதமான துல்லியமான எச்சரிக்கை முறைகள் தேவை என்பதை உணர்த்துகிறது.

அதி கனமழை மற்றும் உடனடி மழைப்பொழிவு போன்ற நிகழ்வுகள் மேற்கு நாடுகளில் மிக துல்லியமாக கணிக்கப்படுகின்றன. இந்த வேறுபாடு, நமது தயாரிப்பு மற்றும் வெள்ள மீட்பு பணிகளை பாதிக்கிறது” என்றார்.
இதுகுறித்து நம்மிடம் பேசிய பூவுலகின் நண்பர்கள் அமைப்பை சேர்ந்த சுந்தர்ராஜன், “இந்திய வானிலை ஆய்வு மையம் உலகளாவிய முன்னறிவிப்பு அமைப்பு மாதிரியைப் பயன்படுத்தி வருகிறது. இதில் துல்லியமாக தகவல்களை பெற முடியாது. எனவே குறுகிய நிலப்பரப்பில் நிலவும் மாற்றங்களைக் கண்டறியும் வகையில் மீசோ ஸ்கேலிங், டவுன்ஸ்கேலிங் மாதிரிகளைப் பயன்படுத்தி தமிழ்நாட்டிற்கு என பிரத்யேக வானிலை ஆய்வு மையத்தை உருவாக்க வேண்டும். இந்த கோரிக்கையை பல ஆண்டுகளாக முன்வைத்து வருகிறோம்.

ஒருவழியாக கடந்த 2022 பட்ஜெட்டில் ரூ.10 கோடி ஒதுக்குவதாக அறிவித்தார்கள். ஆனால் அடுத்தகட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை. இதனால் பொதுமக்கள்தான் பாதிக்கப்பட்டு வருகிறார்கள்” என கொதித்தார். ஆனால் இதை இந்திய வானிலை ஆய்வு மைய தென் மண்டலத் துணைத் தலைவர் பாலச்சந்திரன் முற்றிலும் மறுத்திருக்கிறார். “டிசம்பர் 15, 16-ம் தேதிகளில் கன மழை முதல் மிக கன மழை வரை பெய்யும் என்றும், 17-ம் தேதி அதி கன மழைக்கான ரெட் அலர்ட்டும் கொடுக்கப்பட்டது. 20 செ.மீக்கு மேல் பெய்யும் எந்த மழையும் அதி கனமழையாகவே கருதப்பட வேண்டும். குறிப்பிட்டு இவ்வளவு மழை பெய்யும் என கூற முடியாது” என்றார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/46c3KEk
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/46c3KEk
நன்றி
Publisher: www.vikatan.com