உலகின் மிகப்பெரிய வைரக்கல்லை கண்டுபிடித்த இளைஞர்கள் என்ன ஆனார்கள்?

உலகின் மிகப்பெரிய வைரக்கல்லை கண்டுபிடித்த இளைஞர்கள் என்ன ஆனார்கள்?

வைரக்கல்

2017-ஆம் ஆண்டின் மிகச்சிறந்த செய்தியாக அது இருந்தது. உலகம் முழுவதும் வெளியான தலைப்புச் செய்திகள், சியரா லியோனில் ‘அமைதி வைரம்’ கண்டுபிடிக்கப்பட்டதை அறிவித்தன.

வைரத்துடன் ரத்தமும் துயரமும் பொதிந்த வரலாறு கொண்ட ஆப்பிரிக்க நாட்டில், இந்த வைரக்கல்லை விற்பதன் மூலம் கிடைக்கும் பெரும் பணம் இங்குள்ள மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்த பயன்படுத்தப்படும் என நம்பப்பட்டது.

ஆனால், இந்த ஊடக செய்திகளுக்குப் பின்னால் வைரத்தைத் தோண்டியெடுத்த நபர்களின் கடும் உழைப்பு இருக்கிறது.

அந்த ஐந்து பேரில் கோம்பா ஜான்புல், ஆண்ட்ரூ சாஃபியா இருவரும் தான் இளையவர்கள், இருவருமே பதின்பருவத்தினர்.

அழுக்குகளுக்கு மத்தியில் மின்னிய அந்த பெரிய வைரக்கல்லை அவர்களின் கண்கள் பார்த்தபோது, எல்லா கனவுகளும் மெய்ப்பட்டது போன்று இருந்தது.

ஆனால், ஆறு ஆண்டுகளுக்குப் பின் அவர்களின் அதிசயமான கண்டுபிடிப்பின் மீது விரக்தியின் கறை படிந்துள்ளது.

உலகின் பெரிய வைரம்
படக்குறிப்பு,

அந்த வைரத்தை முதலில் ஜான்புல் தான் கண்டுபிடித்தார்.

படிப்பை கைவிடும் நிலை

படிப்பில் சிறந்த மாணவனாக இருந்த ஆண்ட்ரூ சாஃபியா, வறுமை காரணமாக பள்ளிப்படிப்பை பாதியில் கைவிடும் நிலைக்குத் தள்ளப்பட்டார். 1991-2002 வரையிலான உள்நாட்டுப் போர் காரணமாக கோம்பா ஜான்புல்லின் குடும்பம் பிளவுபட்டு விட்டது.

உள்ளூர் மதபோதகர் ஒருவரால் நிதியுதவி அளிக்கப்பட்ட சுரங்கப் பணியில் ஈடுபட்ட ஐந்து பேருடன் இந்த சிறுவர்களும் இணைந்தனர். இதற்காக அவர்களுக்கு சம்பளம் வழங்கப்படவில்லை. ஆனால், அடிப்படை உபகரணங்கள் மற்றும் அவர்களுக்கும் அவர்களுடைய குடும்பத்தினருக்கும் உணவு கிடைத்தது. இந்த பணியில் எப்போதாவது வைரம் கண்டுபிடிக்கப்பட்டால் அந்த மதபோதகருக்கு பெரும் பணம் கிடைக்கும்.

விடியற்காலையில் பனங்கொட்டை விவசாயநிலத்திற்கு சென்று காலை உணவுக்கு முன்னதாகவே அங்கு வேலைகளை முடித்துவிட்டு, பின்னர் சுரங்கத்திற்கு சென்று நாள் முழுவதும் அதைத் தோண்டும் பணியில் ஈடுபடும் மிக மிக சோர்வான பணியை மேற்கொள்ள இருவரும் ஒத்துக்கொண்டனர். பள்ளிக்கு மீண்டும் திரும்புவதற்கு தேவையான பணத்தை சேர்ப்பதுதான் அவர்களின் நம்பிக்கையாக இருந்தது, ஆனால், கடும் பணி அதை சீர்குலைத்து விட்டது.

“என்னுடைய கனவு தகர்ந்துவிட்டது என நான் ஜான்புல்லிடம் கூறினேன்,” என்கிறார் ஆண்ட்ரூ சாஃபியா.

அந்த பணியில் ஈடுபட்ட ஆண்கள் பெருமழை மற்றும் கடும் கோடை கால வெப்பத்தை எப்படி சமாளித்தனர் என்பதை ஜான்புல் நினைவுகூர்கிறார்.

“எங்களை ஊக்கப்படுத்த நாங்களே தைரியப்படுத்திக் கொள்வோம். ஜோக்குகள் கூட கூறுவோம். எங்களிடம் புளூடூத் சாதனம் இருந்தது, அதில் இசையையும் ஒலிக்கச் செய்வோம்” என்கிறார் அவர்.

திடீரென ஒருநாள் பணக்காரராகி விட்டால் என்ன செய்வது என்றும் அவர்கள் கனவு கண்டுள்ளனர்.

இரண்டு அடுக்கு மாடி வீடும் டொயோட்டா எஃப்.ஜே. க்ரூசரும் வாங்க வேண்டும் என ஜான்புல் விரும்பினார். ஆண்ட்ரூ சாஃபியா படிப்பை முடிக்க விரும்பினார்.

உலகின் பெரிய வைரம்

பெரிய வைரம்

அந்த அதிர்ஷ்டமான நாளில், வேக வைக்கப்பட்ட வாழைப்பழங்களுடன் காலை உணவு மற்றும் பிரார்த்தனைக்குப் பின்னர் சுரங்கத்திற்கு சென்றனர்.

சுரங்கப் பணியாளர்கள் வைரத்தைத் தேடுவதில் சிறிது நேரமே செலவிட்டனர்.

13, மார்ச் 2017, வெள்ளிக்கிழமை அன்று, மழைக்கால தொடக்கத்தில் வெள்ளத்தை சமாளித்தல், சரளை கற்களை பிரித்தெடுத்தல், சுரங்கம் தோண்டுதல் உள்ளிட்ட பணிகள் அவர்களுக்கு இருந்தன.

அப்போது, ஜான்புல் கண்ணுக்கு மிளிரும் பொருள் ஒன்றை பார்த்தார்.

“ஓடும் தண்ணீருக்கு அடியிலிருந்து அந்த வைரக்கல்லை நான் பார்த்தேன். என்னுடைய உள்ளுணர்வுதான் அது, ஏனெனில் இதற்கு முன்பு நான் வைரத்தைப் பார்த்ததில்லை” என்கிறார் ஜான்புல்.

“அந்த கல்லை ஒரு நிமிடத்திற்கும் மேலே பார்த்துக்கொண்டு நின்றிருந்தேன். அதன்பின் நான் என் மாமாவிடம், “அந்த கல் மின்னுகிறது மாமா, இது என்ன வகையான கல் என கேட்டேன்” என்கிறார் அவர்.

ஜான்புல் நீருக்கடியில் சென்று அந்த கல்லை எடுத்தார்.

”அந்த கல் மிகவும் குளிர்ந்திருந்தது. அதை நான் எடுத்த உடனேயே “இது வைரம்தான்” எனக்கூறி என்னிடமிருந்து மற்றவர்கள் பறித்துக்கொண்டனர்,” என்கிறார்.

அந்த வைரக்கல் 709 கேரட் எடை கொண்டது. உலகிலேயே 14-வது மிகப்பெரிய வைரக்கல் இதுவாகும்.

பின்னர் அந்த பணியாளர்கள் மத போதகர் இமானுவேல் மோமோ-விடம் இதை தெரிவித்தார். அவர் அந்த வைரக்கல்லை கள்ளச்சந்தையில் விற்காமல் அரசாங்கத்திடம் ஒப்படைத்ததன் மூலம் வரலாறு படைத்தார்.

பின்னர் அந்த வைரக்கல் 6.5 மில்லியன் டாலர்களுக்கு ஏலத்தில் விற்கப்பட்டது.

உலகின் பெரிய வைரம்

”ஏமாற்றப்பட்டது போன்று உணர்கிறோம்”

சியரா லியோனில் ஆண்ட்ரூ சாஃபியா, ஜான்புல் போன்று பல்லாயிரக்கணக்கான மக்கள் அதிகாரபூர்வமற்ற சுரங்கங்களில் வேலை செய்கின்றனர். அவர்களுக்கு அதிர்ஷ்டம் இருந்தால் வைரத்தின் சிறிய துண்டு கிடைக்கலாம், ஆனால் இதுபோன்ற ஒரு முழு வைரக்கல் கிடைக்க வேண்டும் என்ற கனவு தான் பலரையும் இந்த வேலையைத் தொடர வைக்கிறது.

அந்த பணியாளர்களுக்கும் இதில் பங்கு கிடைக்கும் என முன்பு ஒப்புக்கொள்ளப்படது, அதேபோன்று அதன் லாபத்திலிருந்து உள்ளூர் வளர்ச்சிக்காக அரசுக்கு செல்லும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

அப்பணியாளர்களுக்கு ஆரம்ப தொகையாக ஒவ்வொருவருக்கும் 80,000 டாலர்கள் தரப்பட்டன. இந்த பணியில் முதன்முதலில் இணைந்தபோது ஆண்ட்ரூ சாஃபியா, ஜான்புல் இருவரும் எதிர்பார்த்ததைவிட இது குறைந்த தொகையாக இருந்தது. இவ்வளவு குறைந்த பங்கை பெறும்போது தாங்கள் ஏமாற்றப்பட்டதாக அவர்கள் உணர்ந்தனர்.

“எனக்கான பங்கை நான் பெற்றபோது, அதனை ஒரு வாரம் நான் தொடாமலேயே வைத்திருந்தேன். அதேசமயம், ஃப்ரீடவுனில் வீடு வாங்குவதற்காக நான் அங்கு சென்றேன்” என்கிறார் ஜான்புல்.

ஆண்ட்ரூ சாஃபியா படிப்பை தொடர கனடா செல்ல விரும்பினார். அவருடன் இணைவதற்கு ஜான்புல் விரும்பினார்.

இதற்காக பயணம், தங்குமிடம், பல்கலைக்கழக கட்டணம் ஆகியவற்றுக்காக, ஒரு முகவரிடம் இருவரும் 15,000 டாலர்களை செலுத்தியிருந்தனர். அவர்கள் இருவரும் அதற்காக கானாவுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். ஆறு மாதங்கள் அங்கு தங்கியிருந்த அவரும் தங்களின் பெரும்பாலான பணத்தை செலவழித்துவிட்டனர்.

விசா விண்ணப்பம் நிராகரிக்கப்பட்ட போது அவர்களின் திட்டம் சிதைந்துபோனது. பெரும்பங்கு பணம் செலவழிந்த பின்னர் சியரா லியோனுக்கே திரும்பி சென்றார் ஜான்புல். ஆண்ட்ரூ சாஃபியா வேறொரு பயணத்தை ஆரம்பித்தார்.

மூன்றாவதாக அவர் வேறொரு நாட்டுக்குப் பயணித்தார். அவருடைய பாதுகாப்பு கருதி அந்நாட்டின் பெயரை நாங்கள் இங்கே குறிப்பிடவில்லை. அங்கு காலையில் ஓட்டுநராக வேலை செய்துகொண்டே மாலையில் படிக்கலாம் என்றும் அவருக்குக் கூறப்பட்டது. ஆண்ட்ரூ சாஃபியா அங்கு சென்ற பின்னர், யதார்த்தம் வேறாக இருந்தது.

”கொட்டகைகளில் குதிரைகளை பார்ப்பதுதான் என் வேலை, அங்கே தான் உறங்கவும் சாப்பிடவும் வேண்டும். மற்ற பணியாளர்களுக்கு தங்கும் வசதி இருந்தது. ஆனால், நான் கொட்டகையிலேயே தூங்க வேண்டும்” என்றார்.

இது வைரம் மூலம் அவர் எதிர்ப்பார்த்த செல்வ செழிப்பான வாழ்க்கை அல்ல. தங்குமிடம் கூட இல்லாமல் அவர் மோசமான சூழலில் விடப்பட்டார்.

சியரா லியோனில் அவர் வாங்கிய சொத்து தவிர, அந்த பணம் முழுவதும் தீர்ந்துவிட்டது. இப்போது தன் வீட்டுக்கு செல்ல வேண்டும் என்று மட்டுமே அவர் விரும்புகிறார்.

உலகின் பெரிய வைரம்

அங்கீகாரம் இல்லை

இந்த வைரத்தைக் கண்டுபிடித்ததற்கு உரிய அங்கீகாரம் கூட கிடைக்காதது தான் அவர்களை மிகவும் தாக்கியது.

இதுகுறித்த ஊடக செய்திகளும் மத போதகருக்கே அதிக கவனம் அளித்தன. அதனைத் தோண்டியவர்கள் அரிதாகவே சுட்டிக் காட்டப்பட்டனர். தான் ஓரங்கட்டப்பட்டதாகவும் புறக்கணிக்கப்பட்டதாகவும் கருதுகிறார் ஆண்ட்ரூ சாஃபியா.

தன் பணத்தை வித்தியாசமாக பயன்படுத்தியிருக்க வேண்டும் என நினைக்கிறார் ஜான்புல்.

“அந்த பணம் எனக்குக் கிடைத்தபோது எனக்கு சிறுவயது தான். அதைத் திரும்பிப் பார்க்கும்போது அவ்வளவு நல்லதாக நான் நினைக்கவில்லை. பகட்டுக்காக உடைகள் வாங்குவது போன்றதைத்தான் நான் அப்போது செய்தேன். சிறியவர்கள் அப்படித்தானே இருப்பார்கள்” என்கிறார் அவர்.

“வெளிநாட்டுக்கு சென்றால் அங்கு நிறைய சம்பாதிக்கலாம் என்ற லட்சியம் எனக்கு இல்லாமல் இருந்திருந்தால், அங்கு வீணான பணத்தைக் கொண்டு நான் இங்கு நிறைய செய்திருக்க முடியும்” என்றார்.

இது அவர்கள் எதிர்பார்த்த வாழ்க்கையாக இல்லாமல் இருக்கலாம். ஆனால், ஃப்ரீடவுனில் அலுமினிய ஜன்னல் சட்டங்கள் செய்து நல்ல வாழ்க்கை வாழ்கிறார் ஜான்புல். வெளிநாட்டு கனவு நிறைவேறாவிட்டால் தானும் ஜான்புல்லுடன் இணைவதற்கு ஆண்ட்ரூ சாஃபியா நம்பிக்கையுடன் காத்திருக்கிறார்.

“நான் பிறக்கும்போது என் பெற்றோருக்கு வீடு இல்லை,” என கூறுகிறார் ஜான்புல்.

”ஆனால் என்னுடைய குழந்தைகள் ஃப்ரீடவுனில் உள்ள தந்தையின் வீட்டில் வளர்வார்கள். அதுதான் முக்கியமானது. நான் கஷ்டப்பட்டது போன்று என்னுடைய குழந்தைகள் கஷ்டப்பட மாட்டார்கள்” என்கிறார் அவர்.

Facebook
Facebook
fb-share-icon
Telegram
WhatsApp
TekTamil.com
Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by TekTamil.
நன்றி
Publisher: பிபிசிதமிழ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *