நாராயணன் திருப்பதி, மாநிலத் துணைத் தலைவர், பா.ஜ.க
“அரசியலமைப்புச் சட்டத்தில் ‘இந்தியா என்ற பாரதம்’ என்ற வார்த்தை இருப்பதே தெரியாமல், விளையாட்டுப் பிள்ளைபோலப் பேசியிருக்கிறார், விளையாட்டுத்துறை அமைச்சர். தனிப்பட்ட உதயநிதிக்கு இது தெரியவில்லை என்பதில் எந்த ஆச்சர்யமும் இல்லை. ஏனென்றால், எந்தத் தகுதியும் இல்லாமல், கருணாநிதி குடும்பத்தில் பிறந்தவர் என்ற ஒரே தகுதியுடன் பொறுப்புக்கு வந்ததால் வாய் புளித்ததோ, மாங்காய் புளித்ததோ என்று பேசுவதை வழக்கமாக வைத்திருக்கிறார் அவர். ஏற்கெனவே, ‘சனாதனத்தை ஒழிப்பேன்’ என்று பேசி தானும் கெட்டு, தன் கூட்டணியிலிருக்கும் காங்கிரஸின் வீழ்ச்சிக்கும் காரணமாகிவிட்டார் உதயநிதி. ஆனாலும், அவருக்குப் புத்தி வந்ததாகத் தெரியவில்லை. இனியாவது மற்றவர்கள் எழுதிக்கொடுப்பதை அப்படியே பேசாமல் நாட்டின் கலாசாரம், பண்பாடு, நாகரிகம், சட்டம் குறித்துத் தெரிந்துகொண்டு பேச வேண்டும். எதற்காகச் சொல்கிறேன் என்றால், வெறுமனே பா.ஜ.க-வைத் திட்டி மட்டுமே அரசியல் செய்ய அவர்கள் ஒன்றும் எதிர்க்கட்சியில்லை. தமிழ்நாட்டில் ஆட்சியிலிருக்கிறார்கள். மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவேண்டிய பொறுப்பு அவர்களுக்கு இருக்கிறது. அதையெல்லாம் விட்டுவிட்டு பா.ஜ.க-வைத் திட்டுவது மட்டும்தான் தங்கள் வேலை என்று அவர்கள் நினைப்பார்களேயானால், ராஜஸ்தான், சத்தீஸ்கரில் காங்கிரஸ் ஆட்சி வீழ்த்தப்பட்டதைப்போல, தமிழ்நாட்டிலும் தி.மு.க-வை வீட்டுக்கு அனுப்பிவைத்துவிடுவார்கள் மக்கள்.”
நன்றி
Publisher: www.vikatan.com