ஜேஎன் 1 கொரோனா: அறிகுறிகள் என்னென்ன? பாதுகாப்பாக இருப்பது எப்படி? தடுப்பூசியால் பயன் உண்டா?

ஜேஎன் 1 கொரோனா: அறிகுறிகள் என்னென்ன? பாதுகாப்பாக இருப்பது எப்படி? தடுப்பூசியால் பயன் உண்டா?

புதிய கை ஜேஎன் 1 கொராேனா

பட மூலாதாரம், Getty Images

2020ஆம் ஆண்டை யாராலும் எளிதாக மறக்க முடியாது, கொரோனா எனும் நோய் சீனாவில் தொடங்கி உலகம் முழுவதும் பரவி பெரும்பாலானோரின் வாழ்க்கையைப் புரட்டிப் போட்டது. தற்போது இந்தியாவில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்துள்ளது.

சிங்கப்பூர், மலேசியா, இந்தோனேஷியா உள்ளிட்ட நாடுகளிலும் கொரோனா தொற்று பரவல் மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்தியாவில் புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களில் பெரும்பாலானோர் கேரளாவைச் சேர்ந்தவர்கள்.

கேரளாவில் 79 வயது மூதாட்டி ஒருவருக்கு உருமாறிய ஜேஎன் 1 வகை கொரோனா தொற்று சில நாட்களுக்கு முன்பு உறுதி செய்யப்பட்டது. மேலும் அங்கு கொரோனாவின் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் தமிழ்நாட்டிலும் ஏழு மாதங்களுக்கு பிறகு முதல் முறையாக கொரோனா பாதிப்பு பதிவாகியுள்ளது.

கேரள மாநிலத்தில் தற்போது வரை 1,324 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர், மேலும் நான்கு இறப்புகள் பதிவாகியுள்ளன. ஆனால், இதில் எத்தனை பேர் ஜேஎன் 1 வகை கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் எனபது இன்னும் உறுதியாக தெரியவில்லை எனவும் மாநிலத்தில் அதிகளவில் கொரோனா சோதனைகள் நடத்தப்பட்டு வருவதாகவும் கேரள அரசு அதிகாரிகள் தெரிவித்தனர்.

“கடந்த சில வாரங்களாக கேரளா மாநிலத்தில் இருந்து கோவிட்-19 பரவல் அதிகரித்து வருகிறது. இன்ஃப்ளூயன்ஸா போன்ற நோய்களால் (ஐஎல்ஐ) பாதிக்கப்பட்டவர்களின் மாதிரிகள் அதிகளவில் சோதனைகளுக்கு அனுப்பப்படுவதன் மூலம் இது தெரிய வருகிறது” என்று இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் இயக்குநர் ஜெனரல் ராஜீவ் பால் கூறினார்.

புதிய கை ஜேஎன் 1 கொராேனா

பட மூலாதாரம், Getty Images

தமிழ்நாட்டில் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு

தமிழகத்தில் நேற்று நான்கு பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 64 ஆக உயர்ந்துள்ளது.

ஆனால், உயிரிழப்புகள் ஏதும் பதிவாகவில்லை என தமிழ்நாடு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

மேலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கர்ப்பிணி பெண்கள் மற்றும் தொற்று நோய்களால் பாதிக்கப்பட்டிருப்பவர்கள் பொது இடங்களுக்கு செல்லும் போது முகக்கவசம் அணிந்து கொள்வது அவசியம் என்று சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.

புதிய கை ஜேஎன் 1 கொராேனா

பட மூலாதாரம், Getty Images

பல மாதங்களுக்கு பிறகு முகக்கவசம் குறித்த அறிவுறுத்தல்கள்

தமிழ்நாட்டில் இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் வரை ஒமைக்ரான் வகை கொரோனா வைரஸ் பரவி வந்தது. இதனால் தீவிர பாதிப்பு இல்லையென்றாலும், பலருக்கு சளி, இருமல் போன்ற லேசான பாதிப்பை இந்த வைரஸ் ஏற்படுத்தியது.

ஏப்ரல் மாதத்துக்கு பின் கடந்த நவம்பர் மாதம் வரை தமிழ்நாட்டில் தினசரி ஒன்று அல்லது இரண்டு பேருக்கு மட்டுமே கொரோனா தொற்று உறுதியானது. டிசம்பர் மாத தொடக்கம் முதல் தினசரி தொற்று பாதிப்பு மெல்ல அதிகரித்து வந்தது. கடந்த சில நாட்களாக ஒரு நாளுக்கு அதிகபட்சமாக 20 பேர் வரை தொற்று உறுதி செய்யப்படுகிறது.

நவம்பர் மாத இறுதியில் கொரோனா சிகிச்சையில் இருப்போர் எண்ணிக்கை 20க்கும் குறைவாகவே இருந்து வந்தது. தற்போது இந்த எண்ணிக்கை 63க்கும் மேல் உயர்ந்துள்ளது.

இதனால் தமிழக சுகாதாரத்துறை முகக்கவசம் அணிவது குறித்து பல மாதங்கள் கழித்து மீண்டும் அறிவுறுத்தல்களை வழங்க தொடங்கியுள்ளது.

பாதிப்பு ஏற்பட அதிக வாய்ப்புள்ளவர்கள் என்பதால் கர்ப்பிணி பெண்கள், தொற்று நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் பொது இடங்களுக்கு செல்லும் போது முகக் கவசம் அணிய வேண்டுமென தமிழ்நாடு பொது சுகாதாரத்துறை இயக்குநர் செல்வவிநாயகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

புதிய கை ஜேஎன் 1 கொராேனா

பட மூலாதாரம், Getty Images

ஜேஎன் 1 கொரோனா என்றால் என்ன ?

இதற்கு முன்பாக ஜேஎன் 1 வகை கொரோனா அமெரிக்கா, சீனா உட்பட பல நாடுகளில் கண்டறியப்பட்டுள்ளது.

கொரோனாவை ஏற்படுத்தும் வைரஸ் காலப்போக்கில் மாறிக்கொண்டே இருக்கிறது. புதிய வகை கொரோனா விரைவாக அல்லது திறம்பட பரவ இந்த மாற்றங்கள் காரணமாக இருக்கின்றன. அப்படி மாற்றம் பெற்றதுதான் ஜேஎன்1.

“ஏற்கெனவே புழக்கத்தில் இருக்கும் மற்ற வகை கொரோனா வைரஸ்களுடன் புதிய வகை கொரோனாவுக்கு நெருங்கிய தொடர்புகள் இருக்கலாம்” என அமெரிக்காவின் தேசிய பொது சுகாதார நிறுவனமான சி.டி.சி (Centres for Disease Control and Prevention) கூறுகிறது.

புதிய கை ஜேஎன் 1 கொராேனா

பட மூலாதாரம், Getty Images

ஜேஎன் 1 கொரோனா நோயின் அறிகுறிகள் என்ன?

ஜேஎன் 1 கொரோனா நோயின் அறிகுறிகள் குறித்து நுரையீரல் நிபுணர் சி. பாஸ்கர பாபு பிபிசியிடம் பேசினார்.

அப்போது அவர், “நோய் தொற்று உள்ளவர்களுக்கு குளிர் கடுமையாக இருக்கும் என்று கூறப்படுகிறது. கடுமையான இருமல் மற்றும் சோர்வு இருக்கும் என்று கூறப்படுகிறது. இந்த அறிகுறிகள் காய்ச்சலில் தான் முதலில் தொடங்குகின்றன. இது நிமோனியா போன்ற நோய்களுக்கான அறிகுறிகளுக்கு நெருக்கமாக இருப்பதால், அதனை அலட்சியப்படுத்தக்கூடாது,” என்றார்.

இந்த அறிகுறிகள் முழுமையாக குறைய இரண்டு முதல் மூன்று வாரங்கள் ஆகும் என்றும் அவர் கூறினார்.

“முழுமையான படுக்கை ஓய்வு எடுப்பதன் மூலம் இதிலிருந்து விரைவில் மீண்டு வரலாம்.

கோவிட்-19 இன் இரண்டாவது அலை போல இது ஆபத்தானது அல்ல. சில முன்னெச்சரிக்கைகள் மூலம், JN1 ஐத் தவிர்க்கலாம்,”என்றார் டாக்டர் பாஸ்கர பாபு.

“அனைவரும் கண்டிப்பாக மாஸ்க் அணிய வேண்டும். அனைத்து மக்களும் மாஸ்க் அணிவதன் மூலம் இந்த நோயில் இருந்து பாதிக்கப்படுவதை தவிர்க்கலாம்.

குளிர்ந்த உணவுப்பண்டங்களை சாப்பிடக் கூடாது. சிகரெட் மற்றும் மது அருந்துவதை முற்றிலும் தவிர்க்க வேண்டும். இருமும்போது கண்டிப்பாக கை மற்றும் கைக்குட்டையை மூடிக்கொள்ள வேண்டும்.’’ என்றார் அவர்.

ஜேஎன்1 தொற்று உறுதி செய்யப்பட்டால், முதல் நான்கைந்து நாட்கள் மருத்துவர்களின் ஆலோசனைப்படி மருந்துகள் எடுத்துக்கொண்டு, முழு ஓய்வு எடுத்தால் அதிலிருந்து விடுபடலாம் என்றார் பாஸ்கரபாபு.

புதிய கை ஜேஎன் 1 கொராேனா

பட மூலாதாரம், Getty Images

தடுப்பூசி போட்டவர்களுக்கு பாதிப்பு வருமா?

அனைத்து அங்கீகரிக்கப்பட்ட கோவிட்-19 தடுப்பூசிகளும் ஜேஎன் 1 கொரோனாவிலிருந்து மக்களை பாதுகாக்கும் என்று உலக சுகாதார அமைப்பு (WHO) கூறுகிறது.

எனினும் புதிய வகை வைரஸ்களை ஏற்கெனவே இருக்கும் தடுப்பூசிகள் எந்த அளவுக்கு தடுக்கும் என்பது பற்றி ஆய்வுகள் நடைபெறுவதாக நிபுணர்கள் கூறுகிறார்கள்.

மாநிலங்களுக்கு வழங்கப்பட்டுள்ள அறிவுரை

ஜேஎன்1 நோய்த்தொற்றின் விளைவுகள் கடுமையாக இருக்கும் என்று எந்த அறிகுறியும் இல்லை என்று மத்திய சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.

ஆர்.டி.பி.சி.ஆர் பரிசோதனைகள் மூலமே இதனையும் கண்டறியலாம் என மாநிலங்களுக்கு வழங்கப்பட்ட ஆலோசனையில் மத்திய சுகாதாரத்துறை குறிப்பிட்டுள்ளது. மாநில அரசுகளுக்கு ஏற்கனவே வழங்கப்பட்ட கோவிட் 19 வழிகாட்டுதல்களையே நடைமுறைப்படுத்துமாறு மத்திய சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது. குறிப்பாக, ஆர்டிபிசிஆர் சோதனைகளை அதிக அளவில் செய்யுமாறு கேட்டுக்கொண்டுள்ளது.

புதிய மாற்றங்களை சரியான நேரத்தில் கண்டறிய முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.

மாவட்ட வாரியாக இந்த நோய் தொற்றின் தீவிரத்தை பொறுத்து அவ்வப்போது தகவல்களை திரட்டி, கண்காணிக்க வேண்டும் என மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

மாவட்ட வாரியாக சேகரிக்கப்படும் தகவல்களை ஒருங்கிணைந்த சுகாதாரத்துறையின் இணையதளத்தில் பதிவிட வேண்டும் என்றும், நோய் தொற்றுப்பரவல் அதிகரித்தால் ஆரம்ப கட்டத்திலேயே கவனிக்கப்பட வேண்டும் என்றும் மத்திய சுகாதாரத்துறை மாநில அரசுகளுக்கு அறுவுறுத்தியுள்ளது.

மத்திய அரசு பரிந்துரைத்த விகிதத்தின்படி, ஆர்.டி.பி.சி.ஆர்., ஆன்டிஜென் பரிசோதனைகள் நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.

Facebook
Facebook
fb-share-icon
Telegram
WhatsApp
TekTamil.com
Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by TekTamil.
நன்றி
Publisher: பிபிசிதமிழ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *