
பட மூலாதாரம், EUROPEAN SPACE AGENCY
சூரியனை ஆய்வு செய்வதற்காக செப்டம்பர் 2 ஆம் தேதி ஆதித்யா-எல்1 என்ற விண்கலத்தை ஏவ இஸ்ரோ தயாராகி வருகிறது.
சந்திரயான்-3 திட்டத்தின் வெற்றிக்குப் பிறகு, இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) சூரியனை ஆய்வு செய்வதற்காக செப்டம்பர் 2 ஆம் தேதி ஆதித்யா-எல்1 என்ற விண்கலத்தை ஏவத்தயாராகி வருகிறது.
இது குறித்து இஸ்ரோ வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “சூரியனை ஆய்வு செய்யும் இந்தியாவின் முதல் விண்வெளித் திட்டமாக, ஆதித்யா-எல்1 விண்வெளிக்குப் பயணம் செய்யவுள்ளது. பூமியில் இருந்து சுமார் 1.5 மில்லியன் கிலோமீட்டர் தொலைவில் உள்ள சூரிய-பூமி அமைப்பின் லெக்ரேஞ்சியன் புள்ளி 1 (L1) ஐச் சுற்றி ஒரு ஒளிவட்டப் பாதையில் விண்கலம் அனுப்பப்படும்.
ஒளிக்கோளம், குரோமோஸ்ஃபியர் மற்றும் சூரியனின் வெளிப்புற அடுக்கு ஆகியவற்றை ஆய்வு செய்யும் ஏழு கருவிகளை இந்த விண்கலம் சுமந்து செல்லும்,” எனத்தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுவரை, அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா, ஐரோப்பிய விண்வெளி நிறுவனம் மற்றும் ஜெர்மனி விண்வெளி நிறுவனம் ஆகியவை மட்டுமே சூரியனை ஆய்வு செய்வதற்காக தனியாகவோ, கூட்டாகவோ விண்வெளி பயணத் திட்டங்களைச் செயல்படுத்தியுள்ளன.
நாசா இதுபோன்ற மூன்று முக்கிய திட்டங்களை நிறைவேற்றியுள்ளது. அவை SOHO (சோலார் மற்றும் ஹீலியோஸ்பெரிக் அப்சர்வேட்டரி), பார்க்கர் சோலார் ப்ரோப் மற்றும் IRIS (இடைமுகப் பகுதி இமேஜிங் ஸ்பெக்ட்ரோகிராஃப்) ஆகியனவாகும்.
இது தவிர, நாசா S, Wind, Hinode, Solar Dynamics Observatory மற்றும் STEREO உட்பட பல சூரியப் பயணத் திட்டங்களைச் செயல்படுத்தியுள்ளது.
SOHO திட்டப் பணியை நாசாவும் ஐரோப்பிய விண்வெளி நிறுவனமும் இணைந்து கூட்டாக செயல்படுத்தின.
‘பார்க்கர் சோலார் ப்ரோப்’ நான்கு ஆண்டுகளாக சூரியனின் மேற்பரப்பிற்கு மிக நெருக்கமான சுற்றுப்பாதையை உருவாக்கி வருகிறது. IRIS (Interface Region Imaging Spectrograph) சூரியனின் மேற்பரப்பை மிகத் தெளிவாகப் படம்பிடித்து வருகிறது.
நாசாவின் பார்க்கர் சோலார் ப்ரோப் திட்டம் இதுவரை சூரியனைப் பற்றிய ஆய்வில் மிகப்பெரிய மைல்கல் என்று நிரூபித்துள்ளது. இது சூரியனுக்கு மிக அருகில் சென்ற ஒரே விண்கலம் ஆகும்.
சூரியனுடன் தொடர்புடைய சில முக்கிய திட்டங்கள் மற்றும் அவற்றின் மூலம் மனித குலம் தெரிந்துகொண்ட தகவல் என்ன என்பதைப் பார்ப்போம்.

பட மூலாதாரம், NASA
அமெரிக்கா, ஜெர்மனி மற்றும் ஐரோப்பிய விண்வெளி நிறுவனம் ஆகியவை தனித்தனியாகவும் கூட்டாகவும் சூரியனுக்கு விண்கலங்களை அனுப்பியுள்ளன.
‘பார்க்கர் சோலார் ப்ரோப்’ சூரியனின் மேல் வளிமண்டலத்தின் வழியாக சென்றதாக 14 டிசம்பர் 2021 அன்று நாசா அறிவித்தது, இது சூரியனின் கொரோனா என்று அழைக்கப்படுகிறது.
அங்குள்ள சக்தியேற்றப்பட்ட துகள்களின் மாதிரிகளை எடுத்து சூரியனின் காந்தப்புலம் பற்றிய தகவல்களை அப்போது இந்த விண்கலம் சேகரித்தது.
பூமியிலிருந்து அனுப்பப்பட்ட விண்கலம் ஒன்று சூரியனை ‘தொட்டது’ வரலாற்றில் இதுவே முதல் முறை என்றும் நாசா கூறியது.
சூரியனின் மேற்பரப்பில் இருந்து 6.5 மில்லியன் கிலோமீட்டர் சுற்றளவுக்குள் செல்லும் வகையில் ‘பார்க்கர் சோலார் ப்ரோப்’ வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனால் சூரியனின் சக்தி ஓட்டம் மற்றும் ‘சூரிய புயல்’ பற்றி அறிய முடியும்.
இத்துடன், அதன் முக்கிய நோக்கங்களில் ஒன்று சூரியனின் கரோனாவுக்கு மிக நெருக்கமாகச் சென்று அதைப் பற்றி ஆய்வு செய்வதாகும்.
தொடர்ந்து மாறிவரும் விண்வெளிச் சூழலில் சூரிய குடும்பத்தை எவ்வாறு சூரியன் கட்டுப்படுத்துகிறது என்ற சூரிய இயற்பியலின் மையக் கேள்விக்கான பதிலைக் கண்டுபிடிப்பதே இதன் நோக்கம்.
நாசா தெரிவித்த தகவலின்படி, ‘பார்க்கர் சோலார் ப்ரோப்’, 2018 இல் விண்வெளியில் செலுத்தப்பட்டது. அதன் பிறகு மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு அது அதன் நோக்கத்தை அடைந்தது.
இந்த விண்கலம் 28 ஏப்ரல் 2021 அன்று எட்டாவது ஃப்ளைபையை (சூரியனுக்கு மிக நெருக்கமான பயணம்) வெற்றிகரமாக நிறைவு செய்ததாகவும், இந்த நேரத்தில் அது கரோனாவிற்குள் (சூரிய ஒளி அமைப்பு) நுழைந்ததாகவும் நாசா கூறுகிறது.
இந்த பயணத்தில் சேகரிக்கப்பட்ட தரவு, சூரிய புயலில் உள்ள, ஸ்விட்ச்பேக்குகள் என்று அழைக்கப்படும் மூலைவிட்ட வடிவங்கள் விதிவிலக்கு அல்ல என்றும், அவை பொதுவானவை என்றும் காட்டுகிறது.
பல தசாப்தங்களாக, விஞ்ஞானிகள் இந்த நீள்வட்ட வடிவங்கள் சூரியனின் துருவப் பகுதிகளில் மட்டுமே காணப்படுகின்றன என்று நம்பிவந்தனர். ஆனால் இந்த புதிய தகவல், அவை எங்கிருந்து வருகின்றன என்ற புதிய கேள்வியை எழுப்பியுள்ளது.
நாசா தலைமையகத்தின் ‘பார்க்கர்’ திட்ட அதிகாரியான ஜோசப் ஸ்மித் கூறுகையில், “எங்கள் அதிநவீன தொழில்நுட்பம் ‘பார்க்கர் சோலார் ப்ரோப்பை’ சூரியனுக்கு மிக அருகில் கொண்டு சென்று திருப்பி அனுப்பியது மிகவும் உற்சாகமளிக்கும் செயலாக உள்ளது,” என்றார்.
மேலும், “இனி வரும் காலங்களில் சூரியனை நெருங்கும்போது என்ன புதிய தகவல்கள் கிடைக்கும் எனத் தெரிந்துகொள்ள ஆர்வத்துடன் காத்திருக்கிறோம்,” என்றார்.
சூரியனின் கரோனாவில் உள்ள அதீத வெப்பத்துக்குக் காரணமான சூரியனின் ஒரு பகுதியை ஒளியைவிட அதிக வேகத்தில் பயணிக்கும் சூரிய புயலைப் பற்றி ஆய்வு செய்ய இந்த புதிய தரவு உதவும் என்று விஞ்ஞானிகள் நம்புகின்றனர்.
இதுபோன்ற ஆய்வின் மூலம் விண்வெளியின் கடுமையான வானிலையை புரிந்துகொண்டு, அது பூமியில் உள்ள தொலை தொடர்பு அமைப்பு மற்றும் செயற்கைக் கோள்களின் மீது ஏற்படுத்தும் தாக்கம் உள்ளிட்ட பல சூழ்நிலைகளைக் கணிக்க முடியும்.

பட மூலாதாரம், ESA-NASA
சூரியப் புயல்கள், அவை உருவாகும் காலம் போன்றவற்றை அறிந்துகொள்வதன் மூலம் அவற்றால் ஏற்படும் பாதிப்புகளைத் தடுக்கமுடியும்.
சோலார் ஆர்பிட்டர் நாசாவின் உதவியுடன் ஐரோப்பிய விண்வெளி நிறுவனத்தால் வடிவமைக்கப்பட்டது. சூரிய இயற்பியலை விரிவாகப் புரிந்துகொள்வதும் இதன் நோக்கமாகும்.
இது 2020ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 9ம் தேதியன்று அன்று விண்வெளியில் செலுத்தப்பட்டது. தொடர்ந்து 7 ஆண்டுகள் செயல்படும் விதத்தில் அது வடிவமைக்கப்பட்டுள்ளது.
சோலார் ஆர்பிட்டர் 2022 மார்ச் 30 அன்று சூரியனை நெருங்கிய போது (சூரியனுக்கும் பூமிக்கும் இடையிலான தூரத்தில் மூன்றில் ஒரு பங்கு) பல்வேறு காட்சிகளைப் பதிவு செய்துள்ளது. இந்த காட்சித் தொகுப்பையும் ஐரோப்பிய விண்வெளி நிறுவனம் வெளியிட்டது.
இந்த காட்சி சூரியனின் தென் துருவத்தில் இருந்து பதிவு செய்யப்பட்டதாக விண்வெளி நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்த விண்கலம் சூரியனுக்கும் பூமிக்கும் இடையே உள்ள மொத்த தூரத்தின் கால் பகுதியில் சுழன்று கொண்டிருக்கிறது.
விண்வெளி நிறுவனம் தெரிவித்த தகவலின் படி, இந்த படங்கள் சூரியனின் தென் துருவத்தை 17 நானோமீட்டர் அலைநீளத்தில் ‘எக்ஸ்ட்ரீம் அல்ட்ரா வயலட் இமேஜிங்’ (EUI) தொழில்நுட்பம் மூலம் எடுக்கப்பட்ட காட்சிகளைக் கொண்டுள்ளன.
ஐரோப்பிய விண்வெளி நிறுவனம் மேலும் தெரிவித்த விவரங்களின்படி, சூரியனின் துருவங்களில் பல அறிவியல் ரகசியங்கள் மறைக்கப்பட்டிருக்கலாம் என்று தெரியவந்துள்ளது. சூரியனிடமிருந்து உருவாகும் மிகவும் சக்திவாய்ந்த ஆனால் குறுகிய காலத்தில் மட்டுமே நீடிக்கும் காந்தப் புலங்கள் சூரியனின் துருவங்களில் உறிஞ்சப்படுகின்றன.
இது ஒரு மூடிய காந்தப்புலத்தை உருவாக்குகிறது. அதில் இருந்து ஆற்றல் துகள்கள் வெளியேற முடியாது.
ஆனால் அவை மிகவும் சக்திவாய்ந்த புற ஊதா கதிர்களை வெளியிடுகின்றன. அவற்றை EUI எனப்படும் எக்ஸ்ட்ரீம் அல்ட்ரா வயலட் இமேஜர் சிறப்பாக பதிவு செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
சோலார் ஆர்பிட்டர் வீனஸ் கோளின் ஈர்ப்பு விசையைப் பயன்படுத்தி 2025 ஆம் ஆண்டில் தன் சுற்றுப்பாதையை சிறிது சாய்க்கும், இதன் மூலம் அந்த விண்கலத்தின் கருவிகள் சூரியனின் துருவங்களை ஆய்வு செய்ய முடியும்.
இந்த விண்கலம் சூரியனின் அதீத வெப்பத்தை தாங்கும் திறன் கொண்டது. இதனுடன், சூரியனின் உள் பகுதிகளைப் பற்றி நன்றாகப் புரிந்துகொள்வதற்கும், பூமியில் வாழ்க்கையை சாத்தியமாக்கியதில் சூரியனின் பங்கு என்ன என்பதை மதிப்பிடுவதற்கும் தேவைப்படும் ஆய்வுகளை மேற்கொள்ளும்.
சூரியனின் துருவப் பகுதிகளை நெருக்கமாகப் படம் எடுக்கும் முதல் செயற்கைக்கோள் இது என்று ஐரோப்பிய விண்வெளி நிறுவனம் கூறுகிறது. சோலார் ஆர்பிட்டர் சூரிய புயல் உருவாகும் செயல்முறையை மிக நெருக்கமாக இருந்து ஆய்வு செய்யும்.

பட மூலாதாரம், HELIOVIEWER.ORG
ஏற்கெனவே சூரியான ஆராய்ச்சி செய்யும் நாடுகளின் வரிசையில் இந்தியாவும் இணைந்து பல்வேறு ஆய்வுகளை மேற்கொள்ளவிருக்கிறது.
நாசாவின் இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள தகவல்களின்படி, சூரியன் நமது சூரிய மண்டலத்தின் மையத்தில் அமைந்துள்ள ஹைட்ரஜன் மற்றும் ஹீலியம் கொண்ட ஒரு ஒளிரும் நட்சத்திரமாகும். அதன் வயது சுமார் 450 கேடி ஆண்டுகள் ஆகும்.
பூமியில் இருந்து சுமார் 15 கோடி கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. இது நமது சூரிய குடும்பத்தில் உள்ள மிகப்பெரிய நட்சத்திரமாகும்.
சூரியனின் அளவு 1.3 மில்லியன் பூமிகளின் தொகுதிக்கு சமம் என்பது மட்டுமல்லாமல் அதன் ஈர்ப்பு விசை காரணமாக முழு சூரிய குடும்பத்தையும் அதன் சொந்த சுற்றுப்பாதையில் வைத்துப் பராமரிக்கிறது.
இதே போல் விண்வெளியில் உடைந்து போன ஒரு விண்கலத்தின் குப்பைகளின் ஒரு சிறிய பகுதியைக்கூட ஒரு குறிப்பிட்ட சுற்றுப்பாதையில் பராமரிப்பதில் சூரியனின் ஈர்ப்பு விசை முக்கிய பங்கு வகிக்கிறது என்றும் கூறலாம்.
சூரியனின் அதிகபட்ச வெப்பநிலை அதன் மையத்தில் உள்ளது. அங்கு வெப்பநிலை 15 மில்லியன் டிகிரி செல்சியஸ் ஆகும்.
சூரியனில் இருந்து வலுவாக சக்தியேற்றப்பட்ட துகள்கள் விண்வெளியில் அதிவேகமாகப் பாய்கின்றன. இது முழு சூரிய குடும்பத்தின் இடத்தின் தன்மையையும் பாதிக்கிறது.
சூரியனில் இருந்து வெளிப்படும் ஒளி 150 மில்லியன் கிலோமீட்டர் தொலைவில் உள்ள பூமியை அடைய எட்டு நிமிடங்கள் ஆகும்.
சூரியனின் மேற்பரப்பு பூமியைப் போல் திடமானதாக இல்லாததால், அது ஹைட்ரஜன் மற்றும் ஹீலியத்தின் அழுத்தப்பட்ட வாயுக்களின் பந்து போல இருக்கிறது. எனவே அதன் வேகம் வெவ்வேறு இடங்களில் வேறுபடுகிறது.
சூரியன், அதன் பிளாஸ்மா எனப்படும் மிகவும் சூடான மற்றும் சக்தியேற்றப்பட்ட துகள்கள் கொண்ட வாயுவால் ஆனது.
இந்த பிளாஸ்மா சூரியனின் பூமத்திய ரேகையில் 25 பூமி நாட்களில் ஒரு சுழற்சியை நிறைவு செய்கிறது, அதே நேரத்தில் துருவங்களில் ஒரு சுற்றை நிறைவு செய்ய 36 பூமி நாட்கள் ஆகும்.
சூரியனின் மேல் மேற்பரப்பில் ஒளிக்கோளம், அதற்கு மேல் குரோமோஸ்பியர் மற்றும் கரோனா உள்ளது. இங்குதான் அணுக்கரு இணைவு காரணமாக மிகப்பெரிய வெடிப்புகள் ஏற்பட்டு அதன் ஆற்றல் நிறைந்த துகள்கள் பூமியை சென்றடைகின்றன.
சூரியனைச் சுற்றி பல தூசி வட்டங்கள் உள்ளன. அவை சூரிய தூசி வளையங்கள் என்று அழைக்கப்படுகின்றன. அதிலிருந்து 4.6 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு சூரிய குடும்பம் உருவானபோது, சூரியனைச் சுற்றி ஒரு வாயு வட்டு இருந்திருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
சூரியனில் அணுக்கரு இணைவு வெடிப்புகள் வாயுவை வெளியே வீசுகின்றன. அதனால் சூரியனை ஏதோ ஒரு புள்ளிக்குள் அடைக்க முடியாத அளவுக்கு இந்த சக்தி விளங்குகிறது.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
நன்றி
Publisher: பிபிசிதமிழ்