
“காதலின் தார்மீக அடிப்படையிலான தரத்தைப் பொருத்தவரை, அது ஒரு தூண்டுதலே தவிர வேறில்லை என்று என்னால் சொல்ல முடியும். ஆனால் இது விலங்குகளின் உள்ளுணர்வு அல்ல. இது மிகவும் இனிமையான மனித உணர்வு. காதல் ஒருபோதும் மிருகத்தின் உணர்வாக இருக்க முடியாது. அன்பு மனிதனின் தன்மையை உயர்த்துகிறது. உண்மையான காதல் தோல்வியடையாது. இது தானாகவே உருவாகி அதன் சொந்த வழியில் வருகிறது. ஆனால் அது எப்போது உருவாகும் என்று யாராலும் சொல்ல முடியாது.
“ஒரு இளைஞனும் இளம் பெண்ணும் ஒருவரையொருவர் நேசிக்க முடியும் என்று என்னால் சொல்ல முடியும். அவர்கள் தங்கள் தூண்டுதல்களை விட உயர்ந்து தங்கள் அன்பின் உதவியுடன் தங்கள் நல்லறிவை பராமரிக்க முடியும்.”
நாடாளுமன்றத்தில் வெடிகுண்டு வீசியதற்கு முன்பு சுக்தேவுக்கு பகத்சிங் இந்தக் கடிதத்தை எழுதியிருந்தார். இந்த கடிதம் டெல்லி சீதாராம் பஜாரில் உள்ள வீட்டில் இருந்து எழுதப்பட்டது. சிவ வர்மா (பகத்சிங்கின் புரட்சியாளர் நண்பர்) இந்தக் கடிதத்தை சுக்தேவுக்கு அனுப்பியிருந்தார்.
லாகூர் சதி வழக்கில் சுக்தேவ் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டபோது இந்தக் கடிதம் கண்டுபிடிக்கப்பட்டது.
‘மெயின் பகத் சிங் போல் ரஹா ஹூன்’ என்ற புத்தகத்தில், எழுத்தாளரும் மூத்த பத்திரிகையாளருமான ராஜ்சேகர் வியாஸ், “பகத் சிங்கால், ஒரு அழகான பெண் புரட்சி நடத்தும் நிலைக்கு அருகில் நெருங்கினார். நாடாளுமன்ற கட்டடத்தின் மீது வெடிகுண்டு வீசும் திட்டம் தொடர்பான கூட்டம் நடந்து கொண்டிருந்தபோது, அந்தப் பணியில் யார் ஈடுபடுவது என்பது உள்ளிட்ட விவரங்கள் ஆலோசிக்கப்பட்டன. அப்போது புரட்சியாளர்களின் தேவையைக் காரணம் காட்டி வெடிகுண்டு வீசும் பொறுப்பை பகத் சிங்கிற்கு அளிக்கும் முடிவை யாரும் ஆதரிக்கவில்லை. அப்போது பகத்சிங்கின் நெருங்கிய நண்பர் சுக்தேவ், ஒரு பெண்ணுக்காக பகத்சிங் தனது மரணத்தைக் கண்டு பயந்ததாக கிண்டல் செய்தார்,” என எழுதியுள்ளார்.
“சுக்தேவ் இப்படி கிண்டல் செய்த போது, பகத்சிங்கின் இதயம் உருகியது. மீண்டும் புரட்சியாளர்களின் கூட்டத்தை கூட்டி, நாடாளுமன்றத்தில் குண்டுகளை வீசும் பொறுப்பை ஏற்றுக்கொண்டார்.”

பட மூலாதாரம், Getty Images
நாட்டின் சுதந்திரத்துக்காக உயிர்த் தியாகம் செய்த பகத் சிங் மக்களின் மனதில் நீங்கா இடம்பெற்றுள்ளார்.
சுக்தேவின் குற்றச்சாட்டுகளுக்கு பகத்சிங் எப்படி பதிலளித்தார்?
பகத் சிங் பற்றி ஆராய்ச்சி செய்யும் ஆராய்ச்சியாளர்களின் கூற்றுப்படி, சுக்தேவ் கூறிய குற்றச்சாட்டுகளால் பகத் சிங் அவர் மீது கோபமடைந்தார். அவரும் கோபமடைந்து பல நாட்களாக இருவரும் ஒருவருக்கொருவர் பேசிக் கொள்ளாமல் இருந்தனர்.
இதைத் தொடர்ந்து அவர் சுக்தேவுக்கு கடிதம் எழுதினார். இக்கடிதம் பின்னாளில் ‘காதல் நம்மை உயர்த்துகிறது’ என்ற தலைப்பில் பிரபலமானது.
பகத் சிங் சுக்தேவுக்கு எழுதிய கடிதத்தில்,”நான் வெளிப்படையாக நடந்துகொள்ளப்பட்டது வேறுமாதிரி புரிந்துகொள்ளப்பட்டது. நான் அதை ஒப்புக்கொண்டது எனது பலவீனமாக எடுத்துக்கொள்ளப்பட்டது.” என எழுதப்பட்டிருந்தது.
“இந்த மகிழ்ச்சியான சூழ்நிலையில், நாம் விவாதித்துக்கொண்டிருக்கும் கேள்வி தொடர்பாக எனது நிலைப்பாட்டைத் தெரிவிக்காமல் இருக்க முடியாது என்று நான் சொல்ல வேண்டும். நான் நம்பிக்கைகள் மற்றும் ஆசைகள் நிறைந்தவன். வாழ்க்கையின் மகிழ்ச்சியான தருணங்கள் தொடர்பான எண்ணங்களில் நான் மூழ்கிவிட்டேன். ஆனால் தேவைப்பட்டால் இதையெல்லாம் விட்டுவிட நான் தயார். இது உண்மையிலேயே ஒரு தியாகம்.”
இந்தக் கடிதத்தில் மேலும் எழுதும் பகத் சிங், “ஒருவரின் குணாதிசயத்தைக் குற்றம் சாட்டுவதற்கு முன், காதல் எந்த மனிதனுக்கும் உதவியிருக்கிறதா என்று யோசிக்க வேண்டும். எனவே எனது பதில் ஆம். நீங்கள் மஜ்ஜினியப் பற்றிப் (இத்தாலியை ஒருங்கிணைக்க முயன்ற எழுத்தாளர் மற்றும் இத்தாலிய புரட்சியாளர்) படித்திருக்க வேண்டும். அவரது முதல் கிளர்ச்சியிலேயே அவருக்குப் பைத்தியம் பிடித்திருக்கவேண்டும் அல்லது தற்கொலை செய்துகொண்டிருக்கவேண்டும். ஆனால் அவரது காதலியின் கடிதம் தான் அவருக்கு மீண்டும் ஊக்கம் அளித்தது.
“நான் ஒருவரின் காதலை நிராகரித்தேன். அது ஒரு லட்சிய யுகமாகவும் இருந்தது. ஆனால் காதலின் உணர்வு வலுவாக இருக்க வேண்டும். அது ஒரு நபர் என்பதை விட உயர்ந்து உலகம் முழுவதும் பகிர்ந்து கொள்ள முடியும் என்ற அளவுக்கு இருக்கவேண்டும்.”
இந்தக் கடிதத்தைப் படிப்பதன் மூலம் பகத் சிங்கின் கதாப்பாத்திரத்தின் நுட்பமான உணர்வுகளை உணர முடியும். அவர் ஒரு புரட்சியாளர் ஆனால் மனித உணர்வுகளில் விடுபடவில்லை.
ஆனால், அந்தக் கடிதத்தில் எந்த இடத்திலும் அவர் அந்தப் பெண்ணை காதலிக்கிறாரா இல்லையா என்பது பற்றி எதையும் குறிப்பிடவில்லை.
அந்த பெண்ணின் பெயரையும் அவர் குறிப்பிடவில்லை. ஆனால் ஒரு புரட்சியாளருக்கு காதல் எப்போதும் பொருந்தாது என்று அவர் வலியுறுத்துகிறார்.

பட மூலாதாரம், HARPER COLLINS
பகத்சிங்கைக் கேலி செய்யக் காரணமான பெண் யார்?
மறைந்த பத்திரிக்கையாளரும் எழுத்தாளருமான குல்தீப் நய்யார் தனது சர்பரோஷி கி தமன்னா – பகத் சிங்கின் வாழ்க்கை வரலாறு என்ற புத்தகத்தில், “சுக்தேவ், பகத்சிங்கின் இதயத்தை ஆழமாக காயப்படுத்தினார். இப்போது நீங்கள் ஒரு பெண்ணின் அன்பில் சிக்கியிருப்பதால் புரட்சிக்கு எந்த பயனும் இல்லை என்று அவர் கூறினார்,” என எழுதியுள்ளார்.
“காவல் துறை துணை கண்காணிப்பாளர் ஜான் சாண்டர்ஸ் கொலை செய்யப்பட்ட பிறகு பகத்சிங்கை காவல்துறையினரிடம் இருந்து காப்பாற்ற லாகூரிலிருந்து கல்கத்தாவுக்கு ரயிலில் பயணம் செய்தவர் துர்கா தேவியை சுக்தேவ் குறிப்பிடுகிறார்,” என அவர் அந்த புத்தகத்தில் குறிப்பிடுகிறார்.
“துர்காதேவிக்கு திருமணம் நடந்தது உண்மைதான். அவருக்கு ஒரு மகனும் இருந்தார். ஆனால் அவரும், பகத் சிங்கும் இணைந்து ஒரு புரட்சிக்காக உழைத்தவர்கள். புரட்சியின் போது இருவரும் இணைந்தே சுக-துக்கங்களைப் பகிர்ந்துகொண்டனர். அப்படியானால் இருவருக்கும் இடையே வேறு ஏதாவது உறவு இருந்ததா? பகத் சிங் இதைப் பற்றி எதுவும் கூறவில்லை,” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், “சுக்தேவ் சுட்டிக்காட்டியதை வேறு எந்த புரட்சியாளர்களும் சொல்லவில்லை. அவருடன் தந்தையைப் போல் பழகிய சந்திரசேகர் ஆசாத் கூட அதைச் சொல்லவில்லை. காதல் என்பது விமர்சிக்குமளவுக்கான அல்லது கேலி செய்யக்கூடிய உறவு அல்ல என்று ஆசாத் உணர்ந்திருக்கலாம்,” என எழுதியுள்ளார்.
“சுக்தேவின் குற்றச்சாட்டுகளுக்குப் பிறகு, பகத் சிங் என்ன செய்கிறார் என்பதை ஆசாத் புரிந்து கொள்ள முடிந்தது.”
குல்தீப் நய்யார் துர்காதேவியை சந்தித்தார். ஆனால் இந்த காதல் விவகாரம் தொடர்பாக அவருடன் எந்த உரையாடலும் நடந்ததாகவோ, அவர் விளக்கம் அளித்ததாகவோ புத்தகத்தில் எந்த தகவலும் இல்லை.
பகத்சிங்குடன் லாகூரிலிருந்து கல்கத்தாவுக்கு ரயிலில் சென்ற பரபரப்பான பயணத்தைப் பற்றிய தகவலை துர்காதேவி அவருடன் பகிர்ந்துகொண்டதாக மட்டுமே அந்த புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பட மூலாதாரம், Getty Images
புரட்சிப் பாதையில் பகத் சிங் பயணித்துக்கொண்டிருந்த போது அவரைப் பற்றிய ஆதாரமற்ற கதைகளும் புனையப்பட்டிருந்தன.
பகத் சிங்கின் மருமகள் வீரேந்திர சிந்துவும் ‘யுக்திரிஷ்டா பகத் சிங் அண்டு ஹிஸ் மிருத்யுஞ்சய் புர்கா’ என்ற புத்தகத்தில் இதைப் பற்றி எந்த விவரத்தையும் குறிப்பிடவில்லை.
நாடாளுமன்றத்தில் வெடிகுண்டு வீசப் போகும் புரட்சியாளர்கள் குழுவில் பகத்சிங்கின் பெயர் இல்லாததால் பகத்சிங்குக்கும் சுகதேவுக்கும் இடையே சண்டை நடந்ததாகவும், சுக்தேவ் அவரை கிண்டல் செய்ததாகவும் வீரேந்திர சிந்து தனது புத்தகத்தில் எழுதியுள்ளார். ஆனால் அவர் அதை ஏற்கவில்லை. பகத் சிங் ஒரு பெண்ணை நேசித்ததால் அவருக்கு உயிர் பயம் ஏறப்ட்டதாக சுக்தேவ் குற்றம் சாட்டினார் என எழுதப்பட்டுள்ளது.
இருப்பினும், சுக்தேவுக்கு பகத்சிங் எழுதிய கடிதத்தில், காதலின் உன்னதம் குறித்து பகத்சிங் எழுதியிருந்ததாகக் குறிப்பிட்டுள்ளார்.
ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் முன்னாள் பேராசிரியர் சமன் லாலும், பகத் சிங்கைப் பற்றி ஆராய்ச்சி செய்து அவரைப் பற்றி புத்தகம் எழுதியுள்ளார். பிபிசி குஜராத்தியிடம் அவர் பேசுகையில், பகத் சிங் காதலித்தார் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை என்றும் அது குறித்து அதிகாரப்பூர்வ தகவலும் இல்லை என்றும், உயிருடன் இருந்தவர்கள் இந்த விஷயம் குறித்துப் பேசியிருக்கலாம் என்றும் அவர் கூறியுள்ளார்.
சமன்லால் கூறும்போது, “சில புத்தகங்களில் சுக்தேவ் மற்றும் பகத் சிங்கிற்கு இடையே இந்தப் பிரச்னையில் சண்டை நடந்ததாகக் குறிப்பிடப்பட்டிருப்பது உண்மைதான். சுக்தேவ் ஒரு கடுமையான நபர். அவர் கூர்மையான வார்த்தைகளைப் பயன்படுத்தினார். ஆனால், துர்காதேவியுடன் பகத்சிங் காதல் கொண்டிருந்தார் என்று பொருள் கொள்வது பொருத்தமாக இல்லை,” என்றார்.
“பல புரட்சிகர பெண்கள் பகத்சிங்கால் ஈர்க்கப்பட்டனர். பகத் சிங் ஒரு திறமையான, தர்க்கரீதியான, புத்திசாலி என்பதுடன் அவர் ஒரு கட்டுப்பாடான நபராக இருந்துள்ளார். அவர் பெண்களிடம் கண்ணியமாக நடந்து கொண்டார், கண்ணியமாக இருந்தார் என்பதே உண்மை,” என எழுதியுள்ளார்.
“மற்ற புரட்சியாளர்களான படுகேஷ்வர் தத் மற்றும் ஜெய்தேவ் கபூர் ஆகியோரின் சகோதரிகளுக்கு பகத் சிங் கடிதம் எழுதினார் என்றால், அவர்களுடனும் அவருக்கு ஏதேனும் காதல் உணர்வு இருந்தது என்று பொருள் கொள்ள வேண்டுமா? அது போல் இல்லை.”
இது குறித்து பல புத்தகங்களில் கூறப்பட்டுள்ளதாகவும், ஆனால் இதற்கு காரணம் அவர்களின் கதையை சுவாரஸ்யமாக அளிப்பதற்காக சிலர் இதுபோன்ற பரபரப்பு தகவல்களை அளித்துள்ளனர் என்றும், இது மிகவும் ஆட்சேபனைக்குரியது என்று சமன்லால் குற்றம் சாட்டியுள்ளார்.
சைமன் கமிஷன் 30 அக்டோபர் 1928 அன்று லாகூர் சென்றடைந்தது. கமிஷனுக்கு எதிராக லாலா லஜபதி ராயை ஆதரிக்க பகத் சிங் முடிவு செய்தார். போராட்டக்காரர்கள் மீது தடியடி நடத்த காவல் கண்காணிப்பாளர் ஜெ. ஏ. ஸ்காட் உத்தரவிட்டார். லாலாஜியை தடிகளால் இரக்கமில்லாமல் போலீசார் அடித்தனர். காயமடைந்த லாலாஜி 1928 நவம்பர் 17 அன்று உயிரிழந்தார்.
1928 ஆம் ஆண்டு டிசம்பர் 10 ஆம் தேதி இரவு புரட்சியாளர்களின் கூட்டம் நடைபெற்றது. அக்கூட்டத்திற்கு துர்காதேவி தலைமை தாங்கினார். ‘லாலாஜியின் மரணத்திற்குப் பழிவாங்குவது’ என்று அப்போது முடிவு செய்யப்பட்டது. ஸ்காட்டின் கொலைக்கு யார் பொறுப்பேற்பார்கள் என்று கேட்டபோது துர்காதேவி முதலில் கையை உயர்த்தினார். ஆனால் புரட்சியாளர்கள் பகத் சிங், சந்திரசேகர் ஆசாத், ராஜ்குரு மற்றும் ஜெய்கோபால் ஆகிய நான்கு பேரிடம் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டது.
டிசம்பர் 17, 1928 இல் ஸ்காட்டைக் கொல்ல ஒரு திட்டம் வகுக்கப்பட்டது. ஆனால் ஜெய்கோபாலின் தவறு காரணமாக ஸ்காட்டுக்குப் பதிலாக உதவிக் காவல் கண்காணிப்பாளர் ஜே.பி சாண்டர்ஸ் கொல்லப்பட்டார். புரட்சியாளர்கள் தப்பி ஓடினர். அவர்களைத் துரத்திக் கொண்டிருந்த ஒரு இந்திய தலைமைக் காவலரும் துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டார்.
பகத்சிங் மறைந்திருந்த போது துர்கா தேவியை இருந்த இடத்துக்குச் சென்றார். அவர் புரட்சியாளர்களின் கூட்டாளியான பகவதி சரண் வோஹ்ராவின் மனைவி. ஆனால் துர்காதேவி பகத் சிங்கின் மனைவியானால் அவர் தப்பிக்க உதவமுடியும் என்று சுக்தேவ் திட்டமிட்டார்.
ஏற்கனவே ஒரு வழக்கில் காவல்துறையினரிடம் இருந்து தப்பி ஓடிய துர்காதேவியின் கணவர் காங்கிரஸ் மாநாட்டில் கலந்து கொள்ள கல்கத்தா சென்றிருந்தார். இந்நிலையில் துர்காதேவியும் கல்கத்தாவுக்குப் பயணப்பட்டார். துர்காதேவி ‘சுஜாதா’வாகவும், பகத்சிங் ‘ரஞ்சித்’ ஆகவும் மாறினர். துர்காதேவியின் மூன்று வயது மகன் சச்சியும் உடன் இருந்தான். ராஜகுரு அவருடைய வேலைக்காரரானார். ‘கணவன்’ ஐரோப்பிய உடையையும், ‘மனைவி’ விலை உயர்ந்த சேலையும், ஹை ஹீல்ஸ் செருப்பும் அணிந்திருந்தார்.
இருவரும் ரயிலில் அமர்ந்தனர் ஆனால் துர்காதேவி அவர்களை கான்பூரில் இறங்குமாறு அறிவுறுத்தினார். இருவரும் கான்பூரில் இறங்கி ஹோட்டலில் தங்கினர்.
துர்காதேவி தன் கணவனுக்கு ‘தன் சகோதரனுடன் கல்கத்தா வருகிறேன்’ என்று தந்தி அனுப்பினார். துர்காதேவியின் கணவர் பகவதி சரண், துர்காதேவிக்கு உண்மையில் சகோதரர் யாரும் இல்லாததால், தந்தி வந்ததும் ஆச்சரியமடைந்தார்.
“துர்காதேவியுடன் இரண்டு நாள் பழகியபோது பகத்சிங் வித்தியாசமான ஒன்றை அனுபவித்தார். துர்காதேவி நன்றாக எதையும் காது கொடுத்துக் கேட்பவராக இருந்தார். பகத்சிங் தனது வாழ்க்கை மற்றும் நம்பிக்கைகள் அனைத்தையும் துர்காதேவியிடம் வெளிப்படையாகக் கூறினார்
அவர் தனது எண்ணங்கள், உணர்வுகள் மற்றும் அச்சங்களை துர்கா தேவியுடன் பகிர்ந்து கொள்ள விரும்புவது போல் தோன்றியது. பகத்சிங்கின் வித்தியாசமான ஆளுமையை அறிந்து துர்காதேவியும் திகைத்தார். முன்னதாக, பகத்சிங்கை ஒரு புரட்சியாளர் என்று அவர் அறிந்திருந்தார். அவர் எப்போதும் இதயத்தின் உணர்வுகளைப் பற்றி யோசிக்காமல், மூளையின் சிந்தனையைப் பற்றியே யோசித்ததாக துர்காதேவி ஏற்கெனவே ஒரு எண்ணத்தைக் கொண்டிருந்தார்,” குல்தீப் நய்யார் எழுதுகிறார்.
மேலும், பகத்சிங் முதலில் துர்காதேவியை தனது சக புரட்சியாளரின் மனைவியாக அறிந்திருந்தார் என்றும் அவர் குறிப்பிடுகிறார்.
லாலா லஜபதி ராயின் மரணத்திற்கு பழிவாங்க ஸ்காட்டை படுகொலை செய்யும் வரலாற்று முடிவை எடுத்த புரட்சியாளர்களின் கூட்டத்தின் தலைவராக பின்னர் உருவானபோது, அவர் வேறு வடிவத்தில் தோன்றினார். அதில் அவர் ஒரு பாதுகாவலராக பகத்சிங்கை பிரிட்டிஷ் காவல்துறையின் பிடியில் இருந்து காப்பாற்றினார். ஆனால் இப்போது இந்த தனித்துவமான உறவு நெருக்கமான உறவாக மாறிவிட்டது. இந்த நெருக்கம் பயத்தை ஏற்படுத்தியது போலவே ஒரு உற்சாகத்தையும் கொடுத்தது. இதுவரை கண்டிராத புதிய அனுபவமாக இருந்தது.”

பட மூலாதாரம், Getty Images
பகத் சிங்கின் வாழ்க்கை வரலாறு குறித்து ஏராளமான புத்தகங்கள் எழுதப்பட்டிருந்தாலும், உண்மையான தகவல்கள் அவற்றில் இடம்பெறவில்லை என பல நூலாசிரியர்கள் வாதிடுகின்றனர்.
இந்த உறவுகளைப் பற்றி சுக்தேவ் பொய்களைப் பரப்பியதாக எழுந்த குற்றச்சாட்டு
யஷ்பால் தனது சிங்காவ்லோகன் புத்தகத்தின் பக்கம் எண் 180 இல், “ஒரு பெண்ணின் மீதான பாசம் என்ற போர்வையில் புரட்சியாளர்கள் மீதான தனது பொறுப்பை பகத்சிங் மறந்துவிட்டதாக சுக்தேவ் அவரிடம் தெளிவுபடுத்தினார். இருப்பினும் எந்த பெண்ணின் பெயரையும் அவர் பயன்படுத்தவில்லை,” என எழுதியுள்ளார்.
“யஷ்பால் மற்றும் சுக்தேவ்ராஜ் போன்ற எழுத்தாளர்கள் சுக்தேவிற்காக பொய் பிரச்சாரம் செய்தனர். மேலும் பகத் சிங்கிற்கும் துர்கா தேவிக்கும் இடையிலான புனிதமான உறவையும் கேள்விக்குள்ளாக்கினர்,” என்று மத்ரதாஸ் குறிப்பிடுகிறார்.
சுக்தேவ் ராஜ் மீது குற்றம் சாட்டும் அவர், “அவரது புத்தகமான ‘ஜப் ஜ்யோத் ஜலி’யில், சுக்தேவை துர்காதேவிக்கு எதிராக ஒரு தன்னிச்சையான பிரச்சாரகர் என்று விவரித்தார்,” என எழுதியுள்ளார். சுக்தேவ் ராஜ் புரட்சிகர கட்சியின் உறுப்பினராகவும் புரட்சியாளர் சந்திரசேகர் ஆசாத்தின் அறிவுரையின் கீழ் செயல்பட்டு வந்தவராகவும் இருந்தார்.
இது குறித்து எழுதியுள்ள மத்ரதாஸ், “நாடாளுமன்ற குண்டுவெடிப்பு சம்பவத்தில் சுக்தேவ் ராஜ் மற்றும் யஷ்பால் ஆகியோர் சிறு பங்கு கூட வகிக்கவில்லை. அப்படியிருக்க துர்காதேவி மற்றும் பகத்சிங்கை அவதூறாகப் பேசியவர் சுக்தேவ் என்று அவர்களுக்கு எப்படித் தெரியும்,” என்று எழுதினார்.
இந்த விஷயத்தில் தான் ஷிவ் வர்மாவுடன் (பகத்சிங்கின் சக புரட்சியாளர்) உரையாடியதாக மத்ரதாஸ் எழுதுகிறார். துர்காதேவி, பகத் சிங் மற்றும் சுக்தேவ் இருவரையும் சமமாக நடத்தினார் என்று அவர் கூறினார்.
துர்காதேவியைப் பற்றி சுக்தேவ் ராஜுக்கு எந்த விவரங்களும் தெரியாததால், அவர் எழுதிய எதையும் நம்புவது உண்மையில் தவறு என்று ஷிவ் வர்மா தெளிவாகக் கூறியுள்ளார்.
சுக்தேவ் ராஜ் எழுதிய ஒரு சம்பவத்தை மேற்கோள் காட்டும் மத்ராதாஸ், “பகத்சிங் சுக்தேவிடமிருந்து இந்த கடிதத்துடன் துர்காதேவியின் வீட்டிற்கு சென்றார். இந்தக் கடிதத்தை கையில் கொடுத்துவிட்டு அழத் தொடங்கினார். அவர் துர்காதேவியின் கணவர் பகவதி சரணுடன் பேச விரும்பினார். ஆனால் அவர் தூங்கிக் கொண்டிருந்தார். எனவே பகத் சிங் அவருடன் பேசாமல் வெளியேறினார்,” என எழுதுகிறார்.
துர்காதேவியிடம் பேசிய பகத் சிங், “இவர்கள் (சுக்தேவ் உட்பட) எந்த காரணமும் இல்லாமல் இரவும் பகலும் சேறு பூசுவதில் ஈடுபட்டுள்ளனர். அதே நேரம், அவர் (பகவதி சரண்) அத்தகைய உறவுகளைப் பற்றி கேள்விப்பட்ட பிறகும், உண்மை அவருக்குத் தெரியும் என்பதால், ஒருபோதும் வருத்தப்படாத கடவுளாக இருக்கிறார்,” எனத் தெரிவித்துள்ளார்.
மத்ரதாஸ் பாஞ்சன்யாவின் ஆசிரியரான பச்சனேஷ் திரிபாதி, துர்காதேவியின் நேர்காணலை மேற்கோள் காட்டி, “இந்த நேர்காணலில், யஷ்பால் மற்றும் அவரைப் போன்றவர்களிடம் போதுமான ஆதாரங்கள் இல்லை. மற்ற புரட்சியாளர்களை விட அவர் தாழ்ந்தவர் என்று நிரூபிக்க அவர்களுக்கு உரிமை இல்லை. இதுபோன்ற அவதூறுகளைப் பேசுவது அநாகரீகமானது,” என்று கூறினார்.

பட மூலாதாரம், NATIONAL BOOK TRUST
துர்கா பாபி என்று அழைக்கப்படும் துர்காதேவி, ஒரு குஜராத்தி குடும்பத்தில் அலகாபாத்தில் அக்டோபர் 7, 1907 அன்று பிறந்தார்.
குஜராத்தி குடும்பத்தில் பிறந்த துர்கா தேவி
துர்கா பாபி என்று அழைக்கப்படும் துர்காதேவி, ஒரு குஜராத்தி குடும்பத்தில் அலகாபாத்தில் அக்டோபர் 7, 1907 அன்று பிறந்தார்.
இவரது தந்தையின் பெயர் பங்கா பிஹாரி பட். இவரது தாயார் பெயர் யமுனாதேவி. அவருடைய முன்னோர்கள் ஏற்கனவே குஜராத்தில் இருந்து ஆக்ராவில் குடியேறியவர்கள். பிஹாரி பாங்காவில் மாவட்ட நீதிபதியாக பணியாற்றி வந்தார். இவர் குஜராத் மாநிலம் வாட்நகரைச் சேர்ந்த நாகர் பிராமணர்.
லாகூரில் வசித்த குஜராத்தி பிராமணரான பகவதி சரண் வோஹ்ராவுக்கு துர்காதேவி மணம் முடித்துக்கொடுக்கப்பட்டார். திருமணமானபோது அவருக்கு 11 வயதுதான். பகவதி சரணின் முன்னோர்கள் குஜராத்தில் இருந்து ஆக்ராவிற்கும் பின்னர் லாகூருக்கும் குடிபெயர்ந்த விஸ்நகரி பிராமணர்கள்.
டிசம்பர் 3, 1925 இல் அவர்களின் மகன் அங்கு பிறந்தார். அவருக்கு ஷாசி என்று பெயர்.
துர்கா பாபியின் வாழ்க்கை வரலாற்று நூலின் ஆசிரியர் மல்விந்தர்ஜித் சிங் பராய்ச், “துர்கா பாபி பகத் சிங்கைப் பற்றி அவரிடம் ஏற்கெனவே பேசியிருந்தார். அப்போது, அவர் ஒரு சொந்த சகோதரர் அல்லது மகனைப் போன்றவர் தான் என தெளிவாகத் தெரிவித்திருந்தார்,” என எழுதியுள்ளார்.
1921 ஆம் ஆண்டு அவர் தனது கிராமத்தில் உள்ள பால் பண்ணையில் இருந்து பால் கொண்டு வந்ததில் இருந்தே அவரை தனக்குத் தெரியும் என்றும், அவர் தனது அன்பின் மூலம் அனைவரின் இதயங்களிலும் தனி இடத்தைப் பிடித்துள்ளார் என்றால் அது மிகையாகாது என்றும் துர்கா பாபி கூறுகிறார்.
“ஏப்ரல் 8, 1929 அன்று நான் அவரை கடைசியாக சந்தித்தபோது, அவர் கண்களில் பயம் இல்லை. அவரது மரணதண்டனை பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தின் அடித்தளத்தை உலுக்கியது.”
“அவர் எப்போதும் தனது புரட்சிகர கணவர் பகவதி சரண் வோராவை ஆதரித்தார்.”
பிபிசி குஜராத்தி மல்விந்தர்ஜித் சிங்கிடம் பேச முயன்றது. பகத் சிங் குறித்து ஆய்வு செய்து அவர் ஒரு புத்தகமும் எழுதியுள்ளார். உடல்நிலை சரியில்லாததால், தனது சக ஊழியர் மூலம் பிபிசி குஜராத்தியிடம் அவர் பேசினார்.
அப்போது, “துர்காதேவி பகத்சிங்கை தனது தம்பியாக கருதினார். இதுபோன்ற பொறுப்பற்ற கதையில் கவனம் செலுத்துவதற்குப் பதிலாக, நாட்டின் சுதந்திரத்திற்காக அவர் செய்த தியாகத்தை பாராட்டுவோம்,” என்றார்.
பகத் சிங்கின் பெயரில் தொடங்கப்பட்ட ஒரு புரட்சிகர அமைப்பான ஹிந்துஸ்தான் சோசலிஸ்ட் ரிபப்ளிகன் அசோசியேஷன் உறுப்பினர்கள் அனைவரும் துர்காதேவியை ‘பாபி’ என்றே அழைத்தனர்.
புரட்சியாளர்களுக்காக அவரது வீட்டின் கதவுகள் எப்போதும் திறந்தே இருந்தன.
பிபிசி குஜராத்தியிடம் பேசிய சமன் லால், “புரட்சியாளர்களின் தார்மீக தரம் உயர்ந்ததாக இருக்க வேண்டும். ஏனெனில் அவரது புரட்சிகர நடவடிக்கைகளின் போது அவர் எங்கும் எந்த நிலலையையும் எதிர்கொள்ளவேண்டியிருக்கும். துர்கா தேவியின் கணவர் பகவதி சரண் வோஹ்ராவின் வீடு அனைத்து புரட்சியாளர்களுக்கும் எப்போதும் திறந்திருக்கும்,” என்றார்.

பட மூலாதாரம், NATIONAL BOOK TRUST
புரட்சியாளர்களின் செய்திகளை எடுத்துச் சென்ற துர்காதேவி
‘ஷஹீத் பகத் சிங் – புரட்சியின் சான்று’ என்ற புத்தகத்தின் ஆசிரியர் சுதிர் வித்யார்த்தி, துர்கா தேவியின் நினைவுக் குறிப்புகளைப் பற்றிப் பேசும் போது, அவர் ஆயுதங்கள் மற்றும் வெடிகுண்டுகளை கொடுக்கவும் வாங்கவும் சென்றதாக எழுதுகிறார். ஒருமுறை வெடிகுண்டு கொண்டு வர முல்தான் என்ற இடத்துக்கு அவர் சென்றிருந்தார் என்றும், கைத்துப்பாக்கியைக் கொண்டு வர ஜெய்ப்பூருக்கும் சென்றிருந்தார் என்றும் அவர் கூறுகிறார்.
கைத்துப்பாக்கியை வைத்திருப்பது மட்டுமல்ல, அதைப் பயன்படுத்தவும் அவருக்குத் தெரியும்.
வெடிகுண்டு சோதனையின் போது அவரது கணவர் பகவதி சரண் வோரா கொல்லப்பட்டார்.அதன் பின் பகத் சிங் மற்றும் படுகேஷ்வர் தத்தை சிறையில் இருந்து விடுவிக்க துர்கா தேவி விரும்பினார்.
பகத்சிங் தூக்கிலிடப்படுவதை தடுக்க காந்திஜியையும் அவர் சந்தித்தார்.
அவரது கணவர் இறந்த பிறகு, துர்காதேவி புரட்சியாளர்களின் பணிகளில் முழுமையாக கவனம் செலுத்தத் தொடங்கினார். அவரது கணவரின் மரணம் மற்றும் பகத் சிங் தூக்கிலிடப்பட்ட பிறகு, சந்திரசேகர் ஆசாத் அவரை பம்பாய்க்கு (மும்பை) அனுப்பினார்.
பம்பாய் போலீஸ் கமிஷனர் லார்ட் ஹெய்லியை கொல்ல திட்டமிட்டனர். ஆனால் துர்காதேவி வீசிய வெடிகுண்டால் சார்ஜென்ட் டெய்லரும் அவரது மனைவியும் காயமடைந்தனர்.
அதன் பின் அவர் அங்கிருந்து தப்பி ஓடினார்.
அவர் சில சமயங்களில் போலீசாரிடம் இருந்து மறைந்து கொள்ள பர்தா அணிந்துள்ளார். மேலும் ஒருமுறை முஸ்லிம் பெண்ணாக மாறுவேடமிட்டும் பயணித்திருக்கிறார்.
ஆசாத் இறந்த பிறகு அவர் காவல்துறையில் சரணடைந்தார். விசாரணை என்ற சாக்கில், அவர் சுமார் 6 மாதங்கள் கொலையாளிகளுடன் சிறையில் அடைக்கப்பட்டார். காவல்துறையினரிடம் அவருக்கு எதிராக எந்த ஆதாரமும் இல்லை, எனவே அவர் பின்னர் விடுவிக்கப்பட்டார். ஆனால் மூன்று ஆண்டுகளுக்கு லாகூரிலிருந்து வெளியேற தடை விதிக்கப்பட்டது.
அவர் டெல்லியில் காங்கிரஸ் கட்சியிலும் பணியாற்றினார். ஆனால் பின்னர் கல்வி நடவடிக்கைகளில் ஈடுபட்டார்.
அவர் 1999 ஆம் ஆண்டு அக்டோபர் 15-ம் தேதி உத்தரபிரதேசத்தின் காஜியாபாத்தில் இந்த மண்ணை விட்டு மறைந்தார்.
நன்றி
Publisher: பிபிசிதமிழ்