இந்திய கிரிக்கெட் அணியை ஸ்பான்சர் செய்யும் நிறுவனங்கள் திவாலாவது ஏன்?

இந்திய கிரிக்கெட் அணியை ஸ்பான்சர் செய்யும் நிறுவனங்கள் திவாலாவது ஏன்?

ஸ்பான்சர் நிறுவனங்கள் திவால் ஏன்?

பட மூலாதாரம், Getty Images

இந்திய கிரிக்கெட் அணியின் ஸ்பான்சர் நிறுவனமான ‘ட்ரீம் 11’க்கு வருமான வரித்துறை சுமார் 17 ஆயிரம் கோடி ரூபாய் வரி செலுத்துமாறு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

இவ்வளவு பெரிய தொகை வரியைக் கோரி அனுப்பப்பட்டுள்ள இந்த நோட்டீஸை எதிர்த்து ‘ட்ரீம் 11’ நிறுவனம் மும்பை உயர் நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்துள்ளது.

வரி நோட்டீஸ் வந்ததை அடுத்து, ‘ட்ரீம் 11’ நிறுவனத்தின் பங்கு விலைகள் சரிந்தன. ஆன்லைன் சூதாட்டம் மற்றும் கேஸினோ போன்றவற்றுக்கு இந்திய அரசு 28 சதவிகித வரி விதிக்கிறது என்பது நினைவில் கொள்ள வேண்டிய விஷயமாகும்.

‘ட்ரீம் 11’ நிறுவனத்தின் இணை நிறுவனங்கள் சூதாட்ட சேவைகளை நடத்தி வருவதாகவும், அந்த நிறுவனங்கள் தங்கள் மொத்த வருமானத்தில் 28 சதவிகித வரி செலுத்த வேண்டும் என்றும் வருமான வரித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

‘ட்ரீம் 11’ நிறுவனம் இந்திய கிரிக்கெட் அணியின் புதிய லோகோவுடன் கூடிய புதிய ஜெர்சியை சமீபத்தில் வெளியிட்டிருந்தது.

‘ட்ரீம் 11’ மீதான வரி நோட்டீஸுக்குப் பிறகு பல பயனர்கள் சமூக ஊடகங்களில் தங்கள் கருத்துகளை பதிவு செய்தனர். இந்திய கிரிக்கெட் அணிக்கு ஸ்பான்சர் செய்யும் நிறுவனம் சிக்கலில் சிக்குவது இது முதல் முறை அல்ல என்று அவர்கள் எழுதினர்.

ஸ்பான்சர் நிறுவனங்கள் திவால் ஏன்?

பட மூலாதாரம், Getty Images

முந்தைய ஸ்பான்சர்களின் நிலை என்ன?

கடந்த பதினைந்து ஆண்டுகளில் பல முறை, இந்திய கிரிக்கெட் அணிக்கு ஸ்பான்சர் செய்த நிறுவனங்கள் மோசமான காலகட்டத்தை சந்தித்துள்ளன. நீண்ட காலம் கிரிக்கெட் அணிக்கு ஸ்பான்சர் செய்து வந்த ‘சஹாரா இந்தியா’ நிறுவனம் தற்போது திவாலாகிவிட்டது. நிறுவனத்தின் உண்மையான புள்ளிவிவரங்களை மறைத்து நுகர்வோரை ஏமாற்றிய குற்றச்சாட்டின் பேரில் அதன் உரிமையாளர் சிறையில் இருக்க வேண்டியிருந்தது.

அதேபோல், ‘ஸ்டார் ஸ்போர்ட்ஸ்’ சேனலும் இந்திய கிரிக்கெட் அணிக்கு நீண்ட காலம் ஸ்பான்சராக இருந்தது. அப்போதைய கிரிக்கெட் வரலாற்றில் மிகப்பெரிய ஏலத்தொகையை அளித்து கிரிக்கெட் போட்டிகளை ஒளிபரப்பும் உரிமையையும் அது பெற்றது. ஆனால் பின்னர் ஸ்டார் ஸ்போர்ட்ஸின் நிலையும் மோசமானது.

சீன மொபைல் நிறுவனமான ‘ஒப்போ’, இந்திய கிரிக்கெட் அணிக்கு சில காலம் ஸ்பான்சராக இருந்தது. ஆனால் சீனாவுடனான இந்தியாவின் உறவு மோசமடைந்ததை அடுத்து, சீன பொருட்களின் புறக்கணிப்பு இந்தியாவில் தொடங்கியது. இதன் காரணமாக இந்த நிறுவனமும் தற்போது மோசமான நிலையில் உள்ளது.

இதன் போது மற்றுமொரு நிறுவனமான ‘பைஜூஸ்’ கிரிக்கெட் ஸ்பான்சர்ஷிப் மைதானத்தில் மிகுந்த ஆர்வத்துடன் நுழைந்திருந்தது. ஆரம்பத்தில் இந்த நிறுவனம் மிக வேகமாக வளர்ந்து வந்தது மற்றும் பாலிவுட் நடிகர் ஷாருக்கான் அதன் பிராண்ட் அம்பாஸிடராக இருந்தார். இந்த நிறுவனம் தன் உண்மையான மதிப்பை விட பல மடங்கு அதிக சொத்துகளை காட்டியிருப்பது பின்னர் தெரியவந்தது. இந்த நிறுவனமும் இப்போது கடினமான சூழ்நிலையில் உள்ளது.

தற்போது கிரிக்கெட் அணியின் புதிய ஸ்பான்சர் நிறுவனமான ‘ட்ரீம் 11’ நிறுவனத்திற்கு கோடிக்கணக்கான ரூபாய் வரி செலுத்துமாறு கூறும் நோட்டீஸ் வந்துள்ளது. இதற்குப் பிறகு அதன் பங்கு விலையும் சரிந்து வருகிறது.

ஸ்பான்சர் நிறுவனங்கள் திவால் ஏன்?

பட மூலாதாரம், Getty Images

பணம் இல்லாமல் ரிஸ்க் எடுக்கும் நிறுவனங்கள்

இந்தியாவில் கிரிக்கெட் மிகவும் பிரபலமாக உள்ளது. தேசிய அணியின் கிரிக்கெட் வீரர்கள் சாதாரண மக்களிடையே ஹீரோ அந்தஸ்தை பெற்றுள்ளனர்.

இந்தியாவில் உள்ள பெரிய நிறுவனங்கள் இந்த வீரர்களை தங்கள் விளம்பர அம்பாசிடர்களாக மாற்ற பெரும் தொகையை அளிக்கத் தயாராக உள்ளன.

‘‘நாம் எந்த நிறுவனங்களைப் பற்றி பேசுகிறோமோ அவை தங்கள் விளம்பரங்களுக்காக தங்கள் மதிப்பைவிட அதிகமான பணத்தை கிரிக்கெட் வீரர்களுக்கு கொடுக்கின்றன,” என்று விளையாட்டு ஆய்வாளர் ஜஸ்விந்தர் சித்து கூறினார்.

” கிரிக்கெட் வீரரின் தொடர்பில் வந்தவுடன் அந்த நிறுவனம் உடனடியாக பிரபலமாகிவிடுகிறது. மேலும் இது சந்தையில் இருந்து பணத்தை திரட்டுவதை எளிதாக்குகிறது. ஆனால் கிரிக்கெட் வீரர் மற்றும் கிரிக்கெட்டுக்காக செலவழித்த பணம் மிகவும் அதிகம் என்றும் சந்தை மதிப்பு அதனுடன் ஒத்துப் போகவில்லை என்றும் சில காலத்திற்குப் பிறகுதான் தெரியவருகிறது,” என்று அவர் குறிப்பிட்டார்.

“கோவிட் தொற்றுநோய்க்குப் பிறகு ஒட்டுமொத்த சந்தையும் மாறிவிட்டது. பல நிறுவனங்கள் இதைப் புரிந்து கொள்ளத் தவறிவிட்டன. இதனால்தான் கிரிக்கெட் மற்றும் கிரிக்கெட் வீரர்கள் மீது அதிக பணம் முதலீடு செய்யும் நிறுவனங்கள் நஷ்டத்தில் மூழ்குகின்றன,” என்று ஜஸ்விந்தர் சித்து தெரிவித்தார்.

ஸ்பான்சர் நிறுவனங்கள் திவால் ஏன்?

பட மூலாதாரம், Getty Images

கிரிக்கெட் வீரர்களை நிறுவனங்கள் விளம்பர தூதர்களாக்குவது ஏன்?

“தன் பொருட்கள் சாதாரண மக்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்ய வேண்டும் என்று ஒவ்வொரு பிராண்டும் விரும்புகிறது. அவை திரைப்பட நட்சத்திரங்களை தங்கள் விளம்பர தூதர்களாக்கி, விளம்பரங்களுக்கு கிரிக்கெட் வீரர்களை பயன்படுத்துகின்றன,” என்று பிரபல விளையாட்டு பத்திரிகையாளர் பிரதீப் மேகசீன் கூறினார்.

”விராட் கோலி, தோனி, டெண்டுல்கர் போன்றவர்கள் பெரிய கிரிக்கெட் நட்சத்திரங்கள். தங்கள் பொருட்களை இவர்கள் விளம்பரப்படுத்தினால் அதிகமாக விற்பனையாகும் என்று நிறுவனங்கள் கருதுகின்றன. ஆனால் பல நிறுவனங்கள் வலுவாக இல்லை என்பது பின்னர் தெரியவருகிறது,” என்றார் அவர்.

“அவர்கள் ரிஸ்க் எடுக்கின்றனர். கிரிக்கெட் வீரர்கள் மிக அதிகமான தொகையை எதிர்பார்க்கின்றனர். சிறந்த கிரிக்கெட் வீரர்கள் விளம்பர தூதராவதற்கு பல கோடி ரூபாய் கட்டணம் வசூலிக்கிறார்கள். ஆரம்ப முதலீடு மிக அதிகம். பலன்கள் உடனடியாக கிடைப்பதில்லை,” என்று மேகசீன் குறிப்பிட்டார்.

“நிறுவனம் பொருளாதார ரீதியாக வலுவாக இல்லாவிட்டால், அது மூழ்கும் அபாயம் உள்ளது. சாம்சங், எல்ஜி, பேடிஎம் போன்ற பெரிய நிறுவனங்கள் இந்த விஷயத்தில் வெற்றி பெற்றன. கிரிக்கெட் வீரரை விளம்பர தூதராக ஆக்குவதால் மட்டுமே நிறுவனங்கள் மூழ்குவதில்லை. மாறாக தங்களிடம் போதுமான , பணம் இல்லாத சூழலிலும் அவை ரிஸ்க் எடுக்கின்றன. இதன் காரணமாக மூழ்குகின்றன,” என்று அவர் சுட்டிக்காட்டினார்.

பெரிய நிறுவனங்கள் தங்கள் தயாரிப்புகளை விளம்பரப்படுத்த பிரபல இந்திய கிரிக்கெட் வீரர்களோடு கூடவே வெளிநாட்டு வீரர்களையும் பயன்படுத்துகின்றன. இந்த விளம்பரங்கள் பொதுமக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெறுகின்றன. கிரிக்கெட் வீரருடன் இணைந்திருப்பதால் அவர்களின் பிராண்ட் மதிப்பும் அதிகரிக்கிறது.

சில முன்னணி திரைப்பட நட்சத்திரங்கள் மட்டுமே விளம்பரங்களில் கிரிக்கெட் வீரர்களுக்கு இணையாக இருக்க முடிகிறது.

கிரிக்கெட் உலகில் அதிக வருமானம் ஈட்டுபவர்களாக இந்திய வீரர்கள் உள்ளனர். இந்திய கிரிக்கெட் வாரியம் உலகின் பணக்கார கிரிக்கெட் வாரியமாகவும் உள்ளது.

ஸ்பான்சர் நிறுவனங்கள் திவால் ஏன்?

பட மூலாதாரம், Getty Images

கிரிக்கெட்டின் பிரபலம் மற்றும் விளம்பர சந்தை

“இந்தியாவில் கிரிக்கெட் மிகவும் பிரபலமான விளையாட்டு. கிரிக்கெட் வீரர்கள் மற்றும் கிரிக்கெட் மீதான விளம்பரங்களில் பணத்தை முதலீடு செய்வது நிச்சயம் லாபம் தரும்” என்கிறார் தி வீக்’ வார இதழின் விளையாட்டு ஆசிரியர் நீரு பாட்டியா.

நிறுவனங்கள் மூழ்குவதில், கிரிக்கெட்டுக்கும் கிரிக்கெட் வீரர்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று அவர் கூறுகிறார். தனது உள் காரணங்களால் நிறுவனங்கள் நஷ்டமடைகின்றன என்றார் அவர்.

“கிரிக்கெட்டில், விமன்ஸ் பிரீமியர் லீக் இப்போது மிகவும் புதிது. ஆனாலும்கூட அது தொடங்கியபோது அதன் ஸ்பான்சர்ஷிப்புக்கு யாரையும் அணுக வேண்டிய அவசியம் இருக்கவில்லை. ஏராளமான நிறுவனங்கள் பணத்தை முதலீடு செய்ய முன் வந்தன,” என்று அவர் குறிப்பிட்டார்.

“கிரிக்கெட் எவ்வளவு பிரபலமாக இருக்கிறதோ, அதே அளவு அதன் விளம்பரங்களுக்கான கிராக்கியும் உள்ளது. மேலும் இது அதிகரித்தும் வருகிறது” என்கிறார் நீரு பாட்டியா.

Facebook
Facebook
fb-share-icon
Telegram
WhatsApp
TekTamil.com
Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by TekTamil.
நன்றி
Publisher: பிபிசிதமிழ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *