சார்லஸ் டார்வின்: கடவுளையும் மத நம்பிக்கைகளையும் இந்த விஞ்ஞானி கேள்விக்குள்ளாக்கியது எப்படி?

சார்லஸ் டார்வின்: கடவுளையும் மத நம்பிக்கைகளையும் இந்த விஞ்ஞானி கேள்விக்குள்ளாக்கியது எப்படி?

சார்லஸ் டார்வின்

பட மூலாதாரம், Getty Images

1859க்கு முன்பு வரை உலகின் பெரும்பான்மையான மதங்கள், முதல் மனிதன் ஆதாமை கடவுளே படைத்தார் என்றே கூறி வந்தன. உலக மக்களும் தாங்கள் கடவுளால் படைக்கப்பட்டவர்கள் என்று தீர்க்கமாக நம்பி வந்தனர்.

அங்கொன்றும் இங்கொன்றும் இறைமறுப்பு, அறிவியல் சார் கருத்துக்கள் முளைத்து வந்திருந்தாலும் அதுவரை கடவுள் தான் மனிதனை படைத்தார் என்ற கோட்பாட்டை அசைக்க முடியவில்லை. திடீரென்று ஒரு தாடிக்கார மனிதன் தனது உயிரினங்களின் தோற்றம் என்ற கொள்கையை உலகின் முன் சமர்ப்பிக்க பிற சித்தாந்தங்கள் ஆடிப் போய்விட்டன.

“மனிதனை கடவுள் படைக்கவில்லை. ஒரே வம்சாவளியில் தோன்றிய வெவ்வேறு இனங்கள் அது வாழ்ந்த சூழலுக்கு ஏற்ப தன்னை தகவமைத்து கொண்டு தன்னுடைய தற்போதைய நிலைக்கு வந்துள்ளன” என்ற ‘இயற்கையின் தேர்வில் உயிரினங்களின் தோற்றம்’ என்ற தனது ஆய்வை முன்வைத்தார் சார்லஸ் டார்வின்.

அதற்கு முன் நம்பப்பட்டு வந்த கடவுள், படைப்பு, மனித தோற்றம், உயிர்களின் பரிணாமம் குறித்த அனைத்து சித்தாந்தங்களையும் இந்த ஆய்வு கேள்விக்குட்படுத்தியது. அங்கொன்றும் இங்கொன்றுமாக எதிர்ப்பு கிளம்பினாலும் அதற்கு பின் டார்வினின் கொள்கையை புறந்தள்ளிவிட்டு அறிவியல் உலகத்தால் முன்னேற முடியவில்லை.

அத்தகைய மாபெரும் ஆய்வு முடிவை சார்லஸ் டார்வின் பொது உலகிற்கு கொண்டு வர 20 ஆண்டுகள் எடுத்துக் கொண்டார். சொல்லப்போனால் அதை அவர் வெளியிடவே இல்லை. உண்மையில் அந்த ஆய்வு புத்தகம் வெளிவர காரணம் யார்? அதனால் ஏற்பட்ட சவால்கள் என்ன என்பதை இந்த தொகுப்பில் காணலாம்.

சார்லஸ் டார்வின்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு,

சார்லஸ் டார்வின் உலகம் முழுவதும் பயணம் செய்து ஆயிரக்கணக்கான உயிரினங்கள் சார்ந்த மாதிரிகளை சேகரித்தார்.

யார் இந்த சார்லஸ் டார்வின்?

பிரிட்டனின் ஷ்ரூஸ்பரி நகரில் 12 பிப்ரவரி 1809ஆம் ஆண்டு வளமையான குடும்பத்தில் பிறந்தவர் சார்லஸ் ராபர்ட் டார்வின். இவரது தாத்தா ஒரு இயற்கை விஞ்ஞானி, அப்பாவோ மருத்துவர்.

முதலில் தனது தந்தை விருப்பப்படி எடின்பர்க் பல்கலைக்கழகத்தில், மருத்துவம் படிக்க சென்ற டார்வின், அது பிடிக்காமல் அறிவியல் மீது ஆர்வம் கொண்டார். அங்கேயே பேராசிரியர்கள் மூலம் அறிவியல் சார்ந்து பல விஷயங்களையும் கற்றுக் கொண்டுள்ளார்.

பின்னர், கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் இறையியல் படிப்பில் சேர்ந்தார். கடவுள் மீது அவ்வளவு பற்றெல்லாம் இல்லாத டார்வினுக்கு தனது உண்மையான அறிவியலை ஆய்வு செய்ய, இந்த இடம் அதிக நேரம் தந்ததால் அங்கேயே படித்து 1831ஆம் ஆண்டு பட்டம் பெற்றார்.

சார்லஸ் டார்வின்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு,

டார்வின் தனது உறவுக்கார பெண்ணான எம்மா என்பவரை திருமணம் செய்து கொண்டார். இருவருக்கும் 10 குழந்தைகள் இருந்தனர்.

டார்வினின் உலகப்பயணம்

1831ஆம் ஆண்டு கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக பேராசிரியர் பரிந்துரைத்ததன் பேரில் தென்னமெரிக்க நாடுகளுக்கு சுற்றுப்பயணம் செய்ய இருந்த எச்எம்எஸ் பீகிள் கப்பலில் பயணிக்கும் வாய்ப்பு டார்வினுக்கு கிடைத்தது.

இதை தனது ஆய்வுக்கு நல்வாய்ப்பாக பயன்படுத்தி கொண்ட டார்வின் அடுத்த ஐந்தாண்டுகளில் 4 கண்டங்களுக்கு 3000த்திற்கும் அதிகமான கிலோமீட்டர் பயணம் செய்து ஆயிரக்கணக்கான உயிரினங்கள் சார்ந்த மாதிரிகளை சேகரித்துக் கொண்டார்.

இந்தப் பயணத்தில்தான் உயிரிகளின் தோற்றம் மற்றும் பரிணாம வளர்ச்சி குறித்த தெளிவான புரிதலை அறிந்துக் கொண்டார். குறிப்பாக உலகின் பல்வேறு பகுதிகளில் வாழும் ஒரே இனத்தை சேர்ந்த உயிரிகளுக்கு வெவ்வேறு விதமான உடலமைப்புகள் இருப்பதை அவர் அறிந்துக்கொண்டார்.

1838ஆம் ஆண்டு பயணத்தில் இருந்து திரும்பிய டார்வின் தனது உயிரினங்களின் தோற்றம் புத்தகத்தை எழுதத் தொடங்கிவிட்டார். ஆனால், அவர் அதை உடனே வெளியிடவில்லை.

ஆனால் அந்த சமயத்தில் தனது கப்பல் பயணம் குறித்த புத்தகத்தை ‘The Voyage of Beagle’ என்ற தலைப்பில் வெளியிட்டிருந்தார். இதற்கிடையில் டார்வினின் குடும்பம் அடுத்தடுத்த இறப்புகளால் நிலைகுலைந்து போயிருந்தது.

சார்லஸ் டார்வின்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு,

1831-ஆம் ஆண்டு தென் அமெரிக்க நாடுகளுக்கு எச்எம்எஸ் பீகிள் கப்பலில் பயணிக்கும் வாய்ப்பு டார்வினுக்கு கிடைத்தது.

நிலைகுலைந்து போன டார்வினின் குடும்பம்

டார்வின் தனது உறவுக்கார பெண்ணான எம்மா என்பவரை திருமணம் செய்து கொண்டார். இருவருக்கும் 10 குழந்தைகள் இருந்தனர். ஆனால், 1 மகன் மற்றும் இரு மகள்கள் நோய்வாய்ப்பட்டு இறந்து போயினர்.

இதற்கு காரணம் டார்வின் தனது குழந்தைகளை கண்டுகொள்ளாததும், அவர் மத நம்பிக்கைகளை பின் பற்றாததும் தான் என்று எம்மா நம்பினார். இதனால் அவர்கள் இருவருக்குள்ளும் உணர்ச்சி போர் நடந்து கொண்டிருந்தது. அடுத்தடுத்த இறப்புகளால் டார்வினும் மனம் தளர்ந்து போயிருந்தார்.

இந்நிலையில் புத்தகம் எழுதத் தொடங்கி 20 ஆண்டுகள் ஓடியிருந்தன. இந்த இடைப்பட்ட காலத்தில் ஆல்ஃபிரட் ரஸ்ஸல் வாலஸ் என்பவரும் இதே கோட்பாட்டை மையமாக கொண்டு தனது ஆய்வை செய்திருப்பது டார்வினுக்கு தெரிய வர இருவரும் ஒரே சமயத்தில் பிரிட்டனின் முன்னணி இயற்கை சார் வரலாற்று அமைப்பான லின்னியன் சொசைட்டிக்கு தங்களது ஆய்வறிக்கையை சமர்பிக்கின்றனர்.

சார்லஸ் டார்வின்

பட மூலாதாரம், VENKATESAN

படக்குறிப்பு,

விஞ்ஞானி வெங்கடேசன்

கண்டுகொள்ளாத லின்னியன் சொசைட்டி

ஆனால், அந்த அமைப்போ இருவது படைப்பையும் பெரிதாக எடுத்துக்கொள்ளாமல் முதலில் புறக்கணித்து விட்டதாக தெரிவிக்கிறார். கல்பாக்கம் இந்திரா காந்தி அணு ஆராய்ச்சி மையத்தின் கதிரியக்கம் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு பிரிவு முன்னாள் தலைவர் டாக்டர். ஆர். வெங்கடேசன்.

டார்வினின் முதல் புத்தகம் வெளியானது குறித்து அவருடன் பேசிய போது பல புதிய தகவல்களை பகிர்ந்துக் கொண்டார். அவரின் தகவல்படி, “டார்வின் தனது புத்தகத்தை வெளியிடவில்லை. அவர் அந்த ஆய்வு தகவல்களை, தனது மனைவிக்கு ஒரு சிறு குறிப்போடு சேர்த்து ஒரு பழைய பெட்டியில் மூடி வைத்துவிட்டார்”

“அந்த புத்தக குறிப்பின் மீது ‘Origin of Species by Natural Selection I think so’என்று குறிப்பிட்டு, அவரது மனைவிக்கு எழுதிய குறிப்பில், எனது அருமை மனைவியே, இந்த குறிப்புகளை புத்தக நிலையத்திற்கும் , நண்பர்களுக்கும் அனுப்பி விடவும்” என்று எழுதியிருந்தார் என்கிறார் ஆர். வெங்கடேசன்.

சார்லஸ் டார்வின்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு,

சார்லஸ் டார்வின்

உயிரினங்களின் தோற்றத்தை டார்வின் வெளியிடவில்லை

அதற்கு காரணம் மேலே சொன்னது போல டார்வினின் குடும்ப நிலை.

இது குறித்து பேசிய வெங்கடேசன், “தொடர்ந்து நிகழ்ந்த குழந்தைகளின் இறப்புக்கு காரணம் டார்வினின் அணுகுமுறை மற்றும் மத பழக்கங்களை கடைபிடிக்காமல் இருந்ததுதான் என்று எம்மா சண்டை போட்டார். ஆனாலும், டார்வின் செய்வதும் சரி என்ற நிலைப்பாட்டில் எம்மா இருந்தார். எனவே நீ சொன்னால் அதை பிரசுரிக்க அனுப்புகிறேன் என்று சொல்லி எம்மாவே அந்த புத்தக குறிப்பை முதன் முதலில் புத்தக நிலையத்திற்கு அனுப்பினார்” என்கிறார்.

அவரது ஆய்வுகளை கண்டு மிரண்டு போன புத்தக நிலையம் 1859ஆம் ஆண்டு நவம்பர் 24 அன்று அந்த ஆய்வுகளை தொகுத்து புத்தகமாக வெளியிட்டது. குறிப்பாக அந்த ஆய்வு மக்கள் புரிந்து கொள்ளும்படியான எளிய மொழியில் அறிவியலை கொண்டு சேர்த்தது என்கிறார் வெங்கடேசன்.

இந்த புத்தகம் வெளியான பிறகு பல்வேறு பதிப்புகளை கண்டது. இதன் ஒவ்வொரு பதிப்புகளிலும் விமர்சனங்களுக்கான பதிலையும் சேர்த்து பதிப்பித்தார் டார்வின். அப்படி இப்புத்தகத்தின் 5 வது பதிப்பில் தான் “Survival of the fittest” என்ற பதத்தை கொண்டு வருகிறார் அவர்.

இந்த வாசகம் தத்துவவாதி ஹெர்பர்ட் ஸ்பென்சர் என்பவருடையது. தன்னுடைய புத்தகத்திற்கு பொருத்தமாக இருக்கும் என்ற காரணத்தால் இதை கடன் வாங்கி கொண்டார் டார்வின். ஆனாலும், அதன் பொருள் தற்போதைய காலகட்டத்தில் வேறு வகையில் பயன்படுத்தப்படுவதை டார்வின் அறிந்தால் மனமுடைந்திருப்பார்.

சார்லஸ் டார்வின்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு,

டார்வின் எந்த இடத்திலும் இறைமறுப்பை தீவிரமாக கையிலெடுக்கவில்லை

தக்கன பிழைக்கும் (Survival of the fittest) என்பதன் உண்மைப் பொருள் என்ன?

சார்லஸ் டார்வின் கூற்றுப்படி இதன் அர்த்தம், ‘தக்கன பிழைத்துக்கொள்ளும்’ என்பதே ஆகும். அதாவது பூமியின் பரிணாம வளர்ச்சிக்கு ஏற்றவாறு தன்னை தகவமைத்து கொண்டு பொருத்திக் கொள்ளும் உயிரினமே தொடர்ந்து வாழும்.

இதுகுறித்து பேசிய ஆர்.வெங்கடேசன், “இது வெவ்வேறு இனங்களுக்கு பொருந்துமே தவிர, ஒரு இனத்திற்குள் இருக்கும் ஒரே உயிரிக்கு பொருந்தாது. உதாரணமாக மனிதர்களில் பலம், பணம், சமூக அந்தஸ்து பொருந்தியவர்களே பிழைப்பார்கள் என்று சொல்வது தவறு. இதை டார்வினே தெளிவுபடுத்தியுள்ளார். ஒரு இனம் அது வாழும் இயற்கை சூழலுக்கு ஏற்ப பரிணாம வளர்ச்சி பெற்று தன்னை தகவமைத்துக் கொண்டால் மட்டுமே வாழ முடியும் என்பதே இதன் அறிவியல் விளக்கம்” என்று கூறுகிறார்.

டார்வின் எதிர்கொண்ட மதரீதியான தாக்குதல்கள்

ஏற்கெனவே பின்பற்றி வரும் பழமையான கோட்பாடுகளை எதிர்த்து புதிய கோட்பாடு உருவாகும் போது எதிர்ப்புகள் கிளம்புவது இயல்பு. அப்படி டார்வினின் கோட்பாட்டுக்கும் எதிர்ப்பு எழுந்தாலும், கலீலியோ அல்லது டார்வினுக்கு முந்தைய ஆய்வாளர்களுக்கு நடந்த கொடுமைகள் நடக்கவில்லை என்கிறார் வெங்கடேசன்.

அதற்கு காரணமாக அன்றைய காலத்தில் வளர்ந்து வந்த ஜனநாயகத் தன்மை மற்றும் டார்வினுடைய சமூக நிலை ஆகியவற்றை முன்வைக்கிறார் அவர். டார்வினே தேவாலயத்தை சேர்ந்தவராகவும், இறையியல் படித்தவராகவும் இருந்தார். எனவே அங்கிருந்தே ஒருவர் வெளியே வந்து இந்த கேள்விகளை முன்வைக்கிறார் என்றே பார்க்கப்பட்டதாக தெரிவிக்கிறார் வெங்கடேசன்.

அதே சமயம் டார்வின் எந்த இடத்திலும் இறைமறுப்பை தீவிரமாக கையிலெடுக்கவில்லை. தனது குடும்பத்துடன் தேவாலயத்திற்கு செல்லும்போதும் கூட அவர்களை உள்ளே அனுப்பிவிட்டு வெளியே அமர்ந்து கொள்வாராம். கடவுளை மறுத்து பேசுவதை கையில் எடுக்காமல், தனக்கு முன் இருந்த கோட்பாடுகளை மட்டுமே அவர் கேள்விக்குள்ளாக்கியுள்ளார். இதனால், அவருக்கு பெரிதாக எதிர்ப்பு எழவில்லை என்கிறார் வெங்கடேசன்.

அப்படி பொதுவெளியில் டார்வின் கோட்பாடுகள் விமர்சனத்தை சந்தித்த போதெல்லாம் அவரை விட, அதை எதிர்கொண்டு விவாதித்து ஒன்றுமில்லாமல் ஆக்கியவர் உயிரியலாளர் தாமஸ் ஹக்ஸ்லி தான். பல முக்கியமான கூட்டங்களில் டார்வினின் கோட்பாடுகளுக்கு ஆதரவாக பேசி வெற்றி பெற்றுள்ளார் இவர்.

சார்லஸ் டார்வின்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு,

லண்டனில் உள்ள சார்லஸ் டார்வின் சிலை

டார்வின் ஏன் தேவை?

என்னதான் 170 ஆண்டுகளுக்கு முன்பு பரிணாம வளர்ச்சி குறித்த கோட்பாட்டை டார்வின் வெளியிட்டிருந்தாலும் இன்னமும் வெகுமக்கள் மனித பிறப்பு குறித்த பழைய நம்பிக்கைகளையே பின்பற்றி வரும் சமயத்தில் டார்வினின் கோட்பாடு முக்கியமாகிறது என்கிறார் ஆர்.வெங்கடேசன்.

“சமீபத்தில் கூட NCERT பாடப்புத்தகங்களில் இருந்து டார்வினின் பரிணாமக் கோட்பாடு நீக்கப்பட்டுள்ளது. அதற்க்கு காரணமாக அதிக பாடச் சுமை கூறப்படுகிறது. ஆனால், அறிவியலின் அடிப்படையே படிக்காமல் எப்படி அடுத்த கட்டத்தை படிப்பது? அதனால்தான் இந்தியா முழுவதும் உள்ள ஆயிரக்கணக்கான விஞ்ஞானிகள் ஒன்றிணைந்து அந்த பாடங்களை நீக்க கூடாது என்று அந்த துறைக்கு கடிதம் எழுதியுள்ளோம்” என்று தெரிவிக்கிறார் விஞ்ஞானி ஆர்.வெங்கடேசன்.

Facebook
Facebook
fb-share-icon
Telegram
WhatsApp
TekTamil.com
Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by TekTamil.
நன்றி
Publisher: பிபிசிதமிழ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *