
பட மூலாதாரம், ANI
வட கிழக்கு மாநிலமான மிசோரமில் நவம்பர் 7ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. பாஜக, காங்கிரஸ் போன்ற தேசிய கட்சிகளைத் தவிர மிசோ தேசிய முன்னணி, ஜோரம் மக்கள் இயக்கம் போன்ற உள்ளூர் கட்சிகளும் தேர்தல் களத்தில் உள்ளன.
பாஜக ஆளும் மணிப்பூரில் நடந்த வன்முறைக்குப் பிறகு, ஆயிரக்கணக்கான மக்கள் மிசோரமுக்கு இடம்பெயர்ந்துள்ளனர். அதன் விளைவுகள் தற்போது அங்கேயும் தெரிகிறது.
அடுத்த சில நாட்களில் பிரதமர் நரேந்திர மோதியும் அங்கு தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட வாய்ப்புள்ளது.
பிரதமர் நரேந்திர மோதி மிசோரம் வந்து தேர்தல் பேரணியில் பேசினால், அவருடன் மேடையை பகிர்ந்து கொள்ள மாட்டேன் என்று மிசோரம் முதல்வரும், மிசோ தேசிய முன்னணி தலைவருமான ஜோரம்தங்கா தெரிவித்துள்ளார்.
பிபிசியிடம் பேசிய ஜோரம்தங்கா, மத்திய அரசு விரும்பினால், மணிப்பூரில் அமைதியை நிலைநாட்டுவது கடினம் அல்ல.
மிசோ தேசிய முன்னணி வட கிழக்கு ஜனநாயகக் கூட்டணியின் ஒரு பகுதியாகவும், மத்தியில் தேசிய ஜனநாயக கூட்டணியிலும் உள்ளது.
மிசோரமில் தேர்தல் பிரசாரத்தின் போது பிரதமர் நரேந்திர மோதியுடன் மேடையில் பங்கேற்பது சாத்தியமா என்ற கேள்விக்கு, பிரதமருடன் மேடைக்கு வர மாட்டேன் என்று ஜோரம்தங்கா தெளிவாகக் கூறியுள்ளார்.
முதல்வர் ஜோரம்தங்கா, “பிரதமர் பாஜகவைச் சேர்ந்தவர் என்பதாலும், மிசோரமில் உள்ள மக்கள் அனைவரும் கிறிஸ்தவர்கள் என்பதாலும் அவருடன் ஒரே மேடையைப் பகிர்ந்து கொள்ள மாட்டேன்.
மணிப்பூரில் உள்ள நூற்றுக்கணக்கான தேவாலயங்களுக்கு மெய்தேய் மக்கள் தீ வைத்தனர். இங்குள்ள அனைவரும் இப்படியான யோசனைக்கு எதிரானவர்கள்.
இப்படிப்பட்ட நேரத்தில் எனது கட்சிக்கு பாஜக மீது அனுதாபம் இருந்தால், அது மிகவும் கேடு விளைவிக்கும். அப்படிப்பட்ட சூழ்நிலையில் பிரதமர் இங்கு வந்தால் மேடையில் தனியாக இருப்பது நல்லது, தனி மேடையில் இருந்தால்தான் எனக்கும் நல்லது. இது எங்கள் இருவருக்குமே சிறப்பாக அமையும்” என்றார்.
ஜோரம்தங்கா மிசோரமில் பாஜகவில் இருந்து விலகி இருப்பது பற்றி பேசினாலும், மத்திய அளவில் அவரது கட்சி தேசிய ஜனநாயக கூட்டணியுடன் உள்ளது. இந்த கூட்டணி பாஜக தலைமையில் உள்ளது.
மத்தியிலும் பாஜகவில் இருந்து விலகி இருப்பாரா என்ற கேள்விக்கு ஜோரம்தங்கா, “நாங்கள் மத்தியில் பாஜக கூட்டணியில் இருக்கிறோம். மத்திய அளவில் இரண்டு கூட்டணிகள் மட்டுமே உள்ளன.
ஒன்று பாஜக.வின் தேசிய ஜனநாயக கூட்டணி, மற்றொன்று காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி. நாங்கள் எப்போதும் 100 சதவீதம் காங்கிரசுக்கு எதிரானவர்கள். கடந்த முப்பது நாற்பது ஆண்டுகளாக நாங்கள் காங்கிரஸுக்கு எதிராக இருந்து வருகிறோம், எனவே நாங்கள் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணியில் இருக்க முடியாது. அதனால்தான் நாங்கள் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருக்கிறோம்.” என்றார்.

பட மூலாதாரம், DILIP SHARMA
அகதிகளின் நிலை என்ன?
மிசோரமில் மணிப்பூர் மற்றும் மியான்மரைச் சேர்ந்த ஏராளமான அகதிகள் உள்ளனர். இது தனக்கும் தனது கட்சிக்கும் நன்மை பயக்கும் என்று முதல்வர் ஜோரம்தங்கா நம்புகிறார்.
அகதிகள் குறித்த கேள்விக்கு, “தற்போதைய தேர்தலில் இது எனக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. இந்திய அரசு என்ன செய்து வருகிறதோ அதைத்தான் நாங்கள் செய்கிறோம்.
1971 இல் நான் வங்கதேசத்தில் இருந்தேன். அப்போது அது கிழக்கு பாகிஸ்தான். அந்த காலகட்டத்தில், முஸ்லிம் நாடான கிழக்கு பாகிஸ்தானில் இருந்து லட்சக்கணக்கான மக்கள் இந்தியாவுக்குள் நுழைந்தார்கள்.
அவர்களுக்கு ஆயுதம் கொடுத்து, பயிற்சி அளித்து, சுதந்திரம் அடைய உதவினீர்கள். நாங்கள் உங்கள் அடிச்சுவடுகளை மட்டுமே பின்பற்றுகிறோம். மியான்மரில் இருந்து எங்கள் சகோதரர்கள் இங்கு வருகிறார்கள், நாங்கள் அவர்களுக்கு ஆயுதங்கள் கொடுக்கவில்லை, உணவு மற்றும் தங்குமிடம் மட்டும் கொடுக்கிறோம். இது நமது மனிதப் பொறுப்பு,” என்றார் ஜோரம்தங்கா.
எதிர்காலத்தில் மியான்மரில் இருந்து மேலும் பல அகதிகளை அவர் ஏற்றுக்கொள்வாரா என்று கேட்டபோது, “பச்சாதாபம் காட்டுவது மனிதனின் பொறுப்பு. இங்கிருந்தோ, அங்கிருந்து யாரேனும் எங்கள் இடத்திற்கு வந்தால் அவர்களை வலுக்கட்டாயமாக திருப்பி அனுப்ப முடியாது.
வங்கதேசத்தில் இருந்து வந்தவர்கள் மிசோக்கள், மணிப்பூரில் இருந்து வருபவர்கள் மிசோக்கள், மியான்மரில் இருந்து தப்பி வந்தவர்கள் மிசோக்கள். அவர்கள் நமது சகோதர சகோதரிகள். அவர்கள் ஒரே மொழி பேசுகிறார்கள். வங்கதேசத்தை சேர்ந்தவர்கள் இங்கு செல்வாக்கு பெற்றுள்ளனர். ஏனென்றால் அவர்கள் அனைவரும் மிசோக்கள், மணிப்பூரைச் சேர்ந்தவர்களும் செல்வாக்கு பெற்றுள்ளனர், ஏனென்றால் அவர்களும் மிசோக்கள். மியான்மரில் உள்ளவர்களும் மிசோக்கள், என பதிலளித்தார் ஜோரம்தங்கா
‘மணிப்பூர் பிரச்னைக்கு தீர்வு மிகவும் எளிதானது’
மணிப்பூரில் நடந்து வரும் வன்முறைகளுக்கு மத்தியில், அங்கு வசிக்கும் மிசோ வம்சாவளியைச் சேர்ந்த மக்கள் மிசோரமுக்கு குடிபெயர்ந்துள்ளனர்.
இந்த மக்கள் எப்போதாவது திரும்ப முடியுமா என்ற கேள்விக்கு பதிலளித்த ஜோரம்தங்கா, “இது இந்திய அரசாங்கத்தைப் பொறுத்தது. அவர்கள் தங்கள் சொந்த இடங்களுக்குச் செல்ல காத்திருக்கிறார்கள். தங்கள் சொந்த இடத்திற்கு, தங்கள் நிலத்திற்குச் செல்லக்கூடிய நேரத்திற்காக அவர்கள் காத்திருக்கிறார்கள்.
இந்திய அரசும் மத்திய உள்துறை அமைச்சகமும் உண்மையிலேயே மணிப்பூர் பிரச்சனையை தீர்க்க விரும்பினால் அது மிகவும் எளிது. மணிப்பூரில் தெளிவான பிளவுகள் உள்ளன. அங்குள்ள மக்கள் இப்போது ஒத்திருக்க மாட்டார்கள். மத்திய அரசு விரும்பினால் இந்தப் பிரிவினையை முடிவுக்குக் கொண்டு வரலாம் என்று நினைக்கிறேன்” என்றார்.
‘மணிப்பூர் வன்முறை’ மிசோரம் தேர்தலில் தாக்கங்களை ஏற்படுத்தும். இங்குள்ள கிறிஸ்தவ பெரும்பான்மை மக்கள் மணிப்பூரில் உள்ள சூழ்நிலையால் பாதிக்கப்பட்டுள்ளனர். எதிர்காலத்தில் இந்த நெருக்கடிக்கு ஏதாவது தீர்வு கிடைக்குமா? என ஜோரம்தங்காவிடம் கேட்கப்பட்டது.
அதற்கு பதிலளித்த அவர், “மணிப்பூர் பிரச்னை எப்போது தீர்க்கப்படும் என்று யூகிப்பது கடினம், இது மத்திய அரசின் வேலை. முயற்சி செய்வதன் மூலம் இதை தீர்க்க முடியும் என்று நான் நினைக்கிறேன்.
மிசோ மக்கள் ஒற்றுமையாக இருப்பது குறித்த கேள்விக்கு, “பிரிட்டிஷ் ஆட்சியின் போது நாங்கள் ஒற்றுமையாக இருந்தோம், பிறகு பிரிட்டன் எங்களை பல பகுதிகளாக பிரித்தது. இந்தியா, கிழக்கு பாகிஸ்தான், பர்மா என்று பிரிந்தோம். மியான்மரில் அமைதி நிலவும் என்று நம்புகிறேன். நாங்கள் மியான்மருடன் சமாதானத்தை நெருங்கி வந்தோம்.
பின்னர் அங்கு தேர்தல் நடத்தப்பட்டு ஆங் சான் சூச்சி ஆட்சிக்கு வந்தார். ஐந்து வருடங்கள் அமைதியாக இருந்ததால் தான் மியான்மருடன் சமாதானம் அடைய முடியவில்லை. இப்போது மீண்டும் அமைதி ஏற்படும் என்ற நம்பிக்கை எங்களுக்கு ஏற்பட்டுள்ளது.
மியான்மரில் செயல்படும் அனைத்து குழுக்களும் அமைதியில் ஆர்வமாக உள்ளன. மியான்மர் ராணுவ அரசும் அமைதி முயற்சியை செயல்படுத்த ஆர்வமாக உள்ளது,” என்றார்.
நன்றி
Publisher: பிபிசிதமிழ்