
பட மூலாதாரம், ZEE STUDIOS
அன்னபூரணி படத்தில் நயன்தாரா
நயன்தாரா நடிப்பில், நிலேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் கடந்த டிசம்பர் மாதம் வெளிவந்த திரைப்படம் அன்னபூரணி.
சைவ உணவுப் பழக்கம் கொண்ட குடும்பத்தைச் சேர்ந்த, இந்து நம்பிக்கை கொண்டவரான ஒரு பெண் சமையல் கலை போட்டியில் வெற்றிபெறுவதை பற்றிய இந்தப்படம் திரையரங்கில் வெளியானது.
பின்னர் ஓ.டி.டி தளத்தில் வெளியான போது இந்தப்படம் ஒரு சாராரின் மனங்களைப் புண்படுத்துவதாக அமைந்திருப்பதாக சர்ச்சைகள் கிளம்பின. இதைத்தொடர்ந்து படம் ஓ.டி.டி தளத்திலிருந்து நீக்கப்பட்டது.
இப்போது அந்த படத்தில் நடித்த நயன்தாரா வருத்தம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.
சைவ உணவுப் பழக்கம் கொண்டவரான நாயகி, மாஸ்டர் செஃப் போட்டியில் பங்கேற்க ஆசைப்படுகிறார். ஆனால் அந்தப் போட்டியில் அசைவ உணவும் சமைத்தால் தான் வெற்றிபெற முடியும் என்ற நிலையில் சமையல் கலையின் மீதான ஆர்வத்தால் அசைவ உணவு சமைக்க பழகுகிறார். கதையின் போக்கில் அந்த பாத்திரம், பிரியாணி செய்வதற்கு முன் நமாஸ் செய்கிறது. வால்மீகி ராமாயணத்தில் ராமர் அசைவ உணவு உட்கொண்டதாக பதிவுகள் உள்ளது என வசனம் வருகிறது.

பட மூலாதாரம், ZEE STUDIOS
அன்னபூரணி படத்திற்கு பல இடங்களில் இருந்து வழக்கு பதியப்பட்டுள்ளது
நயன்தாரா மீது வழக்கு
இந்த படம் இந்துக்களின் உணர்வுகளை புண்படுத்துகிறது என்று நயன்தாரா மீதும் படக்குழுவினர் மீதும் வட இந்தியாவில் புகார் அளிக்கப்பட்டது. மகாராஷ்ட்ரா மாநிலம் தானே மாவட்டத்தில் உள்ள மிராபயந்தர் நகரத்தில் 48 வயதான நபர், நயா நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். அந்த புகாரில், அன்னபூரணி திரைப்படம் இந்துக்களின் உணர்வுகளை புண்படுத்துவதாகவும், ‘லவ் ஜிஹாத்’ ஐ ஊக்குவிப்பதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த புகாரின் அடிப்படையில், நயன்தாரா மற்றும் படத்தின் தயாரிப்பாளர் உட்பட எட்டு பேரின் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர் தானே காவல்துறையினர். இந்திய தண்டனை சட்டம் 153-ஏ (பல்வேறு குழுக்களுக்கு இடையே பகைமையை தூண்டுவது), 295- ஏ (மத உணர்வுகளை தூண்ட வேண்டுமென்ற செய்யும் நடவடிக்கைகள்), 505 (2) ( வழிபாடு தலத்தில் செய்த குற்றம்) ஆகிய பிரிவுகளின் கீழ் அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
அதே போல பஜ்ரங் தல் அமைப்பினர், மும்பையில் உள்ள ஒஷிவாரா காவல் நிலையத்தில் இதே விவகாரத்தில் புகார் அளித்திருந்தனர். லோக்மான்ய திலக் நகர் காவல் நிலையத்தில் ‘இந்து ஐ.டி. செல்’ நிறுவனர் ரமேஷ் சோலங்கி மற்றொரு புகார் அளித்திருந்தார். இந்து உரிமைகளுக்காக சட்டரீதியாக போராடும் பதிவு செய்யப்பட்ட என்.ஜி.ஒ என்று இந்த அமைப்பு தன்னைப்பற்றி கூறுகிறது. இந்த அமைப்பு 2020-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது.
ரமேஷ் சோலங்கி அளித்த புகாரில், “ராமர் கோயில் பிரான் பிரதிஷ்டையை உலகமே எதிர்ப்பார்த்திருக்கும் வேளையில், ராமரை அவமதிக்கும் வகையிலான வசனம் கொண்ட அன்னபூரணி திரைப்படம் இந்து உணர்வுகளை புண்படுத்தும் நோக்கில் வெளியிடப்பட்டுள்ளது,” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
‘இந்து உணர்வை புண்படுத்தும் காட்சிகள்’
மேலும் அந்தப் படத்தில் இந்து உணர்வுகளைப் புண்படுத்தும் காட்சிகளை அவர் குறிப்பிட்டுள்ளார்.
“பிரியாணி செய்வதற்கு முன்பாக, கோவில் பூசாரி ஒருவரின் மகள், ஹிஜாப் அணிந்து தொழுகை செய்கிறார். நடிகையின் நண்பர் ஃபர்ஹான், ராமரும் சீதையும் கூட அசைவம் சாப்பிடுவார்கள் என்று கூறி, அவரை அசைவம் சாப்பிட தூண்டுகிறார். அவர் கோயில்களுக்கு செல்வதில்லை, ஆனால் ஃபர்ஹானின் இடத்தில் இஃப்தாருக்கு செல்கிறார்.
“அவரின் தந்தையும் பாட்டியும் பூசை செய்யும் போது, அவர் அசைவம் உண்ணும் காட்சிகள் இடையிடையே காண்பிக்கப்படுகின்றன. ஏழு தலைமுறைகளாக விஷ்ணுவுக்கு பணிவிடை செய்யும் கோயில் பூசாரியின் மகள் அசைவம் சாப்பிடுவதாகவும், ஒரு இஸ்லாமியரை காதலித்து நமாஸ் செய்வதாகவும் காட்டப்படுவது இந்துக்களின் உணர்வுகளையும், ராமரையும் அவமதிக்கும் நோக்கிலேயே உள்ளது,” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
நயன்தாரா, இயக்குநர் நிலேஷ் குமார், தயாரிப்பாளர்கள் ஜதின் சேதி, ஆர் ரவீந்திரன், புனித் கோயங்கா, நெட்ஃபில்க்ஸ் இந்தியா தலைவர் மோனிகா ஷெர்கில், ஜீ ஸ்டுடியோஸ் தலைமை வணிக அலுவலர் ஷரிக் படேல் ஆகியோர் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய வேண்டும் என்று புகாரில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

பட மூலாதாரம், NAYANTHARA / INSTAGRAM
விமர்சனங்களுக்கு நயன்தாரா பதில் கடிதம்
மன்னிப்பு கடிதம் எழுதியுள்ள நயன்தாரா
திரைப்பட தணிக்கைக் குழுவின் தணிக்கை சான்றிதழ் பெற்ற அன்னபூரணி திரைப்படம் டிசம்பர் மாதம் திரையரங்குகளில் வெளியானது. அதன் பின் சில வாரங்கள் முன் நெட்ஃப்லிக்ஸ் தளத்தில் வெளியானது.
அதன் பிறகே இந்த புகார்கள் எழுப்பப்பட்டன. முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டதை அடுத்து அன்னபூரணி திரைப்படம் நெட்ஃப்லிக்ஸ் தளத்திலிருந்து நீக்கப்பட்டது.
இந்நிலையில், நடிகை நயன்தாரா ‘ஜெய் ஸ்ரீராம்’ என்று தலைப்பிட்டு ஒரு மன்னிப்பு கடிதத்தை வெளியிட்டுள்ளார். அதில், தனது நடிப்பில் வெளியான அன்னபூரணி திரைப்படம் கடந்த சில நாட்களாகவே பேசுபொருளாகியுள்ளது குறித்து கனத்த இதயத்துடனும் சுய விருப்பத்துடனும் அறிக்கை வெளியிடுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
“மன உறுதியோடு போராடினால் எதையும் சாதிக்கலாம் என்பதை உணர்த்தும் நோக்கிலே எடுக்கப்பட்ட திரைப்படம்,” என்று குறிப்பிட்ட நயன்தாரா, “எங்களை அறியாமலேயே சிலரது மனங்களை புண்படுத்தியிருப்பதாக உணர்ந்தோம். தணிக்கை குழுவால் சான்றளிக்கப்பட்டு திரையரங்கில் வெளியான ஒரு படம் OTT-யிலிருந்து நீக்கப்பட்டது நாங்கள் சற்றும் எதிர்பாராதது. மற்றவர்கள் உணர்வை புண்படுத்த வேண்டும் என்ற எண்ணம் எனக்கும் எனது குழுவுக்கும் துளியும் இல்லை,” என்று குறிப்பிட்டிருக்கிறார்.
மேலும், “கடவுள் மீது மிகுந்த நம்பிக்கை கொண்டு அனைத்து வழிபாட்டு தலங்களுக்கும் செல்வதை வழக்கமாக வைத்திருக்கும் நான் ஒருபோதும் இதை உள்நோக்கத்துடன் செய்திருக்க மாட்டேன். அதையும் மீறி உங்கள் உணர்வுகளை எந்த வகையிலாவது புண்படுத்தியிருந்தால் அதற்கு நான் வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன்,” என்று தெரிவித்திருந்தார்.

பட மூலாதாரம், VETRIMARAN / PA RANJITH
இயக்குனர்கள் ரஞ்சித் மற்றும் வெற்றிமாறன் எதிர்ப்பு
வெற்றிமாறன், பா. ரஞ்சித் எதிர்ப்பு
முன்னதாக, அன்னபூரணி திரைப்படம் நெட்ஃப்ளிக்ஸ் தளத்திலிருந்து நீக்கப்பட்ட போது, தணிக்கைக்குழு அனுமதி வழங்கிய படத்தை எப்படி OTT தளம் நீக்கலாம் என்று இயக்குநர் வெற்றிமாறன் தனது எதிர்ப்பை பதிவு செய்திருந்தார்.
“சென்சார் செய்யப்படாத படைப்பு சுதந்திரம் என்று எதுவும் இந்தியாவில் உள்ள எந்தமொழி திரைப்பட இயக்குநர்களுக்கும் கிடையாது. இது OTT படங்களுக்கும் பொருந்தும். தணிக்கைக்குழு அனுமதி வழங்கிய ஒரு படத்தை புறக்காரணங்களை குறிப்பிட்டு OTT தளத்திலிருந்து நீக்கம் செய்வது திரைத்துறைக்கு நல்லதல்ல, ஒரு படத்தை மக்களின் பார்வைக்கு அனுமதி வழங்குவதும், வழங்காமல் போவதும் தணிக்கைக்குழுவின் அதிகாரம். OTT-ன் இந்த செயல்பாடு தணிக்கைக்குழுவின் அதிகாரத்துக்கே மிகப்பெரிய கேள்விக்குறியாக அமைந்துள்ளது,” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
அன்னபூரணி திரைப்படம் நீக்கப்பட்டதற்கு இயக்குநர் பா ரஞ்சித் தனது கண்டனத்தை தெரிவித்திருந்தார்.
“இது படைப்பாற்றலுக்கான அச்சுறுத்தலாகும். ஜனநாயக நாட்டில், படைப்பாற்றலை தடை செய்யவோ, அச்சுறுத்தவோ முடியாது. தணிக்கை செய்யப்பட்ட அன்னபூரணி போன்ற படத்தின் குரலை நசுக்குவது மிகவும் தவறு. தயாரிப்பு நிறுவனம் இதை எதிர்த்து ஏன் கேட்கவில்லை என புரியவில்லை. அப்படி கேட்டிருந்தால், நாங்கள் எல்லாம் உறுதுணையாக இருந்திருப்போம்,” என்று தெரிவித்திருந்தார்.
இது ஒன்றும் முதல் முறையல்ல
இதுகுறித்து பிபிசி தமிழிடம் பேசிய தமிழ் திரைப்பட வரலாற்றாளர் தியோடர் பாஸ்கரன், தணிக்கை செய்யப்பட்ட படத்தை யாரும் தடுத்த நிறுத்தக் கூடாது என்று கருத்து தெரிவித்தார்.
அவர், “சினிமாவை தணிக்கை செய்ய அரசியல் அமைப்பின் படி அமைக்கப்பட்டது தான் தணிக்கைக்குழு. உலகம் முழுக்க இருக்கும் மக்கள் பார்வைக்கு அரசு தணிக்கைக் குழு அனுமதி வழங்கிய பிறகு, யாரும் அந்த படத்தை எதுவும் செய்யக்கூடாது. ஆனால் அரசியலமைப்பை மீறும் சக்திகள் இது போன்ற எதிர்ப்புகளை எழுப்பிக் கொண்டே இருக்கிறார்கள்,” என்றார்.
இது போன்று நடப்பது முதல் முறை அல்ல என்று கூறும் 84 வயதான தியோடர் பாஸ்கரன், இதற்கு முன்னர் நடந்த சம்பவங்களை நினைவு கூர்கிறார்.
1952-ஆம் ஆண்டு வெளியான சிவாஜி கணேசனின் அறிமுகப் படமான பராசக்தி , தனது திராவிட அரசியல் கருத்தியல் காரணமாக, இந்து குழுக்களின் எதிர்ப்பு மற்றும் போராட்டங்களைச் சந்திக்க நேரிட்டது. தணிக்கைக் குழுவால் பல காட்சிகள் நீக்கப்பட்டன. “பராசக்தியின் நையாண்டி மிகுந்த காட்சிகள் கடவுளின் அதிகாரத்தையும் மதத்தையும் கேள்வி எழுப்பின. உணர்வுகளை தூண்டும் விதமாக படம் இருந்தது தனக்கு பிடிக்கவில்லை என்றாலும், அதை முழுவதுமாக தடை செய்ய, அன்றைய சென்னை மாகாண முதல்வர் சி ராஜகோபாலாச்சாரி மறுத்தார்,” என்று பாஸ்கரன் நினைவுகூறுகிறார்.
மேலும், “ஜான் ஆப்ரஹாம் இயக்கிய ‘அக்ரஹாரத்தில் கழுதை’ என்ற படம் சாதிக்கு எதிரானது . அந்த படமும் பல சிக்கல்களை எதிர்கொள்ள வேண்டியிருந்தது. ‘ஒரே ஒரு கிராமத்திலே’ என்ற படம் இட ஒதுக்கீட்டு எதிரான திரைப்படம். இட ஒதுக்கீட்டுக்கு ஆதரவானவர்கள் இந்த படத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். மணிரத்னம் இயக்கிய பாம்பே திரைப்படம் வெளியான போது அதை சிவசேனாவுக்கு போட்டு காண்பித்தார்கள்,” என்று பாஸ்கரன் கூறினார்.

பட மூலாதாரம், Getty Images
படத்தணிக்கை குறித்து உச்சநீதிமன்றம் வழிகாட்டுதல்கள் வழங்கியுள்ளது
உச்சநீதிமன்றத்தின் முக்கியமான தீர்ப்பு
1989-ஆம் ஆண்டில், ‘ஒரே ஒரு கிராமத்தில்’ என்ற திரைப்படத்தைப் பற்றிய சர்ச்சையை அடுத்து, உச்ச நீதிமன்றம் ஒரு முக்கிய தீர்ப்பை வழங்கியது. அதில், மாநில அரசு எதிர்ப்புத் தெரிவிக்கும் கூட்டத்தினரை தன்னால் கையாள முடியாது என்பதை காரணமாக கூற முடியாது என்றும். பிரச்னை ஏற்பட்டால், அதைத் தடுத்து நிறுத்துதல் மற்றும் கருத்துச் சுதந்திரத்தைப் பாதுகாப்பது அரசின் கடமை என்றும் உத்தரவிட்டது. சட்டபூர்வமாகவும் அரசியலமைப்பு ரீதியாகவும் பாதுகாக்கப்பட்ட கருத்துச் சுதந்திரத்தை, சகிப்புத்தன்மை இல்லாத ஒரு குழுவினர் சிறைபிடித்து வைத்திருக்க முடியாது என்றும் கூறியது.
மத்திய அரசு இதற்கு முன்னதாக கொண்டுவந்த இந்திய ஒளிப்பதிவு சட்ட திருத்தம் இதே போன்ற காரணங்களுக்காக கடுமையாக விமர்சிக்கப்பட்டது. இந்திய ஒளிப்பதிவு சட்டம் (Cinematograph Act) 1952-வில் திருத்தங்கள் மேற்கொள்வதற்கான மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. இந்த சட்டத்திருத்தம் தணிக்கைக் குழு சான்றிதழ் வழங்கிய திரைப்படத்தை மத்திய அரசு மீண்டும் தணிக்கை செய்ய அனுமதி அளிக்கிறது. இதற்கு கமல் ஹாசன், இயக்குநர் வெற்றி மாறன் ஆகியோர் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர்.
சமீபத்தில் பல கலைஞர்களும், படைப்பாளிகளும் தங்கள் படைப்புகளுக்காக தாக்கப்பட்ட சம்பவங்கள் நடைபெற்றுள்ளன.
தொடர்ந்து முடக்கப்படும் படைப்பாளிகள்?
2019-ஆம் ஆண்டு நடிகர் கார்த்தியின் அதிரடி-நகைச்சுவை படமான ‘சுல்தான்’ திப்பு சுல்தானின் வாழ்க்கையைப் பற்றியது என்று செய்திகள் வெளியானதை அடுத்து, அந்த படத்தின் படப்பிடிப்பு திண்டுக்கல்லில் இந்துத்துவ குழுவினரால் தடைப்பட்டது. திப்பு சுல்தானுடன் எந்த சம்பந்தமும் இல்லாத இந்த படத்தின் இறுதி கட்ட படப்பிடிப்பின் போது இந்த சம்பவம் நடைபெற்றது. சிலர் படப்பிடிப்பு தளத்துக்குள் நுழைந்து திப்பு சுல்தான் மற்றும் ஹீரோ கார்த்தி ஆகியோருக்கு எதிராக கோஷங்கள் எழுப்பின. திப்பு சுல்தானை இந்துத்துவ அமைப்புகள் முஸ்லிம் வெறுப்பு நாயகனாக சித்தரித்து வந்தன.
2015-ஆம் ஆண்டு, தனது சாதி மற்றும் மத உணர்வுகளை புண்படுத்தியதாகக் கூறி சாதி-இந்து குழுக்களால் துன்புறுத்தப்பட்டதை அடுத்து, பெருமாள் முருகன் எழுத்து பணியில் இருந்து விலக நேரிட்டது. விற்பனைக்கு இருந்த தனது அனைத்து புத்தகங்களையும் அவர் திரும்பப் பெற்றார்.
சுதந்திரத்துக்கு முன்பு வெளிவந்த திரைப்படங்கள், மகாத்மா காந்தி மற்றும், காங்கிரஸ் கட்சி பற்றி குறிப்பிட்டதற்காக தணிக்கை செய்யப்பட்டன. சுதந்திரத்துக்கு பிறகு, காங்கிரஸ் அதையே எம்.ஜி.ஆர் மற்றும் அண்ணாதுரையின் படங்களுக்கு செய்தது.

பட மூலாதாரம், Getty Images
கம்யூனிசம் குறித்த பார்வைகளை எடுத்துக் கூறும் படங்கள் தடை செய்யப்பட்டன
படைப்புகளை தணிக்கை செய்த காங்கிரஸ்
1970-ஆம் ஆண்டு ரித்விக் கட்டக் இயக்கிய ‘அமர் லெனின்’ திரைப்படம் விளாதிமிர் லெனின் மற்றும் கம்யூனிசம் குறித்த பார்வைகளை எடுத்துக் கூறும் மேற்கு வங்க அரசுக்குத் தயாரிக்கப்பட்டது. தேசிய திரைப்பட தணிக்கை குழு தடை செய்ததைத் தொடர்ந்து, அன்றைய பிரதமர் இந்திரா காந்தியை இயக்குநர் சந்திக்க வேண்டியிருந்தது.
திரைப்பட வரலாறு குறித்த நிபுணத்துவம் கொண்ட பல்கலைகழக மூத்த பேராசிரியர் ஒருவர் பிபிசி தமிழிடம் பேசுகையில், “மிகச் சிறந்த அரசியல் நையாண்டிப் படமான ‘கிஸ்ஸா குர்சி கா’ (1977), அம்ரித் நஹாதா இயக்கத்தில், இந்திரா காந்தி ஆட்சியில் தடைசெய்யப்பட்டு, காந்தி குடும்பத்தை விமர்சித்ததாகக் கூறி அதன் அனைத்து பிரிண்ட் படங்களும் பறிமுதல் செய்யப்பட்டன,” என்றார்.
மேலும், “1950 மற்றும் 1960-களில் திராவிட ஆதரவாளர்களால் எடுக்கப்பட்ட பெரும்பாலான படங்கள் இந்திய தணிக்கை குழுவால் கூர்ந்து கண்காணிக்கப்பட்டன. ஏனெனில் அவற்றில் பலவும் திருக்குறள், வள்ளுவர், பெரியார், அண்ணா, கட்சி சின்னங்கள் (சிவப்பு மற்றும் கறுப்பு) மற்றும் திராவிட இயக்கத்தின் சாதி எதிர்ப்பு மற்றும் சமூக சீர்திருத்தக் கருத்தியல்கள் ஆகியவற்றைக் குறிப்பிட்டிருந்தன.
1953-ஆம் ஆண்டு வெளியான பணம் திரைப்படத்தில் நாகர்கோவில் சுடலைமுத்து கிருஷ்ணன், (எ) கலைவாணர் என்.எஸ்.கே. பாடிய பிரபலமான நையாண்டி பாடலான, ‘தீன முன கண்ணா’ பற்றி பல்கலைகழக மூத்த பேராசிரியர் நினைவுகூறுகிறார். “அந்த பாடல் தி.மு.க. எனும் அரசியல் கட்சியைக் குறித்து மறைமுக குறிப்புகள் நிறைந்திருந்தது,” என்று கூறினார்.
இது போன்ற எதிர்ப்புகள் சினிமாத்துறைக்கு நல்லதல்ல என்கிறார் தியோடர் பாஸ்கரன். “இப்படி செய்தால், சினிமா படைப்பாளிகள் முன் அனுமானத்தின் அடிப்படையில் அவர்களே தணிக்கை செய்துக் கொள்வார்கள். அதாவது சர்ச்சை ஏற்படலாம் என்று அச்சப்படும் விசயங்களை தவிர்த்து விடுவார்கள். சினிமா என்பது தனது பொருளை இழந்து சிந்தனையற்ற பொழுதுபோக்காகிவிடும். இது கலைஞர்களை ஒரு வித பிளாக்மெயில் செய்வது போலாகும்,” என்று கவலை தெரிவித்தார்.
நன்றி
Publisher: பிபிசிதமிழ்