ஏ.பி.முருகானந்தம், மாநிலப் பொதுச்செயலாளர், பா.ஜ.க
“உண்மைநிலையைத்தானே சொல்லியிருக்கிறார்… இவர்கள் அறநிலையத்துறை என்ற பெயரில் பக்தர்களின் பணத்தைக் கொள்ளையடித்துக்கொண்டிருக்கிறார்கள். உதாரணமாக, திருச்செந்தூரில் சஷ்டி பூஜை நடைபெறும்போது கட்டணத்தை உயர்த்தி பணம் சம்பாதிக்க நினைக்கிறார்கள். ஓர் அரசு, பண்டிகைக் காலங்களில் பக்தர்கள் அதிகம் வரும்போது கட்டணத்தைக் குறைத்து, மக்கள் தேவைகளைப் பூர்த்திசெய்ய வேண்டும். ஆனால், இந்தத் தி.மு.க அரசு அறநிலையத்துறையை வைத்து கட்டணத்தை உயர்த்தி, மக்களின் பணத்தை உறிஞ்சுகிறது. கடந்த ஆண்டு மதுரையில் லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்கும் ‘அழகர் ஆற்றில் இறங்கும்’ நிகழ்ச்சியில் தகுந்த முன்னேற்பாடுகளை இந்த அரசு செய்யவில்லை. முதல்வரின் கட்டுப்பாட்டில் இருக்கும் காவல்துறையும் எதுவும் செய்யவில்லை. அதன் விளைவு, இரண்டு பக்தர்கள் கூட்டத்தில் சிக்கிப் பரிதாபமாக உயிரிழந்தனர். அவ்வளவு ஏன்… சமீபத்தில்கூட திருவண்ணாமலைத் தேரோட்டத்தில் மின்சாரம் தாக்கிப் பலர் பாதிக்கப்பட்டனர். முன்னாள் சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு ஐ.ஜி பொன் மாணிக்கவேல் ‘3.7 சதவிகித ஆக்கிரமிப்பு நிலங்கள் மட்டுமே மீட்கப்பட்டிருப்பதாக’ கூறுகிறார். அவருக்கு என்ன பதில் சொல்லும் அறநிலையத்துறை… புனரமைக்கப்பட்ட கோயில்களை, சொத்துகளைப் பற்றி வக்கணையாக வாய்கிழியப் பேசும் தி.மு.க அரசுக்கு, இன்னும் மீட்கப்படாத கோயில் சொத்துகள் குறித்தும், புனரமைக்கவேண்டிய கோயில்கள் குறித்தும் வெள்ளை அறிக்கை வெளியிட வக்கிருக்கிறதா?”
நன்றி
Publisher: www.vikatan.com