வேலைவாய்ப்பு: நேர்முக தேர்வில் எதிர்பார்க்கும் சம்பளத்தை எப்படி சொல்ல வேண்டும்?

வேலைவாய்ப்பு: நேர்முக தேர்வில் எதிர்பார்க்கும் சம்பளத்தை எப்படி சொல்ல வேண்டும்?

சம்பளம்

பட மூலாதாரம், Getty Images

அமெரிக்காவில் வசிக்கும் மேரி (பெயர் மாற்றப்பட்டுள்ளது) அக்டோபர் மாதம் ஒரு பெரிய பன்னாட்டு நிறுவனத்தில் வேலைக்காக இணையத்தில் விண்ணப்பித்திருந்தார். அந்த வேலைக்குத் தகுதியான அனைத்துத் தேவைகளையும் அவர் பூர்த்தி செய்திருந்தார்.

விண்ணப்பிப்பதற்கு முன்னதாகவே, ​​​​இந்த பதவிக்கு எவ்வளவு சம்பளம் கொடுக்கப் போகிறது என்பதையும் அந்நிறுவனம் கூறியிருந்தது. அதில், குறைந்தபட்ச மற்றும் அதிகபட்ச வருமானம் குறிப்பிடப்பட்டிருந்தது.

பிபிசி வொர்க்லைஃப்-இன் (BBC worklife) எமிலி மெக்ராரி-ரூயிஸ்-எஸ்பார்சாவிடம் மேரி கூறுகையில், தான் விண்ணப்பித்தபோது அதிகபட்ச வரம்புக்கு நெருக்கமான தொகையை குறிப்பிட்டதாகவும் ஆனால் விண்ணப்பித்த 24 மணிநேரத்திற்குள் தனது விண்ணப்பம் ‘நிராகரிக்கப்பட்டதாக’ மின்னஞ்சல் வந்ததாகவும் தெரிவித்தார்.

பின்னர், தனக்கு முன்பே அறிமுகமான, அதே நிறுவனத்தில் ஆட்சேர்ப்புப் பிரிவில் பணிபுரியும் ஒருவரிடமிருந்து மேரிக்கு ஒரு விஷயம் தெரிய வந்தது.

அவர் கேட்ட சம்பளம் அதிகம் என்று மேரிக்கு அவர் கூறியுள்ளார். அதிகபட்ச வரம்பில் சம்பளம் கோருபவர்களுக்குப் பதிலாக குறைந்த சம்பளம் கோருபவர்களுக்கு வேலை கொடுக்க நிறுவனம் விரும்பியது. இதற்காக மேரி போன்ற அதிக சம்பளம் கேட்டவர்களின் விண்ணப்பங்களை நேரடியாக நிராகரிக்கும் வழிமுறையை அந்த நிறுவனம் உருவாக்கி இருந்தது.

வேலைவாய்ப்பு

பட மூலாதாரம், Getty Images

நிறுவனங்கள் ஏமாற்றுகின்றனவா?

நொய்டாவில் வசிக்கும் எழுத்தர் பவன் குமாரின் (content writer) அனுபவமும் அப்படித்தான். சில காலமாக அவர் தொடர்ந்து பல நிறுவனங்களுக்கு விண்ணப்பித்ததாகவும், பல முறை அவரது விண்ணப்பங்கள் உடனடியாக நிராகரிக்கப்பட்டது என்றும் பிபிசியின் ஆதர்ஷ் ரத்தோரிடம் அவர் கூறினார்.

“எல்லா தகுதிகளும் எனக்கு இருந்தாலும் தேர்வு அல்லது நேர்காணலுக்கு அழைக்கப்படுவதற்கு முன்பே என்னை நிராகரிப்பது எப்படி என்று எனக்கு முதலில் புரியவில்லை. ஒருவேளை நான் எதிர்பார்க்கும் சம்பளத்தின் காரணமாக இருக்கலாம் என நான் பின்னர் உணர்ந்தேன்” என அவர் கூறினார்.

இதுகுறித்து பவன் கூறுகையில், “கன்டென்ட் நிறுவனம் ஒன்றில் (Content) ஆண்டுக்கு ரூ.6 முதல் 10 லட்சம் வரை சம்பளம் என லிங்க்ட் இன்-இல் (LinkedIn) குறிப்பிடப்பட்டிருந்தது. என்னுடைய எதிர்பார்ப்பு ரூ.10 லட்சம் என சொன்னபோது, ​​எனது விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது. ஆனால், ஒரு மாதம் கழித்து, எனக்கு அதே நிறுவனத்தில் அதே வேலை கிடைத்தது. இரண்டாவது முறை அந்த பதவிக்கு விண்ணப்பித்தபோது நான் 8 லட்ச ரூபாய் எதிர்பார்ப்பதாக தெரிவித்தேன். அதன்பிறகுதான் எனக்குத் தேர்வுக்கான அழைப்பு வந்தது” என தெரிவித்தார்.

தனது துறையில் பணிபுரியும் பலருக்கு இது நடந்துள்ளது என்கிறார் பவன்.

இவ்வளவு சம்பளம் தராத நிலையில் இந்த நிறுவனங்கள் ஏன் சம்பள வரம்பை அதிகமாக குறிப்பிடுகின்றனர் என அவர் அதிசயிக்கிறார்.

வேலைவாய்ப்பு

பட மூலாதாரம், GETTY IMAGES

தானியங்கி தொழில்நுட்ப நிறுவனமான ஸேப்பியர் (Zapier) எனும் நிறுவனத்தின் ஆட்சேர்ப்பு மேலாளரான போனி தில்பர், பிபிசி வொர்க்லைஃப்-க்கு தெரிவிக்கையில், நிறுவனங்கள் சம்பள வரம்புகளை வெளியிடுவதன் மூலம் எந்த வகையான மோசடியையும் செய்யவில்லை, மாறாக ஒரு வேலையின் ‘சம்பள வரம்பின்’ அர்த்தத்தை ஊழியர்களால் புரிந்துகொள்ள முடியவில்லை” என்றார்.

“ஒரு வேலையின் சம்பள வரம்பு 70 ஆயிரம் டாலர்களில் இருந்து 1 லட்சம் டாலர்கள் என்று தெரிவித்தால், அந்த பதவியில் சேரும் நபருக்கு 85 ஆயிரம் டாலர்கள் கொடுக்கலாம். ஆனால், அந்த பதவியில் நீடித்து போனஸ் மற்றும் ஊதிய உயர்வு கிடைக்கும்போது அவரால் ஒரு லட்சம் டாலர்கள் வரை சம்பாதிக்க முடியும்” என்கிறார் அவர்.

“அதிகபட்ச சம்பள வரம்பை ரூ. 1 லட்சம் என குறிப்பிட்டால், புதிய ஊழியர் வேலைக்கு சேர்ந்தவுடன் நிறுவனம் ரூ. 1 லட்சத்தைக் கொடுக்கும் என்று அர்த்தம் இல்லை. அந்த பதவியில் நீடிக்கும்போது ரூ.1 லட்சம் வரை சம்பளம் பெற முடியும் என்பதுதான் அதன் அர்த்தம்” என தில்பர் கூறுகிறார்.

பெரும்பாலான நிறுவனங்கள் இந்த வரம்புக்கு இடையில் பணியமர்த்த விரும்புவதாகவும், இதனால் பணியாளரின் சம்பளத்தை அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாகவும் அவர் கூறுகிறார். எல்லோரும் அந்த வரம்பின் உச்சத்தை எட்ட மாட்டார்கள், சிறந்த செயல்திறன் கொண்டவர்கள் மட்டுமே அதிக சம்பளத்தைப் பெறுவார்கள்.

வேலைவாய்ப்பு

பட மூலாதாரம், Getty Images

சம்பள வரம்பு தொடர்பான சட்டங்கள்

பிபிசி வொர்க்லைஃப்-இல் வெளியிடப்பட்ட ஒரு கட்டுரையின் படி, “2020 முதல், அமெரிக்காவின் ஏழு மாகாணங்களில் சம்பள வரம்பு தொடர்பான சட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் சம்பளம் தொடர்பாக வெளிப்படைத்தன்மையைக் கொண்டுவர முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தச் சட்டங்களின்படி, ஆட்சேர்ப்பு செய்யும்போது, ​​அந்த பதவிக்கு சம்பள வரம்பு என்ன என்பதை நிறுவனங்கள் கூறுவது அவசியமாகிவிட்டது. இதைச் செய்வதன் நோக்கம் என்னவென்றால், நிறுவனங்கள் சம்பளம் தொடர்பாக மக்களுக்கு எதிராக பாகுபாடு காட்டக்கூடாது என்பதுதான்.

ஒரு வகையில் பார்த்தால், இது வேலை தேடுபவர்களுக்கு வசதியை அளிக்கிறது. அந்த பதவிக்கு எவ்வளவு சம்பளம் கொடுப்பார்கள் என்பது அவர்களுக்குத் தெரியும். அத்தகைய சூழ்நிலையில், தேர்வு அல்லது நேர்காணல் போன்ற நடைமுறைகளுக்குப் பிறகு சம்பளம் விவாதிக்கப்படாமல் நேரத்தை வீணடிப்பதில் இருந்து தங்களைத் தாங்களே காப்பாற்றிக் கொள்கிறார்கள்.

ஆனால், இந்தச் சட்டங்களால், நிறுவனங்கள் சங்கடங்களை உணர்கின்றன.

பிபிசி வொர்க்லைஃப் கட்டுரையின்படி, வேலை தேடுதல் தளமான ஜிப்ரெக்ரூட்டர் (ZipRecruiter) நடத்திய ஆய்வில் , “44 சதவீத முதலாளிகள் பணியமர்த்தும்போது சம்பள வரம்பை வெளிப்படுத்தினால், அவர்களின் போட்டியாளர்கள் “இன்னும் அதிக சம்பளத்தை வழங்குவதன் மூலம் போட்டியாளர்களை ஈர்க்க முடியும் என்று நினைக்கிறார்கள்” என குறிப்பிடப்பட்டுள்ளது.

கூடுதலாக, நிறுவனங்கள் சரியான தொடக்க சம்பளத்திற்கு பேச்சுவார்த்தை நடத்துவது கடினம் என்று கருதுகின்றனர்.

அத்தகைய சூழ்நிலையில், நிறுவனங்கள் இந்தச் சட்டங்களின் மொழியில் உள்ள குறைபாடுகளைப் பயன்படுத்திக் கொண்டு, ஏதேனும் சம்பள வரம்பைக் கொடுத்து, பின்னர் தாங்கள் விரும்பும் சம்பளத்தை வழங்குகின்றன.

வேலைவாய்ப்பு

பட மூலாதாரம், GETTY IMAGES

தெளிவின்மை மற்றும் குழப்பம்

வாஷிங்டன் டிசியில் ஆட்சேர்ப்பு ஆலோசனை நிறுவனம் ஒன்றை நடத்தும் கிர்ஸ்டன் கிரெக்ஸ், பிபிசி வொர்க்லைஃப்-யிடம், காலி பணியிடங்கள் குறித்த விளம்பரத்தில் இந்த வரம்பு விவரிக்கப்பட்டுள்ள விதம் தெளிவாக இல்லை என்று கூறினார். குறிப்பாக ஆட்சேர்ப்பு செயல்முறை பற்றி தெரியாதவர்கள், சம்பளம் குறித்த தகவல் தெரியாமல் குழப்பத்தில் உள்ளனர்.

“சட்ட நடைமுறைகளை சந்திப்பதற்கு மட்டுமே, சில நிறுவனங்கள் தங்கள் விளம்பரங்களில் இதுபோன்ற சம்பள வரம்புகளை வழங்குகின்றன. இது வேண்டுமென்றே செய்யப்படுகிறது என்று அவர்கள் கூறுகிறார்கள்” என, கிரெக்ஸின் கூறுகிறார்.

“முழு ஊதிய விகிதத்தை விளக்காமல் ஒரு ஊதிய வரம்பை பட்டியலிடுவது எளிதானது மட்டுமல்ல, அதிக சம்பளத்தின் தோற்றமும் வேலையை மிகவும் கவர்ச்சிகரமானதாக ஆக்குகிறது. இந்த குழப்பத்திற்கு ஒரு எளிய தீர்வு உள்ளது. ஒருவரை பணியமர்த்தும்போது அவர்களுக்கு வழங்க விரும்பும் சம்பளத்தை குறிப்பிடுவதுதான் அதற்கான தீர்வு” என்கிறார், கிர்ஸ்டன் கிரெக்ஸ்.

எந்த வேலைக்கும் ‘பணியமர்த்தல் வரம்பு’ மற்றும் ‘முழு ஊதிய அளவு’ இரண்டு வெவ்வேறு விஷயங்கள். பணியமர்த்தல் வரம்பு என்பது புதிதாக ஆட்சேர்ப்பு செய்யப்பட்ட ஊழியர்களுக்கு வழங்கப்படக்கூடிய குறைந்தபட்ச மற்றும் அதிகபட்ச சம்பளம், முழு ஊதியம் என்பது அந்த பதவியை வகிக்கும் போது ஒரு ஊழியர் சம்பாதிக்கக்கூடிய அதிகபட்ச சம்பளம்.

வேலைவாய்ப்பு

பட மூலாதாரம், GETTY IMAGES

தீர்வு என்ன?

சண்டிகரில் உள்ள மென்பொருள் நிறுவனத்தில் மனிதவள பிரிவில் பணிபுரியும் நவீன் தாக்கூர் கூறுகையில், “வேலைக்கான விளம்பரங்களில் அதிக சம்பளம் குறிப்பிடப்பட்டு, குறைவான சம்பளத்திற்கு வேலைக்கு அமர்த்துவதில் எப்போதும் தவறு நிகழ்ந்திருக்கும் என்பதில்லை” என்கிறார்.

“இதில் ஏமாற வேண்டிய அவசியமில்லை, அனுபவத்திற்கு பதிலாக திறமைக்கே முன்னுரிமை அளிக்கும் பல துறைகள் உள்ளன. இதுபோன்ற சூழ்நிலையில், குறைந்த சம்பளம் கேட்கும் அனுபவம் குறைந்த போட்டியாளர், இதில் ஏமாற்றமடையத் தேவையில்லை. பல நேரங்களில், நிர்ணயிக்கப்பட்ட வரம்பை விட அதிக சம்பளத்தில் கூட வேலைகள் வழங்கப்படுகின்றன” என்கிறார் அவர்.

ஸேப்பியர் நிறுவனத்தின் போனி தில்பர் கூறுகையில், “வேலைக்கு விண்ணப்பிக்கும் போது, ​​”பணியமர்த்தல் வரம்பை” மட்டுமின்றி, “முழு ஊதிய அளவையும்” தெரிந்துகொள்ள வேண்டும். நிறுவனங்கள் மற்றும் பிற முதலாளிகளும் இந்த விஷயத்தில் தெளிவுபடுத்த வேண்டும்” என்று அவர் கூறுகிறார்.

அவரைப் பொறுத்தவரை, “ஒரு வேலைக்கான விண்ணப்பங்களை அழைக்கும் போது பணியமர்த்தல் வரம்புக்குப் பதிலாக முழு ஊதிய விகிதத்தைப் பற்றிய தகவலைத் தருகிறீர்கள் என்றால், அதைத் தெளிவாகக் குறிப்பிடவும்” என்கிறார்.

“நான் ஒரு வேலையை தேர்ந்தெடுக்க வேண்டும் என்றால், குறிப்பிடப்பட்ட வரம்புக்கு நெருக்கமான சம்பளம் வழங்கும் வேலைக்கு செல்ல மாட்டேன். ஏனென்றால் அதன் பிறகு எனக்கு வளர்ச்சிக்கு இடம் இருக்காது” என்கிறார்.

இப்போது பவனும் அதே உத்தியைக் கடைப்பிடிக்கிறார்.

“இப்போது நான் எதிர்பார்க்கும் சம்பளம் குறைந்த வரம்பில் உள்ள காலியிடங்களுக்கு மட்டுமே விண்ணப்பிக்கிறேன். உதாரணமாக, எனக்கு 10 லட்சம் வேண்டுமானால், 6 முதல் 10 லட்சம் வரையிலான வேலைக்குப் பதிலாக, 8 முதல் 12 லட்சம் வரையிலான வரம்பு கொண்ட வேலைகளுக்கு நான் விண்ணப்பிக்கிறேன்” என பவன் சிரித்துக்கொண்டே கூறுகிறா.

அதே சமயம், தனக்கு எவ்வளவு சம்பளம் வேண்டும் என்பதை ஆரம்ப விண்ணப்பத்தில் தெளிவாகக் குறிப்பிடவில்லை என்றும் மேரி கூறுகிறார்.

தனது விண்ணப்பம் உடனடியாக நிராகரிக்கப்படாமல் இருக்க, சம்பள வரம்புக்கு நடுவில் ஏதேனும் ஒரு தொகையை கேட்பதாக அவர் பிபிசி வொர்க்லைஃப்-யிடம் கூறுகிறார்.

Facebook
Facebook
fb-share-icon
Telegram
WhatsApp
TekTamil.com
Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by TekTamil.
நன்றி
Publisher: பிபிசிதமிழ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *