கிருஷ்ணகிரி: கோவில் பணியில் தொடங்கிய சண்டை சாதி மோதலாக மாறியது எப்படி?

கிருஷ்ணகிரி: கோவில் பணியில் தொடங்கிய சண்டை சாதி மோதலாக மாறியது எப்படி?

கோவில் கட்டுமானப் பணியில் தொடங்கிய வாக்குவாதம் சாதி மோதலாக மாறியது எப்படி?

பட மூலாதாரம், Screengrab

படக்குறிப்பு,

மோதலின்போது குடிசைக்குத் தீ வைக்கப்பட்ட வீடியோ இணையத்தில் பகிரப்பட்டது.

கடந்த சில நாட்களுக்கு முன்பு சோக்காடி கிராமத்தில் நடந்த சில விரும்பத்தகாத நிகழ்வுகளையடுத்து அந்த கிராமம் செய்திகளில் இடம்பெற்றது.

கோவில் கட்டுமானப் பணியின்போது தொடங்கிய ஒரு பிரச்னை, பட்டியலின மக்களின் வீடுகளின் முன்பு தீ வைத்து எரிக்கும் அளவுக்குப் பெரிய மோதலாக மாறியது.

இருதரப்புக்கு இடையே எழுந்த மோதல் தொடர்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டு, இதுவரை 14 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்த சோக்காடி கிராமத்தில் என்ன நடந்தது?

தூசியால் தொடங்கிய பிரச்னை

கிருஷ்ணகிரி மாவட்டம் கே.ஆர்.பி அணை, அருகே உள்ள சோக்காடி கிராமத்தில் புதிதாக மாரியம்மன் கோவில் ஒன்று கட்டப்பட்டு வருகிறது.

கோவில் கட்டுமானப் பணிகளின் ஒரு பகுதியாக அங்கு வைத்து, கிரானைட் கற்களுக்கு பாலிஷ் போடும் பணிகள் நடைபெற்று வந்தன.

கல் பாலிஷ் போடும்போது எழும் தூசி தங்கள் வீடுகளுக்கு வருவதாகவும், இதனால் சிலருக்கு பாதிப்பு ஏற்படுதாகவும் அந்த கிராமத்தைச் சேர்ந்த அன்பரசு என்பவர் அக்டோபர் 29ஆம் தேதியன்று பாலிஷ் போடும் பணியிலிருந்த நபர்களிடம் கூறியுள்ளார்.

கிருஷ்ணகிரி சாதிய மோதல்
படக்குறிப்பு,

மாரியம்மன் கோவில் கட்டுமானப் பணிக்காக கிரானைட் கற்களுக்கு பாலிஷ் போடும்போது எழும் தூசி இருதரப்பும் மோதல் உருவாக தொடக்கமாக அமைந்தது.

இதையடுத்து கட்டுமானப் பணிகள் நிறுத்தப்பட்டுள்ளன. அதன் பிறகு அந்த ஊர்த் தலைவரும், கிருஷ்ணகிரி மேற்கு ஒன்றிய அதிமுக செயலாளருமான சோக்காடி ராஜன் இதுகுறித்து அன்பரசுவிடம் பேசியுள்ளார்.

இது முற்றி, இருவரிடையே கைகலப்பு ஏற்பட்டுள்ளது. அதையடுத்து, இருவரின் தரப்பிலிருந்தும், சிலர் திரண்டு ஒருவர் மீது ஒருவர் கற்களை வீசி தாக்கியுள்ளனர். மேலும், பட்டியலினத்தைச் சேர்ந்த பெண் ஒருவரின் வீட்டுக்கும் தீ வைக்கப்பட்டது.

இந்தப் பிரச்னை குறித்த முழு விவரத்தை அறிந்துகொள்வதற்காக பிபிசி தமிழ், அந்த ஊருக்குச் சென்றபோது, ஊர் முழுவதும் மிக அமைதியாகக் காணப்பட்டது. ஒரு சில பெண்கள் மட்டும், கிராம நிர்வாக அலுவலகத்திற்கும், தங்கள் வீட்டுக்கும் நடந்து கொண்டிருந்தனர்.

கிராமத்திற்கு நுழையும் சாலைகளில் பாதுகாப்புப் பணியில் காவலர்கள் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். மேலும் கிராமத்தின் பல இடங்களில் தடுப்புகள் அமைக்கப்பட்டிருந்தன.

குடிசைகளுக்கு தீ வைப்பு

இந்தப் பிரச்னை தொடர்பாக சோக்காடி கிராமத்தைச் சேர்ந்த ராஜா என்பவரிடம் பேசினோம்.

“இங்கு மொத்தம் 400 முதல் 450 குடும்பங்கள் இருக்கின்றன. அதில், 130 பட்டியலின குடும்பங்களும், மாற்று சமூகத்தைச் சேர்ந்த பிற குடும்பங்களும் உள்ளன. நாங்கள் பெரும்பாலும் விவசாயத் தொழிலாளர்களாக வேலை செய்து வருகிறோம்.

ஒரு சிலர் கிடைத்த வேலைகளைச் செய்து வருகின்றனர். பெண்கள் நூறு நாள் வேலைக்குச் செல்கிறார்கள். மாற்று சமூகத்தினருக்குச் சொந்தமாக நிலம் இருக்கிறது. அதில் விவசாயம் செய்கின்றனர். சிலர் வேறு தொழில்களைச் செய்கின்றனர்,” என்றார் ராஜா.

கிருஷ்ணகிரி சாதிய மோதல்
படக்குறிப்பு,

சோக்காடி கிராமத்தில் மோதல் நடந்த அன்று வீட்டின் முகப்பில் உள்ள குடிசைக்குத் தீ வைக்கப்பட்டது.

தொடர்ந்து பேசிய ராஜா, மாற்று சமூகத்தினர் அவர்களுக்குச் சொந்தமான பொது இடமான ‘மண்டு’ (இடத்தின் பெயர்) என்ற இடத்தில் மாரியம்மன் கோவில் கட்டி வருவதாகவும், இதற்காக பணிகள் கடந்த 4 மாதங்களாக நடந்து வருவதாகவும் தெரிவித்தார். அவ்வப்போது இந்தப் பணிகளால், தங்கள் குடியிருப்புப் பகுதி தூசியால் பாதிக்கப்பட்டது என்று ராஜா, பிபிசியிடம் தெரிவித்தார்.

“கிரானைட் கற்களை அறுத்து, பாலிஷ் போடுவதால், அதிலிருந்து கிளம்பும் தூசி வீடுகளில் உலர்த்தப்பட்ட துணிகளிலும் சாப்பாட்டிலும் விழுகிறது. இந்த பிரச்னை குறித்து ஊர் கவுண்டரான ராஜனிடம் பலமுறை சொன்னோம். அவர் கண்டுகொள்ளவில்லை”.

தூசி பிரச்னை தொடரவே, அக்டோபர் 29ஆம் தேதி தனது உறவினரான அன்பரசு, வலை அமைத்து பணிகளை மேற்கொள்ளுமாறும், இல்லையெனில் பணிகளை நிறுத்தமாறும் பணியாளர்களிடம் சென்று கூறியதாக ராஜா நம்மிடம் தெரிவித்தார்.

அன்பரசு பணிகளை நிறுத்தியது தொடர்பாக ஊர்க் கவுண்டரான ராஜன் அன்பரசுவை நேரில் பார்த்துக் கேட்கும்போது, மரியாதை இன்றி பைக்கில் அமர்ந்தபடி பதில் சொல்லியதாகக் கண்டித்த ராஜன் அன்பரசுவை தாக்கியுள்ளார். அதையடுத்து அன்பரசுவும் பதிலுக்கு அவரைத் தாக்கியதாக சோக்காடி கிராமத்தைச் சேர்ந்த ராஜா கூறினார்.

குடிசைக்கு தீ வைக்கப்பட்டது
படக்குறிப்பு,

சோக்காடி கிராமத்தில் மாற்று சமூகத்தினர் வழிபடுவதற்காக கட்டப்பட்டு வரும் மாரியம்மன் கோவில்.

இதையடுத்து அங்கிருந்தவர்கள் இருவரையும் விலக்கி சமானதானப்படுத்தி, பிறகு பேசி தீர்த்துக் கொள்ளலாம் என்று சண்டையை விலக்கி விட்டனர்.

“ஆனால் இந்தப் பிரச்னை குறித்து அறிந்த சோக்காடி ராஜனின் உறவினர்கள் எங்களைத் தாக்கத் தயாராகி கொண்டிருந்தனர். அதையடுத்து, நான் காவல்துறைக்கு போனில் தகவல் கூறினேன். பாதுகாப்புக்காக எங்கள் ஊருக்கு 5 காவலர்கள் வந்தனர். ஆனாலும், காவல்துறையை வைத்துக்கொண்டு மாற்று சமூகத்தினர் எங்கள் தெருவுக்குள் நுழைந்து எங்களை அடித்தனர்.”

காவல்துறையினர் எதிர்ப்பையும் மீறி, தங்கள் வீடுகளை நோக்கி நூற்றுக்கும் மேற்பட்டோர் கற்களை வீசியதாகவும், குடிசைகளை தீ வைத்துக் கொளுத்தியதாகவும் சோக்காடி கிராமத்தைச் சேர்ந்த ராஜா தெரிவித்தார்.

இந்தத் தாக்குதலில், காவலர் ஒருவரும், பொது மக்களும் பாதிக்கப்பட்டனர்.

இதேபோன்ற நிகழ்வு 1992-92ஆம் ஆண்டிலும் நடந்ததாக ராஜா நினைவு கூர்ந்தார். அப்போது நடந்த சாதிக் கலவரத்தால் குழந்தைகள் பள்ளிக்குக்கூட செல்ல முடியாத நிலை இருந்தது. பிறகு அவ்வப்போது சிறிய பிரச்னைகள் வந்தாலும்கூட, 30 ஆண்டுகளுக்கு முன்பு நடந்ததைப் போல மீண்டும் இப்போது பிரச்னை நடந்துள்ளது என்று அவர் கூறினார்.

இங்கு நடந்த சாதிய மோதல் தொடர்பாக 21 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு இதுவரை 14 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் ஊரில் பல ஆண்கள் தலைமறைவாகியுள்ளதாகவும், கைது செய்யப்பட்டவர்களை பிணையில் எடுப்பதற்குக்கூட ஊரில் யாரும் இல்லை என்றும் பட்டியலினத்தைச் சேர்ந்தவர்கள் தெரிவித்தனர்.

ஊரில் யாரும் இல்லை

குடிசைகளுக்குத் தீ வைத்ததாக குற்றம் சாட்டப்படும் சோக்காடி கிராமத்தைச் சேர்ந்த மாற்று சமூகத்தினரை சந்தித்துப் பேச முற்பட்டபோது, இந்த விவகாரம் தொடர்பாக யாரும் பேச முன்வரவில்லை.

இறுதியாக, அந்த ஊரில் மளிகைக் கடை வைத்து நடத்தும் நபர் ஒருவர் நம்மிடம் பேச முன்வந்தார். “அவர்களும்தான் கல் எறிந்தார்கள். அவர்களே குடிசைக்குத் தீ வைத்து எரித்து விட்டு எங்கள் மீது பழி சுமத்துகிறார்கள்,” என்று கூறினார்.

குடிசைக்கு தீ வைக்கப்பட்டது
படக்குறிப்பு,

இருதரப்புக்கும் எழுந்த மோதலையடுத்து, ஊரில் வசித்து வந்த பெரும்பாலான ஆண்கள் கைது நடவடிக்கைக்குp பயந்து தலைமறைவாகியுள்ளனர்.

இது குறித்து அந்த ஊரில் தையல் கடை வைத்திருக்கும் ஒருவர் பேசிய போது, “பேச்சுவார்த்தை நடத்தியே முடித்திருக்க வேண்டிய பிரச்னை, சாதி கலவரமாக மாறி விட்டது. இந்தப் பிரச்னையால் பலர் ஊரை விட்டு வெளியேறி தலைமறைவாக உள்ளனர். சிலர் நிலைமை சரியாகும் வரை வெளியூருக்குச் சென்றுள்ளார்கள். மற்றபடி பிரச்னை நடந்த அன்று என்ன நடந்தது, யார் குடிசைக்குத் தீ வைத்தது என்பது எனக்குத் தெரியாது,” என்று பிபிசியிடம் தெரிவித்தார்.

சோக்காடி கிராமத்தில் நடந்த மோதலையடுத்து அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக பிபிசி தமிழிடம் பேசிய கிருஷ்ணகிரி வருவாய் ஆய்வாளர் ரமலான் லட்சுமி, யார் தரப்பில் குடிசைக்குத் தீ வைக்கப்பட்டது என்பதை காவல்துறை விசாரணை செய்து வருவதாகத் தெரிவித்தார்.

“சோக்காடி கிராமத்தில் நடந்த பிரச்னையில், பட்டியலினத்தைச் சேர்ந்தவர்களும், மாற்று சமூகத்தினரும் ஒருவரை ஒருவர் கற்களை வீசி தாக்கிக் கொண்டுள்ளனர். காவல்துறை முன்னிலையே இந்தத் தாக்குதல் நடந்துள்ளது.

இது தொடர்பாக நடந்த பேச்சுவார்த்தைக்கு பட்டியலினத்தைச் சேர்ந்த மக்கள் வர மறுத்துள்ளனர். இதையடுத்து அந்த கிராமத்தில் வசிக்கும் பட்டியலினத்தைச் சேர்ந்த மக்களை சந்தித்துப் பேசினோம். தங்கள் தரப்பின் பாதுகாப்பை உறுதி செய்யவேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர்,” என்று வருவாய் ஆய்வாளர் ரமலான் லட்சுமி தெரிவித்தார்.

சோக்காடியில் நடந்த மோதல் தொடர்பாக பட்டியலினத்தைச் சேர்ந்த 13 பேர் மீதும், மாற்று சமூகத்தைச் சேர்ந்த 10 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதில் 14 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அதிமுகவை சேர்ந்த ராஜன் தலைமறைவாக உள்ளார். அவரைத் தேடி வருவதாகவும் கிருஷ்ணகிரி மாவட்ட துணை காவல் கண்காணிப்பாளர் தமிழரசி கூறினார்.

மேலும், “வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. குடிசைக்குத் தீ வைத்தது யார் என்பதைக் கண்டறிய விசாரணை செய்து வருகிறோம். விசாரணைக்குப் பிறகு முழுமையான தகவல் அளிக்கப்படும்,” என்று பிபிசியிடம் பேசிய கிருஷ்ணகிரி மாவட்ட துணை காவல் கண்காணிப்பாளர் தமிழரசி தெரிவித்தார்.

வன்கொடுமை மாவட்டமாக அறிவிக்க வேண்டும்

வன்கொடுமை மாவட்டம்
படக்குறிப்பு,

சோக்காடி கிராமத்தில் இருதரப்பும் கற்களை வீசி மோதிக் கொண்டதில் கற்கள் சிதறிக் கிடக்கின்றன.

சோக்காடி மோதல் தொடர்பாக பிபிசியிடம் பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சியின் கிருஷ்ணகிரி மத்திய மாவட்ட செயலாளர் மாதேஷ், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தொடர்ந்து நடக்கும் சாதிய அடக்குமுறைகளை ஒழிக்க, இந்த மாவட்டத்தை வன்கொடுமைகள் நிறைந்த தீண்டாமை மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என்று தெரிவித்தார்.

மேலும், “தளி, தேன்கனிக்கோட்டை பகுதிகளில் கடந்த சில வருடங்களில் மட்டும் 9 சாதி ஆணவப் படுகொலைகள் நிகழ்ந்துள்ளன. அண்மையில் பெற்றோரின் எதிர்ப்பை மீறி தனது மகளைத் திருமணம் செய்த ஜெகன் என்பவரை அவரது மாமனார் சாலையில் வைத்து வெட்டிப் படுகொலை செய்தார்.

அதேபோல மற்றொரு சம்பவத்தில் மாற்று சமூகத்தைச் சேர்ந்த பெண்ணை திருமணம் செய்த சொந்த மகனை தந்தையே வெட்டிப் படுகொலை செய்துள்ளார். அதைத் தடுக்க முயன்ற தனது தாயையும் அவர் வெட்டிக் கொலை செய்துள்ளார்.”

“இதுபோல இன்னும் கிருஷ்ணகிரியில் உள்ள கிராமங்களில் நிகழும் சாதிய மோதல்களில் பட்டியலின மக்கள் அதிகளவில் பாதிக்கப்படுகிறார்கள்.” ஆகவே, இந்த மாவட்டத்தை வன்கொடுமை நிறைந்த மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என்று மாதேஷ் தெரிவித்தார்.

Facebook
Facebook
fb-share-icon
Telegram
WhatsApp
TekTamil.com
Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by TekTamil.
நன்றி
Publisher: பிபிசிதமிழ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *