உலகக்கோப்பை: தென் ஆப்பிரிக்கா ‘நெதர்லாந்துதானே’ என்ற அசட்டையில் தோற்றுவிட்டதா?

உலகக்கோப்பை: தென் ஆப்பிரிக்கா 'நெதர்லாந்துதானே' என்ற அசட்டையில் தோற்றுவிட்டதா?

நெதர்லாந்து, தென் ஆப்பிரிக்கா, கிரிக்கெட் உலகக்கோப்பை

பட மூலாதாரம், Getty Images

கிரிக்கெட் உலகக்கோப்பைப் போட்டி என்றாலே, அதிர்ச்சிகரமான தோல்விகள், எதிர்பாராத வெற்றிகள், ஜாம்பவான்கள் என்று அறியப்பட்ட அணிகள் வீழ்த்தப்படுவது, எதிர்பாராத அணிகளின் போராட்டம் என்று சுவாரஸ்யத்திற்குக் குறைவின்றி இருக்கும்.

மூன்று நாட்களுக்கு முன் இங்கிலாந்து அணியை அதிர்ச்சித் தோல்விக்கு உள்ளாக்கியது ஆப்கானிஸ்தான். அந்தச் செய்தியின் பரபரப்பு அடங்குவதற்குள் தரமஷலாவில் நேற்று நடந்த ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்க அணியை வீழ்த்தி ‘ஷாக்’ கொடுத்திருக்கிறது நெதர்லாந்து அணி.

நெதர்லாந்திடம் இரண்டாவது முறையாக தென் ஆப்பிரிக்கா தோல்வி

இலங்கைக்கு எதிராக மிகப்பெரிய ஸ்கோர், ஆஸ்திரேலியாவுக்கு எதிராக பெரிய ஸ்கோர் என அடித்த தென் ஆப்பிரிக்கா, 245 ரன்களை சேஸிங் செய்ய முடியாமல் வீழ்ந்தது அதிர்ச்சிக்குரியதுதான்.

கடந்த 2022ஆம் ஆண்டு, அடிலெய்டில் நடந்த டி20 உலகக்கோப்பை லீக் ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்க அணியை 13 ரன்களில் நெதர்லாந்து அணி வீழ்த்தியது. அதன்பின், உலகக்கோப்பையில் 2வது முறையாக நெதர்லாந்திடம் தோல்வி அடைந்துள்ளது தென் ஆப்பிரிக்கா.

நெதர்லாந்து அணி நிர்ணயித்த 246 ரன்கள் இலக்கை சேஸிங் செய்ய முடியாமல், தென் ஆப்பிரிக்க அணி 42.5 ஓவர்களில் 207 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆகி அதிர்ச்சித் தோல்வி அடைந்தது.

நெதர்லாந்து, தென் ஆப்பிரிக்கா, கிரிக்கெட் உலகக்கோப்பை

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு,

இந்தத் தோல்வியால் தென் ஆப்பிரிக்க அணியின் நிகர ரன்ரேட் 2 என்ற நிலையில் இருந்து குறைந்து, 1.385 ஆகச் சரிந்துவிட்டது.

மீண்டும் பழைய நிலையா?

இந்தத் தோல்வியால் தென் ஆப்பிரிக்க அணியின் நிகர ரன்ரேட் 2 என்ற நிலையில் இருந்து குறைந்து, 1.385 ஆகச் சரிந்துவிட்டது. ஒவ்வொரு உலகக்கோப்பைத் தொடரிலும் தென் ஆப்பிரிக்க அணி தொடக்கத்தில் நன்றாகச் செயல்பட்டு பின்னர் கேலி செய்யப்படும் வகையில் தோல்வியடையும் நிலைக்கு மாறுவது வாடிக்கையாகி வருகிறது.

அது இந்த உலகக்கோப்பையிலும் தப்பவில்லை. டெஸ்ட் அந்தஸ்து பெற்ற அணிக்கு எதிராக நெதர்லாந்து அணி பெற்ற முதல் உலகக் கோப்பை வெற்றி இது.

தென் ஆப்பிரிக்காவின் தவறுகள்

நெதர்லாந்து அணி வெற்றி பெற்றது எனக் கூறுவதைவிட, தென் ஆப்பிரிக்க அணியின் அடுக்கடுக்கான தவறுகள்தான் நெதர்லாந்து அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றது என்று கூறலாம்.

நெதர்லாந்து அணியின் சுழற்பந்து வீச்சாளர்கள் ஆர்யன் தத், மெர்வி, மீக்கீரன் ஆகியோர் தென் ஆப்பிரிக்க பேட்டர்களை திணறவிட்டனர். சூழலையும், ஆடுகளத்தின் தன்மைமையையும் பயன்படுத்தி வெற்றியைத் தங்கள் வசம் இழுத்து வந்தனர்.

இதில் 3 சுழற்பந்துவீச்சாளர்களும் சேர்ந்து 23 ஓவர்கள்தான் பந்து வீசினர். அதில் டாட் பந்துகள் மட்டும் 83 பந்துகள். அதாவது 23 ஓவர்களில் 13 ஓவர்களில் ரன் ஏதும் வழங்கவில்லை. இதுபோன்ற கட்டுக்கோப்பான பந்துவீச்சுதான் தென் ஆப்பிரிக்க பேட்டர்களை திணறவைத்தது.

முன்னாள் கேப்டன் கபில் தேவ் முன்னர் அளித்திருந்த பேட்டியில், “உலகக்கோப்பை கிரிக்கெட் வெற்றி என்பது வீரர்களின் திறமையை கணக்கில் எடுக்கும்போது, எந்தவொரு அணி குறைவான தவறுகளைச் செய்கிறதோ அந்த அணிதான் வெற்றி பெறுகிறது,” என்று தெரிவித்திருந்தார். அந்த வார்த்தை நெதர்லாந்து அணிக்கு நேற்று பொருத்தமாக இருக்கும்.

கேப்டன் பவுமாவின் மோசமான முடிவுகள்

நெதர்லாந்து, தென் ஆப்பிரிக்கா, கிரிக்கெட் உலகக்கோப்பை

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு,

தென் ஆப்பிரிக்க அணி டாஸ் வென்றதில் இருந்து தொடர்ந்து தவறான முடிவுகளை எடுத்ததே தோல்விக்கு முக்கியக் காரணம்.

தென் ஆப்பிரிக்க அணியின் கேப்டன் பவுமா, டாஸ் வென்றதில் இருந்து தொடர்ந்து தவறான முடிவுகளை எடுத்ததே தோல்விக்கு முக்கியக் காரணம்.

தரம்ஷலா மைதானம் சுழற்பந்துவீச்சுக்குச் சாதகமானது. ஆனால், கூடுதல் வேகப்பந்தவீச்சாளராக கூட்ஸியை சேர்த்தது தேவையற்றது. அதற்குப் பதிலாக ஷாம்சியை சேர்த்திருந்தால் சுழற்பந்துவீச்சால் இன்னும் 40 ரன்கள் குறைவாக நெதர்லாந்தை வென்றிருக்கலாம்.

இந்த ஆட்டத்தில் ரபாடா, இங்கிடி, கூட்ஸி மூவருமே சராசரியாக 6 ரன்கள் வழங்கினர். இதில் மார்கோ ஜான்சன் மட்டுமே கட்டுக்கோப்பாகப் பந்துவீசினார். கேசவ் மகராஜ் சுழற்பந்துவீச்சில் நெதர்லாந்து பேட்டர்கள் திணறுவது தெரிந்தவுடன், பகுதி நேர சுழற்பந்துவீச்சாளராக இருக்கும் மார்க்கிரமுக்கு ஓவரை கேப்டன் பவுமா வழங்கியிருக்கலாம்.

ஆனால், மார்க்கிரமுக்கு பந்துவீச வாய்ப்பை கேப்டன் பவுமா வழங்கவில்லை. கூடுதலாக வேகப்பந்துவீச்சாளரைச் சேர்த்தது, ஷாம்சியை எடுக்காது, மார்க்கிரமுக்கு ஓவர்களை வழங்காதது போன்ற தவறுகள் நெதர்லாந்துக்கு சாதகமாக அமைந்தன.

ஆட்டத்தின் திருப்புமுனை

தொடக்கத்தில் தென் ஆப்பிரிக்கப் பந்துவீச்சாளர்கள் கட்டுக்கோப்பாகப் பந்துவீசி, நெதர்லாந்து அணியின் விக்கெட்டுகளை விரைவாக வீழ்த்தினர். ஒரு கட்டத்தில் நெதர்லாந்து அணி 50 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது, 140 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை பறிகொடுத்து, 175 ரன்களுக்குள் ஆட்டம் முடியும் என ரசிகர்கள் எதிர்பார்த்தனர்.

ஆனால், கேப்டன் எட்வார்ட்ஸ் (78) டெய்ல் என்டர்களை வைத்துக் கொண்டு, கடைசிவரை போராடி 100 ரன்களைச் சேர்த்ததுதான் ஆட்டத்தின் திருப்புமுனையாக அமைந்தது.

ஏழு விக்கெட்டுகள் வீழ்ந்தபின், 105 ரன்கள் பார்ட்னர்ஷிப் மூலம் சேர்த்தது என்பது, ஆடவர் ஒருநாள் போட்டியில் இது 2வது முறை. உலகக்கோப்பையில் இதுபோன்று நடந்தது 9வது முறை.

நெதர்லாந்து, தென் ஆப்பிரிக்கா, கிரிக்கெட் உலகக்கோப்பை

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு,

நெதர்லாந்து அணி கடைசி 10 ஓவர்களில் சேர்த்த ரன்கள்தான் வெற்றிக்குக் காரணமாக அமைந்தது.

டெத் ஓவரில் விளாசிய நெதர்லாந்து

நெதர்லாந்து அணி கடைசி 10 ஓவர்களில் சேர்த்த ரன்கள்தான் வெற்றிக்குக் காரணமாக அமைந்தது. அதேநேரம், டெத் ஓவர்களை ரபாடா, இங்கிடி, கூட்ஸி மூவரும் படுமோசமாக வீசி ரன்களை வாரி வழங்கியதே தோல்விக்கு முக்கியக் காரணம்.

கடைசி 9.1 ஓவர்களில் மட்டுமே நெதர்லாந்து அணி 105 ரன்களை சேர்த்தது. ஆடவர் ஒருநாள் போட்டியில் ஒரு அணிக்கு 7 விக்கெட்டுகள் சரிந்த பிறகு, 100க்கும் மேற்பட்ட ரன்களை சேர்த்தது என்பது, மிகவும் அதிகபட்சம்.

ஏறக்குறைய ஓவருக்கு 11 ரன்ரேட்டில் சேர்க்கப்பட்டுள்ளது. 2015ஆம் ஆண்டு ஐக்கிய அரபு அமீரகம் அணிக்கு எதிராக ஹாங்காங் அணி 11 ரன்ரேட்டில் சேர்த்தது அதன்பின் இது அதிகபட்சம்.

நெதர்லாந்து 140 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்திருந்தபோது, இன்னும் 20 ரன்களில் ஆட்டமிழந்துவிடும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்திருந்தனர். ஆனால், நெதர்லாந்து 245 ரன்களை சேர்த்ததாக இறுதியில் தெரிந்தபின், தென் ஆப்பிரிக்காவின் தோல்வி உறுதியானது.

நெதர்லாந்து, தென் ஆப்பிரிக்கா, கிரிக்கெட் உலகக்கோப்பை

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு,

நெதர்லாந்து 140 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்திருந்தபோது, இன்னும் 20 ரன்களில் ஆட்டமிழந்துவிடும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்திருந்தனர்.

ரபாடா, இங்கிடிக்கு என்ன ஆனது?

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஆட்டத்தில் இங்கிடி, ரபாடாவின் பந்துவீச்சு துல்லியத்தன்மை மாறாமல், பழைய தென் ஆப்பிரிக்க அணியைப் பார்த்த உணர்வு இருந்தது.

ஆனால், நேற்றைய பந்துவீச்சில் ஒருவிதமான மெத்தனப் போக்கு, நெதர்லாந்துதானே என்ற அசட்டை, அந்த அணியைக் குறைத்து மதிப்பிடும் தன்மை தெளிவாகத் தெரிந்தது. இங்கிடி வீசிய பெரும்பாலான பந்துகள் லைன், லெந்தில் இல்லை, மாறாக, ஓவர் பிட்சாக இருந்தது, பேட்டர்களுக்கு சாதகமாக அமைந்துவிட்டது.

ரபாடாவின் பந்துவீச்சில் நேற்று துல்லியத்தன்மையும், நெருக்கடி தரும் ஸ்விங்கும் இல்லை. காலநிலை ஸ்விங் செய்யச் சாதகமாக இருந்தும், பந்துவீச்சில் ரபாடா ஏன் இப்படிச் செயல்பட்டார் என்பது வியப்புதான்.

ஏன் முதலில் சேஸிங் செய்தனர்?

தரம்ஷலாவில் பகலிரவு போட்டியில், இரவில் பெய்யும் பனிப்பொழிவு, சூழலையை மாற்றிவிடும். இதனால் ஆடுகளத்தில் ஈரப்பதம் சேர்ந்து, பந்துகள் பேட்டரை நோக்கி மெதுவாக, தாழ்வாக வரும்.

இதனால் பேட்டர்கள் பந்தைக் கணித்து ஆடுவது சிரமமாக இருக்கும். இது தெரிந்தும், கேப்டன் பவுமா டாஸ் வென்று சேஸிங்கை தேர்ந்தெடுத்து தோல்விக்குக் காரணமாகிவிட்டார்.

ஃபீல்டிங் மோசம், உதிரிகள் அதிகம்

நெதர்லாந்து, தென் ஆப்பிரிக்கா, கிரிக்கெட் உலகக்கோப்பை

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு,

தென் ஆப்பிரிக்காவின் நேற்றைய பந்துவீச்சில் ஒருவிதமான மெத்தனப் போக்கு, நெதர்லாந்துதானே என்ற அசட்டை, அந்த அணியைக் குறைத்து மதிப்பிடும் தன்மை தெளிவாகத் தெரிந்தது.

தென் ஆப்பிரிக்காவின் பந்துவீச்சு மட்டுமல்லாமல் ஃபீல்டிங், கேட்ச் பிடிக்கும் திறன் ஆகியவையும் நேற்று மோசமாக இருந்தது. ஒரு காலத்தில் தென் ஆப்பிரிக்கா என்றாலே ஃபீல்டிங்தான் நினைவுக்கு வரும்.

ஜான்டி ரோட்ஸ், கல்லினன், கிப்ஸ், குரோனியே, ரூட்ஸ் எனத் தேர்ந்த ஃபீல்டர்கள் இருந்த அணியிலா இப்படி ஃபீல்டிங் செய்கிறார்கள் என்று ரசிகர்கள் ஆதங்கம் தெரிவித்தனர்.

இந்த ஆட்டத்தில் மட்டும் தென் ஆப்பிரிக்க அணி 32 ரன்களை உதிரிகளாக வழங்கியுள்ளது. 21 வைடுகள், 10 லெக்பை, ஒரு நோபால் வழங்கியுள்ளது. இந்த உதரிகள் எண்ணிக்கையை தென் ஆப்பிரிக்க அணி குறைத்திருந்தாலே, 200 ரன்களுக்குள் நெதர்லாந்தை சுருட்டி இருக்கலாம்.

தென் ஆப்பிரிக்க அணி 32 ரன்கள் உதரிகளாக வழங்கியதே, இதுவரை நடந்த உலகக்கோப்பைத் தொடரில் அந்த அணி வழங்கிய அதிகபட்ச உதரி ரன்களாகும். இதற்கு முன் 2015ஆம் ஆண்டு யு.ஏ.இ அணிக்கு எதிராக 29 ரன்களை உதரிகளை தென் ஆப்பிரிக்கா வழங்கியிருந்தது. அதை முறியடித்துவிட்டது.

சுழற்பந்துவீச்சைப் பார்த்து பயம்

நெதர்லாந்து அணியைக் குறைத்து மதிப்பிட்டதும், அவர்களின் சுழற்பந்துவீச்சை கவனத்தில் கொள்ளாமல் இருந்ததும், சுழற்பந்துவீச்சை ஆடத் திறமையில்லாத பேட்ஸ்மேன்கள் இருந்ததும் தென் ஆப்பிரிக்கத் தோல்விக்கு காரணம்.

ஏனென்றால், தென் ஆப்பிரிக்க அணி, நேற்று தனது முதல் விக்கெட்டை 36 ரன்களில் இழந்தது. அடுத்த 8 ரன்களுக்குள் அடுத்த 3 விக்கெட்டுகளை இழந்தது.

அதாவது 44 ரன்களில் 4வது விக்கெட்டைப் பறிகொடுத்தது. கடந்த 1999ஆம் ஆண்டு எட்ஜ்பாஸ்டன் நகரில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் 13 ரன்களுக்கு முதல் 4 பேட்டர்களும் ஆட்டமிழந்திருந்தனர். அந்த ரன்களை விடக் குறைவாக இந்த ஆட்டத்தில் டாப்-4 பேட்டர்கள் விக்கெட்டை பறிகொடுத்தனர்.

‘பந்துவீச்சில் கோட்டைவிட்டோம்’

நெதர்லாந்து, தென் ஆப்பிரிக்கா, கிரிக்கெட் உலகக்கோப்பை

பட மூலாதாரம், Getty Images

தோல்வி குறித்து தென் ஆப்பிரிக்க கேப்டன் பவுமா கூறுகையில், “நெதர்லாந்து அணி 6 விக்கெட் இழப்புக்கு 112 ரன்கள் இருந்தபோதே நாங்கள் சுருட்டியிருக்க வேண்டும் 200 ரன்களை கடக்க விட்டிருக்ககூடாது. பந்துவீச்சில் கோட்டைவிட்டோம். ஆனால், சேஸிங்கில் சிறப்பாகச் செயல்படுவோம் என நம்பினோம். ஆனால் எதிர்பார்த்தது போன்று பேட்டிங் அமையவில்லை.

ஆஸ்திரேலயாவிடம் சிறப்பாகச் செயல்பட்ட நாங்கள் இங்கு ஏன் இப்படிச் செயல்பட்டோம் என்பது விவாதத்துக்குரியது. உதிரி ரன்களை கட்டுப்படுத்தவில்லை. ஃபீல்டிங் உலகத் தரத்துக்கு இல்லை.

வீரர்களிடம் ஆஸ்திரேலய அணிக்கு எதிராக ஆடியபோது இருந்த துடிப்பு, உற்சாகம் இந்த ஆட்டத்தில் இல்லை. இது குறித்து வீரர்களிடம் பேச வேண்டும். இந்தத் தோல்வி எங்களைப் பாதித்துள்ளது. இந்தத் தோல்வி நெருக்கடியையும் எங்களுக்கு அளித்துள்ளது,” எனத் தெரிவித்தார்.

Facebook
Facebook
fb-share-icon
Telegram
WhatsApp
TekTamil.com
Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by TekTamil.
நன்றி
Publisher: பிபிசிதமிழ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *