மத்திய அரசின் நலத்திட்டங்களை மக்களிடம் அறிமுகப்படுத்து விதமாக, நாடுமுழுவதும் மத்திய அரசு “விக்சித் பாரத் சங்கல்ப யாத்ரா’ என்ற பிரசாரத்தை முன்னெடுத்து வருகிறது. அதன் ஒருபகுதியாக இன்று சென்னை, கோடம்பாக்கத்தில் தொடக்கவிழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தொடங்கிவைத்தார். அப்போது பேசிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், “நாடு முழுவதும் பயன்பாட்டில் இருக்கக்கூடிய வந்தே பாரத் ரயில், தமிழ்நாட்டில்தான் தயாரிக்கப்படுகிறது.


அதை நாங்கள் தமிழ்நாட்டிற்குத் தந்திருக்கிறோம். தமிழ்நாட்டில் நான்கு வந்தே பாரத் ரயில்கள் பயன்பாட்டில் இருக்கிறது. இந்திய நிதி ஆணைய அறிக்கையின்படியே மாநிலங்களுக்கு நிதி வழங்கப்படுகிறதே தவிர, நிதிப் பங்கீட்டில் எந்த அரசியல் நோக்கமுமில்லை. தமிழ்நாட்டிற்கு மத்திய அரசால் 2014 முதல் 2023 மார்ச் வரை வழங்கப்பட்ட நிதி ரூ.2,88,627 கோடி. மானியமாக ரூ.2,58,338 கோடி கொடுக்கப்பட்டிருக்கிறது. மேலும் கொரோன ஊரடங்கிற்குப் பிறகு சிறப்பு உதவியாக வட்டியில்லாக் கடனாக ரூ.6,412 கோடி வழங்கப்பட்டிருக்கிறது. தமிழ்நாட்டிடமிருந்து வாங்கியதைவிடவும் அதிகமாக கொடுத்திருக்கிறோம். 2014-2023 மார்ச் வரை தமிழ்நாட்டிடமிருந்து மத்திய அரசு ரூ.6.23 லட்சம் கோடியை வரியாக பெற்றிருக்கிறது. ஆனால் இதே காலகட்டத்தில் தமிழ்நாட்டுக்கு மத்திய அரசு ரூ.6.96 லட்சம் கோடியைக் கொடுத்திருக்கிறது.
நன்றி
Publisher: www.vikatan.com