தமிழ்நாட்டில் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகளுக்கு மத்திய அரசு தரப்பில் மேற்கொள்ளப்பட்ட மீட்புப் பணிகள், ஒதுக்கப்பட்ட நிதி குறித்து நேற்று செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், “அப்பா வீட்டு பணமா என்ற கேட்கிறவர், அவங்க அப்பா வீட்டின்மூலம் பதவியை அனுபவித்துக் கொண்டிருக்கிறாரா… என்று கேட்கலாமா… இந்த பேச்செல்லாம் அரசியலில் நல்லதல்ல… அவங்க தாத்தா எப்பேர்ப்பட்ட தமிழறிஞர்… பதவிக்கு ஏற்றவாறு நாக்கில் வார்த்தைகள் அளந்து வரவேண்டும்” என தி.மு.க அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை விமர்சித்திருந்தார்.
அதோடு, தமிழ்நாடு அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை சரியாக செய்யவில்லை என்றும் நிர்மலா சீதாராமன் குற்றம்சாட்டினார். அதற்கு, நேற்றைய தினமே தன்னுடைய X சமூக வலைதளப் பக்கத்தில் எதிர்வினையாற்றிய உதயநிதி ஸ்டாலின், “யாரிடம் எப்படி பேச வேண்டும் என்று தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர், கழகத் தலைவர் முதலமைச்சர் எங்களுக்கு நன்றாகவே சொல்லிக் கொடுத்திருக்கிறார்கள். சிலரிடம் அண்ணாவைப் போல, சிலரிடம் கலைஞரைப் போல, சிலரிடம் கழகத்தலைவரைப் போல பேசுகிறோம்.
எனினும், குறிப்பிட்ட சிலரிடம் பெரியார் வழியில் தான் பேசியாக வேண்டியிருக்கிறது. வெள்ள பாதிப்புக்காக அரசு நிவாரண நிதி கேட்டால், `நாங்கள் என்ன ஏ.டி.எம்-ஆ’ என ஒன்றிய அமைச்சர் ஒருவர் கூறியதாக செய்தியாளர் எழுப்பிய கேள்விக்கு, ‘அவர் அப்பா வீட்டுப் பணத்தைக் கேட்கவில்லை. தமிழ்நாட்டு மக்கள் அளித்த வரிப்பணத்தை தானே கேட்கிறோம்” என்று கூறினேன். என் பேச்சில் மரியாதை சற்று குறைவாக இருந்ததாக அப்போது சிலர் வருத்தப்பட்டார்கள். அடுத்த நாளே, மாண்புமிகு ஒன்றிய அமைச்சர் அவர்களுடைய அப்பா வீட்டு பணத்தை கேட்கவில்லை என்று அவர்கள் கோரியபடியே மிகுந்த ‘மரியாதையுடன்’ கேட்டுக்கொண்டேன்.
யாரிடம் எப்படி பேச வேண்டும் என்று தந்தை பெரியார் – பேரறிஞர் அண்ணா – முத்தமிழறிஞர் கலைஞர் – கழகத் தலைவர் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் எங்களுக்கு நன்றாகவே சொல்லிக் கொடுத்துள்ளார்கள்.
சிலரிடம் அண்ணாவைப் போல – சிலரிடம் கலைஞரைப் போல – சிலரிடம் கழகத்தலைவரைப் போல பேசுகிறோம்.…
— Udhay (@Udhaystalin) December 22, 2023
ஆனாலும், மாண்புமிகு ஒன்றிய நிதியமைச்சர் திருமதி. நிர்மலா சீதாராமன் அவர்கள் ‘பாஷை’ குறித்து இன்று பாடமெடுத்துள்ளார்கள். மீண்டும் சொல்கிறேன் மாண்புமிகு ஒன்றிய நிதியமைச்சர் திருமதி.நிர்மலா சீதாரமன் அவர்களின் ‘மரியாதைக்குரிய’ அப்பா வீட்டுப் பணத்தை நாம் கேட்கவில்லை. தமிழ்நாட்டு மக்கள் செலுத்திய வரிப்பணத்தில் இருந்து தமிழ்நாடு அரசு கோரிய பேரிடர் நிவாரண நிதியைத்தான் கேட்கிறோம்.
வழக்கமாக ஆண்டுதோறும் ஒதுக்கப்படும் மாநில பேரிடர் நிவாரண நிதியை தந்து விட்டு, ஏதோ ஒன்றிய அரசின் தேசிய பேரிடர் நிவாரண நிதியில் இருந்து தந்தது போல அடித்துப் பேச வேண்டாம். நாங்கள் எவ்வளவு வேண்டுமானாலும் ‘மரியாதை’ தருவதற்கு தயாராகவே இருக்கிறோம் – தமிழ்நாட்டு மக்கள் மீது கொஞ்சமாவது ‘அக்கறை’ வைத்து நிதியைத் தாருங்கள் மரியாதைக்குரிய மாண்புமிகு ஒன்றிய நிதி அமைச்சர் அவர்களே!” என்று ட்வீட் செய்திருந்தார்.

இந்த நிலையில், நிர்மலா சீதாராமனின் பேச்சு குறித்து செய்தியாளர்களிடம் பேசியிருக்கும் உதயநிதி ஸ்டாலின், “நான் யாரையும் மரியாதை குறைவாக பேசியதாக நினைக்கவில்லை. நான் என்ன நாகரீகமில்லாமல் பேசினேன். அப்பன் என்பது கெட்ட வார்த்தையா… அதைத்தான் நான் மாற்றிக்கொண்டேனே. மரியாதைக்குரிய ஒன்றிய நிதியமைச்சருடைய மரியாதைக்குரிய, வணக்கத்துக்குரிய, மாண்புமிகு அப்பா-னு சொல்லலாம்…” என்று கூறினார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/46c3KEk
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/46c3KEk
நன்றி
Publisher: www.vikatan.com