<p>நாகை மாவட்ட மீனவர்களிடம் மீண்டும் கொள்ளையடித்து அட்டூழியம் செய்துள்ள இலங்கை கடற்கொள்ளையர்கள். இந்த தாக்குதல் சம்பவத்தில் 8 மீனவர்கள் படுகாயமடைந்துள்ளனர்.</p>
<p>வேதாரண்யத்தை அடுத்த ஆறுகாட்டுத்துறை மீனவர்களின் படகுகளில் இலங்கை கடற்கொள்ளையர்கள் அண்மையில் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டனர். இந்த நிலையில், ஆறுகாட்டுத்துறையில் இருந்து தென்கிழக்கே 22 கடல் மைல் தொலைவில் மீன்பிடித்துக் கொண்டிருந்த மீனவர்களிடம் மீண்டும் இலங்கை கடற்கொள்ளையர்கள் அட்டூழியத்தில் ஈடுபட்டனர். 10 லட்ச ரூபாய் மதிப்பிலான மீன்பிடி உபகரணங்களை பறித்துக்கொண்ட அவர்கள், கத்தி, கட்டை மற்றும் கம்பியால் 8 பேரை தாக்கியதில் மீனவர்கள் படுகாயமடைந்தனர். அதில் ஒருவருக்கு தலையில் 21 தையல்கள் போடப்பட்டுள்ளன. இதேபோல, மற்றொரு விசைப்படகையும் குறிவைத்து கொள்ளையடித்த இலங்கை கடற்கொள்ளையர்கள், படகு ஓட்டுநரை தலையில் தாக்கியதில், அவர் படுகாயமடைந்துள்ளார்.</p>
<p>இலங்கை கடல் கொள்ளையர்கள் நடத்திய தாக்குதல் சம்பவத்தில் படுகாயமடைந்தவர்கள் நாகை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழக தலைவர் கௌதமன், நாகை மாவட்ட ஆட்சியர் ஜானி டாம் வர்கீஸ் உள்ளிட்டோர் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினர். </p>
நன்றி
Publisher: tamil.abplive.com