திருச்சியைத் தலைமையிடமாகக்கொண்ட பிரணவ் ஜுவல்லர்ஸ், மிகக் குறுகியகாலத்திலேயே மதுரை, சென்னை, கும்பகோணம், கோவை, ஈரோடு உள்ளிட்ட 11 மாவட்டங்களுக்குத் தன் கிளைகளைப் பரப்பியது. பழைய தங்க நகைகளைத் தங்களிடம் கொடுத்தால், ஓராண்டு கழித்து, எந்தவிதச் செய்கூலி, சேதாரமும் இல்லாமல், பழைய நகையின் எடைக்குச் சமமாகப் புதிய நகைகளை வாங்கிச் செல்லலாம், பவுனுக்கு 4,000 ரூபாய் வரை சேமிக்கலாம் என பிரகாஷ் ராஜ், ராதிகா சரத்குமார் ஆகிய சினிமா பிரபலங்களைவைத்து, இந்த நிறுவனம் விளம்பரம் செய்தது. பிரணவ் ஜுவல்லர்ஸின் கவர்ச்சிகரத் திட்டங்களை நம்பிய பொதுமக்கள் ஏராளமானோர், தங்க நகைத் திட்டம் உள்ளிட்டவற்றில் முதலீடு செய்தனர். இந்த நிலையில், நகைகளைத் திரும்பப் பெற வாடிக்கையாளர்கள் முயன்றபோது, ஒன்றன் பின் ஒன்றாக இந்த நிறுவனத்தின் கிளைகள் மூடப்பட்டன.
மதுரை, திருச்சி எனப் பல்வேறு இடங்களிலும் ஏராளமானோர் பிரணவ் ஜுவல்லர்ஸ்மீது மோசடிப் புகார் அளித்திருக்கின்றனர். இதையடுத்து, அதிக வட்டி தருவதாகக் கூறி தமிழகத்தில் 11-க்கும் மேற்பட்ட கிளைகளை உருவாக்கி, பெருமளவிலான மக்களிடம் மோசடி செய்ததாக, பொருளாதாரக் குற்றப்பிரிவு வழக்கு பதிவுசெய்தது. அதையடுத்து, தலைமறைவானதாகக் கருதப்பட்ட பிரணவ் ஜுவல்லர்ஸின் உரிமையாளர் மதன், அவரின் மனைவி கிருத்திகா ஆகியோருக்கு லுக்-அவுட் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டது.


இந்த நிலையில்தான், பண மோசடியில் ஈடுபட்டதற்காக பிரணவ் ஜுவல்லர்ஸ் நிறுவனக் கிளைகளில் கடந்த 20-ம் தேதி அமலாக்கத்துறை சோதனை நடத்தியது. சட்டவிரோதப் பணப் பரிமாற்ற தடைச் சட்டப்பிரிவின் (PMLA) கீழ் நடைபெற்ற இந்தச் சோதனையில், பல முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாகவும், கணக்கில் வராத சுமார் 23.7 லட்சம் ரூபாய் பணம், 11.6 கிலோ தங்கம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டதாகவும், அமலாக்கத்துறை தெரிவித்தது.
நன்றி
Publisher: www.vikatan.com