ரூ. 2,000 நோட்டுகளை மாற்ற இன்றே கடைசி நாள்: மாற்றாவிட்டால் என்ன ஆகும்?

ரூ. 2,000 நோட்டுகளை மாற்ற இன்றே கடைசி நாள்: மாற்றாவிட்டால் என்ன ஆகும்?

 2,000 ரூபாய் நோட்டு, ரிசர்வ் வங்கி

பட மூலாதாரம், Getty Images

கடந்த 2016ஆம் ஆண்டு நவம்பர் மாதம், 500, 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என பணமதிப்பிழப்பு நடவடிக்கை அறிவிக்கப்பட்டது. அப்போது அறிமுகம் செய்யப்பட்ட 2,000 ரூபாய் நோட்டுகளை, புழக்கத்தில் இருந்து திரும்பப் பெறுவதாக இந்திய ரிசர்வ் வங்கி கடந்த மே மாதம் தேதி அறிவித்திருந்தது.

ஆனால், 2,000 ரூபாய் நோட்டுகள் பண மதிப்பிழப்பு செய்யப்படவில்லை என்றும், அவை செல்லுபடியாகும் என்றும் ரிசர்வ் வங்கி கூறியது.

மக்கள் தங்களிடம் இருக்கும் 2,000 ரூபாய் நோட்டுகளை செப்டம்பர் 30ஆம் தேதிக்குள் (அதாவது இன்று) வங்கிகளில் மாற்றிக் கொள்ளலாம் என்றும் கூறியிருந்தது.

அப்படி உங்களிடம் இருக்கும் 2,000 ரூபாய் நோட்டுகளை இன்றைக்குள் மாற்றாவிட்டால் என்ன ஆகும்?

ரூ. 2,000 நோட்டுகளை திரும்பப் பெறுவது ஏன்?

ரூ. 2,000 நோட்டுகளை மாற்ற இன்றே கடைசி நாள் – மாற்றாவிட்டால் என்ன ஆகும்?

பட மூலாதாரம், Getty Images

ரூ. 2,000 நோட்டுகளை திரும்பப் பெறும் இந்த நடவடிக்கைக்குக் காரணமாக ரிசர்வ் வங்கி, தனது ‘Clean Note Policy’ என்னும் கொள்கையைச் சுட்டிக்காட்டியிருந்தது. இந்தக் கொள்கையின்படி, ரிசர்வ் வங்கி, தரமான ரூபாய்த் தாள்கள் மட்டுமே புழக்கத்தில் இருப்பதை உறுதி செய்கிறது.

இந்த முடிவு குறித்து, கடந்த மே மாதம் ரிசர்வ் வங்கி வெளியிட்ட அறிக்கையில், ‘கிட்டத்தட்ட 89% அளவான 2,000 ரூபாய் நோட்டுகள் 2017ஆம் ஆண்டு மார்ச் மாதத்திற்கு முன்னர் வழங்கப்பட்டவை,’ என்றும் ‘அவற்றின் ஆயுட்காலம் 4 முதல் 5 வருடங்கள்தான்,’ என்றும் கூறியிருந்தது.

மேலும், “2018ஆம் ஆண்டு மார்ச் மாதம், மொத்தம் 6.73 லட்சம் கோடி ரூபாய் அளவுக்குப் புழக்கத்தில் இருந்த 2,000 ரூபாய் நோட்டுகள், 2023ஆம் ஆண்டு மார்ச் மாதம் 3.62 லட்சம் கோடியாகக் குறைந்தன,” என்றும் ரிசர்வ் வங்கி கூறியிருந்தது.

பொதுவாக 2,000 ரூபாய் நோட்டுகள் பரிவர்த்தனைகளுக்குப் பயன்படுத்தப் படுவதில்லை என்றும் ரிசர்வ் வங்கி குறிப்பிட்டிருந்தது.

 2,000 ரூபாய் நோட்டு, ரிசர்வ் வங்கி

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு,

ரூ. 2,000 நோட்டுகளைத் திரும்பப் பெறும் இந்த நடவடிக்கைக்குக் காரணமாக ரிசர்வ் வங்கி, தனது ‘Clean Note Policy’ எனும் கொள்கையைச் சுட்டிக்காட்டியிருந்தது.

மாற்றுவதற்கு என்ன வசதிகள் வழங்கப்பட்டன?

மக்கள் 2,000 ரூபாய் நோட்டுக்களை பரிவர்த்தனைகளுக்குப் பயன்படுத்த முடியும் என்றாலும், செப்டம்பர் 30க்குள் அவற்றை வங்கிகளில் செலுத்தவோ, வேறு மதிப்புள்ள நோட்டுகளாக மாற்றிக் கொள்ளவோ அறிவுறுத்தப்படுகிறது என்று ரிசர்வ் வங்கி கூறியிருந்தது. வங்கிகளும் ரூ. 2,000 நோட்டுகளை வழங்குவதை நிறுத்துமாறு அறிவுறுத்தியிருந்தது.

இதற்காக, அனைத்து வங்கிகளிலும், ரிசர்வ் வங்கியின் 19 மண்டல அலுவலகங்களிலும் செப்டம்பர் 30ஆம் தேதி வரை வசதிகள் செய்யப்படும் என்றும் ரிசர்வ் வங்கி கூறியிருந்தது.

