
பட மூலாதாரம், Getty Images
கடந்த 40 ஆண்டுகளில் ஆண்களின் சராசரி விந்தணுக்களின் எண்ணிக்கை பாதியாகக் குறைந்துள்ளது.
உலக மக்கள்தொகையில் 7% ஆண்கள் மலட்டுத்தன்மையால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு ஏற்பட்டுள்ள பிரச்னையைத் தீர்க்க செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தால் உதவ முடியும் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.
தானும், தனது குழுவும் உருவாக்கிய செயற்கை நுண்ணறிவு மென்பொருளானது, தீவிர பயிற்சிகளைப் பெற்ற ஒருவரின் கண்களைவிட 1000 மடங்கு அதிவேகமாக, மலட்டுத்தன்மை கொண்ட ஆண்களிடம் சேகரிக்கப்பட்ட விந்து மாதிரிகளில் இருந்து விந்தணுவை கண்டறிய முடியும் என்று மருத்துவர் ஸ்டீவன் வாசிலெஸ்க்யூ கூறுகிறார்.
“ஒரு மனிதன் தான் பார்ப்பதை, உணர்ந்து அறிவதற்கு எடுத்துக்கொள்ளும் நேரத்தைவிட மிகக் குறைவான நேரத்திலேயே, குழந்தைப் பேறுக்கு சாத்தியமான வீரியமுள்ள விந்தணுவை இந்த செயற்கை நுண்ணறிவு சுட்டிக்காட்டிவிடும்,” என்று அவர் கூறினார்.
மருத்துவர் வாசிலெஸ்க்யூ ஆஸ்திரேலியாவில் உள்ள சிட்னி தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் (UTS) உயிரியல் மருத்துவ பொறியாளர் மற்றும் நியோஜெனிக்ஸ் பயோசயின்சஸ் என்ற மருத்துவ நிறுவனத்தின் நிறுவனராக உள்ளார்.
அவரும் அவரது குழுவும் உருவாக்கிய அமைப்பு ’ஸ்பெர்ம் ஸர்ச்’ என்று அழைக்கப்படுகிறது. விந்து வெளியேறும்போது அதில் விந்தணுவே இல்லாத மலட்டுத்தன்மையுள்ள 10 சதவீத ஆண்களுக்கு உதவும் வகையில் இந்தத் தொழில்நுட்பம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
விந்தணுக்களை செயற்கை நுண்ணறிவு(AI) எப்படி கண்டுபிடிக்கிறது?

பட மூலாதாரம், DALE GOSS
மருத்துவர் ஸ்டீவன் வாசிலெஸ்க்யூ மற்றும் சிட்னி தொழிநுட்ப பல்கலைக்கழகத்தின் சக ஊழியர்கள் விந்தணுவை விரைவாகக் கண்டறிய உதவும் செயற்கை நுண்ணறிவு அமைப்பை உருவாக்கியுள்ளனர்.
நாம் முதலில் இதுவரை இந்த சிகிச்சை முறை மனித செயல்முறையின் மூலம் எப்படி செய்யப்படுகிறது என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்.
பொதுவாக இதுபோன்ற சந்தர்ப்பங்களில் ஆண் விதைப்பையின் ஒரு சிறிய பகுதி அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்பட்டு, ஆய்வகத்திற்கு எடுத்துச் செல்லப்படுகிறது. அங்கு கருவியலாளர், ஆரோக்கியமான விந்தணுவை தேடிக் கண்டுபிடிப்பார்.
திசு பிரித்தெடுக்கப்பட்டு நுண்ணோக்கியின் கீழ் ஆய்வு செய்யப்படுகிறது. சாத்தியமான விந்தணுக்கள் கண்டறியப்பட்டால், அவற்றைப் பிரித்தெடுத்து முட்டையில் செலுத்த முடியும்.
“இதைச் செய்ய பல ஊழியர்கள் ஆறு அல்லது ஏழு மணிநேரம் வேலை செய்ய வேண்டியிருக்கும். மேலும், இதில் சோர்வு மற்றும் துல்லியமின்மை ஏற்பட வாய்ப்புகள் உள்ளன,” என்று மருத்துவர் வாசிலெஸ்க்யூ கூறினார்.
“ஒருவர் நுண்ணோக்கியின் மூலம் பார்க்கும்போது, அவர்கள் ஒரு குழப்பமான, செல்களின் கூட்டத்தைப் பார்ப்பார்கள்,” என்று அவர் கூறுகிறார்.
“அதில் ரத்தம் மற்றும் திசுக்கள் இருக்கும். மொத்தத்தில் 10 விந்தணுக்கள் மட்டுமே அதில் இருக்கலாம். ஆனால், லட்சக்கணக்கான பிற செல்கள் இருக்கும். இது வைக்கோல் போரில் ஒரு ஊசியைத் தேடும் வேலையைப் போன்றது,” என்கிறார் மருத்துவர் வாசிலெஸ்க்யூ.
இதற்கு நேர்மாறாக மாதிரிகளின் புகைப்படங்கள் கணினியில் பதிவேற்றப்படும்போது, ’ஸ்பெர்ம் ஸர்ச்’, ஆரோக்கியமான விந்தை நொடிகளில் கண்டுபிடிக்க முடியும் என்று அவர் குறிப்பிட்டார்.
இந்த வேகத்தை அடைய மருத்துவர் வாசிலெஸ்க்யூவும் அவரது சகாக்களும், ஆயிரக்கணக்கான இத்தகைய படங்களைக் காண்பித்து இந்த சிக்கலான திசு மாதிரிகளில் இருந்து விந்தணுக்களை அடையாளம் காண செயற்கை நுண்ணறிவுக்கு பயிற்சி அளித்தனர்.
ஒரு அனுபவம் மிக்க கருவியலாளரைக் காட்டிலும் ’ஸ்பெர்ம் ஸர்ச்’ 1,000 மடங்கு வேகமானது என்பதை ஒரு சோதனை காட்டியதாக யுடிஎஸ் பயோமெடிக்கல் இன்ஜினியரிங் குழு தனது அறிவியல் ஆய்வறிக்கையில் தெரிவித்தது.
இருப்பினும், ’ஸ்பெர்ம் ஸர்ச்’, கருவியலாளர்களை மாற்றுவதற்காக வடிவமைக்கப்படவில்லை. மாறாக ஒரு உதவி முறையாக அது செயல்படும்.
ஆய்வுகள் கூறுவது என்ன?

பட மூலாதாரம், NEOGENIX BIOSCIENCES
’ஸ்பெர்ம் ஸர்ச்’ அமைப்பு விந்தணுக்களை விரைவாக அடையாளம் கண்டு, அவற்றைச் சுற்றி ஒரு செவ்வகத்தை திரையில் வரைகிறது.
விந்தணுவை கண்டுபிடிப்பதில் இத்தகைய வேகம் இன்றியமையாதது என்று மருத்துவர் சாரா மார்டின்ஸ் டா சில்வா கூறுகிறார்.
“நேரம் மிகவும் முக்கியமானது,” என்று டண்டீ பல்கலைக்கழகத்தில் இனப்பெருக்க மருத்துவத்தில் க்ளினிகல் ரீடரான அவர் குறிப்பிட்டார்.
“உங்களிடம் முட்டை சேகரிப்பு இருந்தால், கருவுற வேண்டிய முட்டைகள் உங்களிடம் இருந்தால், அதைச் செய்ய எங்களுக்கு ஒரு குறைந்த நேரம் போதும். செயல்முறையை விரைவுபடுத்துவது மிகவும் சாதகமாக இருக்கும்,” என்றார் அவர்.
கடந்த 40 ஆண்டுகளில் விந்தணுக்களின் எண்ணிக்கை பாதியாகக் குறைந்துள்ளதாக பரவலாகக் கூறப்படும் நிலையில், கருவுறாமை என்பது அதிகரித்து வரும் பிரச்னையாக உள்ளது.
ஆண்களிடையே மலட்டுத்தன்மை அதிகரிப்பதற்கு சுற்றுச்சூழல் மாசுபாடு, புகைப்பிடித்தல், மோசமான உணவுப் பழக்கம், போதுமான உடற்பயிற்சி செய்யாதது மற்றும் அதிக மன அழுத்தம் ஆகியவை முக்கியக் காரணங்களாக உள்ளன.
ஆண் மலட்டுத்தன்மை பிரச்னையில் உதவும் மற்றொருவர் மருத்துவர் ம்யூரிக் கல்லாகர்.
பர்மிங்ஹாம் பல்கலைக்கழகத்தில் சிஸ்டம்ஸ் மாடலிங் மற்றும் குவாண்டிடேட்டிவ் பயோமெடிசின் மையத்தில் உதவிப் பேராசிரியருமான அவருடைய புதிய தொழில்நுட்பம், விந்தணு வால்களின் வேகம் மற்றும் செயல்பாட்டைக் கண்காணிக்க இமேஜிங் மென்பொருளைப் பயன்படுத்துகிறது.
“வாலை கண்காணிப்பது மாதிரியின் ஆரோக்கியத்தைப் பற்றிய நுண்ணறிவைத் தருகிறது,” என்று அவர் கூறுகிறார்.
“விந்தணு சுற்றுச்சூழல் அழுத்தத்தில் உள்ளதா, இறக்கப் போகிறதா அல்லது உயிரியல் குறிப்பிற்கு பதிலளிக்கிறதா என்பதை மிக நுண்ணிய மாற்றங்கள் நமக்குத் தெரிவிக்கும்,” என்றார் அவர்.
செயற்கை நுண்ணறிவின் பயன்பாட்டில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் என்ன?

பட மூலாதாரம், MEURIG GALLAGHER
’SpermSearch’, வெறும் ஏழு நோயாளிகளை உள்ளடக்கிய மிகச் சிறிய சோதனை கட்டத்தில்தான் உள்ளது.
இதற்கிடையில், பெல்ஃபாஸ்ட்டை தளமாகக்கொண்டு செயல்படும் கருவுறுதல் அமைப்பான எக்ஸாமென், தனிப்பட்ட விந்தணுக்களில் டிஎன்ஏ சேதத்தை அடையாளம் காண ஒற்றை செல் ஜெல் எலக்ட்ரோபோரேசிஸ் எனப்படும் நுட்பத்தைப் பயன்படுத்துகிறது.
பேராசிரியர் ஷீனா லூயிஸ் மற்றும் அவரது குழுவினர் 20 ஆண்டுகளுக்கும் மேலாக இந்தத் தொழில்நுட்பத்தை உருவாக்கி வருகின்றனர்.
“செயற்கை நுண்ணறிவின் பயன்பாட்டில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் உற்சாகம் அளிப்பதாக இருந்தாலும், மருத்துவம் மிகவும் மெதுவாகவே நகர்கிறது,” என்கிறார் பெல்ஃபாஸ்டில் உள்ள குயின்ஸ் பல்கலைக்கழகத்தின் இனப்பெருக்க மருத்துவத்தில் கெளரவ(emeritus) பேராசிரியரும், எக்ஸாமெனின் தலைமை நிர்வாகியுமான பேராசிரியர் லூயிஸ்.
எடுத்துக்காட்டாக, ’SpermSearch’, வெறும் ஏழு நோயாளிகளை உள்ளடக்கிய மிகச் சிறிய சோதனை கட்டத்தில்தான் உள்ளது.
“இது இன்னும் எதையும் குறிக்கவில்லை,” என்கிறார் பேராசிரியர் லூயிஸ்.
“சோதனை கட்டத்தில் இருப்பதற்கும் வணிக ரீதியாக கிடைப்பதற்கும் இடையிலான கால இடைவெளி இரண்டு முதல் ஐந்து ஆண்டுகள் வரை இருக்கலாம்,” என்று அவர் குறிப்பிட்டார்.
“இது இன்னும் நீண்ட தூரம் செல்ல வேண்டியுள்ளது. இது மலட்டுத்தன்மை பிரச்னை கொண்ட ஆண்களை மட்டுமே இலக்காகக்கொண்டது,”என்று அவர் குறிப்பிட்டார்.
ஆயினும், தங்களின் சிகிச்சையே “கடைசி முயற்சி” என்கிறார் மருத்துவர் வாசிலெஸ்க்யூ.
“முட்டையை கருவுறச்செய்தல் அல்லது சிகிச்சையை நிறுத்துதல் ஆகியவற்றுக்கு இடையிலான வித்தியாசமாக இது இருக்கலாம்,” என்றும் அவர் கூறுகிறார்.
“கருவியலாளரை நாம் மிகவும் திறமையானவராகவும், துல்லியமாகவும் மாற்றினால், கண்டிபிடிக்க முடிந்திராத விந்தணுவைக்கூட அவர்களால் கண்டுபிடிக்க முடியக்கூடும். அது ஒரு மனிதனுக்குத் தனது சொந்த உயிரியல் குழந்தைகளைப் பெறுவதற்கான வாய்ப்பை அளிக்கிறது.”
UTS குழு இப்போது தங்கள் செயற்கை நுண்ணறிவை மருத்துவ பரிசோதனைகளுக்குக் கொண்டு செல்லத் தயாராக உள்ளது,” அசலான நேரடி கர்ப்பம் – அதுதான் அடுத்த படி,” என்கிறார் மருத்துவர் வாசிலெஸ்க்யூ.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
நன்றி
Publisher: பிபிசிதமிழ்