
திருவண்ணாமலை தீப திருவிழாவை முன்னிட்டு, மழையில் நனைந்தபடி 63 நாயன்மார்கள் சிலைகளை பள்ளி மாணவர்கள் சீருடை அணிந்து சுமந்து சென்ற வீடியோவும், போட்டோக்களும் சமூக ஊடகங்களில் வேகமாக பரவி விவாதங்களை ஏற்படுத்தியுள்ளது.
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் கார்த்திகை தீபத் திருநாள் இன்று ஞாயிற்றுக்கிழமை 26-ம் தேதி நடைபெறுகிறது. ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் இந்த விழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பார்கள். அந்த வகையில் இந்த ஆண்டு சுமார் 50 லட்சம் பேர் வரை இந்த திருவிழாவில் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பத்து நாட்கள் விமரிசையாக விழா
கார்த்திகை தீப நாளை ஒட்டி கார்த்திகை தீப பிரம்மோற்சவ திருவிழா அண்ணாமலையார் கோவிலில் நடைபெறும். இந்த வருடமும் பத்து நாட்கள் உற்சவர்கள் ஊர்வலங்களும், மூன்று நாள் தெப்ப திருவிழாவும் அதனையடுத்து சண்டிகேசுவரர் உற்சவமும் நடைபெற்றது.
நாயன்மார் சிலைகளை சுமந்த பள்ளி மாணவர்கள்
இந்நிகழ்ச்சிகளின் ஒரு பகுதியாக 3 நாட்களுக்கு முன்பாக 63 நாயன்மார்களின் வீதி உலா நடைபெற்றது.
கொட்டும் மழையில் நடைபெற்ற இந்த வீதி உலாவில் சீருடை அணிந்த பள்ளி மாணவர்கள் பலரும் நாயன்மார் சிலையை தாங்கி பிடித்தவாறு ஊர்வலமாக சென்றனர். இவர்கள் அனைவரும் அரசு பள்ளி மாணவர்கள். இந்நிகழ்வுதான் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. பள்ளி மாணவர்கள் வீதி உலாவில் பங்கேற்க பள்ளி நிர்வாகம் அனுமதி அளித்ததா? அல்லது கட்டாயப்படுத்தப்பட்டு இதில் ஈடுபடுத்தப்பட்டார்களா? மதம் சார்ந்த நிகழ்வுகளுக்கு பள்ளி மாணவர்கள் ஏன் பயன்படுத்தப்படுகிறார்கள்? என்றும் பல்வேறு கேள்வி எழுந்துள்ளது.
ஆனால் வழக்கமாக ஒவ்வொரு ஆண்டும் நாயன்மார்கள் சிலைகளை பள்ளி மாணவர்கள்தான் சுமந்து செல்கிறார்கள் என்றும், 60 ஆண்டுகளாக நீடிக்கும் இந்த வழக்கம் தீப திருவிழாவின் ஒரு அங்கம்தான் எனவும் சொல்லப்படுகிறது. இது தொடர்பான வீடியோக்கள், போட்டோக்கள் சோஷியல் மீடியாக்களில் வேகமாக பரவி வரும் நிலையில், பல்வேறு விவாதங்களையும் ஏற்படுத்தியுள்ளது.

10 ஆண்டுகளுக்கு முன்பு அதே பள்ளி மாணவர்கள் நாயன்மார் சிலைகளை சுமந்து சென்ற தருணம்
இந்த வழக்கத்தை யார், எப்போது தொடங்கியது?
திருவண்ணாமலையை சேர்ந்த அந்த பள்ளியின் முன்னாள் மாணவரும், அங்கே படிக்கையில் நாயன்மார் சிலையை சுமந்தவர்களில் ஒருவருமான ஆனந்தன், பிபிசி தமிழிடம் பேசும் போது, “தீபத் திருவிழாவானது பத்து நாட்கள் நடைபெறும். இதில் ஆறாம் நாள் திருவிழா அன்று வெள்ளி ரத உற்சவம் ஆகும். அன்று பஞ்ச மூர்த்திகள் முன்பு 63 நாயன்மார்கள் சிலைகள் எடுத்து வரப்படும். இதில் 63 நாயன்மார்களையும் சுமப்பது திருவண்ணாமலை நகராட்சி ஆண்கள் பள்ளி மாணவர்கள் தான். தற்பொழுதும் அந்த மாணவர்கள் தான் நாயன்மார்களை சுமந்து கொண்டு வந்தார்கள். அநேகமாக 61 வது வருடமாக இந்த நிகழ்வு நடைபெற்றுக் கொண்டு வருகிறது.
நான் அந்த பள்ளியில் படித்த முன்னாள் மாணவன். 2001- ஆம் ஆண்டு பள்ளியில் படிக்கும் பொழுது நானும் நாயன்மார்கள் சிலையை ஆர்வத்துடன் சென்று சுமந்துள்ளேன். அந்த பள்ளி மாணவர்கள் மட்டும்தான் அதைச் செய்ய முடியும். இந்த நிலையில் சமூக வலைதளங்களிலும் தொலைக்காட்சிகளிலும் வந்த படத்தையும் வீடியோவையும் வைத்துக்கொண்டு விவாதம் சென்று கொண்டிருக்கின்றது. இன்று வந்து சுவாமிகளின் சிலைகளை இலட்சக்கணக்கான மக்கள் தூக்கி செல்வதற்கு ஆர்வமாக இருக்கலாம். ஆனால் 60 ஆண்டுகளுக்கு முன்பு அந்த நிலை இருந்ததா? இல்லை? இந்நிலையில் கோயில் நிர்வாகம் மூலமாக நகராட்சியிடம் வேண்டுகோள் வைத்திருந்தது என்று நினைக்கின்றேன். இது எனது தனிப்பட்ட கருத்து.
அதன் அடிப்படையில் பள்ளி மாணவர்களை அதிலும் இந்தப் பள்ளியில் படிக்கும் மாணவர்களை குறிப்பாக ஆர்வமுள்ள மாணவர்களை மட்டும் அழைத்து பயன்படுத்தினார்கள். அவர்களும் ஆர்வமுடன் கலந்து கொண்டார்கள். ஏன் பள்ளி சீருடை போட்டு கொண்டு இதை செய்கிறார்கள் என்றால்.. எந்தவிதமான அசம்பாவிதம் நிகழாமல் இருக்கவும். அவர்கள் மாணவர்கள் என்று அடையாளப்படுத்தவுமே… எந்த நிகழ்விலும் எளிதாக கண்டறியலாம் என்பதன் அடிப்படையிலேயே இது நடைபெற்று வருகின்றது. தற்போதைய சூழலில் மத நம்பிக்கை என்று விவாதம் சென்றாலும், இங்கு அது போல் இல்லை. பொதுவெளியில் நாம் எப்படி வேண்டுமானாலும் விவாதிக்கலாம். மாணவர்களை துன்புறுத்துகின்றோம்.. ஒழுக்க கேடான செயல் என்றும் விவாதிக்கலாம் ஆனால் இது அப்படி அல்ல.” என்று கூறினார்.

ஆனந்தன், அதே பள்ளியின் முன்னாள் மாணவர்
சிதம்பரத்தில் தீட்சிதர்கள் ஆதிக்கத்தை மாற்ற முடியுமா?
மேலும் தொடர்ந்த அவர், “நான் ஒரு முன்னாள் மாணவனாக கூறுகின்றேன். நாங்கள் எப்பொழுது கார்த்திகை தீபம் வரும் என்று எதிர்பார்த்து காத்திருப்போம். எங்களுக்கு குறிப்பாக திருவண்ணாமலையில் வசிப்பவர்களுக்கு தீபாவளியை தாண்டி திருக்கார்த்திகை தீபம் தான் மிகச்சிறந்த பண்டிகையாக கொண்டாடும் திருவிழாவாகும். இந்த சிலை தூக்கும் நிகழ்வில் ஆசிரியர்களும் இருந்தார்கள் என்று சிலர் கேள்வி எழுப்பி உள்ளார்கள். பாதுகாப்பு கருதி ஆசிரியர்களும் கலந்து கொள்வார்கள். மற்றபடி சமூக வலைதளங்களில் வருவது போல் கடுமையாக பயன்படுத்துகிறார்கள் என்று பதிவுகள் உள்ளது. இது தவறானது. இந்த நிகழ்வானது மாணவர்களின் ஆர்வம் அடிப்படையில் மட்டுமே செய்யப்படுகிறது.
மேலும் அவர்கள் நாயன்மார்களை சுமந்து செல்லும்போது ஒவ்வொரு இடத்திலும் நின்று மக்கள் அன்புடன் அவர்களை உபசரிப்பார்கள். நான் சிறுவனாக இருந்து தூக்கிக் கொண்டு செல்லும் பொழுது எங்களுக்கு குளிர்பானங்கள், சுண்டல் என்று வழங்குவார்கள். முற்றிலும் மாணவர்களுடைய விருப்பத்தின் பேரிலும் மட்டுமே இது நடைபெறுகின்றது. இதில் விருப்பமில்லாத மாணவர்கள் நிச்சயமாக ஈடுபடுத்த மாட்டார்கள். இது எல்லோருக்கும் தெரியும்.
ஏன் சிதம்பரத்தில் தீட்சிதர்கள் மட்டும் தானே பூஜை செய்கின்றார்கள் அதை யாரும் கேட்பதில்லையே? இதை மட்டும் ஏன் விவாத பொருளாக மாற்றுகின்றார்கள். இது தேவையில்லாத ஒன்று. கண்டிப்பாக இந்த நடைமுறையை மாற்ற தேவையில்லை. இது மாணவர்களுக்கான குறிப்பாக அந்தப் பள்ளி மாணவர்களுக்கான உரிமையாகும்.” என்று ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.
“எல்லா சமூக மாணவர்களும் சிலைகளை தூக்குவது நல்லதுதானே”
பிபிசி தமிழிடம் பேசிய திருவண்ணாமலையை சேர்ந்த பாஸ்கர், “இந்த நிகழ்வு சரி, தவறு என்பதை காட்டிலும் இது வழக்கமான ஒரு நிகழ்வு ஆகும். எனது பார்வையில் இதை கூறுவதென்றால் சுவாமி சிலைகளை நாயன்மார்களை அனைத்து சாதியினரும் தொட்டு தூக்குவதற்கு ஒரு வாய்ப்பாக உள்ளது. இதை அந்த நோக்கில் தான் பார்க்க வேண்டும். இதை மாணவர்கள் செய்வது ஒன்றும் தவறு இல்லை. ஆனால் கிறிஸ்தவ, முஸ்லிம், புத்த மதத்தில் இது போன்ற நிகழ்வுகளை நாம் காண முடியாது.
முன்பு இந்த பகுதியில் சேவா ஆஸ்ரமம் என்ற பள்ளி இருந்தது. இந்த நாயன்மார்கள் சிலைகள் அங்கு சென்று தான் மீண்டும் ஊர்வலமாக கொண்டு வரப்படும். அந்த ஆசிரம பள்ளி மாணவர்களை வைத்து தூக்கியிருந்திருக்கலாம் அதைத்தொடர்ந்து இது வழக்கமாக மாறி இருக்க வேண்டும். ஆழ்வார்களும், நாயன்மார்களும் ஜாதி பேத மற்றவர்கள். இதில் அனைத்து சமூகத்தைச் சார்ந்தவர்களும் உள்ளார்கள் என்பது அனைவருக்கும் தெரியும். அதனால் தானோ என்னவோ பிராமணர்கள் கையில் இருந்து இது மற்றவர்களிடம் மாறி வந்திருக்கும். இது ஆய்வுக்கு உட்படுத்த வேண்டிய விஷயம். இதைப்பற்றி இப்பொழுது விவாதம் தேவையில்லை.

பாஸ்கர்
“பிஜேபி ஆட்சியோ, திமுக ஆட்சியோ காரணம் அல்ல”
இதற்கு காரணம் பிஜேபி ஆட்சியோ.. திமுக ஆட்சியோ.. கிடையாது. இதில் விமர்சனம் தேவையில்லை. பல ஆண்டுகளாக பள்ளி மாணவர்கள் தான் இதை தூக்கி வருவார்கள். ஒரே சீரான உயரத்தில் உள்ளவர்கள் மட்டுமே இதில் பயன்படுத்தப்படுகிறார்கள். சமூக வலைதளங்களில் கூறுவது போல எல்லோரையும் தூக்க அனுமதிக்கலாம்.என்றால் அது சரியாக இருக்காது. விழா தினத்தன்று காலையில் அதிக கூட்டமாக வந்து விடுவார்கள் அதில் யாரை தேர்ந்தெடுப்பது என்ற பல்வேறு பிரச்சனைகள் உள்ளது.
அதையும் கவனத்தில் கொண்டு செயல்பட வேண்டும். இளைய சமுதாயமான மாணவர்கள் தூக்குவதில் ஒன்றும் தவறில்லை. இதில் முஸ்லிம், கிறித்தவர்கள் என்று அனைத்து தரப்பு மாணவர்களும் ஆர்வத்துடன் வந்து தூக்குவார்கள். இது யாருக்கும் தெரியாது. அதனால்தானோ என்னவோ சீருடை பயன்படுத்தப்படுகின்றது. கடவுள் நம்பிக்கை உள்ள மாணவர்கள் தான் பயன்படுத்தப்படுவார்கள். இது தொடரலாம். இதை மாற்று கோணத்தில் யோசித்தால் வேறு சில ஜாதி சமூக கட்டத்தில் அடங்கிவிடும். இது தொடர்வதில் ஒன்றும் தவறில்லை” என்று கூறினார்.

“காலங்காலமாக நடப்பது என்று கூறி நியாயப்படுத்த முடியாது”
பள்ளி மாணவர்கள் சீருடையுடன் நாயன்மார்கள் சிலையை தூக்கி வந்த சம்பவம் தொடர்பாக திருவண்ணாமலையை சேர்ந்த பிரபல எழுத்தாளரும், பிரபல தொலைக்காட்சி பிக் பாஸ் நிகழ்வில் பங்கு பெற்றவரும், சிறந்த கதை சொல்லி என்று அழைக்கப்படுபவருமான பவா செல்லதுரை பிபிசி தமிழிடம் பேசுகையில்,
“நான் திருவண்ணாமலையில் பள்ளிக்கூடத்தில் படித்துக் கொண்டிருந்த போது நானும் நாயன்மார்கள் சிலையை தூக்கி உள்ளேன் இது காலம் காலமாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. ஆனால் தற்பொழுது இது விவாத பொருளாக மாறியதன் காரணம் அரசியல் தான். ஆம் தற்பொழுது இந்த நாட்டை மத சார்புள்ள நாடாக மாற்றும் அரசியல் நடைபெற்று கொண்டு வருகின்றது. தற்பொழுது ஒவ்வொரு நகர்விலும் இது அரசியல் ஆக்கப்படும் போது எல்லா மதத்தைச் சேர்ந்த மாணவர்களும் படிக்கும் பள்ளியில் இது போன்ற சிலைகளை தூக்க முடியுமா? என்ற வினா எழுகிறது.

இதே இங்கு உள்ள உலக மாதா கோயில் திருவிழாவிற்கு மாணவர்களை அழைத்துச் செல்லலாமா என்று கேள்வி எழுமே..? இது எதன் அடிப்படையில் பார்க்கப்படுகிறது என்றால், இந்தியா மாதிரியான மத சார்பற்ற நாடுகளில் நாம் சகோதரனாக உள்ள நிலையில் அதுபோன்ற சூழல் இல்லை. ஆனால் இது போன்ற நிகழ்வுகள் அரசியல் ஆக்கப்படும் போது இது நிச்சயமாக அரசியலாகத்தான் பார்க்க முடியும். இந்த சூழலில் இந்த கேள்வி சரியானதுதான்.
எல்லாமே காலம் காலமாக நடக்கிறது என்றால் அதை அப்படியே நியாயப்படுத்த முடியாது. பெண்ணடிமைத்தனம், கணவனை இழந்த பெண் உடன்கட்டை ஏறுதல் போன்ற நிகழ்வுகளை நியாயப்படுத்த முடியுமா? நிச்சயமாக முடியாது. நாம் மாறிவிட்டோமே. அதுபோல் 60 வருடமாக இது நடைபெற்று கொண்டு வரும் சம்பவம் என்பதால் இதை நாம் நிச்சயமாக நியாயப் படுத்த முடியாது.
தீபத் திருவிழாவில் லட்சக்கணக்கானோர் பங்கேற்கின்றார்கள். அதில் விருப்பம் உள்ளவர்கள், ஆர்வம் உள்ளவர்களை கொண்டு இந்த போன்ற செயல்களில் ஈடுபடுத்தலாம்.. இனி பள்ளி, கல்லூரி மாணவர்களை இது போன்ற நிகழ்வுகளில் பயன்படுத்துவதை தவிர்க்கலாம்” என்று கூறி முடித்துக் கொண்டார்..
நன்றி
Publisher: பிபிசிதமிழ்