மும்பையில் தாராவி குடிசை மேம்பாட்டுத் திட்டம் அதானி நிறுவனத்திற்குக் கொடுக்கப்பட்டதில் விதிமுறைகள் மீறப்பட்டுள்ளதாகவும், அதானிக்காக விதிகளில் திருத்தம் செய்யப்பட்டதாகவும் எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன. ஏற்கெனவே காங்கிரஸ் கட்சி தாராவியில் இதற்காக போராட்டம் நடத்தி இருக்கும் நிலையில், உத்தவ் தாக்கரேயும் நேற்று தாராவியில் பேரணி நடத்தினார். கலாநகரிலிருந்து பாந்த்ரா குர்லா காம்ப்ளக்ஸில் இருக்கும் அதானி நிறுவனம் வரை நடந்த பேரணிக்குப் பிறகு, பொதுக்கூட்டத்தில் உத்தவ் தாக்கரே கலந்துகொண்டு பேசினார். இதில் கலந்து கொண்டு பேசிய உத்தவ் தாக்கரே, “எனது ஆட்சிக்காலத்தில் டெண்டர் விடப்பட்டதாக கூறப்படுவதில் உண்மை இல்லை. அதற்கான அரசாணையை காட்ட முடியுமா… எனது அரசு பில்டர்களுக்கு சாதகமாக செயல்படாத காரணத்தால்தான் கவிழ்ந்தது.
எனது அரசை கவிழ்க்க யார் நிதியுதவி செய்தார்கள் என்பது மட்டும் தெளிவாக புரிகிறது. சிவசேனா இருந்ததால் பா.ஜ.க.வால் அதன் நண்பர்களுக்கு உதவ முடியவில்லை. எனவேதான் சிவசேனாவை உடைத்து கட்சியின் சின்னத்தை திருடிக்கொண்டார்கள். கட்சியின் சின்னத்தை திருடிக்கொண்டாலும் மக்களின் ஆதரவை எடுத்துக்கொள்ள முடியாது. தாராவி மேம்பாட்டுத் திட்டத்தில் 100 கோடி ரூபாய் அளவுக்கு டி.டி.ஆர் முறைகேடு நடக்கிறது. தாராவி மக்களுக்கு 500 சதுர அடி வீடு கொடுக்கவேண்டும்.
அங்கு தொழில் செய்பவர்களுக்கு அங்கேயே மாற்று இடம் கொடுக்கவேண்டும். போலீஸார், தூய்மைத் தொழிலாளர்கள், மில் தொழிலாளர்களுக்கு தாராவியில் வீடு கொடுக்கப்படவேண்டும். குடிசை மேம்பாட்டுத் திட்டத்தை அரசே மேற்கொள்ளவேண்டும்”‘ என்று தெரிவித்தார்.
இது குறித்து கருத்து தெரிவித்த மும்பை பா.ஜ.க. தலைவர் அசிஷ் ஷெலார், “உத்தவ் தாக்கரே ஆட்சியில் இருந்த போதுதான் டி.டி.ஆர் விதிகள் மற்றும் டெண்டர் இறுதிசெய்யப்பட்டது. உத்தவ் தாக்கரே அரசு ஆட்சியில் இருந்தபோது ஏன் 500 சதுர அடி வீடு கொடுக்கவில்லை” என்று கேள்வி எழுப்பினார். இது குறித்து அதானி நிறுவனமும் விளக்கம் அளித்துள்ளது. இது குறித்து அந்நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், `திட்டத்தின் சில அம்சங்களைப் பற்றி தவறான தகவல்களைப் பரப்புவதற்கு கூட்டு முயற்சி மேற்கொள்ளப்படுவது துரதிஷ்டவசமானது.
மகாவிகாஷ் ஆட்சிக்காலத்தில்தான் தாராவி குடிசை மேம்பாட்டுத் திட்டத்திற்கான விதிகள் வகுக்கப்பட்டது. டெண்டர் விடப்பட்ட பிறகு இறுதி செய்யப்பட்ட விதிகளில் எந்தவித மாற்றமும் செய்யப்படவில்லை. அப்படி இருக்கும்போது டெண்டர் பெற்ற நிறுவனத்திற்கு சிறப்பு சலுகை வழங்கப்பட்டதாக கூறப்படுவதில் எந்த வித உண்மையும் இல்லை.
நன்றி
Publisher: www.vikatan.com