இது மக்களுடைய தீர்ப்பு. மக்களால் தேர்வு செய்யப்பட்ட அரசாங்கம், அது எந்த அரசாக இருந்தாலும் சரி. தி.மு.க., அ.தி.மு.க., பா.ம.க., என யாராக இருந்தாலும் சரி. இந்த சூழலில், நான் பா.ம.க-வையும் சேர்த்துக் கொண்டேன். பிற்காலத்தில் நாங்கள் வந்தாலும் சரி. ‘இது எனக்குப் பிடிக்கும், பிடிக்காது. என்னை நியமனம் செய்த கட்சியின் கொள்கையைக் கடைப்பிடிப்பேன். அதை நான் வெளிப்படுத்துவேன்’ என்று சொல்வதையெல்லாம் ஏற்றுக் கொள்ள முடியாது. தமிழ்நாட்டின் ஆளுநர் என்பவர் தமிழ்நாட்டினுடைய நலன் கருதி அதற்கேற்ற நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும். இதைப் பல அறிக்கைகளிலும், பேட்டிகளிலும் சொல்லியிருக்கிறோம். சமீபத்திய அறிக்கையிலும் சொல்லியிருக்கிறோம். உங்களுக்குப் பிடித்த கருத்துகளை, உங்களுக்குள் வைத்துக் கொள்ளுங்கள். தமிழ்நாட்டின் நலன் கருதி நடவடிக்கைகளை எடுப்பதுதான் உங்களுடைய வேலை. அப்படித்தான் ஆளுநர்கள் இருக்க வேண்டும்.


‘தேசிய ஜனநாயகக் கூட்டணியில் நாங்கள் இருக்கிறோம். ஆனால், தமிழகத்தில் இல்லை’ எனக் கூறுகிறீர்கள். பா.ம.க -வின் அரசியல் நிலைப்பாடு என்ன? தமிழகத்தில் நீங்கள் யாருடன் கூட்டணி,வைக்கப் போகிறீர்கள்?
இதை ஏதோ ஒரு புதிய கருத்து போன்று, சமீபத்தில் சில ஊடகங்கள் வெளியிட்டிருக்கிறார்கள். தமிழ்நாட்டைப் பொறுத்தவரை, நாங்கள் 2021-ல் நடந்த உள்ளாட்சித் தேர்தலில் தனியாகப் போட்டியிட்டோம். அந்தத் தேர்தலுக்கு முன்பாகவே, நாங்கள் தமிழ்நாட்டில் எந்தக் கூட்டணியிலும் இல்லை என அறிவித்துவிட்டோம். இதை ஒரு முறை அல்ல, பலமுறை சொல்லியிருக்கிறோம். 10-20 முறை சொல்லியிருக்கிறேன். தேசிய அளவில், நாங்கள் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு நாடாளுமன்றத்தில் ஆதரவு கொடுக்கிறோம்.
நன்றி
Publisher: www.vikatan.com