நாடாளுமன்ற தேர்தல் 2024: ஒவ்வொரு வாக்குச்சாவடி வாரியாக தேர்தல் முடிவு வெளியாவது ஏன்?

நாடாளுமன்ற தேர்தல் 2024: ஒவ்வொரு வாக்குச்சாவடி வாரியாக தேர்தல் முடிவு வெளியாவது ஏன்?

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் நம்பகத்தன்மை

பட மூலாதாரம், Getty Images

18வது மக்களவை தேர்தலுக்கான தேதிகளை இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. ஏப்ரல் 19ஆம் தேதி முதல் ஜூன் 1 வரை ஏழு கட்டங்களாக வாக்குப்பதிவு நடத்தப்பட்டு, ஜூன் 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை அறிவிக்கப்படும்.

தேர்தல் நடைபெறும் மாநிலங்களின் அட்டவணையை வெளியிடுவதற்கு முன், தேர்தல் நடத்துவதற்கு தேர்தல் ஆணையம் எவ்வாறு தயாராகி வருகின்றது என்று தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் விளக்கினார்.

மேலும் 7 கட்டங்களாக வாக்குப்பதிவு நடத்தப்படுவது ஏன் என்பது குறித்தும் அவர் ஊடகங்களுக்கு விளக்கினார். இந்த கூட்டத்தில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் (இவிஎம்) குறித்த சந்தேகங்களுக்கும் பதில் அளிக்கப்பட்டது.

ஏழு கட்ட வாக்குப்பதிவு ஏன்?

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் நம்பகத்தன்மை

பட மூலாதாரம், Getty Images

“ஏழு கட்டங்களாக தேர்தலை நடத்துவது தேவையற்றது என்றும், அது ஆளுங்கட்சிக்கு சாதகமாக அமையும் என்றும் எதிர்க்கட்சிகள் விமர்சிக்கின்றன. அதற்கு உங்கள் பதில் என்ன?” என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

அதற்கு பதில் அளித்த தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார், “நாட்டின் புவியியல் சூழ்நிலையை கருத்தில் கொண்டால் இந்தியாவின் அனைத்து பகுதிகளுக்கும் ஒரே நேரத்தில் சென்றடைவது என்பது சாத்தியமில்லை. பாதுகாப்புப் படையினருக்கு ஏற்படும் அழுத்தத்தையும் நாம் கருத்தில் கொள்ள வேண்டும். அந்தந்த மாநிலங்களில் நிலவும் சூழ்நிலையை கருத்தில் கொண்டு ஏழு கட்டங்களாக தேர்தலை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது” என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், “இது பண்டிகை காலம். ஹோலி, ரமலான் மற்றும் ராமநவமி பண்டிகைகள் வரவுள்ளன. தேர்தல் அட்டவணை அதை மனதில் வைத்தே உருவாக்கப்பட்டுள்ளது. யாருக்கும் சாதகமாகவோ அல்லது பாதகமாகவோ அமைக்கப்படவில்லை. அந்தக் குற்றச்சாட்டுகளில் உண்மையில்லை” என்று கூறினார்.

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் நம்பகத்தன்மை

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு,

இவிஎம் குறித்த குற்றச்சாட்டுகளில் உண்மையில்லை என்கிறார் தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார்.

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் நம்பகத்தன்மை

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் செயல்பாடு குறித்து எதிர்க்கட்சிகள் முன்வைக்கும் குற்றச்சாட்டுகளுக்கு தேர்தல் ஆணையத்தின் பதில் என்ன என்று செய்தியாளர்கள் கேட்டனர்.

“இந்தக் கேள்விகள் பலமுறை எழுந்துள்ளன. பல மாநிலங்களின் உயர் நீதிமன்றங்கள் மற்றும் உச்ச நீதிமன்றம், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் குறித்த வழக்குகளை விசாரித்து, குற்றச்சாட்டுகளில் உண்மையில்லை என்று கூறி அனைத்தையும் நிராகரித்துள்ளன” என்று அவர் கூறினார்.

இவிஎம் மூலம் நடத்தப்பட்ட சில தேர்தல்களில் ஆளும் கட்சியினரும் தோல்வியடைந்ததை சுட்டிக்காட்டிய தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார், இவிஎம் குறித்த ஒரு புத்தகத்தையும் செய்தியாளர்களிடம் காட்டினார்.

“இவிஎம் தொடர்பான 40க்கும் மேற்பட்ட வழக்குகளில் நாட்டின் நீதிமன்றங்கள் வழங்கிய தீர்ப்புகள் குறித்து இதில் விரிவாக கூறப்பட்டுள்ளது. நிபுணர்கள் இந்த புத்தகத்தையும் படிக்க வேண்டும்” என்றார்.

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் நம்பகத்தன்மை

பட மூலாதாரம், Getty Images

வாக்குச்சாவடி வாரியாக தேர்தல் முடிவுகள் வெளியாவது ஏன்?

ஒரு வாக்குச்சாவடிக்கும் ஒதுக்கப்பட்டுள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் முடிவுகளின் அடிப்படையில் எந்தச் சாவடியில் எந்த வேட்பாளர் அதிகமான அல்லது குறைவான வாக்குகளைப் பெற்றுள்ளார் என்பதை அறிய முடியும், அதற்கு பதிலாக ஒரு தொகுதியின் அனைத்து வாக்குச்சாவடிகளின் முடிவுகளையும் ஒரே நேரத்தில் டோட்டலைசர் (Totaliser) என்ற கருவி மூலம் தெரிந்து கொள்ள முடியும்.

அந்த கருவியை ஏன் பயன்படுத்துவதில்லை என்று தலைமை தேர்தல் ஆணையரிடம் கேட்கப்பட்டது.

அதற்கு அவர், “பூத் வாரியாக முடிவுகளை அறிவது நல்லதல்ல என்பதை நானும் ஒப்புக்கொள்கிறேன். ஆனால், பெரும்பாலான மின்னணு இயந்திரங்களை டோட்டலைசர் சாதனத்துடன் இணைத்து முடிவுகளை வெளியிடுவது கடினம். ஏனெனில் மின்னணு இயந்திரத்தின் செயல்திறன் குறித்து பலர் கேள்வி எழுப்புகின்றனர். டோட்டலைசர் சாதனம் மூலம் எண்ணினால், மேலும் பல குற்றச்சாட்டுகள் எழும்” என்றார்.

மேலும் புதிய தொழில்நுட்பத்தை இந்திய அரசியல் அமைப்பு வரவேற்க வேண்டும் என்றும், அதற்கான நேரம் வரும் என்று தான் நம்புவதாகவும் கூறினார் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார்.

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் நம்பகத்தன்மை

பட மூலாதாரம், ECI

படக்குறிப்பு,

தேர்தல் ஆணையர் பதவியில் இருந்து அருண் கோயல் சமீபத்தில் ராஜினாமா செய்தார்.

அருண் கோயல் ராஜினாமா

கடந்த வாரம் தேர்தல் ஆணையர் அருண் கோயல் ராஜினாமா செய்தார். இது குறித்த செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்த தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார், “எங்கள் குழுவின் முக்கியமான நபராக அவர் இருந்தார். அவருடன் இணைந்து பணியாற்றியதில் மிகவும் மகிழ்ச்சி. ஆனால் ஒவ்வொருக்கும் சொந்த முடிவுகள் எடுக்க வெவ்வேறு காரணங்கள் இருக்கும். அதை மதிக்க வேண்டும்.

தேர்தல் ஆணையத்தில் கருத்து வேறுபாடுகள் எப்போதும் இருக்கும். அனைவரின் கருத்துக்கும் நாங்கள் மதிப்பளிப்போம்” என்றார்.

தேர்தல் விதிமுறை மீறல்கள்

“தேர்தல் விதிமுறைகளை அமல்படுத்துவது தான் தங்கள் முன்னால் உள்ள நான்கு சவால்களில் மிக முக்கியமான சவால்” என்றார் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார்.

பிரதமர் நரேந்திர மோதி மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மீது தேர்தல் விதிமுறை மீறல்கள் குறித்து அதிக புகார்கள் உள்ளன, ஆனால் எதிர்க்கட்சித் தலைவர்களைப் போல அவர்கள் மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என்று ஒரு பத்திரிகையாளர் அவரிடம் கேட்டார்.

இதற்கு ராஜீவ்குமார் தெளிவான பதில் அளிக்கவில்லை.

“நீங்கள் இப்படிக் கேள்விகள் கேட்பதற்கு முன்னால், கடந்த 11 தேர்தல்களின் போது வந்த புகார்களுக்கு நாங்கள் அளித்த பதில்களையும் பார்க்கவும்” என்றார்.

“தேர்தல் விதிமுறை மீறல் குறித்து புகார் வந்தவுடன் அதற்கு உரிய பதில் அளிப்போம். பிரசாரம் செய்பவர் யாராக இருந்தாலும், உரிய நடவடிக்கை எடுப்போம்,” என்றார்.

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் நம்பகத்தன்மை

பட மூலாதாரம், Getty Images

ஜம்மு காஷ்மீர் சட்டசபைக்கு ஏன் தேர்தல் இல்லை?

ஜம்மு காஷ்மீரில் சட்டசபை தேர்தல் நடத்தாததற்கு தலைமை தேர்தல் ஆணையர் இரண்டு காரணங்களை கூறியுள்ளார்.

ஒன்று, “ஜம்மு காஷ்மீர் மறுசீரமைப்பு சட்டம் 2019 அமலுக்கு வந்தது. அப்போது காஷ்மீர் மாநிலத்தில் 107 சட்டமன்ற தொகுதிகள் இருந்ததன. அதில் 47 தொகுதிகள் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் உள்ளன. பின்னர் 2022இல் மீண்டும் எல்லை நிர்ணயம் செய்யப்பட்டு இடங்களின் எண்ணிக்கை 107இல் இருந்து 114ஆக உயர்த்தப்பட்டது. அந்த தொகுதிகளுக்கும் இடஒதுக்கீடு வழங்க வேண்டும்.

மறுசீரமைப்புச் சட்டம் கடந்த டிசம்பரில் திருத்தப்பட்டது. ஆனால் மக்களவை தேர்தலுக்கான ஏற்பாடுகளில் தேர்தல் கமிஷன் ஏற்கனவே முழுவீச்சில் ஈடுபட்டு வருவதால், காஷ்மீர் சட்டசபை தேர்தலை இப்போதைக்கு நடத்த முடியாது” என தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ்குமார் தெரிவித்தார்.

இரண்டாவது காரணமாக, “நாங்கள் காஷ்மீர் மக்களைச் சந்திக்கச் சென்றோம். மக்களவை தேர்தலுடன், தங்கள் மாநிலத்தில் சட்டசபை தேர்தலையும் நடத்த, அங்குள்ள அரசியல் கட்சிகள் விரும்பின. ஆனால், அது சாத்தியமில்லை என அரசு நிர்வாகம் தெரிவித்துள்ளது. ஏனெனில் குறைந்தது 1,000 வேட்பாளர்களாவது சட்டசபை தேர்தலில் போட்டியிட வாய்ப்புள்ளது. அவர்களின் நலனுக்காக பாதுகாப்புப் படையினர் அதிக அளவில் குவிக்கப்பட வேண்டும்” எனக் கூறினார்.

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் நம்பகத்தன்மை

பட மூலாதாரம், Getty Images

பணம் கைப்பற்றப்பட்டால் என்ன நடவடிக்கை?

சமீபத்தில் நடந்த 11 மாநில தேர்தல்களில், ​​சுமார் 3,500 கோடி ரூபாய் ரொக்கமாக பறிமுதல் செய்யப்பட்டதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இது குறித்து செய்தியாளர் ஒருவர், இவ்வளவு பணம் எப்போது பிடிபட்டது, யார் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என்று கேட்டார்.

ஆனால், அந்த தகவலை தலைமை தேர்தல் ஆணையர் வெளியிடவில்லை. இதற்கு நேரடியாக பதில் அளிக்காமல், 2019 தேர்தலின்போது தமிழகத்தின் வேலூரில் பிடிபட்ட பணம் குறித்து பேசினார் ராஜீவ்குமார்.

“பல மாநிலங்களில் பணம் மிகவும் சக்தி வாய்ந்த தேர்தல் கருவியாக மாறிவிட்டது. இந்த பிரச்னையை நாங்கள் தீவிரமாக அணுகி வருகிறோம். சமீபத்தில் நடந்த தென் மாநிலத் தேர்தல்களில் இதில் அதிக கவனம் செலுத்தப்பட்டது. இந்த விஷயம் குறித்து யாரும் கவலைப்படத் தேவையில்லை,” என பதிலளித்தார்.

Facebook
Facebook
fb-share-icon
Telegram
WhatsApp
TekTamil.com
Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by TekTamil.
நன்றி
Publisher: பிபிசிதமிழ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *