சென்னையில் திருமணம் தாண்டிய உறவால் அதிகரிக்கும் குடும்ப வன்முறை – பெண்கள் என்ன செய்ய வேண்டும்?

சென்னையில் திருமணம் தாண்டிய உறவால் அதிகரிக்கும் குடும்ப வன்முறை - பெண்கள் என்ன செய்ய வேண்டும்?

பெண்கள்

பட மூலாதாரம், Getty Images

(இந்தக் கட்டுரையில் இடம்பெறும் சில தகவல்கள் உங்களுக்கு சங்கடத்தை ஏற்படுத்தலாம்)

கணவர் திருமணம் மீறிய உறவில் இருப்பதை அறிந்து கண்டிக்கும் பெண்கள், கணவரால் தக்கப்படுவதும், வன்முறைக்கு ஆளாக்கப்படும் நிகழ்வுகளும் சென்னையில் அதிக அளவில் நடப்பதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன. குடும்ப வன்முறையால் பாதிக்கப்படும் பெண்கள் முன் இருக்கும் சட்டப்பூர்வமான வழிமுறைகள் என்ன? அவற்றைப் பயன்படுத்தி எப்படித் தீர்வு பெறுவது?

32 வயதான சித்ரா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னர் நள்ளிரவில் தனது இரண்டு வயது குழந்தையுடன் வீட்டில் இருந்து வெளியேறினார்.

அவரது கணவர், திருமணத்தைத் தாண்டி மற்றொரு பெண்ணுடன் உறவில் இருப்பது அவருக்கு தெரியவந்தது. அதைத் தட்டிக் கேட்டதற்காகப் பலமுறை கணவரால் தாக்கப்பட்டார். மேலும் வன்முறையைத் தாங்கிக்கொள்ள முடியாமல் போன கட்டத்தில், அவர் வீட்டில் இருந்து வெளியேறினார்.

சித்ராவைப் போல சென்னையில் நூற்றுக்கணக்கான பெண்கள், தங்களது கணவர்கள் திருமணத்தை தாண்டிய உறவில் இருப்பது பற்றி தெரியவந்தபின்னர், அதனை கேள்விகேட்டபோது, மோசமான குடும்ப வன்முறைக்கு ஆளானதாக சமூகநலத்துறையின் பாதுகாப்பு அலுவலர்களிடம் புகார் அளித்துள்ளனர்.

சென்னை நகரத்தில், கடந்த ஒர் ஆண்டில், வடசென்னையில் பதிவான 350 புகார்களில் 70% புகார்கள் மற்றும் தென்சென்னையில் பதிவான 300 புகார்களில், 45%-50% புகார்கள், தங்கள் கணவர்களின் திருமணம் தாண்டிய உறவைக் கண்டறிந்த பின்னர், மோசமான தாக்குதலுக்கு ஆளான பெண்கள் பதிவு செய்த புகார்கள் என சமூகநலத்துறை அதிகாரிகள் பிபிசி தமிழிடம் உறுதிப்படுத்தினர்.

குடும்ப வன்முறை, பெண்கள், பெண்ணுரிமை, திருமணம்

பட மூலாதாரம், Getty Images

‘கணவரால் தாக்கப்பட்டேன்’

பிபிசி தமிழிடம் தனது அனுபவத்தை பகிர்ந்துகொண்ட சித்ரா, அரசு உதவி பெறும் ஒரு தற்காலிக மையத்தில் ஒருவாரம் தங்கியிருந்ததாகச் சொல்கிறார். அவருக்கு மருத்துவ உதவி மற்றும் சட்ட உதவி அளிக்கப்பட்டது.

“என் கணவர் என்னை தாக்கியதைப் பார்த்த என் குழந்தை வீறிட்டு அழுதாள். பின்னர் பேசுவதை நிறுத்திவிட்டாள். ஒரு வாரம் கழித்துதான் அவளை சரிப்படுத்தமுடிந்தது,” என்கிறார் சித்ரா.

மேலும் பேசிய அவர், தன் உடல் முழுவதும் இரும்புக் கம்பியால் அடித்த காயங்கள் இருந்ததாகச் சொல்கிறார்.

“நான் உடனடியாக வீட்டை விட்டு வெளியேற வேண்டிய சூழல் ஏற்பட்டது. என் கணவரின் செயல்பாட்டை அவரது பெற்றோர் ஆதரித்தனர் என்பதால் என்னால் தொடர்ந்து அங்கு இருக்கமுடியவில்லை. என் தோழி மூலமாக, பாதுகாப்பு அலுவலர்களை தொடர்புகொண்டேன். குடும்ப வன்முறையால் பாதிக்கப்பட்டவர்கள் தற்காலிகமாக ஒரு மையத்தில் தங்கமுடியும் தெரியவந்தபோது, நான் அந்த உதவியை பயன்படுத்திக்கொண்டேன், எனக்கு நம்பிக்கை பிறந்தது,”என்கிறார் சித்ரா.

குடும்ப வன்முறை, பெண்கள், பெண்ணுரிமை, திருமணம்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு,

நூற்றுக்கணக்கான பெண்கள், தங்களது கணவர்கள் திருமணத்தை தாண்டிய உறவில் இருப்பது பற்றி தெரியவந்தபின்னர், அதனை கேள்விகேட்டபோது, மோசமான குடும்ப வன்முறைக்கு ஆளாகின்றனர்

சட்ட உதவி

குடும்பவன்முறை தடுப்புச் சட்டம் (2005) குறித்த விழிப்புணர்வைப் பெற்றிருந்த சித்ரா, மூன்று முறை மோசமான தாக்குதலுக்கு ஆளான பின்னர்தான் புகார் அளிக்க முன்வந்துள்ளார். கணவரின் குடும்பத்தைச் சேர்ந்தவர்களிடம் அவர் தகவல் தெரிவித்தபின்னர், உடல் ரீதியான வன்முறை அதிகரித்தது என்பதால், அவர் தனது பெற்றோரிடம் தனது பிரச்னைகளை பற்றி பேசவிரும்பவில்லை.

“குடும்ப வன்முறை தடுப்புச் சட்டத்தின் கீழ் புகார் கொடுக்கப்பட்டதால், விசாரணை நடைபெற்றது. தற்போது ரூ.7,000 வரை குழந்தை பராமரிப்பு மற்றும் என் செலவுகளுக்காக தருவதற்கு என் கணவர் ஒப்புக்கொண்டுள்ளார். திருமணத்தைத் தாண்டிய உறவில் இருந்து வெளியேறுவது பற்றியும் ஆலோசனை வழங்கப்பட்டது. என்னைத் தாக்கியதற்கு மன்னிப்பு கேட்டிருக்கிறார். நான் இதனை சட்டரீதியாக அணுகியதை எண்ணி பெருமைப்படுகிறேன்,” என்றார் சித்ரா.

குடும்ப வன்முறையைப் பற்றி எப்படிப் புகார் அளிப்பது?

குடும்பத்தில் நடக்கும் வன்முறை குறித்து பேசுவதற்கும், மற்றவர்களிடம் உதவி கேட்பதற்கும் இருக்கும் தயக்கம்தான், சித்ரா போன்ற பல பெண்கள், தொடர்ந்து வன்முறையால் பாதிக்கப்படுவதற்கு காரணம் என பாதுகாப்பு அலுவலர்கள் கூறுகின்றனர்.

சமூகநலத்துறை ஆணையர் அமுதவல்லி பேசுகையில், பெண்களுக்கான சிறப்பு உதவி எண்: 181 மூலமாக வன்முறை தொடர்பாக புகார் அளிக்கலாம் என்றும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள பாதுகாப்பு அலுவலரிடம் நேரடியாக புகார் தரலாம் என்றும் விவரித்தார்.

“குடும்ப வன்முறை தடுப்புச் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்படும் புகாரில், 60 நாட்களுக்குள் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு உரிமை சார்ந்த தீர்வு தரப்படவேண்டும் என்பதால், விரைந்து ஆலோசனை நடத்தப்படுகிறது. புகார் தருபவருக்கு மருத்துவ உதவி தேவைப்படுகிறதா, கணவரின் வீட்டில் பாதுகாப்பாக அவர் தங்கமுடியுமா என்றும் விசாரணை நடைபெறும். தேவைப்படும் பட்சத்தில், புகாரளித்த பெண் தற்காலிக மையத்தில் தங்கவைக்கப்படுவார். பாதுகாப்பு அலுவலர் மூலம் அவரின் வழக்கு நடத்தப்படும்,” என்கிறார் அமுதவல்லி.

மேலும், புகார் தரும் நபரின் நிலையைக் கருத்தில் கொண்டு அவரை மீட்கும் நடவடிக்கையும் மேற்கொள்ளப்படுகிறது என்றார் அவர்.

குடும்ப வன்முறை, பெண்கள், பெண்ணுரிமை, திருமணம்
படக்குறிப்பு,

குடும்ப வன்முறையால் பாதிக்கப்பட்டவர்கள் தற்காலிகமாக ஒரு மையத்தில் தங்கமுடியும்

குடும்பவன்முறை தடுப்புச் சட்டத்தில் அதிக பட்ச தண்டனை என்ன?

இச்சட்டம்,

  • ஒரு பெண் அவளது கணவரது வீட்டில் அல்லது அவளது பிறந்த வீட்டில் வசிக்கும் உரிமையை உறுதி செய்கிறது.
  • அதேநேரம் ஒரு பெண் அவளது வசிப்பிடத்தில், ‘வன்முறையற்ற வீட்டில்’ வாழ பாதுகாப்பு அளிக்கிறது.
  • மேலும், வன்முறையால் பாதிக்கப்பட்ட பெண் 60 நாட்களுக்குள் உடனடியாக சாத்தியப்படும் தீர்வுகளை பெறவும் உதவுகிறது.

ஒரு பெண்ணின் குடும்பத்தில் உள்ள எந்த ஆண் நபர் அவள்மீது வன்முறையைப் பிரயோகம் செய்தாலும், அப்படிச் செய்தவர் மீது இச்சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யலாம். தந்தை, சகோதரன், கணவன் அவரின் உறவினர்கள் மற்றும் ஆண் துணைவர் ஆகியோரையும் வழக்கில் சேர்க்கமுடியும்.

குடும்ப வன்முறை குறித்த வழக்கில் அதிகபட்ச தண்டனையாக ஒரு மாதம் சிறை தண்டனை மட்டும் கிடைக்கும் என்கிறார் சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் சாந்தகுமாரி. அதனால், இந்திய தண்டனைச் சட்டத்தின் பிற பிரிவுகளை பயன்படுத்திதான் அதிகபட்ச தண்டனை பெற்றுதரமுடியும் என்கிறார்.

“குடும்ப வன்முறை என்பதை மட்டுமே தனி வழக்காக பலரும் பதிவு செய்வதில்லை. விவாகரத்து வழக்கு, குழந்தைகள் மீதான உரிமை தொடர்பான வழக்கு, வரதட்சணை வழக்கு ஆகிய வழக்குகளில் குடும்ப வன்முறை பற்றிய புகாரும் சேர்த்துக்கொள்ளப்படும். இந்தச் சட்டம் உடனடியாக அந்தப் பெண்ணுக்குத் தேவைப்படும் பாதுகாப்பு மற்றும் பராமரிப்புத் தொகையைப் பெற்றுக்கொள்ள வழிவகை செய்கிறது என்பதால், இந்தச் சட்டத்தை பலரும் பயன்படுத்துகின்றனர்,” என்கிறார் சாந்தகுமாரி.

குடும்ப வன்முறை, பெண்கள், பெண்ணுரிமை, திருமணம்
படக்குறிப்பு,

குடும்ப வன்முறை குறித்த வழக்கில் அதிகபட்ச தண்டனையாக ஒரு மாதம் சிறை தண்டனை மட்டும் கிடைக்கும் என்கிறார் சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் சாந்தகுமாரி

சட்டப் பிரிவுகள் என்னென்ன?

இந்திய தண்டனைச் சட்டம் 498 (அ) பிரிவின்படி, அதிகபட்சமாக மூன்று ஆண்டுகள் சிறைதண்டனை பெற்றுதரமுடியும். அதற்கு குடும்பவன்முறை தடுப்புச் சட்டத்தில் பதிவு செய்த புகாரும் வலு சேர்க்கும் என்கிறார் வழக்கறிஞர் சாந்தகுமாரி.

குடும்ப வன்முறை சட்டம், 2005ல் பெண்களுக்கு உடனடியாக கிடைக்கும் தீர்வுகள் என்ன என்று விளக்கினார் அவர்.

  • பிரிவு 18 மற்றும் 19: ஒரு பெண் வாழும் வீட்டில் பாதுகாப்பு மற்றும் வீட்டில் வசிப்பதற்கான ஆணையைப் பெறலாம்.
  • பிரிவு 20: தனக்கும் தன்னுடைய குழந்தைகளுக்கும் பராமரிப்பு தொகை வேண்டி ஆணையை பெறலாம்.
  • பிரிவு 21: குழந்தைகளுக்கும் தனக்கும் தற்காலிக தங்குமிடம் பெறமுடியும்.
  • பிரிவு 22: பாதிக்கப்பட்ட பெண் தனக்கு ஏற்பட்ட சேதங்களுக்கான இழப்பீடு பெறமுடியும்

‘விழிப்புணர்வு அதிகரிக்க வேண்டும்’

குடும்ப வன்முறை தடுப்புச் சட்டம் தொடர்பான விழிப்புணர்வு, தற்காலிக மையம் இருப்பது குறித்த தகவல்களும் பெரும்பாலான பெண்களிடம் கொண்டுசேர்க்கப்படவில்லை என்கிறார் பெண்ணிய செயற்பாட்டாளர் ரேணுகா.

குடும்ப வன்முறையைப் பற்றிப் புகார் கொடுக்கக்கூடாது என்றும், வன்முறையைத் தாங்கிகொள்ளவேண்டும் என்றும் கூறி பெண்கள் வளர்க்கப்படுவதால்தான் பலரும் புகார்கொடுக்க யோசிக்கின்றனர் என்பது ரேணுகாவின் கருத்து.

“கல்லூரி, பணியிடங்கள், அரசு அலுவலகங்கள், பொது இடங்களில் குடும்ப வன்முறை தொடர்பான விழிப்புணர்வு நிகழ்வுகள் நடத்தப்படவேண்டும். பல நேரங்களில், வன்முறை பற்றிப் பெண்கள் சொன்னாலும், வன்முறையை தாங்கிக்கொள்ளவேண்டும், அதுதான் குடும்பத்திற்கு நல்லது என்ற கருத்து திணிக்கப்படுகிறது. வன்முறையை தாங்கிக்கொண்டு வாழ்வதுதான் பொறுமை என்று கூறி பெண் குழந்தைகள் வளர்க்கப்படுவதால்தான் இந்தச் சிக்கல் நீடிக்கிறது. இதனை உடனடியாக களையமுடியாவிட்டாலும் , குறைந்தபட்சம், குடும்ப வன்முறை என்பது தவறானது என்ற புரிதலை ஏற்படுத்தவேண்டும்,” என்கிறார் ரேணுகா.

சென்னை மாநகரத்தில் மட்டும் கடந்த ஒர் ஆண்டில் 650 குடும்ப வன்முறை தொடர்பான புகார்களை சமூகநலத்துறைக்கு வந்துள்ளது என்பது இந்த விவகாரத்தில் தீவிரமான செயல்பாடு தேவை என்பதை உணர்த்துகிறது என்றும் கூறுகிறார் ரேணுகா.

“பெரும்பாலான புகார்கள், திருமணத்தைத் தாண்டிய உறவு இருப்பதை, மனைவி கண்டறிந்த பின்னர், அவருக்குக் கணவரால் ஏற்பட்ட மோசமான உடல்ரீதியான தாக்குதல் தொடர்பான புகார்களாக உள்ளன. வன்முறையால் பாதிக்கப்பட்டால் உடனடியாக அதைப் பதிவு செய்யவேண்டும், இதனை வெளிப்படுத்த தயக்கம் காட்டக்கூடாது எனப் பொது இடங்களில் பதாகைகள் வைக்கவேண்டும்.பெண்கள் மட்டுமல்லாமல், ஆண்களிடமும் இந்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்படவேண்டும்,” என்றும் கூறுகிறார் அவர்.

குடும்ப வன்முறை குறித்து புகார் அளிக்க:

பெண்களுக்கான உதவிஎண்: 181

தமிழ்நாடு பெண்கள் ஆணையம்: 044-28592750, 044-28551155

Facebook
Facebook
fb-share-icon
Telegram
WhatsApp
TekTamil.com
Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by TekTamil.
நன்றி
Publisher: பிபிசிதமிழ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *