தெலங்கானா, மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களின் சட்டமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று காலை தொடங்கிய சமயத்தில் தலா இரண்டு மாநிலங்களில் காங்கிரஸும், பா.ஜ.க-வும் முன்னிலை வகித்து வந்தன. இறுதியில், மத்தியப் பிரதேசத்தில் ஆட்சியை மீண்டும் தக்கவைத்த பா.ஜ.க, கூடுதலாக சத்தீஸ்கர், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் ஆட்சியைக் கைப்பற்றியது.

அதேசமயம், காங்கிரஸ் தன் கைவசமிருந்த இரண்டு மாநிலங்களில் ஆட்சியை இழந்து, தெலங்கானாவில் முதல்முறையாக ஆட்சியைக் கைப்பற்றியது. தெலங்கானாவில் 65 இடங்களில் வெற்றிபெற்றிருக்கும் காங்கிரஸ் விரைவில் அங்கு ஆட்சியமைக்கவிருக்கிறது. இதில், காங்கிரஸின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றியவராக மாநில காங்கிரஸின் தலைவர் ரேவந்த் ரெட்டி, கொண்டாடப்படுகிறார்.
இந்த நிலையில், ரேவந்த் ரெட்டியை நேரில் சந்தித்து பூங்கொத்து கொடுத்ததன் மூலம், தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக தெலங்கானா டிஜிபி-யை இந்திய தேர்தல் ஆணையம் ஆணையம் இடைநீக்கம் செய்திருக்கிறது. முன்னதாக, வாக்கு எண்ணிக்கையின்போது காங்கிரஸ் தனது வெற்றியை உறுதிசெய்திருந்த சமயத்தில், தெலங்கானா டிஜிபி அஞ்சனி குமார், சக அதிகாரிகளான மாநில போலீஸ் நோடல் அதிகாரி சஞ்சய் ஜெயின், மகேஷ் பகவத் ஆகியோருடன் சேர்ந்து, ரேவந்த் ரெட்டியை அவரது இல்லத்தில் நேரில் சந்தித்து பூங்கொத்து வழங்கினார்.

அடுத்த சில மணிநேரங்களிலேயே, ஆட்சியமைக்கவிருக்கும் கட்சியின் முக்கிய நபரை மட்டும் நேரில் சென்று சந்தித்தது தவறான நோக்கத்தின் அறிகுறி என்று பேச்சுக்கள் எழுந்தது. இதன்காரணமாக, தேர்தல் நடத்தை விதியை மீறியதாக டிஜிபி அஞ்சனி குமாரை தேர்தல் ஆணையம் இடைநீக்கம் செய்திருக்கிறது.

இதுதொடர்பாக தேர்தல் ஆணைய தரப்பிலிருந்து, `டிஜிபி-யின் எந்தவொரு தவறான நடவடிக்கையும் தவறான முன்னுதாரணத்தை ஏற்படுத்துவது மட்டுமல்லாமல், தேர்தல்களை நடத்தும் பணியிலிருக்கும் கள அமைப்புகளுக்குத் தவறான சமிக்ஞைகளை அனுப்புகிறது. மேலும், கள அமைப்புகளிலிருக்கும் துணைநிலை அதிகாரிகள், தேர்தல் வேட்பாளர்களைச் சந்திக்க தங்களின் மூத்த அதிகாரிகளைப் பின்பற்றத் தொடங்கினால், அது கற்பனை செய்ய முடியாத அளவுக்கு ஆபத்தை ஏற்படுத்தும்’ என்று கூறப்பட்டதாகச் சொல்லப்படுகிறது.
நன்றி
Publisher: www.vikatan.com
