குறுகியப் பகுதியில் கூட்டமாக வாழும் காஸா மக்கள்:
பல காலமாக நீடித்து வரும் இந்த மோதலின் ஒரு பகுதியாக, கடந்த வாரம் இஸ்ரேல் மீது ஏவுகணைத் தாக்குதலை நடத்தியது ஹமாஸ் அமைப்பு. தாங்கள் வலிமையாக இருக்கும் காஸாவிலிருந்துகொண்டுதான் இந்த தாக்குதலை ஹமாஸ் துணிந்து நடத்தியது. ஹமாஸ் அமைப்புக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, போர் பிரகடனத்தை அறிவித்த இஸ்ரேல் `ஹமாஸ் அமைப்பை இருந்த தடம் தெரியாமல் அழிப்போம்! ஒருவரைக்கூட விட்டுவைக்கமாட்டோம்’ எனக்கூறி கடந்த சில நாட்களாக காஸா பகுதி மீது சரமாரியாகத் தாக்குதல் நடத்தி வருகிறது. மேலும், மின்சாரம், குடிநீர், உணவு என காஸா மக்களுக்கான அனைத்து வசதிகளையும் நிறுத்தி வைத்து தாக்குதலைத் தொடர்ந்துகொண்டிருக்கிறது. இஸ்ரேலின் தாக்குதலால் இதுவரையில் 500 குழந்தைகள், 276 பெண்கள் உள்பட 1,537 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டதாகவும் 6,612 பேர் காயமடைந்திருப்பதாகவும் பாலஸ்தீன சுகாதாரத்துறை தெரிவித்திருக்கிறது.
மேலும், 1.5 லட்சம் பேர் இடம்பெயர்ந்திருக்கின்றனர். ஏற்கெனவே யூதக் குடியேற்றம் – இஸ்ரேல் ஆக்கிரமிப்பால் குறுகியிருக்கும் காஸா, உலகில் மக்கள் மிகவும் நெரிசலாக வசிக்கும் இடங்களில் ஒன்றாக இருக்கிறது. அதாவது, 20 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் வெறும் 362 ச.கி.மீட்டரில் தான் மிகவும் நெரிசலில் வசிக்கிறார்கள்.


இந்த நிலையில், காஸாவில் பதுங்கியிருக்கும் ஹமாஸ் மீது தாக்குதல் நடத்துவதாகக் கூறி, பொதுமக்கள் அடர்த்தியாக வசிக்கும் குடியிருப்பு பகுதிகளில் இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் நடத்தி வருவதாக குற்றம்சாட்டுகிறார்கள் காஸா மக்கள். இந்த தாக்குதல் குறித்து ஊடகங்களுக்கு பேட்டியளித்த காஸா மக்கள், “காஸா பகுதியில் பதுங்கியிருக்கும் ஹமாஸ் அமைப்பினர்மீது தாக்குதல் தொடுப்பதாக அறிவித்த இஸ்ரேல் ராணுவம், சம்மந்தமே இல்லாமல் வடக்கு காஸாவில் உள்ள மக்கள் குடியிருப்புகளை குறிவைத்து தாக்குதல் நடத்தி வருகின்றனர். இவர்களின் நடவடிக்கை ஹமாஸ் அமைப்புக்கு எதிரானதாக மட்டுமே இல்லை; காஸா நிலத்திலிருந்து பாலஸ்தீன மக்களையும் வெளியேற்றி இந்தப் பகுதியையும் தங்களுடன்(இஸ்ரேலுடன்) இணைத்துக் கொள்ளும் முயற்சியாகவே தெரிகிறது!” என சந்தேகம் தெரிவிக்கின்றனர்.


தடைசெய்யப்பட்ட வெள்ளை பாஸ்பரஸ்:
இந்த நிலையில், இஸ்ரேல் ராணுவமான ஐ.டி.எஃப் (IDF), மக்கள் அடர்த்தி அதிகமிருக்கும் காஸா பகுதிகளில் தடைசெய்யப்பட்ட வெள்ளை பாஸ்பரஸ் குண்டுகளை பயன்படுத்துவதாக பரபரப்பு குற்றாச்சாட்டை பாலஸ்தீனம் முன்வைத்திருக்கிறது. இதற்கு ஆதரமாக இஸ்ரேல் வெள்ளை பாஸ்பரஸ் குண்டுகள் ஏவும் வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை சமூக வலைதளங்களில் காஸா மக்கள் வெளியிட்டு வருகின்றனர். இந்த வகையான வெள்ளை பாஸ்பரஸ் குண்டுகளின் மோசமான விளைவுகளைக் கருத்தில்கொண்டு இந்த குண்டுகளை போர்களில் பயன்படுத்த ஐ.நா மன்றம் தடை விதித்திருக்கிறது. ஆனால், அதையும் மீறி இஸ்ரேல் குண்டுகளை ஏவுவதாக மனித உரிமை ஆர்வலர்களும் குற்றம் சாட்டுகின்றனர். இஸ்ரேல் இதுபோன்ற விதிமீறல்களில் ஈடுபடுவது முதல்முறை அல்ல! ஏற்கெனவே 2009-ல் காஸா மீதான தாக்குதலின்போதும் இந்த பாஸ்பரஸ் குண்டுகளை பயன்படுத்தியது. 2006-ல் லெபனானின் ஹிஸ்புல்லா அமைப்பு மீதான தாக்குதலிலும் இதைப் பயன்படுத்தியது. தொடக்கத்தில் இதை மறுத்துவந்த இஸ்ரேல் பின்னர் சர்வதேச மனித உரிமைக் குழுக்களின் அழுத்தத்தால் ஒப்புக்கொண்டதும் குறிப்பிடத்தக்கது.
நன்றி
Publisher: www.vikatan.com