பாகிஸ்தானில் பதுங்கியிருக்கும் தாவூத் இப்ராஹிமை விஷம் வைத்துக் கொலைசெய்ய முயற்சி நடந்திருப்பதாக, செய்தி வெளியானது. தாவூத் இப்ராஹிம் கராச்சி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் செய்திகள் வெளியானது. இந்தச் செய்திக்கு தாவூத் இப்ராஹிமின் டி கம்பெனியின் சர்வதேச செயல்பாடுகளை கவனித்துக்கொள்ளும் நெருங்கிய கூட்டாளியான சோட்டாசகீல் விளக்கம் அளித்திருக்கிறான். இது தொடர்பாக அவன் அளித்த போன் செய்தியில், “பாய் (தாவூத்) 1,000 சதவிகிதம் நலமாக இருக்கிறார். நான் அவரைப் பார்த்தபோது நலமாக இருந்தார். கிண்டல் செய்யும் நோக்கில் இது போன்ற வதந்திகள் அடிக்கடி வெளியிடப்படுகின்றன”‘ என்று குறிப்பிட்டான். தாவூத் இப்ராஹிம் தொடர்பாக செய்திகள் மேற்கொண்டு சோஷியல் மீடியாவில் பரவாமல் இருக்க, பாகிஸ்தானில் சில மணி நேரம் இணைய சேவையே துண்டிக்கப்பட்டது.


தாவூத் இப்ராஹிம் தொடர்பான செய்தியை இந்திய உளவத்துறையும் மறுத்திருக்கிறது. தாவூத் இப்ராஹிமுக்கு எந்நேரமும் பல அடுக்குப் பாதுகாப்பு போடப்பட்டிருக்கிறது. தாவூத்தின் நெருங்கிய கூட்டாளிகளுக்கு, பாகிஸ்தான் ஐ.எஸ்.ஐ மற்றும் பாகிஸ்தான் உளவுத்துறை பாதுகாப்பு கொடுத்து வருகிறது. இந்தியாவுக்கு எதிரான தீவிரவாதச் செயல்களுக்கு தாவூத் இப்ராஹிமை பாகிஸ்தான் ஆயுதமாகப் பயன்படுத்துகிறது என்று இந்திய உளவுத்துறை தெரிவித்திருக்கிறது.
நன்றி
Publisher: www.vikatan.com