வயதான காலத்தில் பெற்ற தாய் தந்தையரைக் கவனித்துக் கொள்ளாமல் முதியோர் இல்லத்தில் விடும் பிள்ளைகளை எதிர்த்து வழக்குகள் வருவதுண்டு.
இந்த நிலையில் இரண்டாம்தார மனைவியான 65 வயது பெண்ணை, தந்தையின் இறப்புக்குப் பின்னர் மூன்று பிள்ளைகளும் துன்புறுத்தி முதியோர் இல்லத்தில் விட்ட வழக்கு ஒன்று நீதிமன்ற விசாரணைக்கு வந்துள்ளது.
அந்தப் பெண் 2019-ல் குடும்ப வன்முறை சட்டத்தின் கீழ் இந்த மனுவை தாக்கல் செய்திருக்கிறார். தனது வாழ்க்கைத்துணை இறந்த பின்னர் 2013 ஜூன் மாதம் இரண்டாம் திருமணம் செய்து கொண்டவர் தன் குழந்தைகளுடன் அவரோடு வசிக்கத் தொடங்கி உள்ளார்.

2017-ல் நோய்வாய் பட்டு கணவர் இறக்கவே, வளர்ப்புப் பிள்ளைகள் அவருக்குச் சாதகமாக இருக்கும் சொத்தினை அவர்களின் பெயருக்கு மாற்றும்படி கூறி வற்புறுத்தத் தொடங்கி இருக்கின்றனர்.
அவர்கள் மனரீதியாகவும், உடல் ரீதியாகவும் துன்புறுத்தத் தொடங்கியுள்ளனர். இதனால் தனக்கு பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று கோரி நீதிமன்றத்தை நாடியுள்ளார்.
பிள்ளைகளின் தரப்பில் இருந்து வாதிட்ட வழக்கறிஞர், `குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் கீழ் பராமரிப்பு நடவடிக்கைகளில், ‘அம்மா’ என்ற சொற்றொடர் இயற்கையான தாய் என்று பொருள்படும்; அதில் மாற்றாந்தாய் (Stepmother) என்று சேர்க்கப்படவில்லை.
மேலும், தகப்பனின் இரண்டாவது மனைவி விதவையாகும் பட்சத்தில், அப்பெண்ணுக்கு குழந்தை இல்லையெனில் தன் வளர்ப்பு பிள்ளைகளிடமிருந்து பராமரிப்புத் தொகையைக் கேட்பதற்கு அவருக்கு உரிமை உண்டு. அதுவே அவருக்குக் குழந்தை இருந்தால் பராமரிப்பு தொகையை கோருவதற்கு உரிமை இல்லை’ என்று வாதாடினார்.

இந்த வாதத்தை மறுத்த நீதிபதி, “விண்ணப்பதாரரின் உணர்ச்சிகளை கவனிக்காமல் அவரை முதியோர் இல்லத்தில் தங்க வைக்க பிள்ளைகள் ஏற்பாடு செய்துள்ளார்கள்.
எனவே அவர்களால் அவர் குடும்ப வன்முறைக்கு உள்ளாகி இருப்பதை நிரூபித்துள்ளார். மருந்து தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி வரும் மூவரும் மாதந்தோறும் பராமரிப்புத் தொகையாக அவருக்கு ரூ.7,000 வழங்க வேண்டும்.
புகார் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சட்ட செலவுகளுக்காக மூவரும் 5,000 ரூபாய் வழங்கவேண்டும். விண்ணப்பதாரர் தன் சகோதரியுடன் வசிப்பதால், மாற்று இடம் வழங்க வேண்டும் என்ற பெண்ணின் கோரிக்கையை நீதிமன்றம் நிராகரிக்கிறது” என்று தீர்ப்பளித்துள்ளது.
நன்றி
Publisher: www.vikatan.com