சிவ.ஜெயராஜ், செய்தித் தொடர்பு இணைச் செயலாளர், தி.மு.க
“அமைச்சர் பேசியிருப்பது உண்மைதான். சும்மா வாய்கிழியப் பேசும் அண்ணாமலை, இந்தப் பேரிடரில் செய்தது என்ன… ‘ஒன்றிய அரசு 450 கோடி ரூபாய் கொடுத்திருக்கிறது’ என்று வழக்கம்போல் அரைவேக்காட்டுத் தனமாக அடித்துவிட்டிருக்கிறார். அந்த நிதி, இந்த பாதிப்பு ஏற்படவில்லை என்றாலும் ஒன்றிய அரசு நமக்குக் கொடுக்கவேண்டிய தொகைதான். தலைநகர் சென்னை பெரும் பாதிப்பைச் சந்தித்தும், இரக்கமில்லாத ஒன்றிய அரசு எந்தவொரு தனிப்பட்ட நிதியையும் ஒதுக்கவில்லை. ஆனால், இதே பாசிச மோடி அரசுதான் குஜராத்துக்கு மட்டும் அவசர அவசரமாக 1,000 கோடி ரூபாயைக் கொடுத்தது. தங்களுக்கு வாக்களிக்காத தமிழக மக்களை வஞ்சிப்பதற்காகவே ஒன்றிய பா.ஜ.க அரசு திட்டமிட்டுச் செய்யும் நம்பிக்கை துரோகம் இது. அண்ணாமலைக்கு உண்மையில் தமிழக மக்கள்மீது அக்கறை இருந்தால், இந்நேரம் ஒன்றிய அரசிடம் பேசி, கூடுதல் சிறப்பு நிதியைப் பெற்றுத் தந்திருக்க வேண்டும். அதைச் செய்யாமல், சுற்றி அத்தனை பேர் நிற்க, ஏதோ ஆளே இல்லாததுபோல அரிசி மூட்டையைத் தூக்கிச் சுமந்து வீடியோ எடுத்துப் போட்டு ஷோ காண்பிக்கிறார். மத்திய அரசுக் குழுவே இந்தப் பேரிடரில் தமிழக அரசு சிறப்பாகச் செயல்பட்டிருக்கிறது என்று சான்றிதழ் கொடுத்துவிட்டது. ஆனால், அண்ணாமலை உட்பட எதிர்க்கட்சியினர் அரசுமீது காழ்ப்புணர்ச்சியில் அவதூறு பரப்பிக்கொண்டிருக்கிறார்கள். இவர்களை மக்கள் ஒருபோதும் நம்பத் தயாராக இல்லை!”
நன்றி
Publisher: www.vikatan.com
