`அடுத்தடுத்து அதிர்ச்சி' எண்ணூர் எண்ணெய்க் கழிவுகளை

மிக்ஜாம் புயல் மழையின்போது மணலி சி.பி.சி.எல் நிறுவனத்தில் இருந்து வெள்ளநீரோடு கலந்துவிட்ட கச்சா எண்ணெய்க் கழிவுகள் பக்கிங்காம் கால்வாய், கொசஸ்தலை ஆறு, எண்ணூர் கழிமுகம், கடல்பரப்பு அவற்றில் வாழும் உயிரினங்கள் மட்டுமல்லாமல் மீனவப் படகுகள், குடியிருப்புகள், கடைகள், வீடுகள் என வட சென்னையின் பல கிராமங்களையே சீரழித்துள்ளது. எண்ணெய்க் கழிவுகள் மூலம் சுற்றுச்சூழலையும், மக்களின் வாழ்வாதாரத்தையும் கேள்விகுறியாக்கிய நிறுவனம் தற்போது அரசின் உத்தரவின்பேரில் மேற்கொண்டுவரும் எண்ணெய்க் கழிவுகளை அப்புறப்படுத்தும் பணியிலும், பாதிக்கப்பட்ட மீனவ மக்களையே ஆபத்தான முறையில் எந்தவித பாதுகாப்பு உபகரணங்களும் இல்லாமல் ஈடுபடுத்தி வருவது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.

எண்ணூர் எண்ணெய் கழிவு

கடந்த டிசம்பர் 4-ம் தேதி மிக்ஜாம் புயல்மழையின்போது சிபிசிஎல் நிறுவனத்தில் தேக்கிவைத்திருந்த கச்சா எண்ணெய் கழிவுகள் மழைவெள்ளத்தோடு கலந்துவிட்டது. இதுதொடர்பாக மீனவர்கள் அடுத்தடுத்து புகார் தெரிவித்தநிலையில், டிசம்பர் 7-ம் தேதி ஆய்வுசெய்த தமிழ்நாடு அரசின் மாசு கட்டுப்பாடு வாரியம் `அதிகப்படியான மழையால் சிபிசிஎல் தனது ஆலையை காப்பாற்ற மழைநீரை வெளியேற்றியது. அந்த நீருடன் எண்ணெய் தடயங்கள் வெளியேறின’ என்றது. அதாவது, வெறுமனவே `எண்ணெய் தடயங்கள்’ என்று குறிப்பிட்டு பாதிப்புகளை குறைத்து கூறியது.

அந்தநிலையில், விகடனில் வெளியான `ஆற்றில் எண்ணெய்க் கழிவுகளை கலக்கும் ஆயில் நிறுவனங்கள்’ என்ற வீடியோவின் அடிப்படையில், டிசம்பர் 9-ல் இந்த விவகாரத்தை தென்மண்டல் தேசிய பசுமைத் தீர்ப்பாயம் தாமாக முன்வந்து வழக்காகப் பதிவு செய்ததுடன், மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்துக்கு நோட்டீஸிம் அனுப்பியது. அதேநேரம், நீர்வள ஆதாரத்துறையின் அறிக்கையில், `பக்கிங்காம் கால்வாய், எண்ணூர் கழிமுகம், கொசஸ்தலை ஆறு மற்றும் வங்கக் கடல் பகுதிகளில் உள்ள நீர் பரப்பு என 5 கி.மீ. நீளத்துக்கு மேல் தடிமனான எண்ணெய் பொருள் மிதந்தது’ எனக் குறிப்பிட்டது.

எண்ணூர் எண்ணெய் கழிவு

தொடர்ந்து, ஹெலிகாப்டர் மூலம் எண்ணூர் கழிமுகப் பகுதிகளை ஆய்வு செய்த இந்திய கடலோரக் காவல் படை, `ஆற்றின் முகத்துவாரம் முதல் காசிமேடு துறைமுகம் வரையில் சுமார் 20 சதுர கிலோமீட்டர் பரப்பளவிற்கு எண்ணெய் கசிவு படர்ந்திருப்பதாகவும், இந்த எண்ணெய் கசிவு கடலோர சூழல் அமைவுக்கு ஈடுசெய்ய முடியாத இழப்பையும் ஏற்படுத்தும்’ என்றும் அதிர்ச்சித் தகவலைக் கூறியது. இது தமிழ்நாடு அரசின் மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்துக்கு சிக்கலை ஏற்படுத்த, கடந்த டிசம்பர் 11-ம் தேதி தமிழ்நாடு அரசு சார்பில் 7 நாட்கள் கழித்து மிகவும் தாமதமாக எண்ணூர் எண்ணெய் பாதிப்பை ஆய்வு செய்ய ஒரு தொழில் நுட்பக் குழுவை அனுப்பியது.

எண்ணூர் எண்ணெய் கழிவு

அதைத்தொடர்ந்து, சிபிசிஎல் ஆலை நிர்வாகத்துக்கு தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் அதிரடியான உத்தரவைப் பிறப்பித்தது. அதில், `நீர் பரப்பில் மிதக்கும் எண்ணெய் கழிவுகளை அகற்ற, போர்க்கால அடிப்படையில் மறுசீரமைப்புப் பணிகளைத் தொடங்க வேண்டும். குழாய்களில் கசிவு இருந்தால் உடனடியாக நிறுத்த வேண்டும். எண்ணெய் கசிவால் ஏற்பட்ட பாதிப்புகள், சீரமைப்பதற்கான செலவு, பாதிக்கப்பட்டவர்களுக்கான இழப்பீடுகளை ஆய்வு செய்து, அதற்கான செயல்திட்ட அறிக்கையை மாசு கட்டுப்பாடு வாரியத்திடம் சமர்ப்பிக்க வேண்டும்’ என அறிவுறுத்தியிருந்தது.

அந்தநிலையில், ஆறுகள், கழிமுகம், கடலில் கலந்த எண்ணெய்களை அகற்றும் பணிகள் தொடங்கப்பட்டன. அதாவது, எந்தவித பாதுகாப்பு உபகரணங்களும் இல்லாமல், ஆபத்தான முறையில் அரசின் பணியாளர்களும், பாதிக்கப்பட்ட மீனவர்களும் எண்ணெய் அகற்றும் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டனர். ஒவ்வொரு படகிலும் ஐந்து பேராகச் சென்று, வெறும் கைகளால் பாத்ரூம் `மக்’கைக் கொண்டு மிதக்கும் கழிவுநீரை அள்ளி அதை கேன்களில் சேகரித்தனர். இது தொடர்பான வீடியோக்கள், புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

எண்ணூர் எண்ணெய் கழிவு

இதை பூவுலகின் நண்பர்கள் அமைப்பு, “எண்ணூர் பேரிடர் மறுசீரமைப்பில் மனித உரிமை மீறல்! கழிமுகத்தில் தேங்கிய எண்ணெய் கழிவுகளை அகற்றும் பணியில் 50க்கும் மேற்பட்ட உள்ளூர் மக்கள் எவ்வித பாதுகாப்பு உபகரணங்களும் இல்லாமல் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். எண்ணெய் கசிந்த நிகழ்வே மனித உயிர்களையும் சுற்றுச்சூழலையும் துச்சமெனக் கருதியதால்தான் நடந்தது. அப்பேரிடரை மறுசீரமைக்கும் பணியில் இப்படி ஒரு மனித உரிமை மீறல் நடப்பது கண்டனத்திற்குரியது. இதுவா போர்க்கால அடிப்படையில் எண்ணெய் கழிவை அகற்றுவது?” என கேள்வி எழுப்பியது. தொடர்ந்து, அந்த அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் சுந்தர்ராஜன், “எண்ணூரில் ஏற்பட்டுள்ள “எண்ணெய் பேரிடர்” சூழலியலில் மட்டுமல்ல, மிகப்பெரிய சுகாதார சீர்கேட்டையும் ஏற்படுத்துகிறது. இவ்வளவு மோசமாக இந்தப் பேரிடரை கையாளும் அவலம் மிகப்பெரிய கேள்விகளை எழுப்புகிறது. இந்த “எண்ணெய் பேரிடரை” கையாளும் பொறுப்பு சிபிசிஎல் நிறுவனத்தை சார்ந்தது. “Polluter pays” ன் அடிப்படையில் ஏற்பட்டுள்ள எண்ணெயை பரவலை அகற்றுவது மட்டுமல்ல, வாழ்வாதார இழப்பு, பல்லுரிய பாதிப்பு, சுகாதார சீர்கேடு என எல்லாவற்றையும் கணக்கீட்டு ஈழப்பீட்டை அந்த நிறுவனத்திடமிருந்து வாங்கவேண்டும்!” என காட்டமாகத் தெரிவித்தார்.

எண்ணூர் எண்ணெய் கழிவு

அதேபோல சுற்றுச்சூழல் செயல்பாட்டாளர் நித்யானந்த ஜெயராமன், “சிபிஎல் நிறுவனத்தின் பொறுப்பற்ற செயல்பாட்டால் நச்சு கழிவுகள் வெளியேற்றப்பட்டு சுற்றுச்சூழல், மீனவர் வாழ்வாதாரத்திற்கு தீங்கு விளைவித்திருக்கிறது. இத்தனை நடந்தும் ஏன் சம்மந்தப்பட்ட சிபிஎல் அதிகாரிகள் மீது கைது நடவடிக்கைகள் இல்லை? ஏன் வழக்குத் தொடரவில்லை, ஏன் அபராதம் விதிக்கவில்லை?” என சரமாரியாகக் கேள்வி எழுப்பியவர், கையுறை உள்ளிட்ட எந்த பாதுகாப்பும் இல்லாமல் எண்ணெய் அகற்றும் பணிகளை மேற்கொண்டு வரும் மீனவர்களின் புகைப்படங்களை எக்ஸ் தளத்தில் வெளியிட்டு, “எண்ணூர் எண்ணெய் கசிவு ஒரு சுற்றுச்சூழல் பேரழிவை ஒரு தொழில்சார் சுகாதார பேரழிவாகவும் மாற்றுகிறது. இது வெறும் தூசி கழிவுகளை கையாளும் முறை அல்ல. சிபிசிஎல் எண்ணெய் மாசுபாட்டால் பாதிக்கப்பட்ட மீனவர்களை சுத்தப்படுத்துதல் என்ற பெயரில் அதிக நச்சுகளுக்கு வெளிப்படுத்துவது சரியல்ல. அவர்களுக்குப் பயிற்சியும் இல்லை. பாதுகாப்பும் இல்லை. இதில் கண்ணியமும் இல்லை! இது உடல்ரீதியான ஆபத்துகளைதான் ஏற்படுத்தும். 2017 வாளிகள்! 2023 குளியலறை குவளைகள்!” என விமர்சித்திருக்கிறார்.

மேலும், “எண்ணெய் வழுக்கும் தன்மை கொண்டது. பெட்ரோ கழிவுகளில் உள்ள ஆவியாகும் நச்சுகள் தலைசுற்ற வைக்கும். பணியிலிருக்கும்போது படகில் இருந்து எண்ணெயில் விழலாம். எண்ணெய் H20 ஐ விட குறைவான அடர்த்தி கொண்டது. எனவே, மிதக்க முடியாது. பாதுகாப்பை தீவிரமாக எடுத்துக் கொள்ள வேண்டும். ஆனால், 11 நாட்களுக்குப் பிறகும்கூட சிபிசிஎல் நிறுவனத்துக்கு தொழிலாளர்களுக்கு என்ன முகமூடியை வழங்குவது என்றுகூடத் தெரியவில்லை. நீதிமன்றம் 17-ம் தேதிக்குள் அனைத்தையும் சுத்தம் செய்ய வேண்டும் என்றிருக்கிறது. எனவே தொழிலாளர்கள் அந்த நச்சை உறிஞ்சி குடிக்க வேண்டும் போல. இந்திய அரசாங்கம் சந்திரனுக்கு ராக்கெட்டுகளை அனுப்புகிறது, ஆனால் அதன் பொதுத்துறை பணிகள் (Public sector undertakings) மிகப் பழைமையானது, மோசமானது” என்றிருக்கிறார்.

எண்ணூர் எண்ணெய் கழிவு

ஆனால் தமிழ்நாடு அரசின் அறிக்கையிலோ, “எண்ணூர் கிரீக் பகுதியில் இயந்திரங்கள் மூலம் எண்ணெய் அகற்றும் பணியை தமிழ்நாடு அரசு துவங்கியிருக்கிறது. எண்ணெய் அகற்றும் பணியில் எண்ணெய் உறிஞ்சும் நவீன இயந்திரம் பயன்படுத்தப்பட்டுள்ளது. எண்ணெய் கழிவுகள் பரவுவதை தடுக்க (Boomer) தடுப்பான்கள் பயன்படுத்தப்படுகின்றன. மிதக்கும் எண்ணெய் படிமங்களை அகற்றுவதற்கு எண்ணெய் அகற்றும் சிறப்பு இயந்திரங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன” எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

எண்ணூர் எண்ணெய் கழிவு

இந்த நிலையில், பசுமை தீர்ப்பாயம் `எண்ணூர் நீர்நிலைகள், கடலில் கலந்த எண்ணெய் கழிவுகளை அகற்றும் பணி திருப்திகரமாக இல்லை’ என அதிருப்தி தெரிவித்திருக்கிறது. இதுகுறித்து கருத்து தெரிவித்திருக்கும் பசுமைத் தீர்ப்பாய உறுப்பினர்கள், “எண்ணெய் கடலில் கலந்து கிட்டத்தட்ட ஒரு வாரத்திற்கும் மேலாகிவிட்டது. இதுவரை குறைவான அளவிலேயே பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. குறைந்த எண்ணிக்கையான வாகனங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. ஏன் அதிகப்படியான வாகனங்கள் பயன்படுத்த வில்லை? ஏன் அதிகப்படியான வளங்கள் பயன்படுத்தவில்லை? இதுவரை எண்ணெய் அகற்ற எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் திருப்திகரமாக இல்லை. எனவே அனைத்து வகையான வளங்களை பயன்படுத்தி பணிகளை விரைவு படுத்தவேண்டும். தேவைப்பட்டால் கடலோர காவல் படை நிபுணர்களிடம் ஆலோசனையை பெற்றுக்கொள்ளுங்கள். மாசுகட்டுப்பாட்டு வாரியமும், சிபிசிஎல் நிறுவனமும் எண்ணெய் அகற்றும் பணியை வரும் டிசம்பர் 17-ம் தேதிக்குள் முடித்து 18-ம் தேதி அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும்!” எனத் தெரிவித்திருக்கின்றனர்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… 

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… 

Facebook
Facebook
fb-share-icon
Telegram
WhatsApp

TekTamil.com
Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by TekTamil.

நன்றி
Publisher: www.vikatan.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *