அணுகுண்டு சென்சாரில் பிக்மி நீல திமிங்கலம் சிக்கியது எப்படி? ஆழ்கடலில் என்ன நடந்தது?

அணுகுண்டு சென்சாரில் பிக்மி நீல திமிங்கலம் சிக்கியது எப்படி? ஆழ்கடலில் என்ன நடந்தது?

நீல திமிIங்கலம்

பட மூலாதாரம், GETTY

படக்குறிப்பு,

பிக்மி நீல திமிங்கலங்களின் இருப்பு கண்டறியப்பட்டுள்ளது இந்த இனத்தின் பாதுகாப்புக்கு ஓர் நற்செய்தியாகும்.

இந்தியப் பெருங்கடலில் உள்ள பிக்மி நீல திமிங்கலங்கள், பல தலைமுறைகளாக மனிதனின் கண்களில் படாமல் தான் இருந்து வந்தன.

இன்னும் சொல்லப் போனால் சமீப காலம் வரை இப்படியொரு வகை திமிங்கலம் இருப்பது கூட மனிதர்களுக்கு தெரியாது. இவற்றில் சில 24 மீட்டர் நீளமும், 90 டன் எடையும் கொண்டவை.

கடந்த 2021 இல் பிக்மி நீல திமிங்கலங்கள் கண்டுபிடிக்கப்பட்ட விதம் இவை குறித்த ஆச்சர்யத்தை ஏற்படுத்தின. அணு ஆயுதங்கள் என்றொரு விஷயம் இல்லாமல் இருந்திருந்தால் இவற்றை கண்டுபிடித்திருக்க முடியாது.

அணுகுண்டுக்கும், திமிங்கலத்துக்கும் என்ன தொடர்பு? பூமியின் சில தொலைதூர இடங்களில் அமைந்துள்ள சென்சார்களின் உலகளாவிய கட்டமைப்பில் இதற்கான பதில் உள்ளது.

ஆஸ்திரியாவின் வியன்னாவில் சர்வதேச கண்காணிப்பு அமைப்பின்(SIV) கட்டுப்பாட்டு அறை ஒன்று உள்ளது.

இங்கு பணியாற்றுபவர்கள், உலகின் எந்த மூலையிலும், அங்கீகரிக்கப்படாத அணுகுண்டு சோதனை நிகழ்த்தப்பட்டால், அதன் ஓசையை இங்கிருந்தபடியே 1990களில் இருந்து கேட்டு வருகின்றனர்.

அதைத் தொடர்ந்து பல ஆண்டுகளாக கடல், நிலம் மற்றும் வளிமண்டலத்தில் எழும் பல்வேறு ஒலிகள் மற்றும் முழக்கங்களை பல தசாப்தங்களாக இந்த கட்டுப்பாட்டு அறை கேட்டு வருகிறது. இது அறிவியலில் ஓர் ஆச்சர்யமான விஷயமாக பார்க்கப்படுகிறது.

நீல திமிங்கலம் – அணுகுண்டு என்ன தொடர்பு?

நீல திமிIங்கலம்

பட மூலாதாரம், CTBTO

படக்குறிப்பு,

சர்வதேச கண்காணிப்பு அமைப்பின் பல சென்சார்கள் அண்டார்டிகா போன்ற தொலைதூர இடங்களில் அமைந்துள்ளன.

இதனிடையே, நீல திமிங்கலங்கள் கண்டுபிடிக்கப்பட்ட வரலாறு 1940களில் மனிதன் அணுகுண்டை கண்டுபிடித்த நாளில் இருந்து தொடங்குகிறது.

இரண்டாம் உலகப் போரின் ஜப்பான் மீது அமெரிக்கா அணுகுண்டை வீசியது, உலக நாடுகள் மத்தியில் இதுகுறித்த அச்சத்தை ஏற்படுத்தியது. அதன் விளைவாக, உலக நாடுகள் சக்தி வாய்ந்த அணு ஆயுதங்களை சொந்தமாக உருவாக்கவும், அவற்றை சோதிக்கவும் விரைந்தன.

இவ்வாறு பல்வேறு நாடுகள் போட்டிபோடாத குறையாக அணு ஆயுத சோதனைகளை நடத்தி வந்தன. இந்த நிலையில் இந்த விஷயத்தில் வெளிப்படைத்தன்மை தேவை என்பதை 50 ஆண்டுகளுக்கு பிறகு, அதாவது 1990களில் பல நாடுகள் உணர்ந்தன.

எந்தவொரு நாடு அங்கீகரிப்படாத முறையில் அணு ஆயுத சோதனைகளை நடத்துகின்றதா என்பதை அறிய உலக நாடுகளுக்கு கண்காணிப்பு வழிமுறை தேவைப்பட்டது.

இதையடுத்து, பிரிட்டன் மற்றும் பல மேற்கத்திய ஐரோப்பிய அணுசக்தி வல்லமை படைத்த பல நாடுகள், விரிவான அணு ஆயுத சோதனை தடை ஒப்பந்தத்தில் (CTBT) கையெழுத்திட்டன. ஆனால் இந்தியா, சீனா மற்றும் அமெரிக்கா போன்ற நாடுகள் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திடவில்லை.

இதன் காரணமாக ஒப்பந்தம் நடைமுறைக்கு வரவில்லை. அதையடுத்து, அணுஆயுத சோதனைக்கு எதிரான உலகளாவிய விதிமுறை வகுக்கப்பட்டது.

இதில் முக்கியமாக, உலகின் எந்த மூலையில் அணு ஆயுத சோதனை நடத்தப்பட்டாலும், அதை கண்டறிவதற்கான தொழில்நுட்ப கட்டமைப்பு உருவாக்கப்பட்டது.

அணுகுண்டு சோதனையை கண்டறியும் சென்சார்கள்

நீல திமிIங்கலம்

பட மூலாதாரம், CTBTO

படக்குறிப்பு,

பசிபிக் பகுதியில் உள்ள அமெரிக்கப் பகுதியான வேக் தீவில் உள்ள ஒரு கேபிள், நீருக்கடியில் ஹைட்ரோஃபோன்களுடன் இணைக்கப்பட்டுள்ளது.

இந்த தொழில்நுட்ப கட்டமைப்பில், உலகம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் 300க்கும் மேற்பட்ட சென்சார்கள் நிறுவப்பட்டுள்ளன. இவை அணு ஆயுதங்கள் சோதனைகளின்போது உண்டாகும் சப்தம், அதிர்வலைகள் மற்றும் கதிரியக்கங்களை கண்டறியும் திறன் படைத்தவை.

CTBT ஒப்பந்தத்தின்படி நிறுவப்பட்டுள்ள இந்த கண்காணிப்பு அமைப்பின் (எஸ்ஐவி) தலைமையகம் வியன்னாவில் அமைந்துள்ளது.

இந்த 300 சென்சார்கள் கட்டமைப்பில், 120க்கும் மேற்பட்ட நில அதிர்வு பதிவு நிலையங்கள், பெருங்கடல்களில் உள்ள 11 ஹைட்ரோகோஷ்டிக் ஒலிவாங்கிகள், செவிக்கு புலப்படாத மிகக் குறைவான அதிர்வெண் இரைச்சலையும் பதிவு செய்யும் 60 ‘இன்ஃப்ராசவுண்ட்’ நிலையங்கள் மற்றும் கதிரியக்கத் துகள்கள் அல்லது வாயுக்களை கண்டறியும் 80 டிடெக்டர்கள் அடங்கும்.

மனிதர்களுக்கு தொந்தரவா?

நீல திமிIங்கலம்

பட மூலாதாரம், GETTY

படக்குறிப்பு,

2020 இல் பெய்ரூட் துறைமுகத்தில் ஏற்பட்ட வெடிப்பு, அகச்சிவப்பு மற்றும் நில அதிர்வு அலைகளை உருவாக்கியது.

இவற்றில் பெரும்பாலான சென்சார்கள் மனிதர்கள் மற்றும் பிற உயிரினங்களுக்கு தொந்தரவு இல்லாத இடங்களில் நிறுவப்பட்டுள்ளன.

உதாரணமாக, அமெரிக்காவின் பசிபிக் பகுதியில் உள்ள வேக் தீவில் ஒரு கண்காணிப்பு நிலையம் உள்ளது. இது மிகவும் தனிமைப்படுத்தப்பட்ட இடங்களில் ஒன்றாகும்.

இருப்பினும், டெக்சாஸில் உள்ள லஜிதாஸ் நகரத்தில் (சான் அன்டோனியோவிற்கு மேற்கே 650 கி.மீ.) நில அதிர்வு பதிவு மையம் நிறுவப்பட்டுள்ளது. இதேபோன்று மக்கள் வசிக்கும் பகுதியான கலிஃபோர்னியாவில் உள்ள சாக்ரமெண்டோவுக்கு அருகே கதிரியக்கத்தை கண்டறியும் நிலையம் அமைக்கப்பட்டுள்ளது.

உலகை கண்காணிக்கும் கட்டுப்பாட்டு அறை

உலகம் முழுவதும் பரவலாக அமைக்கப்பட்டுள்ள பலவகையான சென்சார்கள் மூலம், பூமியில் எங்கு அணுகுண்டு சோதனை நிகழ்த்தப்பட்டாலும், வியன்னா கட்டுப்பாட்டு அறையில் உள்ள ஆபரேட்டர்கள் அதைப் பற்றி அறிந்து கொள்ள முடியும்.

ஆஸ்திரியாவில் உள்ள OCTBT இன் சர்வதேச கண்காணிப்பு அமைப்பின் ( எஸ்ஐவி) ஸ்பானிய மொழியின் இயக்குனர் Xyoli Pérez Campos இவ்வாறு கூறுகிறார்.

“பூமியின் எந்த பகுதியில் அணு ஆயுத சோதனைநடத்தப்பட்டாலும் அதை கண்டுபிடித்து விடுவதற்கான தொழில்நுட்பங்கள் எங்களிடம் உள்ளன” என்று அவர் கூறுகிறார்.

“நிலத்தடியில் அணுகுண்டு சோதனை நடத்தப்பட்டால் அதை பதிவு செய்யும் நில அதிர்வு தொழில்நுட்பம் எங்களிடம் உள்ளது. நீருக்கடியில் அணுகுண்டு சோதனைகள் நடந்தால், அதை கண்டறிவதற்கு ஹைட்ரோஅகோஸ்டிக் நிலையங்கள் எங்களிடம் உள்ளன.

வளிமண்டலத்தில் அணு ஆயுத சோதனைகள் நிகழ்த்தப்பட்டால், அவற்றை மதிப்பிட இன்ஃப்ராசவுண்ட் மற்றும் ரேடியோநியூக்லைடு நிலையங்கள் எங்கள் வசம் இருக்கின்றன” என்கிறார் அவர்.

இவற்றின் மூலம் ஓரிடத்தில் இருந்து புகை வந்தால், அது துப்பாக்கி குண்டுகள் வெடித்ததால் வந்ததா அல்லது அணுகுண்டு வெடிப்பால் ஏற்பட்டதா என்பதை வேறுபடுத்தி அறிய முடியும் என்று Xyoli Pérez Campos கூறுகிறார்.

கடந்த 2000 மற்றும் 2010 ஆம் ஆண்டுகளில் வட கொரியா அணுஆயுத சோதனைகளை நடத்தியது. அதன் விளைவாக ஏற்பட்ட நில அதிர்வுகள், எஸ்.ஐ.வி. அமைப்பு நிறுவியுள்ள சென்சார் கருவிகளில் பதிவானது. மேலும் வளிமண்டலத்தில் உள்ள கதிரியக்க ஐசோடோப்புகளின் பகுப்பாய்வு, வடகொரியாவின் அணு ஆயுத சோதனையை உறுதிப்படுத்தியது.

அணுகுண்டு அல்லாத வெடிப்புகளையும் இந்த நவீன கண்காணிப்பு கட்டமைப்புகள் கண்டறிந்துள்ளன. 2020 இல் பெய்ரூட் துறைமுகத்தில் ஏற்பட்ட மிகப்பெரிய வெடிப்பு, ஜனவரி 2022 இல் ஹங்கா டோங்கா ஹுங்கா ஹாபாய் எரிமலை வெடிப்பு போன்றவையும் இந்த சென்சார்கள் மூலம் கண்டறியப்பட்டுள்ளன.

எதிர்பாராத கண்டுபிடிப்புகள்

நீல திமிIங்கலம்

பட மூலாதாரம், GETTY

படக்குறிப்பு,

மாலத்தீவின் தெற்கில் உள்ள சாகோஸ் தீவுக்கூட்டத்தில் உள்ள டியாகோ கார்சியா அடோல் அருகே திமிங்கலப் பாடல் முதலில் கேட்கப்பட்டது.

அணு ஆயுத சோதனைக்கான எஸ்ஐவி அமைப்பு, கடந்த தசாப்தங்களில் அணுகுண்டு சோதனைகளை போல, கண்டறியப்படாத நுணுக்கமான பல விஷயங்களை கண்டறிந்துள்ளது. உதாரணமாக திமிங்கலம் பாடுவது போன்ற வியப்பான விஷயங்களும் இதில் அடங்கும்.

எஸ்ஐவி அமைப்பின் சார்பில் வியன்னாவில் கடந்த ஜூன் மாதம் மாநாடு நடைபெற்றது. இதில் பங்கேற்ற நூற்றுக்கணக்கான விஞ்ஞானிகள் தங்களது கண்டுபிடிப்புகள் குறித்த அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர்.

கப்பல் போக்குவரத்தின் விளைவாக ஏற்படும் இரைச்சலை ஹைட்ரோஅகோஸ்டிக் சென்சார்கள் எவ்வாறு கண்காணிக்க முடியும் என்பதை ஜெர்மன் ஆராய்ச்சியாளர்கள் விளக்கினர்.

நீருக்கடியில் எரிமலையின் செயல்பாட்டை ஆய்வு செய்ய எஸ்ஐவியின் கட்டமைப்பை பயன்படுத்துவது பற்றிய தங்களின் யோசனையை மாநாட்டில் முன்வைத்தது ஜப்பானிய ஆராய்ச்சியாளர்கள் குழு.

அண்டார்டிகாவில் பனிப்பாறை உடைந்ததை கண்காணிக்க இந்த கட்டமைப்பை பயன்படுத்திய முந்தைய ஆராய்ச்சியின் அடிப்படையில், பனிச்சரிவை தொலைதூரத்தில் இருந்து கண்டறியும் முயற்சிகளை மற்றொரு ஆராய்ச்சியாளர்கள் குழு விவரித்தது.

கடந்த 2020 செப்டம்பர் 22 இல், பூமியை நோக்கி வந்த விண்கல்லானது வளிமண்டலத்தைத் தாக்கியபோது உருவான அதிர்வலைகளை எஸ்ஐவியின் சென்சார்கள் பதிவு செய்தன. இதனை அல்புகெர்கியில் (நியூ மெக்சிகோ) உள்ள சாண்டியா தேசிய ஆய்வகத்தைச் சேர்ந்த இயற்பியலாளர் எலிசபெத் சில்பர் இம்மாநாட்டில் விளக்கினார்.

திமிங்கலப் பாடல்கள்

நீல திமிIங்கலம்

பட மூலாதாரம், ALAMY

படக்குறிப்பு,

20 ஆம் நூற்றாண்டில், நீல திமிங்கலங்கள் வேட்டையாடப்பட்டு அழிந்துபோயின.

பிக்மி நீல திமிங்கலமானது, நீல திமிங்கலத்தின் வெப்பமண்டல கிளையினமாகும். ஆஸ்திரேலியாவில் ஆராய்ச்சியாளர்கள் எஸ்ஐவி ஹைட்ரோகோஸ்டிக் கட்டமைப்புப் பயன்படுத்தி ஆழ்கடலில் ஒலிகளை சற்று நெருக்கமாகக் கேட்க முடிவு செய்த போது பிக்மி திமிங்கலங்கள் கண்டுபிடிக்கப்பட்டன.

கடந்த 2021 ஆம் ஆண்டில், சிட்னியில் உள்ள நியூ சவுத் வேல்ஸ் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த இம்மானுவேல் லெராய் மற்றும் அவரது சகாக்கள் மத்திய இந்தியப் பெருங்கடலில் உள்ள பல திமிங்கலங்களின் பாடல்களை ஆய்வு செய்தனர்.

அதற்கு சில ஆண்டுகளுக்கு முன்பு. “சாகோஸ் பாடல்” அல்லது “டியாகோ கார்சியா டவுன்ஸ்வீப்” என அறியப்பட்ட ஒரு புதிய பாடல் ஆராய்ச்சியாளர்களின் கவனத்தை ஈர்த்தது. சாகோஸ் தீவுக்கூட்டத்தில் உள்ள டியாகோ கார்சியா என்ற இடத்தில் அந்த பாடல் முதன் முதலாக கேட்கப்பட்டதால் அந்த இடத்தின் பெயராலேயே அப்பாடல் அழைக்கப்பட்டது.

அந்த நேரத்தில் இந்தியப் பெருங்கடலில் அறியப்பட்ட நீல திமிங்கலங்களின் ஐந்து இனங்கள், ஓமுரா திமிங்கலங்களுடன் அங்கு வாழ்ந்து வந்தன. ஆனால் சாகோஸ் பாடல் நீல திமிங்கலத்தின் எந்த இனத்தைச் சேர்ந்தது என்பது தெளிவாக தெரியவில்லை என்றனர் விஞ்ஞானிகள்.

திமிங்கலங்களின் ஒவ்வொரு இனத்துக்கும் தனிப் பயனாக்கப்பட்ட அழைப்புகள் இருப்பதை விஞ்ஞானிகள் அறிந்திருந்தாலும், சாகோஸ் பாடல் ஓசை எந்த வகைக்கு சொந்தமானது என்பதை அவர்களால் அறுதியிட்டு கூற முடியவில்லை.

பிக்மி இன திமிங்கலப் பாடல் ஓசை

இந்த நிலையில் தான், லெராய் மற்றும் அவரது குழுவினர், எஸ்ஐவி அமைப்பின் தொழில்நுட்ப கட்டமைப்பு மூலம், சாகோஸ் பாடல் ஓசைக்கு சொந்தக்காரர் யார் என்பது குறித்து கிட்டத்தட்ட இரண்டு தசாப்தங்களாக ஆய்வு மேற்கொண்டனர்.

இலங்கையிலிருந்து மேற்கு ஆஸ்திரேலியா வரை கடலின் வெவ்வேறு இடங்களில் பொருத்தப்பட்டுள்ள எஸ்ஐவி சென்சார்களின் மூலம் இந்த ஆய்வை அவர்கள் மேற்கொண்டனர்.

சாகோஸ் பாடல் முற்றிலும் புதிய பிக்மி நீல திமிங்கல இனத்தைச் சேர்ந்ததாக இருக்க வேண்டும் என்பது அவர்களது பகுப்பாய்வின் முடிவாக இருந்தது.

பிக்மி நீல திமிங்கலங்கள் மிகவும் அரிதாக இருப்பதால், லெராய் குழுவினரின் இந்த புதிய கண்டுபிடிப்பு விலங்கின ஆர்வலர்களுக்கு ஓர் நற்செய்தியாக உள்ளது.

கடந்த 20 ஆம் நூற்றாண்டில் நீலத் திமிங்கலங்கள் வேட்டையாடப்பட்டு அழிந்துபோகும் நிலைக்குத் தள்ளப்பட்டன. 1920களில் சுமார் 239,000 ஆக இருந்த நீல திமிங்கலங்கள் 1973 இல் 360 ஆகக் குறைந்தன.

எஸ்ஐவி அமைப்பின் பல்வேறு விதமான சென்சார்களை கட்டியெழுப்பியவர்கள், அவற்றின் மூலம் உலகம் கொஞ்சம் பாதுகாப்பானதாக மாறும் என்ற நம்பிக்கையை விதைத்தனர்.

“அறிவார்ந்த இந்த மனித சமூகம், அணுகுண்டு சோதனை மனித குலத்திற்கு ஆபத்தானது என்று முடிவு செய்தது. அதை தடுத்து நிறுத்த வேண்டும் என்று ஒரு ஒப்பந்தத்தை ஏற்படுத்தியது மட்டுமில்லாமல் அதைக் கண்காணிக்கும் தொழில்நுட்பங்களையும் அவர்கள் உருவாக்கி உள்ளனர். மனித குலத்துக்கு செய்யப்பட்டுள்ள சேவையான இந்த ஏற்பாட்டை கண்டு மிகவும் வியப்படைகிறேன்” என்கிறார் பெரெஸ் காம்போஸ்.

ஆனால், தொலைநோக்கு பார்வையுடன் நிறுவப்பட்ட எஸ்ஐவி அமைப்பின் சென்சார்களின் பயன்பாடுகள் இன்று முற்றிலும் மாறிவிட்டன.

தற்போது, ​​உலகெங்கிலும் உள்ள தொலைதூர இடங்களில் மனித குலத்தையும் இயற்கையையும் சென்சார்கள் கண்காணித்து வருகின்றன.

இந்த கண்காணிப்பு வளையத்தில் ஒரு தனித்துவமான பாடலைப் பாடும் திமிங்கலங்களின் குடும்பமும் அடங்கும். இந்த நீல திமிங்கலத்தை நாம் பார்க்க முடியாமல் போகலாம். ஆனால் அதன் பாடலை நம்மால் தற்போது கேட்க முடியும்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

Facebook
Facebook
fb-share-icon
Telegram
WhatsApp
TekTamil.com
Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by TekTamil.
நன்றி
Publisher: பிபிசிதமிழ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *