தொடங்கிய சில நாள்களிலேயே இது ஒரு கொடூரமான பதுங்கு குழி போராட்டமாக ஆனது. இரு தரப்பிலுமே பல ஆழமான தொடர் பதுங்கு குழிகளை வெட்டியிருந்தனர். இரு தரப்பிலுமே பெருமளவில் இறப்புகள் நிகழ்ந்தன. இதற்கு முக்கிய காரணம் ஷெல்கள் எனப்படும் வெடிகுண்டுகள்தான். இரு தரப்பிலுமாகச் சேர்த்து மொத்தம் குறைந்தது 7,00,000 பேர் இறந்தனர் என்கிறது புள்ளிவிவரம். இதில் ராணுவத்தினர் பொதுமக்கள் ஆகிய அனைவரும் அடக்கம்.
பிரெஞ்சு ராணுவத்தினர், வெர்டுன் நகரை ஜெர்மனி வசம் இழந்தால் அது அவர்களுக்கு மாபெரும் வெற்றி என்றாகிவிடும் என்பதை அறிந்திருந்தனர். எனவே எப்பாடுபட்டும் அந்த நகரைத் தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்பதற்காக உயிரைக் கொடுத்துப் போராடினர். என்றாலும் தொடக்கத்தில் அங்கிருந்த சில கோட்டைகள் ஜெர்மனி வசமாயின.


இதற்குப் பதிலடியாக வெர்டுனுக்கு வடக்கிலும் கிழக்கிலும் உள்ள சொம்மா நதிக் கரையில் பிரான்ஸ் மற்றும் பிரிட்டன் ராணுவம் இணைந்து ஜெர்மன் ராணுவத்துக்கு எதிராகத் தாக்குதல் (Battle of the Somme) நடத்தத் திட்டமிட்டன. என்றாலும் வெர்டுன் போர் பாதிப்பினால் பெருத்த அடி வாங்கி இருந்த பிரான்ஸால் சொம்மா போரில் அதிக அளவில் தங்களை இணைத்துக் கொள்ள முடியவில்லை. பிரிட்டிஷ் சைனியம் ஓரளவு பிரெஞ்சுப் படை வீரர்களுடன் இதில் முன்னேறியது.
ஜூலை 1, 1916 அன்று பிரிட்டன் பீரங்கித் தாக்குதலைத் தொடங்கியது. ஜெர்மானிய ராணுவ வீரர்கள் பதுங்கியிருந்த பதுங்கு குழிகளின் மீது தொடர்ச்சியாகத் தாக்குதல் நடத்தத் தொடங்கியது. கனரக பீரங்கிகள் அதிகம் பயன்படுத்தப்பட்டன. லட்சக்கணக்கில் ஷெல்கள் வீசப்பட்டன.
நன்றி
Publisher: www.vikatan.com