பா.ம.க நிறுவனர், ராமதாஸ்:
“தமிழ்நாட்டில் கடந்த நான்கு நாட்களில் நடைபெற்ற மூன்றாவது பட்டாசு ஆலை விபத்து இதுவாகும். பட்டாசு ஆலைகள் தொடர்பான பாதுகாப்பு விதிகள் முழுமையாக நடைமுறைப்படுத்தப்படாதது தான் இத்தகைய விபத்துகள் அதிகரிப்பதற்கு காரணம். பட்டாசு ஆலை பாதுகாப்பு விதிகளை தீவிரமாக நடைமுறைப்படுத்தி இத்தகைய விபத்துகளை தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். விபத்தில் காயமடைந்த அனைவருக்கும் தரமான மருத்துவம் அளிக்கப்படுவதை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும். உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.25 லட்சம் வீதம் இழப்பீடு வழங்க தமிழக அரசு முன்வர வேண்டும்!” என பா.ம.க நிறுவனர் ராமதாஸ் குற்றச்சாட்டுடன் கோரிக்கை வைத்திருக்கிறார்.
அதேபோல பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ், “நாட்டு வெடி ஆலைகள் மற்றும் பட்டாசு ஆலைகளில் பின்பற்றப்பட வேண்டிய பாதுகாப்பு விதிகளை கடுமையாக்க வேண்டும்; ஒழுங்குமுறை கட்டமைப்பை வலுப்படுத்த வேண்டும் என்று பா.ம.க. தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. ஆனால், அதற்கு செயல்வடிவம் கொடுக்க அரசு நடவடிக்கை எடுக்காததால் தான் இத்தகைய விபத்துகள் தொடர்கதையாகின்றன. இனிவரும் காலங்களிலாவது பாதுகாப்பு விதிகளை கடுமையாக்கி இத்தகைய விபத்துகளைத் தடுக்க வேண்டும்!” என்றிருக்கிறார்.


சி.பி.ஐ மாநில செயலாளர், முத்தரசன்:
“தமிழ்நாட்டில் அத்திப்பள்ளி பட்டாசுக் கடை விபத்து போன்ற கோர விபத்துகள் தொடா்ந்து நடைபெறுகின்றன. ஒரு விபத்து உணா்த்தும் படிப்பினையில், அடுத்து தேவையான பாதுகாப்பு மற்றும் விபத்துத் தடுப்பு ஏற்பாடுகளில் கடுமையான நடைமுறைகள் ஏன் பின்பற்றப்படவில்லை என்ற கேள்வி எழுகிறது. வெடி விபத்தில் உயிரிழந்த குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்கவும், எதிா் காலத்தில் விபத்து தடுப்பு மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகளில் தேவையான திருத்தங்களைச் செய்து, வரைமுறைகளை உருவாக்கி, கடுமையாக அமல்படுத்த வேண்டும்!” எனத் தெரிவித்திருக்கிறார்.
நா.த.க தலைமை ஒருங்கிணைப்பாளர், சீமான்:
“தில்லையாடி வெடிவிபத்துக்குப் பிறகாவது தி.மு.க அரசு தமிழ்நாடு முழுவதுமுள்ள பட்டாசு மற்றும் நாட்டு வெடி தயாரிக்கும் ஆலைகளில் முறையான சோதனைகள் செய்திருந்தால், அரியலூரில் வெடி விபத்து நிகழாமலே தடுத்திருக்க முடியும். திமுக அரசின் அலட்சியப்போக்கே தற்போது அரியலூர் வெடிவிபத்தில் பலர் பலியாக முக்கியக் காரணமாகும். ஒவ்வொரு ஆண்டும் அவ்வப்போது தமிழ்நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் வெடிவிபத்துக்கள் நிகழ்வதும், அவை ஒரு நிமிட செய்தியாவதும், தமிழ்நாடு அரசும் தனது கடமைக்கு சொற்பத் தொகையை இழப்பீடாக வழங்கிவிட்டு கடந்து செல்வதும் தொடர்கதையாகிவிட்டது. அதனை நிரந்தரமாக தடுக்க இன்று வரை தமிழ்நாடு அரசு எவ்வித ஆக்கப்பூர்வமான நடவடிக்கையும் எடுக்கவில்லை. பட்டாசு உரிமையாளர்கள் உரியப் பாதுகாப்பு முன்னேற்பாடுகளையும், அடிப்படை விதிகளையும் காற்றில் பறக்கவிடப்படுவதும், அதனை அதிகாரிகள் அலட்சியப்போக்கோடு கையாளுவதும், பட்டாசு விபத்துகளின் வீரியம் தெரிந்தும் அதனை கண்டும் காணாதிருக்கும் அரசின் மெத்தனமும்தான் பட்டாசு ஆலை விபத்துகள் தொடர்வதற்கு அடிப்படை காரணங்கள்!” என நா.த.க ஒருங்கிணைப்பாளர் சீமான் குற்றம் சாட்டியிருக்கிறார்.
`இதில் தேவை, விபத்துக்குப் பிறகான நிவாரணம் அல்ல… விபத்து நடக்காமல் இருக்க எடுக்கப்படும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையே!’ என்பதை அரசு நிர்வாகம் புரிந்து கொள்ள வேண்டும்!
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்…
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்…
நன்றி
Publisher: www.vikatan.com