மாருதி 800: இந்திய நடுத்தர வர்க்கத்தினரின் கனவு கார் பிறந்ததில் இந்திரா காந்தியின் பங்கு என்ன?

மாருதி 800: இந்திய நடுத்தர வர்க்கத்தினரின் கனவு கார் பிறந்ததில் இந்திரா காந்தியின் பங்கு என்ன?

மாருதி 800, மாருதி சுஸுகி, இந்திரா காந்தி, சஞ்சய் காந்தி

பட மூலாதாரம், Getty Images

மாருதி 800 கார் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டு இன்றோடு 40 ஆண்டுகள் ஆகின்றன.

பெரும் சர்ச்சைகளுக்கு நடுவில் உருவான மாருதி நிறுவனம், தற்போது இந்தியாவில் மிகப் பெரும் எண்ணிக்கையில் கார்களைத் தயாரிக்கும் நிறுவனங்களில் ஒன்று. பல கோடி நடுத்தர மக்களின் கனவை நனவாக்கிய மாருதி நிறுவனம் எப்படி உருவானது?

1983ஆம் ஆண்டு டிசம்பர் 14ஆம் தேதி.

தில்லியின் புறநகர்ப் பகுதியாக இருந்த குர்காவ்ன் அப்போது புழுதிபடிந்த ஒரு சிறு நகரம்.

அங்கிருந்த கார் தொழிற்சாலையில் இருந்து முதலாவது மாருதி 800 கார் வாடிக்கையாளருக்கு அளிக்கப்பட்டது. அந்த முதல் காரை வாங்கியவர் இந்தியன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் பணியாளரான ஹர்பால் சிங்.

அவரிடம் காரின் சாவியை அளித்த பிரதமர் இந்திரா காந்தி, இந்தியாவிலேயே ஒரு சிறிய ரகக் காரைத் தயாரிக்க வேண்டும் என்ற கனவுடன் போராடிய, தனது மகன் சஞ்சய் காந்தியை நினைவுகூர்ந்தார்.

விரைவிலேயே இந்திய நடுத்தர வர்க்கத்தின் கனவுக் காராக உருவெடுத்தது மாருதி 800. இந்த மாருதி நிறுவனம் உருவான கதையை, அந்த நிறுவனத்தின் துவக்க காலம் முதல் பணியாற்றிய ஆர்.சி. பார்கவா, ‘The Maruti Story’ என்ற பெயரில் விரிவாகவே எழுதியிருக்கிறார். இந்த நிறுவனத்தின் துவக்க காலம் பற்றி படிப்பவர்கள், அந்த நிறுவனம் இவ்வளவு பெரிய வெற்றிகரமான நிறுவனமாக உருவெடுக்கும் என்பதை நம்பவே மாட்டார்கள். அந்த அளவுக்குக் கரடுமுரடான பாதையைக் கடந்துவந்தது அந்த நிறுவனம்.

மாருதி 800, மாருதி சுஸுகி, இந்திரா காந்தி, சஞ்சய் காந்தி

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு,

இந்திரா காந்தியுடன் சஞ்சய் காந்தி

மாருதி துவங்கியது எப்படி?

பிரதமர் இந்திரா காந்தியின் மகனான சஞ்சய் காந்திக்கு கார்களின் மீது அதீத ஆர்வம் உண்டு. இதனால், 1960களின் மத்தியில் பிரிட்டனின் ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனத்தில் பயிற்சிப் பணியாளராக மூன்று ஆண்டுகள் பணியாற்றிவிட்டு இந்தியா திரும்பிய அவர், இந்தியாவிலேயே ஒரு காரைத் தயாரிக்க வேண்டும் என்பதில் தீவிர ஆர்வம் கொண்டிருந்தார்.

அந்த காலகட்டத்தில் இந்தியாவில் மூன்று நிறுவனங்கள் கார்களைத் தயாரித்துவந்தன. கொல்கத்தாவிலிருந்து இயங்கிய ஹிந்துஸ்தான் மோட்டார்ஸ் அம்பாசிடர் காரைத் தயாரித்துவந்தது. மும்பையிலிருந்து இயங்கி ப்ரீமியர் ஆட்டோமொபைல்ஸ் நிறுவனம் ப்ரீமியர் பத்னிமி என்ற காரைத் தயாரித்துவந்தது. சென்னையிலிருந்து ஸ்டாண்டர்ட் மோட்டர்ஸ் நிறுவனம் ஸ்டாண்டர்ட் ஹெரால்ட் என்ற காரைத் தயாரித்துவந்தது.

1960களின் பிற்பகுதியில் இந்தியாவில் கார்களுக்கான தேவை வெகுவாக அதிகரித்தது. ஆனால், உற்பத்தி அந்த அளவுக்கு இல்லை. இதனால், கிட்டத்தட்ட 2 ஆண்டுகள் வரை கார்களுக்காக பதிவுசெய்து காத்திருக்க வேண்டும். இந்த மூன்று நிறுவனங்கள் மட்டுமே கார்களைத் தயாரித்து விற்க அனுமதிக்கப்பட்டதால், கார்களின் தரம், வாடிக்கையாளர் சேவை போன்றவை மோசமாகவே இருந்தன.

ஆகவே, இந்தியாவில் புதிதாக சிறிய கார்களைத் தயாரிக்கும் நிறுவனங்களை உருவாக்க இந்திய அரசு முடிவுசெய்தது. பல வெளிநாட்டு நிறுவனங்கள் இதற்கு முன்வந்தாலும் இந்திய அரசும் ஒரு 50 கோடி ரூபாய் அளவுக்கு முதலீடுசெய்ய வேண்டியிருந்தது. ஆகவே, இந்தியாவைச் சேர்ந்த தனியார் நிறுவனங்கள் சிறிய காரைத் தயாரிக்க விரும்பினால், அதற்கு விண்ணப்பிக்கலாம் என அறிவித்தது அரசு.

இதற்கு பல விண்ணப்பங்கள் வந்து குவிந்தன. அதில் ஒன்று, சஞ்சய் காந்தியினுடையது. முடிவில் சஞ்சய் காந்தியுடன் சேர்ந்து மூன்று பேருக்கு உரிமங்கள் வழங்கப்பட்டன. 1971ஆம் ஆண்டு ஜூன் மாதம் மாருதி மோட்டார்ஸ் லிமிட்டெட் நிறுவனம் பதிவுசெய்யப்பட்டது. எம்.ஏ. சிதம்பரம், வி.ஆர். மோகன் போன்ற நாட்டின் முக்கியமான பல தொழிலதிபர்களும் பங்குதாரர்களாகவும் இயக்குநர்களாகவும் இணைந்தனர்.

மாருதி 800, மாருதி சுஸுகி, இந்திரா காந்தி, சஞ்சய் காந்தி

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு,

குர்காவ்னில் இருந்த மாருதி தொழிற்சாலையில் வேலை செய்யும் சஞ்சய் காந்தி, 1973-ஆம் ஆண்டு

மாருதி நிறுவனம் சந்தித்த சர்ச்சைகள்

விரைவிலேயே ஹரியானாவில் சுமார் 300 ஏக்கர் நிலம் அரசால் கையகப்படுத்தித் தரப்பட்டது. 1972லேயே ஒரு மாதிரி கார் உருவாக்கப்பட்டாலும், வர்த்தக ரீதியான கார் தயாரிப்பு துவங்கவேயில்லை. காரணம், அரசு விதித்திருந்த நிபந்தனைகளின்படி, வெளிநாட்டு நிறுவனங்களுடன் தொழில்நுட்ப பரிமாற்றம், உதிரிபாக இறக்குமதி போன்ற எதையும் செய்யக்கூடாது. எல்லாவற்றையும் இந்தியாவிலேயே தயார் செய்ய வேண்டும். அது கிட்டத்தட்ட இயலாத காரியமாக இருந்தது.

மாருதி நிறுவனம் வர்த்தக ரீதியில் காரைத் தயாரிக்க போராடிக்கொண்டிருந்த காலகட்டத்தில், நெருக்கடி நிலை அமலுக்கு வந்தது. நெருக்கடி நிலை முடிந்து நடந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சி தோற்கடிக்கப்பட்டு ஜனதா கட்சி ஆட்சிக்கு வந்தவுடன், முந்தைய அரசின் பல நடவடிக்கைகள் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டன. மாருதி நிறுவனமும் அதில் சிக்கியது. விசாரணை நடந்துகொண்டிருந்த காலத்தில், தொழிலாளர் பிரச்சனையும் ஏற்பட்டது. கார் உற்பத்தி தொடங்காத நிலையில், செலவுகள் அதிகரித்துக்கொண்டே போயின. முடிவில் கம்பனியைக் கலைப்பதற்கான நடைமுறைகள் துவங்கின.

மாருதி 800, மாருதி சுஸுகி, இந்திரா காந்தி, சஞ்சய் காந்தி

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு,

ஹரியாணா மாருதி சுஸுகி தொழிற்சாலையில் பணிபுரியும் ஒரு தொழிலாளர்

அரசு வசமான மாருதி

1980ல் காங்கிரஸ் கட்சி மீண்டும் ஆட்சிக்குவந்ததும், மாருதி நிறுவனத்தை மறுபடியும் உயிர்ப்பிக்க நினைத்தார் சஞ்சய் காந்தி. ஆனால், அதற்குள் ஒரு விமான விபத்தில் உயிரிழந்தார். இருந்தபோதும், தனது மகனின் கனவை உயிரிழக்கவிட இந்திரா காந்தி விரும்பவில்லை. இந்தக் கார் திட்டத்தை உயிர்ப்பிக்க முடியுமா என ஆராய்ந்தபோது, வெளிநாட்டு நிறுவனத்தின் தொழில்நுட்ப ஆதரவு இருந்தால், அதனை உயிர்ப்பிக்க முடியும் என தெரியவந்தது.

முடிவில், மாருதி மோட்டர்ஸ் லிமிட்டட் நிறுவனத்தை இந்திய அரசு கையகப்படுத்தியது. 1981ல் மாருதி உத்யோக் லிமிட்டெட் நிறுவனம் பதிவுசெய்யப்பட்டது. தனியார் துறையிலிருந்து அதிகாரிகள் தேர்வுசெய்யப்பட்டு, நிறுவனத்தின் தலைமைப் பொறுப்புகள் அளிக்கப்பட்டன. 1983ஆம் ஆண்டின் இறுதிக்குள் முதல் கார் இந்தியச் சாலைகளில் இருக்கவேண்டும் என நிபந்தனை விதிக்கப்பட்டன.

மாருதி 800, மாருதி சுஸுகி, இந்திரா காந்தி, சஞ்சய் காந்தி

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு,

குர்காவ்னில் மாருதி தொழிற்சாலை துவக்க விழாவில் சுஸுகி நுறுவனத் தலைவர் ஒசாமு சுஸுகி. 2001-ஆம் ஆண்டு

சுஸுகி நிறுவனத்துடன் ஒப்பந்தம்

அடுத்ததாக, தொழில்நுட்பக் கூட்டாளியைத் தேடும் பணிகள் துவங்கின. அந்தப் பணி அவ்வளவு சுலபமானதாக இருக்கவில்லை. ரெனால்ட் நிறுவனத்தில் துவங்கி பல நிறுவனங்களுடன் பேச்சு வார்த்தை நடத்தி, முடிவில் சுஸுகி நிறுவனம் கூட்டாளியாகத் தேர்வுசெய்யப்பட்டது. 1982-இல் மாருதிக்கும் சுஸுக்கிக்கும் இடையில் ஒப்பந்தம் கையெழுத்தானது.

இதற்குப் பிறகு, பல ஆலோசனைகள், தடைகள், விவாதங்களுக்குப் பிறகு 1983 ஏப்ரலில் முன்பதிவு துவங்கியது. விரைவிலேயே 1,35,000 கார்களுக்கு முன்பதிவானது. காரை முன்பதிவு செய்யும்போது பத்தாயிரம் ரூபாயை முன்பதிவுத் தொகையாகச் செலுத்த வேண்டும். யாராவது 10,000 ரூபாயை முன்பதிவுக்கென செலுத்துவார்களா என சந்தேகம் எழுப்பப்பட்டது. இருந்தபோதும், இந்த அளவுக்கு முன்பதிவு இருந்தது, இந்தியாவில் சிறிய கார்களுக்கான தேவையை வெகுவாகச் சுட்டிக்காட்டியது.

மாருதி 800, மாருதி சுஸுகி, இந்திரா காந்தி, சஞ்சய் காந்தி

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு,

வெகு சீக்கிரத்திலேயே, எல்லாத் தரப்பு இந்தியர்களும் வாங்க விரும்பும் ஒரு காராக உருவெடுத்தது மாருதி 800

குலுக்கல் முறையில் கார்கள்

இவ்வளவு பெரிய அளவில் முன்பதிவு இருந்ததால், குலுக்கல் முறையில் கார்களைப் பெறுவோர் தேர்வுசெய்யப்பட்டனர். 1983 செப்டம்பரில் நடந்த குலுக்களில்தான் முதல் காரைப் பெறுபவராக ஹர்பால் சிங் தேர்வுசெய்யப்பட்டார்.

1983 டிசம்பர் 14ஆம் தேதி சஞ்சய் காந்தியின் பிறந்த நாளன்று, முதல் பத்து கார்களுக்கான சாவியை வாடிக்கையாளர்களுக்கு வழங்கினார் பிரதமர் இந்திரா காந்தி. முதலில் தில்லியிலும் மும்பையிலும் மட்டுமே விற்பனை துவங்கப்பட்டது. பிறகு சென்னை, கல்கத்தா, சண்டீகரிலும் விற்பனை துவங்கியது.

வெகு சீக்கிரத்திலேயே, எல்லாத் தரப்பு இந்தியர்களும் வாங்க விரும்பும் ஒரு காராக உருவெடுத்தது மாருதி 800.

2014ல் இந்தக் காரின் தயாரிப்பு நிறுத்தப்படும்வரை, ஒட்டுமொத்தமாக 28,70,000 கார்கள் விற்பனை செய்யப்பட்டன. அந்த வகையில், இந்தியாவில் உற்பத்தியான கார்களில் மிகப் பிரபலமான கார்களில் ஒன்றாக உருவெடுத்தது ‘மாருதி 800’.

Facebook
Facebook
fb-share-icon
Telegram
WhatsApp
TekTamil.com
Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by TekTamil.
நன்றி
Publisher: பிபிசிதமிழ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *