
காற்று மற்றும் சூரிய ஆற்றல் போன்ற புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஆதாரங்களை பயன்படுத்த இன்று பலர் விரும்புகின்றனர்.
“இந்த சிறிய காற்றாலையை நிறுவுவதற்கு ஒரு ஸ்மார்ட்ஃபோனை வாங்குவதற்கான செலவுதான் ஆகும். ஆனால், இதை பயன்படுத்துவதன் மூலம் அடுத்த 20 ஆண்டுகளுக்கு நீங்கள் மின் கட்டணமே செலுத்த தேவையில்லை” என்கிறார் திவ்யராஜ் சிங் சிசோடியா என்ற அந்த இளைஞர்.
“சூரிய ஒளியில் இருந்து மின்சாரத்தை உற்பத்திச் செய்யும் மூன்று கிலோவாட் அலகு கொண்ட ஒரு அமைப்பு, இரண்டு முதல் நான்கு மணி நேரம் வேலை செய்வதன் மூலம், 12 யூனிட் மின்சாரத்தை தான் உற்பத்திச் செய்ய முடியும்.”
“ஆனால் நாங்கள் நிறுவும் காற்றாலை கட்டமைப்பு 24 மணி நேரமும் செயல்படுவதன் மூலம் ஒரு நாளைக்கு 21 யூனிட் வரை மின்சாரத்தை உற்பத்திச் செய்ய இயலும்” என்று கூறுகிறார் திவ்யராஜ் சிங்கின் கூட்டாளியான துங்கர்சிங் சோதா.
இளங்கலை பட்டதாரியான துங்கர்சிங் சோதா மற்றும் திவ்யராஜ் சிங் சிசோடியாவுடன் இணைந்து எவ்வித பயிற்சியும் இன்றி, காற்றாலை மின் உற்பத்திக்கான கட்டமைப்பை நிறுவி வருகின்றனர்.

பட மூலாதாரம், Getty Images
இணைந்த கைகள்
ராஜஸ்தானைச் சேர்ந்த துங்கர்சிங், குஜராத் மாநிலம், ஜுனாகத் மாவட்டத்தைச் சேர்ந்த திவ்யராஜ் சிங் சிசோடியா ஆகிய இரண்டு இளைஞர்கள் இணைந்து ‘Sun Wind’ என்ற பெயரில் ஸ்டார்ட் அப் நிறுவனத்தை தொடங்கி உள்ளனர்.
‘Sun Wind’ இன் இணை நிறுவனரான திவ்யராஜ் சிங், பி.ஏ பட்டப்படிப்பு படித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
மின் கட்டணத்தால் மாதந்தோறும் நெருக்கடியை சந்தித்துவரும் சாமானிய மக்கள், தங்களது இந்த கண்டுபிடிப்பை பயன்படுத்தினால், மின் கட்டணத் தொல்லையில் இருந்து விடுபடலாம் என்று நம்பிக்கை தெரிவிக்கிறார் துங்கர்சிங் சோதா.
தங்களது நிறுவனத்தின் மூலம் மிகக் குறைந்த விலையில் காற்றாலை மின்சாரத்தை உற்பத்தி செய்ய முடியும். இதன் மூலம் ஏ.சி, டி.வி, ஃப்ரிட்ஜ் போன்ற அன்றாடம் வீடுகளில் பயன்படுத்தும் மின்சாதனப் பொருட்களுக்கான மின்சாரத்தை பெற முடியும் என்றும் அவர்கள் கூறுகின்றனர்.
நிலக்கரி, பெட்ரோலிய பொருட்கள் போன்ற புதுப்பிக்க முடியாத ஆற்றல் ஆதாரங்களின் அளவு குறைந்து வருகிறது. இதன் காரணமாக, காற்று மற்றும் சூரிய ஆற்றல் போன்ற புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஆதாரங்களை இன்று பலர் பயன்படுத்த விரும்புகின்றனர்.
இத்தகைய சூழலில் ‘சன் விண்ட்’ போன்ற ஸ்டார்ட்-அப்கள் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஆதாரங்களை மலிவான விலையில் வழங்குவதாக உள்ளன. இந்த தொழில்நுட்பத்தில் சாமானியர்களின் அணுகலை அதிகரிப்பதில் இதுபோன்ற நிறுவனங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன.
இந்த இரண்டு இளைஞர்களால் உருவாக்கப்பட்டுள்ள மலிவான, கையடக்க காற்றாலை உண்மையில் எவ்வாறு வேலை செய்கிறது? அது எப்படி உங்கள் மின் கட்டணத்தை பூஜ்ஜியமாகக் குறைக்க முடியும்? இந்தக் கேள்விகளுக்கான பதில்களைப் பெற, பிபிசி குஜராத்தி, ‘சன் விண்ட்’ ஸ்டார்ட்-அப் நிறுவனர்களுடன் பிரத்யேக உரையாடலை நடத்தியது.
‘ஸ்டார்ட் அப் நிறுவனத்துக்காக வேலையை துறந்தேன்’

தனது இந்த முயற்சிக்காக இதுவரை பத்து லட்ச ரூபாய்க்கு மேல் செலவு செய்துள்ளதாக துங்கர்சிங் சோதா கூறுகிறார்.
‘சன் விண்ட்’ ஸ்டார்ட் அப் நிறுவனத்தின் நிறுவனரான துங்கர்சிங் சோதா, காற்றாலை மின் உற்பத்திக்கான கட்டமைப்பை உருவாக்க வேண்டுமென்ற உந்துதல் தனக்கு எப்படி ஏற்பட்டது என்பது குறித்து பிபிசி குஜராத்தியிடம் விவரித்தார்.
“நான் ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்தவன். அங்கு மின்சாரம், தண்ணீர் பிரச்சனை உள்ளது. அத்துடன் புயல ஏற்பட்டால் பல நாட்கள் மின்சாரம் இருக்காது.
அப்போதுதான் எனது கிராம மக்களுக்கும், விவசாயிகளுக்கும், நகர்ப்புற மக்களுக்கும் இந்தப் பிரச்னையில் உதவும் வகையில் ஏதாவது ஒன்றை உருவாக்க வேண்டும் என்ற எண்ணம் எனக்கு ஏற்பட்டது” என்கிறார் துங்கர் சிங்.
இந்த எண்ணமே காற்றாலையை உருவாக்கி நிறுவுவதற்கான யோசனையை அவருக்கு அளித்தது. தனது யோசனையைச் செயல்படுத்த வேண்டி, தான் பார்த்து வந்த பத்திரிகையாளர் பணியையும் சோதா துறந்திருக்கிறார்.
கடந்த ஒன்றரை ஆண்டுகளாக சாதாரண மக்களுக்கு மலிவு விலையில் காற்றாலைகளை வடிவமைத்து உற்பத்தி செய்தும் வருகிறார்.
தனது இந்த முயற்சிக்காக இதுவரை பத்து லட்ச ரூபாய்க்கு மேல் செலவு செய்துள்ளதாக சோதா கூறுகிறார்.
மேலும் காற்றாலைகளை வடிவமைக்க எந்தப் பயிற்சியும் பெறவில்லை என்கிறார் அவர். சமூக ஊடகங்கள், இணையம் மற்றும் புத்தகங்கள் மூலம் எல்லாவற்றையும் கற்றுக்கொண்டதாகக சோதா குறிப்பிடுகிறார்.
ஒரு விஷயத்தை செய்து காட்ட வேண்டும் என்ற விருப்பமும், அதற்கான முயற்சியும் இருந்தால் அதை செய்து முடிப்பதற்கு எதுவும் தடையில்லை என்பதற்கு உதாரணமாக திகழ்கிறார் துங்கர் சிங் சோதா.
தங்களது காற்றாலைகளின் பலன்களை கணக்கிட்டு கூறும் அவர், “வீடுகளில் பயன்படுத்துவதற்கு ஏற்றாற்போல் காற்றாலைகளை நாங்கள் தயாரித்துள்ளோம். ஒரு கிலோவாட் திறன் கொண்ட காற்றாலையும் இதில் அடங்கும்.
செங்குத்து வடிவிலான காற்றாலை உங்கள் மின் கட்டணத்தை பூஜ்ஜியமாகக் குறைக்கும். மேலும் நீங்கள் காற்றாலையை மிகக் குறைந்த செலவில் நிறுவலாம்” என்றார் அவர்.

‘சன் விண்ட்’ ஸ்டார்ட் அப் நிறுவனத்தின் நிறுவனர்கள் துங்கர் சிங் சோதா (வலது) மற்றும் திவ்யராஜ் சிங் (இடது)
காற்றாலை எப்படி வேலை செய்கிறது?
தாமே தயாரித்த காற்றாலைகளின் பலன்களை இவ்வாறு விளக்குகிறார் துங்கர்சிங் சோதா.
நல்ல காற்றோட்டம் உள்ள அனைத்து இடங்களிலும் தங்களின் காற்றாலையை நிறுவலாம் என்று கூறும் சோதா, வீட்டின் மேற்கூரையிலும் இதனை பொருத்தி மின்சாரத்தை உற்பத்தி செய்ய முடியும் என்கிறார்.
காற்றாலையின் சிறப்பம்சங்களை விளக்கும் அவர், “வீட்டில் நிறுவப்படும் காற்றாலை மூலம் உற்பத்தி செய்யப்படும் அதிகப்படியான மின்சாரத்தை கிரிட்டுக்கும் அனுப்பலாம்” என்கிறார்.
காற்றாலையின் வடிவமைப்பை மேம்படுத்த கடினமாக உழைத்துள்ளாகவும் அவர் கூறுகிறார்.
பெரிய மற்றும் சிறிய அளவிலான காற்றாலைகளின் வடிவமைப்பு குறித்து அவர் கூறும்போது, “வெளியில் இருந்து உதிரிப்பாகங்களை வாங்குவதற்கு பதிலாக எல்லாவற்றையும் நாங்களே வடிவமைத்து உருவாக்கினோம். அந்த வடிவமைப்பை மேம்படுத்த பல மாதங்கள் கடினமாக உழைத்துள்ளோம்,” என்றார்.
காற்றாலை பற்றி அவர் கூறும்போது, “ ஒரு சிறிய காற்றாலையின் விசையாழி (டர்பன்) மணிக்கு 15 கிலோமீட்டர் வேகத்திலான காற்றிலும், பெரிய காற்றாலையின் டர்பன் மணிக்கு 5 கிலோமீட்டர் வேகத்தில் வீசும் காற்றிலும் மின்சாரத்தை உற்பத்தி செய்கிறது,” என தெரிவித்தார்.
காற்றாலையின் மற்ற அம்சங்களைப் பற்றி பேசும்போது, வீடு, பண்ணை அல்லது திறந்தவெளியில் மட்டும் தங்களின் காற்றாலையை பயன்படுத்த வேண்டும் என்ற அவசியம் இல்லை.
மாறாக, எளிதில் மடிக்க முடியும் என்பதால், இதை பயன்படுத்தி எந்த இடத்திலும் மின்சாரத்தை உற்பத்தி செய்யலாம் என்கிறார்.
அதாவது இதை பயன்படுத்தி மின்வசதியை அணுக முடியாத இடங்களில் கூட மொபைல்ஃபோன்களை சார்ஜ் செய்யவும், மின்விசிறிகளை இயக்கவும் முடியும்; சுற்றுலா செல்லும் இடங்களிலும், தொலைதூர பகுதிகளிலும் இதனை கொண்டு மின்சாரம் தயாரிக்க இயலும் என்கிறார் துங்கர் சிங் சோதா.

பட மூலாதாரம், Getty Images
குஜராத் மாநிலம் முழுவதும் சூரிய, காற்று மற்றும் உயிரி ஆற்றல் மூலம் மின்சாரம் உற்பத்திச் செய்யப்படும் மொத்த திறன் 10.41 ஜிகாவாட்.
“மின் கட்டணத்தில் 5000 ரூபாய் குறைக்க முடியும்”
சன் விண்ட் நிறுவனத்தின் இணை நிறுவனர் திவ்யராஜ் சிங் கூறும்போது, “வீட்டு உபயோகத்துக்கான காற்றாலையுடன், பாதுகாப்புத் துறையில் பயனுள்ளதாக இருக்கும் வகையிலான காற்றாலையையும் உருவாக்கியுள்ளோம். 10 -15 நிமிடங்களில் இதை நிறுவி இயக்க முடியும். எளிதில் அணுக முடியாத பகுதிகளில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுவரும் நம் நாட்டின் ராணுவ வீரர்கள், இதன் மூலம் எளிதில் மின்சாரத்தைப் பெற முடியும்” என்கிறார் திவ்யராஜ் சிங்.
வீட்டில் நிறுவப்படும் சிறிய அளவிலான காற்றாலையின் மூலம், மின்கட்டணத்தில் குறைந்தபட்சம் 5000 ரூபாய் குறையலாம் என்று அவர் மதிப்பிடுகிறார்.
‘டைம்ஸ் ஆஃப் இந்தியா’வில் வெளியான ஒரு செய்தியின்படி, 2022 டிசம்பர் 31 ஆம் தேதி நிலவரப்படி, குஜராத் மாநிலத்தில் மொத்தம் 6,835 மெகாவாட் உற்பத்தி திறன் கொண்ட காற்றாலைகளும், 6,325 மெகாவாட் திறன் படைத்த சூரிய மின்சார உற்பத்தி கட்டமைப்புகளும் நிறுவப்பட்டுள்ளன.
மத்திய புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகம் ஜூலை 2023 இல் அறிக்கை ஒன்றை வெளியிட்டது. அதில், புதுப்பிக்கத்தக்க ஆற்றல் திறன் அடிப்படையில், குஜராத் மாநிலம் சமீபத்தில் தமிழ்நாட்டை விஞ்சி முதலிடத்தைப் பிடித்துள்ளது.
குஜராத் மாநிலம் முழுவதும் சூரிய, காற்று மற்றும் உயிரி ஆற்றல் மூலம் மின்சாரம் உற்பத்திச் செய்யப்படும் மொத்த திறன் 10.41 ஜிகாவாட். இது ஒட்டுமொத்த இந்தியாவை ஒப்பிடும்போது 51.3 சதவீதமாகும்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
நன்றி
Publisher: பிபிசிதமிழ்