
பட மூலாதாரம், Getty Images
அது 1773, டிசம்பர் 16, இரவு. ஆயுதமேந்திய ஒரு கும்பல், பாஸ்டனில் உள்ள கிரிஃபின்ஸ் ஆங்கரேஜில் நங்கூரமிட்டு நிறுத்தப்பட்டிருந்த மூன்று கப்பல்களில் ஏறினர். அதில் சிலர் மோஹாக் போர் வீரர்களைப் போல உடை அணிந்திருந்தார்கள்.
இந்தக் கப்பல்களில் 92,000 பவுண்டுகள் அல்லது சுமார் 41,000 கிலோ தேயிலை நிரப்பப்பட்ட 340 பெட்டிகள் இருந்தன. அந்தக் காலத்தில் தேநீர் அமெரிக்காவின் பாஸ்டன் பிராந்தியத்தில் மிகவும் பிரபலமான ஒரு பானமாக இருந்தது.
சன்ஸ் ஆஃப் லிபர்ட்டி என்று அழைக்கப்படும் ஒரு தேசபக்த குழுவின் ஆதரவுடன் கப்பலுக்குள் ஊடுருவிய நபர்கள், அங்கிருந்த பெட்டிகளை எடுத்து தேயிலையைக் கடலில் கொட்டினர்.
அவை பிரிட்டிஷ் கிழக்கிந்திய கம்பெனிக்கு சொந்தமான தேயிலை. இன்றைய டாலர் மதிப்பில், ஒரு மில்லியன் டாலர்களுக்கு மேல் நஷ்டத்தை சந்தித்தது பிரிட்டிஷ் கிழக்கிந்திய கம்பெனி.
இந்தத் தேயிலை அழிப்பு சம்பவம் 13 காலனிகளை புரட்சிக்குத் தூண்டியது அல்லது இதன் மூலம் அமெரிக்க புரட்சி பிறந்தது என்று கூறலாம். பாஸ்டனில் நடந்த இந்த நிகழ்வுதான் பாஸ்டன் தேநீர் விருந்து என்று அழைக்கப்படுகிறது.
டிசம்பர் 16ஆம் தேதி வரை, காலனிகளின் அனுமதியின்றி அவர்களின் மீது பிரிட்டிஷ் நாடாளுமன்றம் மீண்டும் மீண்டும் வரி விதிக்க முயன்றபோது, காலனிகளின் ஆட்சேபனைகளுக்கு அமைதியான முறையில் தீர்வு காண்பது சாத்தியமாக இருந்தது.
ஆனால், அந்த நாளுக்குப் பிறகு காலனித்துவ அதிகாரத்தின் மீதான இருதரப்பினரின் நிலைப்பாடும் மாறியது. ஒரே ஆண்டுக்குள் கிரேட் பிரிட்டனுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே போர் வெடித்தது.
கிழக்கிந்திய கம்பெனி மீது தாக்குதல்

பட மூலாதாரம், Getty Images
பல குடியேற்றவாசிகள் இந்திய மோஹாக்ஸ் போல் மாறுவேடமிட்டு கப்பல்களில் ஏறினர்

பட மூலாதாரம், Getty Images
பாஸ்டனில் நடந்த தேயிலை அழிப்பு பல தேச பக்தர்களின் மனதைப் புண்படுத்தியது, ஏனெனில் அதன் விளைவுகள் அமெரிக்காவை பாதிக்கும். தேயிலை அழிக்கப்படுவதைப் பற்றி அறிந்ததும், அதைக் கடுமையாகக் கண்டித்தார் ஜார்ஜ் வாஷிங்டன்.
பெஞ்சமின் பிராங்க்ளின் இந்த நடவடிக்கையால் மிகவும் அதிருப்தி அடைந்தார். கிழக்கிந்திய கம்பெனியின் நஷ்டத்தை அவரே செலுத்த முன்வந்தார்.
பிரித்தானிய பிரதமர் லார்ட் நோர்த் 1773ஆம் ஆண்டில் கிழக்கிந்திய கம்பெனியுடன் செய்துகொண்ட ஊழல் ஒப்பந்தத்தில், ஒரு முக்கிய கேள்விக்கான பதில் உள்ளது.
கிழக்கிந்திய கம்பெனி பிரிட்டனின் பணக்கார மற்றும் சக்திவாய்ந்த குழுமமாக இருந்தது. அவர்கள் தங்களது சொந்த ராணுவத்தையும் கொண்டிருந்தனர். இது பிரிட்டன் அரசரின் வழக்கமான படைகளைவிட இரட்டிப்பான அளவில் இருந்தது.
தெற்காசியாவில் கிழக்கிந்திய கம்பெனியின் நிர்வாகத்தை “ராணுவம் மற்றும் சர்வாதிகாரம் மூலம் அமைக்கப்பட்ட பேரரசு” என்று விவரித்தார் அரசியல் பொருளாதார நிபுணர் ஆடம் ஸ்மித்.
இருப்பினும், வங்காளத்தில் கடுமையான வறட்சி மற்றும் அதன் சொந்த நிர்வாகத்தில் இருந்த ஊழல் காரணமாக, கிழக்கிந்திய நிறுவனம் திவாலாகும் நிலையில் இருந்தது.
வடக்கு தீர்வு தேயிலை சட்டம்

பட மூலாதாரம், Getty Images
சாமுவேல் ஆடம்ஸ்
இந்தியாவிலும் அமெரிக்காவிலும் இருக்கும் பிரச்னைகளைத் தீர்க்கும் நம்பிக்கையில், வட அமெரிக்காவில் 17 மில்லியன் பவுண்டுகள் தேயிலையைக் குறைந்த விலையில் விற்கும் குத்தகையை கிழக்கிந்திய கம்பெனிக்கு வழங்கியது அமெரிக்க நாடாளுமன்றம்.
ஆனால் மறுபுறம், 1767இன் டவுன்சென்ட் வருவாய் சட்டத்தில் நடைமுறைப்படுத்தப்பட்ட தேயிலை மீதான காலனித்துவ வரியை நாடாளுமன்றம் தக்க வைத்துக் கொண்டது.
வரி காரணமாக விலை கூடுதலாக இருந்தாலும், ஜான் ஹான்காக் போன்ற வணிகர்களால் அமெரிக்காவுக்குள் கடத்தி வரப்படும் வரியில்லா டச்சு தேயிலையைவிட, நிறுவனத்தின் தேயிலை மலிவாக இருக்கும் என்று உறுதியளிக்கப்பட்டது.
1765ஆம் ஆண்டு முத்திரை சட்டத்திற்குப் பிறகு, காலனிகளுக்கு வரி விதிக்கும் நாடாளுமன்றத்தின் முயற்சிகள் பெரும்பாலும் தோல்வியடைந்தன. மேலும் வட அமெரிக்க குடியேற்றவாசிகள் தேயிலை சட்டம் பிரிட்டிஷ் அரசியல்வாதிகளுக்கு ஒரு வெற்றியாக இருக்கும் என்று பயந்தனர்.
காரணம் காலனிகளின் அனுமதியின்றி வரிகள் விதித்து, அதன் மூலம் தங்களது வருவாயை உயர்த்துவதற்கு வழி செய்ய நாடாளுமன்றத்திற்கு உரிமை உண்டு என்று அந்த அரசியல்வாதிகள் நம்பினர்.
பாஸ்டன் சம்பவத்தின் தாக்கம்

பட மூலாதாரம், Getty Images
பாஸ்டனில் நடந்த நிகழ்வுகள் அமெரிக்காவின் கிழக்குக் கடற்கரை பகுதியில் உள்ள மற்ற நகரங்களிலும் எதிரொலித்தன. பாஸ்டன் நகரம் இந்தப் போராட்டத்தில் தனியாக நிற்கவில்லை. இந்த புதிய தேயிலைச் சட்டத்திற்குக் கடுமையான எதிர்ப்பு மாசசூசெட்ஸிலும் ஏற்பட்டது.
தேயிலை சட்டத்திற்கு எதிர்ப்பு பரவியதால், நியூயார்க் மற்றும் பிலடெல்ஃபியாவில் உள்ள தேசபக்தர்கள் தேயிலை கொண்டு வரும் நிறுவனத்தின் கப்பல்களுக்கு துறைமுகத்தில் நங்கூரமிடும் அனுமதியை மறுத்தனர். இதனால் கப்பல்கள் பிரிட்டனுக்குத் திரும்ப வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
மற்ற இடங்களில் துறைமுகத்தில் இறக்குமதி செய்யப்பட்ட தேயிலை கைவிடப்பட்டு, அழுகிப் போனது. சார்லஸ்டனுக்கு பிறகு, தென் கரோலினா வணிகர்கள் தேயிலை ஏற்றுமதிக்குப் பணம் செலுத்தினர், ஆனால் உள்ளூர் தேசபக்தர்கள் அதை துறைமுகத்தில் கடலில் கொட்டி அழிக்கும்படி கட்டாயப்படுத்தினர்.
வட கரோலினாவில் உள்ள ஈடன்டனில், பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களில் 51 பேர் ஒரு மனுவில் கையெழுத்திட்டு, “எங்கள் சொந்த நாட்டை அடிமைப்படுத்திய தேயிலைச் சட்டம் ரத்து செய்யப்படும் வரை தேநீர் குடிக்க மாட்டோம்,” என்று உறுதியளித்தனர்.
வில்மிங்டன் துறைமுக பெண்கள் நகர சதுக்கத்தில் தேயிலையைக் கொட்டி எரித்தனர்.
நாடாளுமன்றத்தில் கடும் எதிர்ப்பு

பட மூலாதாரம், Getty Images
லார்ட் ஃபிரடெரிக் நார்த்
தேயிலை அழிவு பற்றிய செய்தி லண்டனுக்கு எட்டியபோது, அமெரிக்க நலன்கள் குறித்து அனுதாபம் கொண்ட பிரிட்டிஷ் குடிமக்கள்கூட சீற்றமடைந்தனர். இதனால்தான் பல காலனித்துவவாதிகள் இது தனிப்பட்ட சொத்துகள் மீதான தாக்குதல் என்று கூறினர்.
பின்னர் நாடாளுமன்றம் மூன்று தண்டனைச் சட்டங்களை பதிலாக அளித்தது. மசாசூசெட்ஸின் உரிமைகள் பறிக்கப்பட்டன, காலனியின் நீதிமன்றங்கள் முடக்கப்பட்டன. மேலும் கிழக்கிந்திய கம்பெனிக்கு பொறுப்பானவர்கள் இழப்பீடு வழங்கும் வரை, பாஸ்டன் துறைமுகத்தில் அனைத்து வணிகப் பரிவர்த்தனைகளும் நிறுத்தி வைக்கப்பட்டன.
வரலாற்று ஆசிரியர்கள் அந்தச் சட்டங்களை இன்று தண்டனைச் சட்டங்கள் என்று நினைவுகூர்கிறார்கள். எனவே காலனித்துவவாதிகள் இதை ஒரு ‘சகிக்க முடியாத செயல்’ என்று அழைத்தனர். மூன்று சட்டங்கள் குறித்த இரண்டு விளக்கங்களும் மிகவும் துல்லியமாக இருந்தன.
நாடாளுமன்றம் கடுமையாக நடந்து கொள்ளாமல் இருந்திருந்தால், பாஸ்டனில் உள்ள தனியார் சொத்துகள் அழிக்கப்பட்டதைக் கருத்தில் கொண்டு அமெரிக்கர்கள் தேயிலை வரி செலுத்துவதற்கான தங்கள் எதிர்ப்பை மறுபரிசீலனை செய்திருப்பார்கள்.
இறுதியாக கிரிஃபின் துறைமுகத்தில் கப்பல்களில் ஊடுருவியவர்கள் நீதியின் முன் நிறுத்தப்பட்டிருக்கலாம், ஆனால் நாடாளுமன்றத்திற்கு வேறு வழி இருக்கவில்லை என லார்ட் நார்த் கூறினார்.
“நாம் இதைச் செய்துதான் ஆக வேண்டும்,” என்று அவர் 22 ஏப்ரல் 1774 அன்று ஹவுஸ் ஆஃப் காமன்ஸில் கூறினார், “விளைவுகளைப் பற்றி கவலைப்படாமல். இதைச் செய்யாவிட்டால், அனைத்தும் இழக்கப்படும்,” என்றார்.
பிரிட்டனுக்கு ஆதரவாக சூழ்நிலையை மாற்றும் என்று நம்பப்பட்ட அந்த அரசாங்க நடவடிக்கை, கிங் ஜார்ஜ் III கட்டுப்பாட்டில் இருந்த 13 காலனிகளை சரியாக ஓராண்டு கழித்து சுதந்திரத்திற்காக கிளர்ச்சி செய்யத் தூண்டியது.
டிசம்பர் 16 நிகழ்வுகளைப் பற்றி அமெரிக்கர்கள் என்ன நினைத்தாலும், மாசசூசெட்ஸில் விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள், பறிக்கப்பட்ட உரிமைகள் அவர்களை மேலும் கவலையடையச் செய்தன. இதனால் வேறு இடங்களில் வசிக்கும் மக்களுக்கும் இதே நிலை ஏற்படுமோ என்ற அச்சம் மக்களிடையே எழுந்தது.
பிரித்தானியாவின் ஒரே வழி அதிகாரத்தின் மூலம் கட்டுப்படுத்துவது என்றால், அவர்களுக்கும் ‘ஆயுத எதிர்ப்பு’ மட்டுமே மிஞ்சும் என்று காலனித்துவவாதிகள் உணர ஆரம்பித்தனர். ஜூலை மாதம் அது நடைமுறைப்படுத்தப்பட்டது. மேலும் ஜூலை 4, 1776இல் அமெரிக்காவின் சுதந்திரம் அறிவிக்கப்பட்டது.
நன்றி
Publisher: பிபிசிதமிழ்