மதுரை மாநகர் ரயில்வே நிலையம் அருகே பெரியார் பேருந்து நிலையம் உள்ளது. இந்த பேருந்து நிலையத்தில் நாள்தோறும் பல்லாயிரக்கணக்கான பயணிகள் வருகை தருவார்கள். இந்நிலையில், இன்று காலை தாராப்பட்டி பகுதியைச் சேர்ந்த ரவி மற்றும் விருதுநகரை சேர்ந்த கருப்பையா ஆகிய இருவரும் பெரியார் பேருந்து நிலையத்தில் வேலைக்கு செல்வதற்காக பேருந்தில் பேருந்தில் ஏற முயன்றனர்.
அப்போது, அவர்கள் கையில் வைத்திருந்த செல்போன்களை அந்த பகுதியில் நடந்து சென்ற 4 வடமாநில இளைஞர்கள் பறித்து சென்றனர். இதனால் அதிர்ச்சியடைந்த இருவரும் கத்தி கூச்சலிட்டனர். இதையடுத்து, அங்கு பேருந்து ஏறுவதற்காக காத்திருந்த 100-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள், வட மாநில இளைஞர்களை விரட்டினர். அப்போது ஒரு இளைஞர் மட்டும் கையும் களவுமாக பிடிபட்ட நிலையில், மற்ற 3 பேரும் தப்பியோடினர்.
பின்னர், பள்ளி மாணவர்கள் மற்றும் அப்பகுதியில் இருந்தவர்கள் வழிப்பறியில் ஈடுபட்ட சஜான் என்ற வட மாநில இளைஞரை அழைத்து வந்து போக்குவரத்து அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். பின்னர் அவர்கள் போலீசாரிடம் ஒப்படைத்தனர். மதுரையின் முக்கிய பேருந்து நிலையமான பெரியார் பேருந்து நிலையத்தில் பட்டப்பகலில் செல்போன் வழிப்பறி செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தொடர்ச்சியாக வழிப்பறி சம்பவத்தில் ஈடுபட்ட மற்ற 3 பேரையும் போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
நன்றி
Publisher: 1newsnation.com