IND vs AUS: ஆஸ்திரேலியாவை மிரட்டிய ராகுல் கூட்டணி, ஷமி – ஆட்டம் எப்படி இருந்தது?

IND vs AUS: ஆஸ்திரேலியாவை மிரட்டிய ராகுல் கூட்டணி, ஷமி - ஆட்டம் எப்படி இருந்தது?

பாகிஸ்தானை பின்னுக்கு தள்ளியது: ஆஸ்திரேலியாவை வென்று வரலாறு படைத்த இந்திய அணி

பட மூலாதாரம், Getty Images

மொஹாலியில் நேற்று நடந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் 5 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றுள்ளது.

முதலில் பேட் செய்த ஆஸ்திரேலிய அணி 50 ஓவர்களில் 276 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. 277 ரன்கள் சேர்த்தால் வெற்றி என்னும் இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி 8 பந்துகள் மீதமிருக்கையில் 5 விக்கெட்டுகளை இழந்து 281 ரன்கள் சேர்த்து 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றது.

ஐசிசி ஒருநாள் போட்டிக்கான உலகக் கோப்பை தொடங்குவதற்கு இன்னும் சில நாட்களே இருக்கும் நிலையில் இந்த வெற்றி இந்திய அணிக்குப் பெரிய ஊக்கத்தை அளிக்கும்.

அது மட்டுமல்லாமல் இந்த வெற்றியால் ஐசிசி உலகக் கோப்பையை இந்திய அணி புதிய வரலாற்றோடு எதிர்கொள்கிறது. ஐசிசியின் டி20, டெஸ்ட் மற்றும் ஒருநாள் ஆகிய 3 நிலைகளிலும் முதலிடத்தைப் பிடித்த அணியாக இந்திய அணி உருவெடுத்துள்ளது.

மூன்று நிலைகளிலும் நம்பர்-ஒன்

பாகிஸ்தானை பின்னுக்கு தள்ளியது: ஆஸ்திரேலியாவை வென்று வரலாறு படைத்த இந்திய அணி

பட மூலாதாரம், Getty Images

இதுவரை ஐசிசி ஒருநாள் தரவரிசையில் 115 புள்ளிகளுடன் பாகிஸ்தானும், இந்தியாவும் சமநிலையில் இருந்தன. ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான வெற்றியின் மூலம், பாகிஸ்தானை பின்னுக்குத் தள்ளி இந்திய அணி ஒருநாள் தரவரிசையில் முதலிடத்தைப் பிடித்துள்ளது.

ஏற்கெனவே டி20 மற்றும் டெஸ்ட் தரவரிசையிலும் இந்திய அணி முதலிடத்தில் இருந்ததால், தற்போது 3 விதமான நிலைகளிலும் டாப்-1 ரேங்கிங்கை பெற்ற 2வது அணியாக மாறியுள்ளது.

கடந்த 2012ஆம் ஆண்டு, ஆகஸ்ட் மாதம் தென் ஆப்பிரிக்கா இதுபோன்று அனைத்து நிலைகளிலும் முதலிடத்தைப் பிடித்திருந்தது. அதன்பின் எந்த அணியும் இதுபோன்று மூன்றுவிதமான போட்டிகளிலும் முதலிடத்தைப் பெறவில்லை. ஏறக்குறைய 11 ஆண்டுகளுக்குப் பிறகு இந்திய அணி அந்த இடத்தை நிரப்பி வரலாறு படைத்துள்ளது.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் 1-0 என்று இந்திய அணி முன்னிலை வகித்தாலும், இன்னும் 2 ஒருநாள் போட்டிகள் மீதம் உள்ளன. இதில் இரண்டிலும் இந்திய அணி தோல்வி அடைந்தால், தரவரிசையில் கீழே இறங்கக்கூடும்.

4 வீரர்கள் டாப்-1

பாகிஸ்தானை பின்னுக்கு தள்ளியது: ஆஸ்திரேலியாவை வென்று வரலாறு படைத்த இந்திய அணி

பட மூலாதாரம், Getty Images

அது மட்டுமல்லாமல் இந்திய அணியில் 4 வீரர்கள் ஐசிசி தரவரிசையில் முதல் ரேங்கிங்கை பெற்று வரலாறு படைத்துள்ளனர்.

ஒருநாள் தரவரிசையில் பந்துவீச்சாளர்களுக்கான தரவரிசையில் முகமது சிராஜ் முதலிடத்தையும், டி20 போட்டியில் பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசையில் சூர்யகுமார் யாதவும், டெஸ்ட் போட்டிகளில் பந்துவீச்சு ஆல்ரவுண்டர்கள் தரவரிசையில் ரவிச்சந்திர அஸ்வின், ரவீந்திர ஜடேஜா இருவரும் முதலிடத்தைப் பிடித்துள்ளனர்.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இந்த ஆட்டத்தில் இந்திய அணியின் வழக்கமான கேப்டன் ரோஹித் சர்மா, மூத்த வீரர் விராட் கோலி, முகமது சிராஜ் ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டிருந்தது. இதனால் கே.எல்.ராகுல் கேப்டனாக இருந்து அணியை வழிநடத்தினார்.

ஆஸ்திரேலிய அணியின் வெற்றிக்கு முகமது ஷமியின் பந்துவீச்சு முக்கியக் காரணம். 10 ஓவர்கள் வீசிய ஷமி, 51 ரன்கள் கொடுத்து 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதில் ஷமிக்கு கடைசி 3 விக்கெட்டுகள் 9 பந்துகளில் கிடைத்தன.

வெற்றிக்கு வித்திட்ட பேட்ஸ்மேன்கள்

அதேபோல பேட்டிங்கில் தொடக்க ஆட்டக்காரர்கள் கெய்க்வாட்(71), சுப்மான் கில்(74), கே.எல்.ராகுல்(58), சூர்யகுமார் யாதவ்(50) ஆகியோரின் பங்களிப்பு வெற்றிக்கு முத்தாய்ப்பாக அமைந்தது.

டி20 போட்டிகளில் அதிகளவு விளையாடிப் பழகிய இந்திய அணியில் உள்ள இளம் வீரர்கள் ஒருநாள் போட்டிகளில் 50 ஓவர்கள் வரை நிலைத்து ஆடுவார்களா, அதற்கு ஏற்றாற்போல் தங்களை தகவமைத்துக் கொள்வார்களா, உடற்தகுதியை வளர்த்துக்கொள்வார்களா என்ற கேள்வி எழுந்தது. அதற்கு இந்த வெற்றியின் மூலம் அவர்கள் பதில் அளித்துள்ளனர்.

அதுமட்டுமல்லாமல் இந்திய அணியில் நடுவரிசை பேட்ஸ்மேன்களில் ஸ்ரேயாஸ் அய்யர், சூர்யகுமார் யாதவ், இஷான் கிஷன் ஆகியோரில் யாரைக் களமிறக்குவது என்ற குழப்பத்துக்கும் சூர்யகுமார் பேட்டிங் பதிலாக அமைந்திருக்கிறது.

வரலாற்றில் 4வது அணி

பாகிஸ்தானை பின்னுக்கு தள்ளியது: ஆஸ்திரேலியாவை வென்று வரலாறு படைத்த இந்திய அணி

பட மூலாதாரம், Getty Images

ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக ஒருநாள் போட்டிகளில் 4 பேட்ஸ்மேன்கள் அரைசதத்துக்கும் அதிகமான ரன்கள் சேர்ப்பது இது நான்காவது முறை.

இதற்கு முன் கடைசியாக கடந்த 2018ஆம் ஆண்டு ஜூன் 19ஆம் தேதி ஆஸ்திரேலியாவுக்கு எதிராக தென் ஆப்பிரிக்க அணியின் 4 பேட்ஸ்மேன்கள் 50 ரன்களுக்கும் அதிகமாக சேர்த்திருந்தனர். ஏறக்குறைய 5 ஆண்டுகளுக்குப் பிறகு இந்திய பேட்ஸ்மேன்கள் சாதனை நிகழ்த்தியுள்ளனர்.

36 ஆண்டுகளுக்குப் பின் சாதனை

ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக இந்திய அணியில் 4 பேட்ஸ்மேன்கள் அரைசதத்துக்கும் அதிகமான ரன்கள் சேர்ப்பது இது 2வது முறை. இதற்கு முன் 1987ஆம் ஆண்டு, அக்டோபர் 22ஆம் தேதி டெல்லியில் நடந்த உலகக் கோப்பைப் போட்டியில் சுனில் கவாஸ்கர்(61), நவ்ஜோத் சித்து(51), திலிப் வெங்சர்க்கர்(63) முகமது அசாரூதீன்(54) ஆகியோர் அரைசதத்துக்கும் மேலாக சேர்த்தனர்.

ஏறக்குறைய 36 ஆண்டுகளுக்குப் பின் இந்திய அணி மீண்டும் அந்த சாதனையை நிகழ்த்தியுள்ளது.

ஆறுதலான சூர்யகுமார் யாதவ்

டி20 தரவரிசையில் நம்பர் ஒன் பேட்ஸ்மேனாக மிளிரும் சூர்யகுமார் யாதவ் ஒருநாள் போட்டிகளுக்கு சரி வருவாரா என்ற கேள்வி எழுந்தது.

அதற்கு ஏற்றாற்போல் ஒருநாள் போட்டிகளில் அவருக்கு வாய்ப்பு வழங்கியும் பெரிதாக அவர் சாதிக்கவில்லை. கடந்த 28 போட்டிகளிலும் 2 அரைசதங்கள் மட்டுமே சேர்த்திருந்தார்.

அதிலும் கடந்த 20 இன்னிங்ஸ்களிலும் சூர்யகுமார் யாதவ் பெரிதாக ஸ்கோர் செய்யாத நிலையில் நேற்று அடித்த அரைசதம் அவருக்கு அதிகபட்சமாக அமைந்தது.

மீண்டு(ம்) வந்த ராகுல்

பாகிஸ்தானை பின்னுக்கு தள்ளியது: ஆஸ்திரேலியாவை வென்று வரலாறு படைத்த இந்திய அணி

பட மூலாதாரம், Getty Images

ரோஹித் சர்மாவுக்கு ஓய்வு அளிக்கப்பட்ட நிலையில் கேப்டனாக பொறுப்பேற்ற கே.எல்.ராகுல் தனது பணியை சிறப்பாகச் செய்தார். இந்திய அணி நல்ல தொடக்கத்தை அளித்து, திடீரென சறுக்கிய நிலையில், கேப்டனுக்குரிய பொறுப்புடன் விளையாடி அரைசதத்துடன் கடைசிவரை ஆட்டமிழக்காமல் ராகுல் இருந்தார்.

இந்திய அணி பந்துவீசிய போது விக்கெட் கீப்பராக 50 ஓவர்கள் வரை களத்தில் இருந்துவிட்டு, பின்னர் சேஸிங்கின் போது, ஏறக்குறைய 25 ஓவர்கள் பேட்டிங் செய்து தனது திறமையை நிரூபித்துள்ளார்.

காயத்திலிருந்து மீண்டு வந்த கே.எல்.ராகுல், கடைசியாக விளையாடிய 4 இன்னிங்ஸ்களில் 3வது முக்கிய பங்களிப்பு இது. சூர்யகுமார் யாதவுடன் சேர்ந்து கே.எல்.ராகுல் 60 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தது அணியின் வெற்றிக்கு முக்கியக் காரணமாக அமைந்தது.

சரிவிலிருந்து மீட்ட ராகுல் கூட்டணி

ஒரு கட்டத்தில் இந்திய அணி 142 ரன்கள் வரை ஒரு விக்கெட்டைக் கூட இழக்காமல் வலுவாக பேட் செய்தது. ஆனால், அடுத்த 43 ரன்களில் அதாவது 185 ரன்களில் 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது, ஆட்டமும் ஆஸ்திரேலிய கைவசம் சென்றது.

ஆனால் சூர்யகுமார், கே.எல்.ராகுல் கூட்டணி ஆஸ்திரேலிய அணியிடம் இருந்த ஆட்டத்தை தங்கள் வசம் திருப்பி, அணியை வெற்றிக்கு அழைத்து வந்தனர்.

அற்புதமான தொடக்கம்

பாகிஸ்தானை பின்னுக்கு தள்ளியது: ஆஸ்திரேலியாவை வென்று வரலாறு படைத்த இந்திய அணி

பட மூலாதாரம், Getty Images

இளம் வீரர்கள் கெய்க்வாட், கில் இந்திய அணிக்கு அற்புதமான தொடக்கம் அளித்தனர், டி20 போட்டியைப் போல் விளையாடி முதல் 7 ஓவர்களில் 47 ரன்கள் சேர்த்தனர்.

அதிலும் கெய்க்வாட் 17 ரன்களில் இருந்த போது கேட்ச் வாய்ப்பை ஆஸ்திரேலிய அணி தவறவிட்டது. சுப்மன் கில் தனது ஐபிஎல் ஆட்டத்தை நினைவு கூர்வதுபோல் ஸ்டாய்னிஷ் வீசிய அவரின் 4வது ஓவரில் ஸ்குயர் லெக் திசையில் சிக்ஸர் விளாசி ரசிகர்களை உற்சாகப்படுத்தினார்.

மேத்யூ ஷார்ட் வீசிய ஓவரில் கில் பவுண்டரி, சிக்ஸர் விளாசி 37 பந்துகளில் தனது அரைசதத்தை நிறைவு செய்தார். கெய்க்வாட் 60 பந்துகளில் ஒருநாள் போட்டிகளில் தனது முதல் அரைசதத்தை அடித்தார். இருவரும் சேர்ந்து முதல் விக்கெட்டுக்கு 142 ரன்கள் சேர்த்துப் பிரிந்து வலுவான அடித்தளத்தை அமைத்தனர்.

ஸ்ரேயாஸ் அய்யர் நிலை என்ன?

பாகிஸ்தானை பின்னுக்கு தள்ளியது: ஆஸ்திரேலியாவை வென்று வரலாறு படைத்த இந்திய அணி

பட மூலாதாரம், Getty Images

ஸ்ரேயாஸ் அய்யர் உலகக் கோப்பைக்கு தேர்வு செய்யப்பட்டிருந்தாலும் அவரின் உடற்தகுதி குறித்த சந்தேகம் இன்னும் தீரவில்லை. அதற்கு ஏற்றாற்போல் நேற்று ரன் அவுட் ஆனதால் ப்ளேயிங் லெவனில் அவருக்குரிய இடம் கிடைக்குமா என்பது சந்தேகமாகியுள்ளது.

இந்திய அணியில் ஸ்ரேயாஸ் அய்யர்(3), இஷான் கிஷன்(18) ஆகியோர் மட்டுமே குறைவான ரன்கள் பங்களிப்பு செய்தனர். மற்ற வகையில் 4 பேட்ஸ்மேன்களின் பங்களிப்பும் வெற்றிக்கு வித்தாக அமைந்தது.

அஸ்வினை ‘மிஸ்’ செய்கிறோமா?

பந்துவீச்சைப் பொறுத்தவரை காயத்திலிருந்து மீண்டு வந்த பும்ரா தனது இயல்பான மிரட்டலை வெளிப்படுத்தினார், ஷமி 5 விக்கெட்டுகளை வீழ்த்தி ஃபார்முக்கு திரும்பியுள்ளார்.

அஸ்வின், ஜடேஜா பந்துவீச்சு நேற்றைய ஆட்டத்தில் ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்களுக்கு பெரிய சவாலாக இருந்தது. நடுப்பகுதி ஓவர்களில் இருவரும் சேர்த்து ஆஸ்திரேலிய ரன்ரேட்டே இறுகப் பிடித்தனர்.

உலகக் கோப்பை நெருங்கும் நிலையில் சுழற்பந்துவீச்சுக்கு சாதகமாக இருக்கும் இந்திய ஆடுகளங்களில் அஸ்வின் போன்ற திறமையான சுழற்பந்துவீச்சாளர்கள் அணியில் இல்லாதது பெரிய குறைதான்.

சவாலாக மாறும் ஆடம் ஸம்பா

ஆஸ்திரேலிய அணியைப் பொறுத்தவரை ஆடம் ஸம்பா என்ற தனி ஒரு சுழற்பந்துவீச்சாளரை வைத்துக்கொண்டு உலகக் கோப்பையை எதிர்கொள்கிறது.

மேக்ஸ்வெல் பகுதிநேரப் பந்துவீச்சாளராக வந்தாலும், முழுநேரப் பந்துவீச்சாளர் இல்லை. இந்த உலகக் கோப்பைத் தொடரில் இந்திய ஆடுகளங்களில் ஆடம் ஸம்பாவின் சுழற்பந்துவீச்சு அனைத்து அணிகளுக்கும் சவாலாக இருக்கும்.

பேட்டிங் சொதப்பல்

பாகிஸ்தானை பின்னுக்கு தள்ளியது: ஆஸ்திரேலியாவை வென்று வரலாறு படைத்த இந்திய அணி

பட மூலாதாரம், Getty Images

ஆஸ்திரேலிய அணியின் பேட்ஸ்மேன்களில் டேவிட் வார்னர்(52) மட்டும் அரைசதம் அடித்தார். மற்ற பேட்ஸ்மேன்களான ஸ்டீவ் ஸ்மித்(41), லாபுஷேன்(39), கிரீன்(31), இங்கிலிஸ்(45), ஸ்டாய்னிஸ்(29) ஆகியோர் பங்களிப்பு செய்தனர். ஆஸ்திரேலிய அணியில் டாப் 6 பேட்ஸ்மேன்களின் சராசரி 29 ரன்களாகவே இருந்தது.

இதில் தொடக்க ஆட்டக்காரர் மார்ஷ் முதல் ஓவரிலேயே ஷமி ஓவரில் வெளியேறியது பெரிய பின்னடைவாக மாறியது. இருப்பினும் ஸ்மித், வார்னர் சேர்ந்து அணியை மீட்டனர்.

இரண்டாவது விக்கெட்டுக்கு இருவரும் 98 ரன்கள் சேர்த்துப் பிரிந்தனர். அதன்பின் 5வது விக்கெட்டுக்கு ஸ்டாய்னிஷ், இங்லிஸ் கூட்டணி 64 ரன்கள் சேர்த்தனர். மற்ற வகையில் பெரிய பார்ட்னர்ஷிப் அமையவில்லை.

கடைசி 28 ரன்களுக்குள் ஆஸ்திரேலிய அணி 5 விக்கெட்டுகளை இழந்தது. 248 ரன்கள் வரை 5 விக்கெட்டுகளை இழந்திருந்த ஆஸ்திரேலிய அணி 276 ரன்களுக்கு மீதமிருந்த அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

Facebook
Facebook
fb-share-icon
Telegram
WhatsApp
TekTamil.com
Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by TekTamil.
நன்றி
Publisher: பிபிசிதமிழ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *