`அண்ணாமலைக்கெல்லாம் பதில் சொல்லிக்கொண்டிருக்க

`பெரியார் மதிக்காத கட்சி தி.மு.க’ என்ற அண்ணாமலையின் விமர்சனம், `திரைத்துறையில் தி.மு.க-வின் சர்வாதிகாரம் அதிகரித்துவிட்டது’ என்ற முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரின் குற்றச்சாட்டு குறித்து தி.மு.க அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதியிடம் நேரில் சில கேள்விகளை முன்வைத்தேன்.

“சாதிவாரி கணக்கெடுப்பை பீகார் நடத்திவிட்டது, தமிழ்நாடு அரசு எப்போது நடத்தப்போகிறது?”

“அதை மாநில அரசாங்கம் செய்ய முடியாது. பீகார் அரசாங்கம் வெளியிட்டிருக்கிற சாதிவாரி கணக்கெடுப்புக்கு சட்டரீதியான விளைவு என்ன என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். ஆனால் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த வேண்டியது மத்திய அரசாங்கம். எனவே, மத்திய அரசுக்கு வலியுறுத்துவோம். இந்தியா கூட்டணியின் அஜண்டாவில் இதுவும் ஒன்று, அடுத்த 6 மாதங்களில் கட்டாயம் நடக்கும்.”

“ `திண்டுக்கல் பூட்டைப்போல மோடியின் வார்த்தைக்கும் வலிமை இருக்கிறது, மோடி பொய்யே சொல்ல மாட்டார்’ என்கிறாரே அண்ணாமலை?”

“அண்ணாமலை அடிக்கடி ஜோக் அடிப்பார். அப்படி இந்த மாதத்தின் மிகப்பெரிய நகைச்சுவை இது. மோடி மிகப்பெரிய பொய்யர் என்று காஷ்மீரிலிருந்து கன்னியாகுமரி வரை மக்களே சொல்வார்கள்.”

அண்ணாமலை

“அண்ணாமலையை காமெடியர்போல நீங்கள் கூறினாலும், பாதயாத்திரைக்கு கூட்டம் வரத்தானே செய்கிறது?”

“கூட்டம் யார் வேண்டுமானாலும் கூட்டலாம், எப்படி வேண்டுமானாலும் கூட்டலாம். அந்தக் கூட்டத்தைக் கூட்டுவதற்காக எவ்வளவு செய்கிறார்கள், என்னென்ன செய்கிறார்கள் என்பதை பா.ஜ.க-வினரே சொல்லிவிடுவார்கள்.”

“சரி, பெரியார் சுத்தமாக மதிக்காத ஒரு கட்சி தி.மு.க என்று அண்ணாமலை கூறியிருக்கிறாரே?”

“தினம்தோறும் பத்திரிகையில் வர வேண்டுமென்பதற்காக எதையாவது உளறிக்கொண்டிருக்கிறார் அண்ணாமலை. இதற்கு முன்பு மதுரையில் அண்ணா மன்னிப்பு கேட்டார் என்றார், உயிரோடு இருக்கும் ஒருவரை மறைந்துவிட்டார் என்றார், 1962-இல் மருதமலை கோயிலுக்கு தி.மு.க அரசாங்கம் மின் இணைப்பு கொடுக்கவில்லை என்றார், அப்போது காமராசர் ஆட்சி நடந்துகொண்டிருந்தது. அந்த வரிசையில் இப்போது இந்தக் கருத்தையும் உதிர்த்திருக்கிறார். தி.மு.க தொடங்கப்பட்ட சமயத்தில், பெரியார் எங்களை விமர்சித்திருக்கிறார், இல்லையென்று சொல்லவில்லை. ஆனால் 1952-ல் பெரியாரும் அண்ணாவும் சேர்ந்துதான் இட ஒதுக்கீட்டுக்காகப் போராடினார்கள். பிரிந்திருந்தாலும் இரட்டைக் குழல் துப்பாக்கியாகத்தான் இருந்தோம். அண்ணா மறைவுக்குப் பிறகு கலைஞர்தான் தலைவராக வேண்டுமென்று சொன்னவர் பெரியார் என்பது அண்ணாமலைக்குத் தெரியுமா… தமிழ்நாட்டு அரசியலைப் பற்றிய அரிச்சுவடே அண்ணாமலைக்குத் தெரியவில்லை.”

ஜெயக்குமார்

“ஆனால், அண்ணாமலை வைக்கிற விமர்சனங்களுக்கு தி.மு.க வலுவான பதிலடி கொடுப்பதே இல்லையே ஏன்?”

“நாங்கள் அண்ணாமலையை முழுமையாகப் புறக்கணிக்கிறோம். ஒருவேளை அவர், புத்திசாலித்தமான வாதங்களை முன்வைத்தால் கவலைப்படலாம். ஆனால், குழப்பத்தை ஏற்படுத்துவதற்காக இல்லாத கற்பனைகளையெல்லாம் பேசிக்கொண்டே இருப்பவருக்கு விளக்கம் சொன்னால், தினம்தினம் எதாவது ஒன்றுக்கு விளக்கம் கொடுத்துக்கொண்டேதான் இருக்க வேண்டும். அண்ணாமலையின் சிறுபிள்ளைத்தனமான பேச்சுகளுக்கெல்லாம் நாங்கள் பதில் சொல்வதாக இல்லை.”

“திரைத்துறையில் தி.மு.க-வின் சர்வாதிகாரம் அதிகரித்துவிட்டது என அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பகிரங்கமாக குற்றம்சாட்டியிருக்கிறாரே?”

“உண்மைக்கு மாறாக பேசுபவர்களில் முதல் ஆள் ஜெயக்குமார். அவரின் அவதூறுக்கு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி விரிவான விளக்கம் கொடுத்துவிட்டார். ஒவ்வொரு முறையும் தி.மு.க ஆட்சிக்கு வரும்போதுதான் கலைத்துறையை ஊக்குவிக்க நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. அது திரைத்துறையினருக்கு நன்றாகவே தெரியும்.”

ஆர்.எஸ்.பாரதி

“நூற்றுக்கணக்கான படங்களை ரெட் ஜெயின்ட் மூவீஸ் நிறுவனம் வெளியிட்டிருக்கிறது. அதைவைத்துதானே ஜெயக்குமார் குற்றம்சாட்டுகிறார்?”

“2 ஆண்டுகளில் 100 படங்களை எப்படி வெளியிட முடியும்… ரெட் ஜெயின்ட் மூவிஸ் ஒரு பெரிய நிறுவனம். அவர்களுடைய தொழிலை அரசியலோடு தொடர்புப்படுத்துவது, அரசியல் காழ்ப்புணர்ச்சி என்றுதான் சொல்ல வேண்டும்.”

“ `அ.தி.மு.க-வின் ஏக்நாத் ஷிண்டே என என்னைச் சொல்லி தி.மு.க-வின் ஐ.டி விங் குளிர்காய்கிறது’ என எஸ்.பி.வேலுமணி குற்றம்சாட்டுகிறாரே?”

“அப்படி குளிர்காய வேண்டிய அவசியம் தி.மு.க-வுக்கு என்ன வந்தது… ஒருநாள் ஓ.பி.எஸ் இருப்பார், ஒருநாள் வேலுமணி இருப்பார், நாளைக்கே தங்கமணிகூட இருக்கலாம். அ.தி.மு.க கூடாரத்தில் யார் ஏக்நாத் ஷிண்டேவாக இருந்தாலும், ஏகமனதாக ஏற்கப்பட்ட தலைவராக இருந்தாலும் எங்களுக்கு கவலையில்லை.”

Facebook
Facebook
fb-share-icon
Telegram
WhatsApp

TekTamil.com
Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by TekTamil.

நன்றி
Publisher: www.vikatan.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *