செயற்கை மழை தொழில்நுட்பம் என்றால் என்ன? மேகத்தில் எப்படி மழையை விதைக்கிறது?

செயற்கை மழை தொழில்நுட்பம் என்றால் என்ன? மேகத்தில் எப்படி மழையை விதைக்கிறது?

செயற்கை மழை தொழில்நுட்பம்

பட மூலாதாரம், Getty Images

செயற்கை நுண்ணறிவின் யுகமான இந்த காலத்தில் செயற்கை மழை ஒன்றும் புதிய சொல்லல்ல. வெள்ளம், வறட்சி, அதிக வெப்பம், புயல், மற்றும் காட்டுத்தீ போன்ற காலங்களில் அவற்றைக் கட்டுப்படுத்த ஒரு தீர்வாக விவாதிக்கப்பட்டதுதான் இந்த செயற்கை மழை. தற்போது, இதைக் கொண்டே டெல்லியில் நிலவி வரும் சுற்றுசூழல் மாசுபாட்டால் ஏற்பட்டுள்ள மோசமான நிலையைக் கட்டுப்படுத்துவது தொடர்பான விவாதங்கள் நடந்து வருகின்றன.

கடந்த சில தினங்களாகவே டெல்லியில் சுற்றுசூழல் மாசுபாடு மோசமான நிலையிலேயே நீடித்து வருகிறது. அது எந்தளவுக்குத் தீவிரம் என்றால் டெல்லியில் காற்றின் தரக் குறியீடு மதிப்பெண் 401 மற்றும் 500க்கு இடையியே நிலவி வருகிறது.

நிபுணர்களின் கூற்றுப்படி, காற்று தரக் குறியீடு மதிப்பெண் 0 முதல் 50 வரை இருந்தால் நன்று (Good) என்று அர்த்தம். இதே 51 முதல் 100 வரை இருந்தால் திருப்தி (Satisfactory), 101 முதல் 200 வரை மதிப்பெண் இருந்தால் மிதமான (Moderate) என்றும், 201 முதல் 300 வரை இருந்தால் மோசம் (Poor) என்றும் அர்த்தம். இதே 301 முதல் 400 வரை இருந்தால் மிக மோசம் (Very poor) என்றும், மதிப்பெண் 401 முதல் 500 வரை இருந்தால் தீவிரம் (Severe) என்றும் அர்த்தம்.

இந்தத் தீவிரமான நிலையைக் கையாள டெல்லி அரசு பல்வேறு அறிவிப்புகளை ஒன்றன் பின் ஒன்றாக அறிவித்துக் கொண்டே இருக்கிறது.

சுற்றுசூழல் மாசுபாட்டை எதிர்கொள்ள அரசு அடுத்தகட்டமாக என்னென்ன நடவடிக்கைகள் எடுக்கப் போகிறது என்பது குறித்து டெல்லியின் சுற்றுசூழல் அமைச்சர் கோபால் ராய் கூறியுள்ளார். ஒட்டுமொத்தமாக அரசால் முன்வைக்கப்பட்டுள்ள ஆலோசனைகளில், மேக விதைப்பு முறை மூலம் செயற்கை மழையைப் பொழிய வைக்கும் ஆலோசனையே அதிகம் விவாதிக்கப்பட்டுள்ளது.

கோபால் ராய்

பட மூலாதாரம், ANI

படக்குறிப்பு,

கோபால் ராய்

டெல்லி அரசின் மற்றுமொரு அமைச்சரான சௌரப் பரத்வாஜ் பேசுகையில், டெல்லியின் பூகோள ரீதியான அமைவின் காரணமாக ஆண்டின் இந்தக் காலத்தில் டெல்லி உட்பட வட இந்தியாவின் பல்வேறு நகரங்கள் சுற்றுசூழல் மாசுபாட்டால் பாதிக்கப்படுகின்றன.

இதை செயற்கை மழை மூலம் நாம் சரி செய்ய முடியும். நேற்று நடைபெற்ற கூட்டத்தில் நாங்கள் ஐஐடி கான்பூரை சேர்ந்த நிபுணர்களோடு உரையாடினோம். நாம் மற்றும் உச்சநீதிமன்றத்தின் அனுமதியைப் பெற்றுவிட்டால், அரசு இதை வெகு விரைவில் செய்து முடிக்கும். இது மட்டும் சாத்தியமாகிவிட்டால் டெல்லிக்கு மட்டுமல்லாது ஒட்டுமொத்த வட இந்தியாவுக்கும் நம்மால் அதிநவீன தொழில்நுட்ப தீர்வுகளை வழங்க முடியும் என்று கூறினார்.

இந்நிலையில் செயற்கை மழை என்றால் என்ன? அது எப்படி உருவாகும்? சுற்றுச்சூழல் மாசுபாட்டைக் கையாள இது எந்தளவுக்கு திறன்மிக்கதாக இருக்கும் என்ற கேள்விகளும் எழுந்துள்ளது.

இதற்கெல்லாம் விடை பெறுவதற்காகத்தான் ஐஐடி கான்பூரை சேர்ந்த சிவில் இன்ஜினியரிங் பேராசிரியரான எஸ்.என் திரிபாதி அவர்களிடம் பேசினோம். அவரின் கூற்றுப்படி கீழ்காணும் பல்வேறு சுவாரசியமான தகவல்கள் கிடைத்துள்ளன.

செயற்கை மழை என்றால் என்ன?

செயற்கை மழை

பட மூலாதாரம், Getty Images

மேகங்கள் இயற்கையாகவே ஒன்றுகூடி மழை பொழிவதைத்தான் நாம் இயற்கை மழை என்று அழைக்கிறோம்.

ஆனால், பல நேரங்களில் மேகங்கள் ஒன்று கூடினாலும் அவற்றில் ஏற்படும் சில முடிவுறாத செயல்பாடுகளால் அவற்றால் மழையைத் தர முடிவதில்லை அல்லது மழையைத் தந்தாலும் அது மேகங்களைத் தாண்டி பூமிக்கு வந்து சேர்வதில்லை.

அதனால். சில சிறப்பு நுட்பங்களைப் பயன்படுத்தி மேகங்களில் வேதிப்பொருட்களைத் தூவுவதன் மூலம் வருவிக்கப்படும் மழைக்குப் பெயர்தான் செயற்கை மழை. இந்த நுட்பத்தின் பெயர் மேக விதைப்பு முறை என்று அழைக்கப்படும்.

மேக விதைப்பு முறை என்றால் என்ன?

மேக விதைப்பு என்பது இரு சொற்களால் ஆனது. ஒன்று மேகம் மற்றொன்று விதைப்பு.

மேகம் என்ற சொல் வானத்தில் மிதக்கும் மேகக் கூட்டங்களையும், விதைப்பு என்ற சொல் விதை தூவுதலையும் குறிக்கிறது.

கேட்கவே வினோதமாக இருந்தாலும் எளிமையாகச் சொல்ல வேண்டுமானால், மழை உருவாக்கும் வேதிப்பொருட்களை விதையாக மேகங்களுக்குள் தூவுவதே இந்த மேக விதைப்பு முறை.

இந்த விதையில் சில்வர் அயோடைடு, பொட்டாசியம் கிளோரைடு மற்றும் சோடியம் கிளோரைடு உள்ளிட்ட வேதிப்பொருட்கள் பயன்படுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

விமானம் உள்ளிட்டவற்றின் உதவியோடு இந்த வேதிப்பொருட்கள் மேக கூட்டங்களுக்குள் தூவப்படும்.

செயற்கை மழை

பட மூலாதாரம், getty images

படக்குறிப்பு,

செயற்கை மழை

இந்த வேதிப்பொருட்கள் மேகத்தில் காணப்படும் நீர்த்துளிகளை உறைய வைக்கின்றன. பின்னர் அவை பனிக்கட்டிகளாக மாறி ஒன்றோடு ஒன்று மோதி பனித்துளிகளாக பூமியில் வந்து விழுகின்றன.

இந்த மேக விதைப்பு முறைக்கு நீண்ட வரலாறு உள்ளது. இதை உருவாக்கியவர் அமெரிக்க விஞ்ஞானியான வின்சென்ட் ஜெ. ஷேஃபர்.

இதன் வேர்கள் 1940இல் இருந்தே காணப்படுகின்றன. குறிப்பாக அமெரிக்காவில்…

இதுகுறித்து பேராசிரியர் எஸ்.என் திரிபாதி விவரித்தார்.

“மேகங்கள் இல்லாத இடங்களில் உங்களால் விதைகளைத் தூவ முடியாது. எனவே முதலில் மேகங்கள் இருக்கின்றனவா, இல்லையா, இருந்தால் எவ்வளவு உயரத்தில் உள்ளது, எந்தத் தன்மையிலான மேகம் மற்றும் வளிமண்டல நிலை என்ன என்பது போன்றவற்றைத் தெரிந்து கொள்ள வேண்டும்.

பிறகு வானிலை முன்னறிவிப்பு அல்லது அளவீடுகளைக் கொண்டு மேகங்களில் எவ்வளவு தண்ணீர் இருக்கிறது என்பதை அறிந்துகொள்ள வேண்டும். இதன் பிறகு, ஒரு வகை சிறப்பு வேதிப்பொருள் (உப்பு அல்லது உப்பு கலவை) சரியான மேகங்களில் தூவப்படும்.

இந்த வேதிப்பொருள் மேகங்களில் நடைபெறும் நுண் இயற்பியல் செயல்பாடுகளை வேகப்படுத்தும் (மழை துகள்கள், பனி). இதன் பின்னர் அது மழையாக பூமியை வந்தடையும்.

மேலும், மேகங்களுக்கு மின்னதிர்வு கொடுத்து மழையை வருவிக்கும் நுட்பமும்கூட உள்ளது. இதில், டிரோன் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி மேகங்களுக்கு மின்னதிர்வு வழங்கப்படும். இந்தத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி ஐக்கிய அரபு அமீரகம் 2021ஆம் ஆண்டு செயற்கை மழையை உருவாக்கியது.”

எப்போது செயற்கை மழையின் தேவை உருவாகும்?

செயற்கை மழை

பட மூலாதாரம், getty images

பொதுவாக, வறட்சி மற்றும் வெள்ள காலங்களைச் சமாளிப்பதற்காக இந்த செயற்கை மழை உருவாக்கப்படுகிறது.

இதைத் தாண்டி, தீவிர காட்டுத்தீ, தாங்க முடியாத வெப்பம் அல்லது வெப்ப அலைகள், புயல் மற்றும் சுற்றுச்சூழல் மாசுபாட்டை எதிர்கொள்ளவும் இது பயன்படுத்தப்படுகிறது.

இஸ்ரேலில் மிகக் குறைவாகவே இயற்கை மழை பொழிவதால் அந்த நாடு அடிக்கடி செயற்கை மழையை உருவாக்கி வருகிறது. தற்போது, ஐக்கிய அரபு எமிரேட்ஸும் ஆய்வு மற்றும் செயல்பாட்டுத் திட்டங்களில் செயற்கை மழையைத் தருவிக்கின்றன.

சுற்றுச்சூழல் மாசுபாட்டைக் கட்டுப்படுத்துவதில் இது எந்தளவு வீரியமானது?

இஸ்ரேல் , ஐக்கிய அரபு எமிரேட்ஸ் உள்ளிட்ட நாடுகள் இந்த முறையை அடிக்கடி பயன்படுத்துகின்றன. சீனாவும் 2008 ஒலிம்பிக்ஸின் போது விமானம் மூலமாகவும், பூமியிலிருந்து சுடும் துப்பாக்கிகள் மூலமாகவும் மேக விதைப்பு முறையைச் சாத்தியப்படுத்தியது. அதற்குப் பின்னர் சுற்றுச்சூழல் மாசுபாட்டைக் கட்டுப்படுத்துவதில் அவர்களுக்குப் பேருதவி கிடைத்தது.

இந்தியாவை பொறுத்தவரையில், முன்பு மேக விதைப்பு செய்யப்பட்டுள்ளது. ஆனால், அவை அனைத்தும் வெளிநாட்டு விமானங்கள், விதைப்பு உபகரணங்கள் மற்றும் வெளிநாட்டு பொறியாளர்கள், விஞ்ஞானிகளால் மட்டுமே செய்யப்பட்டுள்ளது.

ஆனால் தற்போது முதல்முறையாக ஐஐடி கான்பூர் தங்களது சொந்த வேதிப்பொருட்களை உருவாக்கியுள்ளது. அதே போல் விமானமும் ஐஐடி கான்பூருக்கு சொந்தமானது. மேலும் நாமே விதைப்பு உபகரணங்களையும் தயார் நிலையில் வைத்துள்ளோம். இதை மட்டும் டெல்லியில் பயன்படுத்தினோம் என்றால் இது முழுவதுமாக நமது உள்நாட்டு முயற்சியாக இருக்கும்.

இதன் செயல்திறன் அதன் விதைப்பு முறையை சார்ந்தே உள்ளது. விதைப்பை சரியாக செய்துவிட்டால் இது தன்னுடைய செயல்திறனை நிரூபித்து விடும். பெரிய நிலப்பகுதிகளில் இதன் மழை பொழியும் போது, சுற்றுசூழல் மாசுபாடு தானாகவே கட்டுக்குள் வரும்.

இந்த முறை முதலில் எப்போது பயன்படுத்தப்பட்டது?

செயற்கை மழை தொழில்நுட்பம்

பட மூலாதாரம், Getty Images

தற்போது பல நாடுகள் இந்த முறையைப் பயன்படுத்தி வருகின்றன.

கடந்த 2017ஆம் ஆண்டு , ஐக்கிய நாடுகள் சபையின் வானிலை ஆய்வு அமைப்பு இதுவரை 50 நாடுகள் இந்த மேக விதைப்பு முறையை முயற்சி செய்துள்ளதாக மதிப்பீடு செய்தது.

இதில் ஆஸ்திரேலியா, ஜப்பான், எத்தியோப்பியா, ஜிம்பாப்வே, சீனா, அமெரிக்கா, ரஷ்யா உள்ளிட்ட நாடுகளும் அடங்கும். இந்தியாவும்கூட இதைப் பயன்படுத்தியுள்ளது.

ஆனால், இந்தியாவை போல சுற்றுச்சூழல் மாசுபாட்டால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள சீனா இதை அதிகமாகப் பயன்படுத்தியுள்ளது.

பெய்ஜிங்கில் 2008ஆம் ஆண்டு, நடத்தப்பட்ட கோடைகால ஒலிம்பிக்சுக்கு முன்பு முதன்முறையாக சீனா இந்த மேக விதைப்பு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தியது.

இந்தியா முதன்முறையாக 1984ஆம் ஆண்டே இந்தத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்திவிட்டது. அப்போது தமிழ்நாடு தீவிர வறட்சியைக் கண்டிருந்தது. அதற்காக அப்போதைய தமிழ்நாடு அரசு 1984 -87, 1993-94 ஆகிய காலகட்டங்களில் மேக விதைப்பு தொழில்நுட்பத்தின் உதவியைப் பயன்படுத்தியது.

கர்நாடக அரசும் 2003 மற்றும் 2004ம் ஆண்டுகளில் மேக விதைப்பு தொழில்நுட்பத்தை ஆய்வு செய்து பார்த்தது. அதே வருடத்தில் மகாராஷ்டிரா அரசும் இந்த முறையைப் பயன்படுத்தியது.

Facebook
Facebook
fb-share-icon
Telegram
WhatsApp
TekTamil.com
Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by TekTamil.
நன்றி
Publisher: பிபிசிதமிழ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *