
பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், ஆடம் டேய்லர்
- பதவி, தி கான்வர்சேஷன்
-
சமீபத்தில், அமெரிக்காவின் மிசோரியில் உள்ள மருத்துவர்கள் ஆச்சரியமான ஒன்றை கண்டுபிடித்தனர். வழக்கமான பரிசோதனைக்காகச் சென்ற 63 வயதுடைய நோயாளி ஒருவரின் பெருங்குடலின் உள்ளே ஒரு ’ஈ’ இருந்ததை அவர்கள் கண்டறிந்தனர்.
நோயாளியின் செரிமான நொதிகள் மற்றும் வயிற்றில் உள்ள அமிலம் எல்லாவற்றையும் கடந்து இந்த ’ஈ’ அதன் உருவ அமைப்பில் மாறுபடாமல் அப்படியே எவ்வாறு தப்பித்தது என்பது மருத்துவர்களுக்குத் தெரியவில்லை.
உடற்கூறியல் பேராசிரியராக, மனிதர்களின் உடலுக்குள் புகும் விசித்திரமான விஷயங்கள் பலவற்றை நான் அறிந்திருக்கிறேன். அப்படியான சில கதைகளை இங்கே தொகுத்துள்ளேன். தைவானை சேர்ந்த பெண் ஒருவரின் காதுக்குள் சிலந்தி மற்றும் அதன் வெளிப்புற எலும்புக்கூடு இருந்தது சமீபத்தில் செய்திகளில் இடம்பிடித்தது.
பிரிட்டனை சேர்ந்த ஒருவர் தன்னை கடித்த சிலந்தியை விழுங்கியதால், அவருக்கு தொண்டையில் வீக்கம் மற்றும் மூச்சுத் திணறல் ஏற்பட்டது.
சிலந்தி தன் உடலுக்குள் செல்வதற்கு அவர் சிறிய பங்கு வகித்துள்ளார். ஆனால், பெரும்பாலானோரின் உடல்களில் சிலந்தி, ஈ போன்றவை தற்செயலாக சென்றுவிடுகிறது. குறிப்பாக, திட உணவுகளை சாப்பிட ஆரம்பிக்கும் குழந்தைகளுக்கு இது அதிகம் நேர்கிறது.

பட மூலாதாரம், GETTY IMAGES
துரதிருஷ்டவசமாக, இவை சுவாசக் குழாய்க்குள் செல்வதால் 3 வயதுக்குட்பட்ட குழந்தைகளின் இறப்புக்கான பொதுவான காரணங்களில் ஒன்றாக இது உள்ளது.
குழந்தைகள் தங்கள் வாய், மூக்கு மற்றும் காதுகளுக்குள்ளே இத்தகையவற்றை தவறுதலாக செலுத்திவிடுகின்றனர். வாய் மற்றும் மூக்குக்குள் செலுத்தப்படும் பொருட்கள் பொதுவாக சுவாசக் குழாய் வழியாக உடலுக்குள் சென்று, மலம் வாயிலாக வெளியேறுகின்றது.
குழந்தைகள் பொதுவாக பொம்மைகள், மணிகள், காந்தங்கள் முதல் எதிர்பாராத வகையில் அட்டைப்பூச்சிகள் மற்றும் ஊசிகள் வரை உட்கொள்கின்றனர்.
உணவுகள் சிக்கிக்கொள்ளுதல்
மேற்கத்திய நாடுகளில், வேர்க்கடலைகளை அதிகமாக குழந்தைகள் விழுங்கிவிடுகின்றனர். மேலும், ஹாட் டாக் (Hot Dog) போன்ற உணவுப்பொருட்கள், சாசேஜ்கள் (Sausages) போன்றவைதான் அதிகமான இறப்புகளை ஏற்படுத்துகின்றன.
தென்கிழக்கு ஆசியா மற்றும் சீனாவில் இறைச்சிகளின் எலும்புகள் மற்றும் விதைகள் போன்றவை இறப்புகளுக்குக் காரணமாக அமைகின்றன. மத்திய கிழக்கு, ஆப்பிரிக்கா மற்றும் மத்திய தரைக்கடல் நாடுகளில் விதைகளை விழுங்குவதால் இத்தகைய அசம்பாவிதங்கள் ஏற்படுகின்றன.

பட மூலாதாரம், GETTY IMAGES
பெண்களை விட ஆண்கள் பொருட்களை விழுங்குவதற்கான வாய்ப்பு அதிகம் என்று பல ஆய்வுகள் தெரிவிக்கின்றன .தற்செயலாக பொருட்களை விழுங்குவதற்கான ஆபத்து வயதுக்கு ஏற்ப அதிகரிக்கும்.
சில நேரங்களில், குழந்தைகள் உட்கொள்ளும் பொருள்கள் பல தசாப்தங்களாக கவனிக்கப்படாமல் போகலாம். பிரிட்டனி பிரெஸ்டனைச் சேர்ந்த தபால்காரர் ஒருவர், சிறுவயதில் பிளேமொபில் (Playmobil) எனும் விளையாட்டுப் பொருளின் துண்டுகளை விழுங்கியுள்ளார். அது அவருடைய 47-வது வயதில், நீடித்த இருமல் பிரச்னைக்காக ஸ்கேன் செய்தபோதுதான் கண்டுபிடிக்கப்பட்டது .
அறுவை சிகிச்சை வரை செல்லலாம்
நாணயங்கள் மற்றும் சிறிய பொம்மைகள் போன்ற பொருட்களை குழந்தைகள் விழுங்குவதால் அவை அறுவை சிகிச்சை வரை செய்வதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கின்றன. இவற்றில் பெரும்பாலானவை செரிமான அமைப்பு வழியாக செல்கின்றன.20% பேருக்கு வாய் அல்லது ஆசனவாய் வழியாக ஒரு குழாய் செருகப்பட்டு எண்டோஸ்கோப் மூலம் அப்பொருட்கள் அகற்றப்படுகின்றன. ஒரு சதவீதத்தினருக்கு அறுவை சிகிச்சை தேவைப்படுகிறது.
ஒன்றுக்கும் மேற்பட்ட பொருட்களை உட்கொள்ளும் போது காந்தங்கள் அதிக ஆபத்தை ஏற்படுத்துகின்றன. ஏனெனில் அவை குடல் சுவர்களின் சுழல்கள் மூலம் ஈர்க்கப்பட்டு, குடல் சிதைவை ஏற்படுத்துகின்றன.
அறிகுறிகளை ஏற்படுத்தாமல் சிக்கிக்கொள்ளும் உலோகப் பொருட்களை உட்கொள்ளும் போது, அவை காந்தமாக மாறும் இரும்பு உலோகங்களைக் கொண்டிருந்தால் எதிர்காலத்தில் அபாயங்கள் ஏற்படலாம். குறிப்பிட்ட நபர் எம்.ஆர்.ஐ சோதனை மேற்கொள்ளும் போது அந்த உலோகங்கள் அதிக வெப்பத்திற்கு உட்பட்டு சேதமடையும்.

பட மூலாதாரம், GETTY IMAGES
கருத்தடை சாதனங்களால் அபாயம்
மருத்துவ காரணங்களுக்காகவோ அல்லது பிற காரணங்களுக்காகவோ பிறப்புறுப்புக்குள் சில சாதனங்கள் செலுத்தப்படுகின்றன.
அதாவது, கருப்பையினை நிலைகுலையாமல் தாங்க செய்யும் பெசரிகள் (Pessaries) அல்லது கருத்தடை சாதனங்கள் உள்ளிட்டவற்றை குறிப்பிடலாம். அவை தம் உடலில் செலுத்தப்பட்டிருப்பதை நோயாளி மறந்துவிட்டிருக்கலாம் அல்லது அவை உடலுக்குள்ளேயே சேதமடைவதை உணராமல் இருக்கலாம்.
இவை நோய்த்தொற்றுகள், ஃபிஸ்துலாக்கள் (உடலில் இரண்டு உறுப்புகள் அல்லது துவாரங்களை இணைக்கும் அசாதாரண பகுதி) மற்றும் கல் உருவாக்கம் போன்ற நீண்ட கால அபாயங்களை ஏற்படுத்துகின்றன.
ஆசனவாய் மற்றும் மலக்குடலின் உள்ளேயும் இத்தகைய பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இத்தகைய பிரச்னைகளுடன் அவசர சிகிச்சைப் பிரிவுக்கு வருபவர்களில் 66% முதல் 85% பேர் ஆண்கள்.
குடல் சிதைவு அபாயம்
ஆசனவாய் அல்லது மலக்குடலில் உள்ள பொருட்களால் ஏற்படும் மிகப்பெரிய பிரச்னைகளில் ஒன்று, குடல் இயக்கங்களின் இயல்பான இயக்கத்தைத் தடுக்கும் வகையில், அவை சிக்கிக்கொள்ளலாம். காலப்போக்கில், இது ஒரு துளையிடல் அல்லது குடல் சிதைவு அபாயத்துடன் பாதையின் குறிப்பிடத்தக்க விரிவாக்கத்தை ஏற்படுத்தும்.
பாலியல் உறவின் போதோ அல்லது மலச்சிக்கல் சிகிச்சைகளுக்காகவோ சில பொருட்கள் ஆசனவாயில் செலுத்தப்படுகின்றன.

காரணங்கள் வேறுபட்டாலும், அந்த பகுதிகளில் காணப்படும் பல்வேறு வகையான பொருள்கள் மிகவும் பெரியவை. சுய இன்பத்திற்காக பலரும் ஆப்பிள்கள், கத்தரிக்காய்கள், தூரிகைகள், பேனாக்கள், கேரட், கண்ணாடிகள், சோடா பாட்டில்கள், பேஸ்பால் மற்றும் முழு தேங்காய் உள்ளிட்ட பொருட்களும் இவற்றில் அடங்கும் .இப்பொருட்களை உடலிலிருந்து வெளியேற்ற அறுவை சிகிச்சை வரை செல்ல வேண்டியுள்ளது.
விபத்தினாலோ அல்லது வேண்டுமென்றோ, உடலில் நுழையும் இத்தகைய பொருட்கள் ரத்தப்போக்கை அதிகரித்து மரண அபாயத்தை ஏற்படுத்துகின்றன.
ஆடம் டேய்லர் லேன்கேஸ்டர் பல்கலைக்கழகத்தில் உடற்கூறியல் பேராசிரியராக உள்ளார்.
நன்றி
Publisher: பிபிசிதமிழ்