
பட மூலாதாரம், Getty Images
ஆஸ்திரேலிய அணி தொடக்கத்தில் வைத்திருந்த ரன்ரேட் கடைசி வரை சென்றிருந்தால் இதைவிட மிகப்பெரிய ரன்கள் வித்தியாசத்தில் வென்றிருக்கலாம்.
பெங்களுரூவில் நேற்று நடந்த உலகக்கோப்பை போட்டியின் லீக் ஆட்டத்தில் பாகிஸ்தானை 62 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணி வென்றது.
ஆஸ்திரேலிய அணி தொடக்கத்தில் வைத்திருந்த ரன்ரேட் கடைசிவரை சென்றிருந்தால் இதைவிட மிகப்பெரிய ரன்கள் வித்தியாசத்தில் வென்றிருக்கலாம், பெரிய ஸ்கோரை அடித்திருக்கலாம்.
அப்படியிருக்கும்போது 5 முறை சாம்பியன் பட்டத்தை வென்ற ஆஸ்திரேலியா அணிக்கு இது முழுமையான வெற்றியா என்ற கேள்வி கிரிக்கெட் விமர்சகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
பெங்களூரு மைதானத்தில் கடந்த 10 ஆண்டுகளில் இதுவரை 4 ஒருநாள் போட்டிகள் மட்டுமே நடந்துள்ளன. ஐபிஎல் டி20 தொடரில் மட்டுமே பெரும்பாலான ஆட்டங்கள் நடக்கின்றன. பெங்களூரு மைதானம் இயல்பாகவே பேட்ஸ்மேன்களுக்கு சாதகமானது என்பதால் டேவிட் வார்னர், மிஷெல் மார்ஷ் இருவரும் சதம் அடித்தனர்.
வார்னர், மார்ஷ் சாதனைகள்

பட மூலாதாரம், Getty Images
டேவிட் வார்னர், மிஷெல் மார்ஷ் ஜோடி நேற்றைய ஆட்டத்தில் பல்வேறு சாதனைகளைச் செய்தனர்.
டேவிட் வார்னர் 163 ரன்களையும், மார்ஷ் 123 ரன்களையும் சேர்த்து அணியின் ஸ்கோர் உயர்வுக்கு மிகப்பெரிய காரணியாக அமைந்தனர். ஆனால், இருவரும் அமைத்துக் கொடுத்த அடித்தளத்தை மற்ற பேட்டர்கள் அதாவது நடுவரிசை மற்றும் கீழ் வரிசை பேட்டர்கள் பயன்படுத்தினார்களா என்பது கவலைக்குரியதாக இருக்கிறது.
டேவிட் வார்னர், மிஷெல் மார்ஷ் ஜோடி நேற்றைய ஆட்டத்தில் பல்வேறு சாதனைகளைச் செய்தனர். பாகிஸ்தானுக்கு எதிராக உலகக் கோப்பையில் ஆஸ்திரேலிய அணி முதல் விக்கெட்டுக்கு 200 ரன்களுக்கு மேல் சேர்த்தது இதுதான் முதல்முறை. இதற்கு முன் பாகிஸ்தானுக்கு எதிராக அதிகபட்சமாக 1992இல் மேற்கிந்தியத்தீவுகள் அணியின் பிரையன் லாரா, ஹெயின்ஸ் ஜோடி 172 ரன்கள் சேர்த்ததுதான் அதிகபட்சமாக இருந்தது.
பாகிஸ்தான் அணிக்கு எதிராக நேற்று ஆஸ்திரேலிய அணி சேர்த்த 367 ரன்கள்தான் 2வது அதிபட்சமாகும். இதற்கு முன் பாகிஸ்தானுக்கு எதிராக 2017ஆம் ஆண்டு அடிலெய்டில் 369 ரன்கள் சேர்த்திருந்தது ஆஸ்திரேலிய அணி.
அது மட்டுமல்லாமல் டேவிட் வார்னர் பாகிஸ்தானுக்கு எதிராக ஒருநாள் போட்டிகளில் தொடர்ந்து 4வது முறையாக சதம் அடித்துள்ளார். உலகக் கோப்பையில் மட்டும் பாகிஸ்தானுக்கு எதிராக வார்னர் அடித்த 2வது சதம் இது.
அது மட்டுமல்லாமல் ஒருநாள் உலகக்கோப்பையில் வார்னர் 3வது முறையாக 150 ரன்களுக்கு மேல் குவித்துள்ளார். வேறு எந்த நாட்டு அணி வீரரும் 3 முறை 150 ரன்களை சேர்க்கவில்லை.
பாகிஸ்தானுக்கு எதிரான நேற்றைய ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணி மொத்தம் 19 சிக்ஸர்களை விளாசி ஒருநாள் போட்டிகளில் அதிக சிக்ஸர்கள் விளாசிய அணி என்ற பெருமையைப் பெற்றது. இதில் வார்னர், மார்ஷ் மட்டுமே 18 சிக்ஸர்களை விளாசியுள்ளனர். தொடக்க வீரர்கள் இருவரும் அதிக சிக்ஸர்கள் அடித்தது இதுதான் முதல்முறை.

பட மூலாதாரம், Getty Images
நடுவரிசை பேட்டர்கள் ஏமாற்றம்

பட மூலாதாரம், Getty Images
இதுவரை ஆஸ்திரேலிய அணி உலகக்கோப்பைப் போட்டிகளில் 4 ஆட்டங்களில் விளையாடியுள்ளது.
பாகிஸ்தானுக்கு எதிரான நேற்றைய ஆஸ்திரேலிய அணியின் பேட்டிங் முழுவதும் டேவிட் வார்னர், மார்ஷ் இருவரைச் சுற்றித்தான் இருந்தது. ஆஸ்திரேலிய அணியில் இருந்த மேக்ஸ்வெல், ஸ்டாய்னிஷ், ஸ்மித், லாபுஷேன் ஆகிய நடுவரிசை பேட்டர்கள் எந்தவிதமான குறிப்பிட்ட பங்களிப்பையும் செய்யாமல் ஏமாற்றம் அளித்தனர்.
இதுவரை ஆஸ்திரேலிய அணி உலகக்கோப்பைப் போட்டிகளில் 4 ஆட்டங்களில் விளையாடியுள்ளது. அதில் மேக்ஸ்வெல் இதுவரை ஒரு அரைசதம்கூட அடிக்கவில்லை, லாபுஷேன், ஸ்டாய்னிஷ், ஸ்மித், இங்கிலிஸ் ஆகியோரும் எந்தவிதமான குறிப்பிட்ட பங்களிப்பையும் அளிக்கவில்லை.
ஆஸ்திரேலிய அணியின் நடுவரிசை பேட்டிங் இவர்களை நம்பித்தான் ஒவ்வொரு போட்டியிலும் நகர்ந்து வருகிறது. ஆனால், இதுவரை இந்த 4 பேட்டர்களும் பெரிதாக எந்தப் பங்களிப்பும் செய்தாததால்தான் ஆஸ்திரேலிய அணி முதல் 2 ஆட்டங்களில் தோற்றது.
7 விக்கெட்டுக்கு 58 ரன்கள்தான்…

பட மூலாதாரம், Getty Images
ஆஸ்திரேலிய அணி கடைசி 7 விக்கெட் இழப்புக்கு 58 ரன்கள் மட்டுமே சேர்த்தது.
அது மட்டுமல்லாமல் பாகிஸ்தானுக்கு எதிரான நேற்றைய ஆட்டத்திலும் ஆஸ்திரேலியாவின் நடுவரிசை மற்றும் கீழ்வரிசை பேட்டிங் பலவீனம் பட்டவர்த்தனமாகத் தெரிந்தது.
வார்னர், மார்ஷ் இருவரும் சேர்ந்து 284 ரன்கள் ஸ்கோர் செய்தனர், உதிரிகள் 25 ரன்கள். இதைத் தவிர்த்துவிட்டுப் பாரத்தால் மற்ற பேட்டர்களின் பங்களிப்பு வெறும் 58 ரன்கள்தான். அதாவது ஆஸ்திரேலிய அணி கடைசி 7 விக்கெட் இழப்புக்கு 58 ரன்கள் மட்டுமே சேர்த்தது என்று அர்த்தம் கொள்ளலாம். அதிலும் கடைசி 6 ஓவர்களில் ஆஸ்திரேலிய அணி வெறும் 29 ரன்கள் மட்டுமே சேர்த்தது.
இந்த ஆட்டத்தில் ஆஸ்திரேலிய பேட்டர்கள் 18 சிக்ஸர்களை அடித்துவிட்டது சாதனையாகப் பார்க்கப்பட்டாலும், இன்னும் பேட்டர்கள் டி20 மனநிலையில் இருந்து வெளியே வரவில்லை என்பது தெரிகிறது.
ஒருநாள் போட்டிகள் என்றாலே 50 ஓவர்களை நிலைத்து ஆட வேண்டும், விக்கெட்டுகளுக்கு இடையே ரன்களை ஓடிச் சேர்க்க வேண்டும் என்ற எந்த அவதானிப்பும் ஆஸ்திரேலிய பேட்டர்களிடம் நேற்று இல்லை.
அதனால்தான் நேற்றைய ஆட்டத்தில் மட்டும் ஆஸ்திரேலிய அணி 152 டாட் பந்துகளை ரன் சேர்க்காமல் விட்டுள்ளது. அதாவது 50 ஓவர்களில் 25 ஓவர்களில் எந்த ரன்களும் அடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. சிக்ஸர், பவுண்டரியில் மட்டும் ரன்களை சேர்த்துக் கொள்ளலாம் என்ற ஆஸ்திரேலிய பேட்டர்களின் மனநிலை மிகவும் ஆபத்தானது.
ஓடி ரன் சேர்ப்பது அவசியம்

பட மூலாதாரம், Getty Images
ஐந்து முறை சாம்பியன் பட்டம் வென்ற ஆஸ்திரேலிய அணி இதுபோன்று பலவீனமான நிலையில் உலகக்கோப்பையை இதுவரை சந்தித்ததே இல்லை என கிரிக்கெட் விமர்சர்கள் தெரிவிக்கிறார்கள்.
பெங்களூரு போன்ற பேட்டர்களுக்கு சொர்க்கபுரியான மைதானத்தில் சிக்ஸர், பவுண்டரிகளை வெளுத்து ரன்களை சேர்த்தனர். ஆனால், பந்துவீச்சுக்கு சாதகமான ஆடுகளங்களில் விக்கெட்டுகளை ரொட்டேட் செய்து ரன்களை சேர்ப்பது அத்தியாவசிம்.
ஆனால், ஓடி ரன்களை சேர்ப்பதையே வார்னரும், மார்ஷும் நேற்று குறைத்துக் கொண்டனர், மற்ற பேட்டர்களும் அதில் ஆர்வம் காட்டவில்லை.
அதுமட்டுமல்லாமல் மார்ஷ், வார்னர் இருவரைத் தவிர மற்ற 7 பேட்டர்களின் பங்களிப்பு என்பது வெறும் 58 ரன்கள்தான் என்பது மிகவும் கவலைக்குரிய விஷயம்.
குறிப்பாக 5 முறை சாம்பியன் பட்டம்வென்ற ஆஸ்திரேலிய அணி இதுபோன்று பலவீனமான நிலையில் உலகக் கோப்பையை இதுவரை சந்தித்ததே இல்லை என கிரிக்கெட் விமர்சர்கள் தெரிவிக்கிறார்கள்.
ஸ்மித், மேக்ஸ்வெல், லாபுஷேன் மீது பாயும் கேள்வி

பட மூலாதாரம், Getty Images
கடந்த 3 போட்டிகளாக வார்னர் தடுமாறினாலும், நேற்றை ஆட்டத்தில்தான் வார்னர் பழைய ஃபார்முக்கு வந்துள்ளார்.
டெஸ்ட் போட்டிகளில் விளையாடக் கூடிய லாபுஷேனை ஒருநாள் போட்டிகளுக்கு ஏன் எடுத்தார்கள் என்ற கேள்வியை இப்போது ஆஸ்திரேலிய ஊடகங்களும் எழுப்பத் தொடங்கிவிட்டன. கேமரூன் கிரீன், டிராவிஸ் ஹெட், அலெக்ஸ் காரே போன்ற ஒருநாள் போட்டிகளில் விளையாடிய அனுபவம் கொண்டவர்களை ஏன் பரிசீலிக்கவில்லை என்ற கேள்வி எழுகிறது.
ஆல்ரவுண்டர் என்று சொல்லப்படும் மேக்ஸ்வெல் இதுவரை 4 போட்டிகளிலும் சேர்த்து 50 ரன்கள் கூட சேர்க்கவில்லை. மேக்ஸ்வெல் பகுதிநேர சுழற்பந்துவீச்சாளராக இருப்பதால் மட்டுமே தொடர்ந்து அணியில் நீடித்து வருகிறார். ஆல்ரவுண்டர் என்று சொல்லப்படுவதற்கு ஏற்ற வகையில் இதுவரை 4 போட்டிகளில் எதிலுமே மேக்ஸ்வெல் பேட்டிங்கில் பங்களிப்பு செய்யவில்லை.
அனுபவம் மிக்க பேட்டராகவும், முன்னாள் கேப்டனாகவும் இருந்த ஸ்டீவ் ஸ்மித்தும் இந்த உலகக்கோப்பைத் தொடரில் மோசமாக பேட் செய்து வருகிறார். இதுவரை ஒரு அரைசதம்கூட ஸ்மித் அடிக்கவில்லை என்பது அவரது பேட்டிங் திறமை மீது எழும் மிகப்பெரிய சம்மட்டி அடி.
கடந்த 3 போட்டிகளாக வார்னர் தடுமாறினாலும், நேற்றைய ஆட்டத்தில்தான் வார்னர் பழைய ஃபார்முக்கு வந்துள்ளார். ஐபிஎல் தொடர் விளையாடிய அனுபவம், பெங்களூரு மைதானத்தைப் பற்றி வார்னரால் நன்கு அறிய முடிந்ததால், அவர் ஸ்கோர் செய்ய ஏதுவாக இருந்தது. ஷான் மார்ஷ் முதல் இரு போட்டிகளிலும் தடுமாறினாலும், இலங்கைக்கு எதிராக அரைசதம், பாகிஸ்தானுக்கு எதிராக சதம் கண்டு தன்னை நிலைப்படுத்தியுள்ளார்.
ஆனால், மற்ற பேட்டர்களான மேக்ஸ்வெல், ஸ்மித், லாபுஷேன், இங்கிலிஸ் நிலைமை 4 போட்டிகளிலும் நிலவிய அதே மோசமான பேட்டிங் தொடர்ந்து வருகிறது. உலகக்கோப்பை போன்ற சர்வதேச முக்கியத்துவம் வாய்ந்த போட்டிகளில் ஒரு அணி குறிப்பிட்ட சில வீரர்களின் தோள்மீது மட்டும் அமர்ந்து பயணிப்பது பேரழிவுக்குத்தான் இட்டுச் செல்லும்.
ஆஸ்திரேலியாவின் பரிதாபம்

பட மூலாதாரம், Getty Images
ஆஸ்திரேலிய அணியின் நடுவரிசை பேட்டிங் சராசரி 23.83 என கடைசி இடத்தில் இருக்கும் ஆப்கானிஸ்தானுக்கு அடுத்த இடத்தில் இருக்கிறது.
ஆஸ்திரேலிய அணியில் நடுவரிசை மோசாக இருந்தாலும், கீழ் வரிசையில் கேப்டன் கம்மின்ஸ், ஹேசல்வுட், ஆடம் ஸம்பா, ஸ்டார்க் என ஆல்ரவுண்டர்கள், ஓரளவுக்கு விளையாடக்கூடிய பேட்டர்கள் யாரும் இல்லை என்பது கவலைக்குரிய அம்சம்.
இந்தியா, நியூசிலாந்து, தென் ஆப்பிரிக்க அணிகள், கடைசி வரிசை வரை பேட்டர்களை கொண்டு வருவதற்காக கூடுதல் ஆல்ரவுண்டர்களை சேர்க்க முயன்று வரும்நிலையில் ஆஸ்திரேலிய அணி அதுகுறித்து எந்த மாற்றமும் செய்யாதது வியப்பாக இருக்கிறது.
கேமரூன் க்ரீன் தேவையின்றி பெஞ்சில் அமர வைக்கப்பட்டுள்ளார், லாபுஷேனுக்கு பதிலாக கேமரூன் கிரீனை களமிறக்கினால் கூடுதல் பந்துவீச்சாளரும், பேட்டரும் கிடைப்பார்.
இந்த ஆண்டில் நடந்த ஒருநாள் போட்டிகளில் ஒவ்வொரு அணியின் நடுவரிசை பேட்டிங் சராசரியிலும் ஆஸ்திரேலிய அணி மோசமான இடத்தில்தான் இருந்து வருகிறது. முதலிடத்தில் தென் ஆப்பிரிக்க அணியின் நடுவரிசை பேட்டர்கள் 44.51 ரன்கள் சராசரி வைத்துள்ளனர்.
அடுத்ததாக பாகிஸ்தான் நடுவரிசை பேட்டர்கள் 40.26 சராசரியும், இந்திய அணியின் நடுவரிசை பேட்டிங் சராசரி 38.61 ஆகவும் இருக்கிறது. ஆனால், ஆஸ்திரேலிய அணியின் நடுவரிசை பேட்டிங் சராசரி 23.83 என கடைசி இடத்தில் இருக்கும் ஆப்கானிஸ்தானுக்கு அடுத்த இடத்தில் இருக்கிறது.
கடைசி இடத்தில் ஆஸ்திரேலியா

பட மூலாதாரம், Getty Images
ஐசிசி வழங்கிய புள்ளிவிவரங்கள்படி, தென் ஆப்பிரிக்க அணி ஒவருக்கு 6.62 ரன்களை அதிகபட்சமாகச் சேர்த்துள்ளது
இந்த உலகக்கோப்பைத் தொடரிலும் ஆஸ்திரேலிய அணி ஒரு ஓவருக்கு சேர்க்கக்கூடிய ரன்களும் மோசமாகக் குறைந்துவிட்டது. அந்த அணியின் பேட்டிங் மோசமானதே இதற்கு முக்கியக் காரணம்.
ஐசிசி வழங்கிய புள்ளிவிவரங்கள்படி, தென் ஆப்பிரிக்க அணி ஒவருக்கு 6.62 ரன்களை அதிகபட்சமாகச் சேர்த்துள்ளது. அடுத்ததாக, நியூசிலாந்து ஓவருக்கு 6.60, மூன்றாவதாக இலங்கை அணி ஓவருக்கு 6.35 ரன்கள், நான்காவதாக இந்திய அணி ஓவருக்கு 6.23 ரன்கள் எனச் சேர்த்துள்ளன.
ஆனால், ஆப்கானிஸ்தான்(5.19) நெதர்லாந்து(5.15), வங்கதேசம்(4.73) ஆகிய அணிகளுக்கும் மோசமாக ஆஸ்திரேலிய அணி ஓவருக்கு 4.70 ரன்கள் மட்டுமே சேர்த்துள்ளது. அதாவது, ஓவருக்கு 4 ரன்கள் மட்டுமே ஆஸ்திரேலிய அணி சேர்க்கிறது.
வார்னர், மார்ஷ் இருவரும் சதம் அடித்துவிட்ட காரணத்தால் மட்டும் ஆஸ்திரேலிய பேட்டிங் பலம் பொருந்தியதாக, வலிமையாக மாறிவிட்டதாக அர்த்தம் கொண்டால், இந்த புள்ளிவிவரங்கள் அனைத்தும் பொய்யாகிவிடும்.
ஆஸ்திரேலிய அணியில் தொடக்க ஆட்டக்காரர்கள் மார்ஷ், வார்னர் அடுத்துவரும் போட்டிகளில் விரைவாக ஆட்டமிழந்துவிட்டால் அந்த அணியின் உண்மையான பேட்டிங் பலம் என்னவென்று அதன் பிறகு தெரியவரும்.
நடுவரிசை கவலைக்கிடம்

பட மூலாதாரம், Getty Images
ஆஸ்திரேலிய அணியில் விளையாடும் பல வீரர்கள் அடுத்த உலகக்கோப்பைத் தொடரில் நிச்சயமாக விளையாட மாட்டார்கள்.
ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரரும், ஆல்ரவுண்டருமான பிரன்டென் ஜூலியன் இணையதளம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் “1999ஆம் ஆண்டு உலகக்கோப்பையில் ஆஸ்திரேலிய அணியின் செயல்பாடு எனக்கு நினைவுக்கு வருகிறது. ஆஸ்திரேலிய அணியில் உள்ள பெரிய பேட்டர்கள் இன்னும் ஃபார்முக்கு வராதது அந்த அணிக்குப் பின்னடைவுதான். அரையிறுதிக்குள் செல்ல வேண்டுமென்றால், இரு வீரர்கள் மட்டுமே பங்களிப்பு செய்தால் போதாது. முக்கிய வீரர்கள் பேட்டிங்கிலும் பந்துவீச்சிலும் பங்களிக்க வேண்டும்.
இப்போது ஆஸ்திரேலிய அணியில் விளையாடும் பல வீரர்கள் அடுத்த உலகக்கோப்பைத் தொடரில் நிச்சயமாக விளையாட மாட்டார்கள். அப்படி இருக்கும்போது தங்களின் ஆகச் சிறந்த பங்களிப்பை இப்போது வழங்க வேண்டும். ஆஸ்திரேலிய அணியின் நடுவரிசை பேட்டிங் ஓராண்டுக்கும் மேலாக மோசமாக இருந்து வருகிறது.
இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா, மற்றும் இந்தியத் தொடர்கள் அனைத்திலும், வார்னர், டிராவிஸ் ஹெட் ஆகிய தொடக்க வீரர்கள்தான் பெரும்பகுதி பங்களிப்பு செய்துள்ளனர் என்பதையும் மறக்க முடியாது.
நடுவரிசை, கீழ்வரிசை பேட்டிங் நாளுக்கு நாள் மோசமடைந்துள்ளது. இந்த ஆண்டில் மட்டும் ஆஸ்திரேலிய அணியில் நடுவரிசை பேட்டர் ஒருவர் மட்டுமே சதம் அடித்துள்ளது என்பது மிகவும் கவலைக்குரியது.
நடுவரிசை பேட்டிங் குறித்து ஆழ்ந்து சிந்திக்க வேண்டியுள்ளது. நடுவரிசை பேட்டர்களின் சராசரி 23 ரன்கள் என்பது உலகக்கோப்பை விளையாடும் நாடுகளிலேயே மோசமானது. நடுவரிசை பேட்டர்கள் அடுத்து வரும் போட்டிகளில் சிறப்பாக விளையாடுவதுதான் அரையிறுதிக்குக் கொண்டு செல்லும்,” என்று தெரிவித்தார்.
நன்றி
Publisher: பிபிசிதமிழ்