இதற்காக எந்த சேவைக் கட்டணமும் பெறப்படாது என்றும், ஆனால் ஒரு நபர் ஒரு முறைக்கு 20,000 ரூபாய் அளவிலான 2,000 ரூபாய் நோட்டுகளை மட்டுமே மாற்றிக்கொள்ள முடியும் என்றும் ரிசர்வ் வங்கியின் அறிக்கையில் கூறப்பட்டிருந்தது.

இதைத் தொடர்ந்து, இம்மாதத் துவக்கத்தில், புழக்கத்தில் இருந்த 93% அளவிலான 2,000 ரூபாய் நோட்டுகள் திரும்பிப் பெறப்பட்டுவிட்டன என்று ரிசர்வ் வங்கி அறிவித்ததைச் செய்தியறிக்கைகள் பதிவு செய்தன.

 2,000 ரூபாய் நோட்டு, ரிசர்வ் வங்கி

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு,

அனைத்து வங்கிகளிலும், ரிசர்வ் வங்கியின் 19 மண்டல அலுவலகங்களிலும் செப்டம்பர் 30-ஆம் தேதி வரை வசதிகள் செய்யப்படும் என்றும் ரிசர்வ் வங்கி கூறியிருந்தது.

‘வாடிக்கையளர்கள் 2,000 ரூபாய் நோட்டுகளை தர வேண்டாம்’

இந்நிலையில், 2,000 ரூபாய் நோட்டுகளை மாற்றுவதற்கான இறுதித் தேதி நெருங்க நெருங்க மக்கள் 2,000 ரூபாய் நோட்டுகளை வங்கிகள் அல்லாத பிற வணிகத் தளங்களிலும், பேருந்துகளிலும் மாற்றுவதும் நிகழ்ந்தன.

அதனால், செப்டம்பர் 28ஆம் தேதி முதல் பயணிகளிடம் 2,000 ரூபாய் நோட்டுகளை வாங்கக் கூடாது என்று கிளை மேலாளர்களுக்கும் பேருந்து நடத்துநர்களுக்கும் தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் அறிவுறுத்தியிருந்தது.

அதேபோல் ஆம்னி பேருந்து உரிமையாளர்களும் தங்கள் பேருந்துகளில் நேரடியாக டிக்கெட் பதிவு செய்ய வருபவர்கள் 2,000 ரூபாய் நோட்டுகளை தர வேண்டாம் என்று கேட்டுக்கொண்டிருக்கிறது.

இதைத் தொடர்ந்து, பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் சங்கமும் இதேபொன்ற ஓர் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

 2,000 ரூபாய் நோட்டு, ரிசர்வ் வங்கி

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு,

செப்டம்பர் 30ஆம் தேதிக்குள் கையிலிருக்கும் 2,000 ரூபாய் நோட்டுகளை மாற்றப்பட முடியாமல் போனால் என்னவாகும், என்பதற்கு இதுவரை ரிசர்வ் வங்கி தெளிவான தகவலைத் தரவில்லை.

செப்டம்பர் 30ஆம் தேதிக்குள் மாற்றாவிட்டால் என்ன நடக்கும்?

செப்டம்பர் 30ஆம் தேதிக்குள் கையிலிருக்கும் 2,000 ரூபாய் நோட்டுகளை மாற்றப்பட முடியாமல் போனால் என்னவாகும், என்பதற்கு இதுவரை ரிசர்வ் வங்கி தெளிவான தகவலைத் தரவில்லை.

ஆனால் வங்கி அதிகாரிகள், இதற்கு முன் நடந்த இதேபோன்ற நடவடிக்கைகளில், ஒன்றாக கடைசித் தேதி நீட்டிக்கப்பட்டது, அல்லது ரிசர்வ் வங்கியின் மண்டல அலுவலகங்களில் நோட்டுகளை மாற்றும் வசதி செய்யப்பட்டது என்று கூறுகின்றனர்.

“கடந்த 2016ஆம் ஆண்டு, பணமதிப்பிழப்பு நடவடிக்கையை அறிவித்து, 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவித்தபோது, அவற்றை வங்கிகளில் திருப்பிச் செலுத்தும் கடைசித் தேதியை ஒரு மாதம் நீட்டித்தது. ரிசர்வ் வங்கியில் நேரடியாகத் திருப்பிச் செலுத்தும் வசதியும் அளிக்கப்பட்டது. அதுபோல இம்முறையும் நடக்குமா என்று பார்க்க வேண்டும்,” என்கிறார் வங்கி ஊழியர்கள் சங்கத்தின் செயலாளரான மகேஸ்வரன்.

தவிர்க்க முடியாத காரணங்களால் நோட்டுகளை மாற்ற முடியாமல் போனவர்களுக்கு இந்த வசதி செய்யப்பட்டதாக அவர் கூறுகிறார்.

ஆனால், முன்னதாக 500, 1000 ரூபாய் நோட்டுகளுக்கு நிகழ்ந்தது போல் இல்லாமல், 2,000 ரூபாய் நோட்டுகள் சுமூகமான முறையில் மாற்றப்படுவதற்கான சூழல் இருந்ததாலும், தினசரி பரிவர்த்தனைகளில் 2,000 ரூபாய் நோட்டுகள் பெருமளவில் புழங்காத காரணத்தாலும், இம்முறை நோட்டுகளை மாற்றுவதற்கான இறுதித் தேதி கடந்தபின் ரிசர்வ் வங்கி என்ன முடிவு செய்கிறது என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும் என்கின்றனர் வங்கி அதிகாரிகள்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

Facebook
Facebook
fb-share-icon
Telegram
WhatsApp
TekTamil.com
Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by TekTamil.
நன்றி
Publisher: பிபிசிதமிழ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *