சதீஷ் தவன்: அப்துல் கலாமுக்காக பழியை ஏற்றுக் கொண்ட மாபெரும் விஞ்ஞானி பற்றித் தெரியுமா?

சதீஷ் தவன்: அப்துல் கலாமுக்காக பழியை ஏற்றுக் கொண்ட மாபெரும் விஞ்ஞானி பற்றித் தெரியுமா?

சதீஷ் தவன்

பட மூலாதாரம், Dr. APJ Abdul Kalam Centre

இந்திய விண்வெளி ஆராய்ச்சியின் தந்தை என்று அழைக்கப்படும் விக்ரம் சாராபாய் 1971ஆம் ஆண்டு மாரடைப்பால் தனது 52 வயதில் உயிரிழந்தபோது, விண்வெளி ஆராய்ச்சியில் அவர் விட்டுச்சென்ற பணிகளை யாரைக்கொண்டு தொடர்வது என்ற கேள்வி எழுந்தது.

காரணம் விண்வெளி ஆராய்ச்சிக்காக இந்தியா அப்போது அதிகளவில் முதலீடு செய்திருந்தது. எனவே, விண்வெளி ஆராய்ச்சி திட்டத்துக்கு தலைமை தாங்க சரியான நபராக அப்போதைய பிரதமர் இந்திரா காந்தியின் நினைவுக்கு வந்த பெயர் சதீஷ் தவன்.

அமெரிக்காவில் இருந்த சதீஷ் தவனை இந்திரா காந்தி தொலைபேசியில் அழைத்து இந்திய விண்வெளித்துறையின் தலைமைப் பொறுப்பை ஏற்கும்படி கூறியபோது, தவன் தரப்பில் இரண்டு நிபந்தனைகள் வைக்கப்பட்டது. முதலாவது, பெங்களூரில் உள்ள இந்திய அறிவியல் கழகத்தின் இயக்குநர் பொறுப்பில் இருந்து தன்னால் விலக முடியாது என்றும் விண்வெளி ஆணையத்தின் தலைமையகம் பெங்களூருவில் அமைக்கப்பட வேண்டும் என்றும் கூறினார். இரண்டையும் இந்திரா காந்தி ஏற்றுக்கொண்டார். அதன் பின்னர் நடந்தது அனைத்தும் வரலாறு.

இந்திய விண்வெளி திட்டம் தொடர்பாக கனவு கண்டவர் விக்ரம் சாராபாய் என்றாலும் அதனை நடத்திகாட்டியவர் சதீஷ்தவன்.

சதீஷ் தவன்

பட மூலாதாரம், ISRO

படக்குறிப்பு,

சதீஷ் தவன்

விஞ்ஞானிகளிடம் ஆரோக்கியமான போட்டியை ஏற்படுத்தியவர்

இந்திய விண்வெளி ஆராய்ச்சியில் சதீஷ் தவனின் பங்களிப்பு குறித்து சந்திராயன் 1 திட்ட இயக்குநர் மயில்சாமி அண்ணாதுரை பிபிசி தமிழிடம் பேசியபோது, “சமூகத்தின் தேவைகளுக்காக விண்வெளி ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டும் என்று விக்ரம் சாராபாய் நினைத்திருந்தார். விண்வெளி ஆராய்ச்சியின் தொடக்கத்தில் இந்தியா இருந்த காலகட்டம் அது. விக்ரம் சாராபாயின் தொலைநோக்கு பார்வையை பூர்த்தி செய்யக்கூடிய வகையில் கட்டமைப்பு போன்றவை நம்மிடம் அப்போது இல்லை. தும்பா ஏவுதல் நிலையம், சவுண்டிங் ராக்கெட் போன்றவைதான் இருந்தன.”

“அத்தகைய சூழலில் விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் தலைவராக சதீஷ் தவன் பொறுப்பேற்றார். தன்னால் நிர்வாக ரீதியாக மாற்றங்களை கொண்டுவர முடியும் என்று நம்பிய சதீஷ் தவன், விண்வெளி ஆய்வுக்கான பணிகளை ஒரே இடத்தில் மேற்கொள்வதை விட பல்வேறு பகுதிகளாக பிரித்தார்.”

“பெங்களூர், ஸ்ரீஹரிக்கோட்டா, ஆமதாபாத் என பல்வேறு இடங்களிலும் மையங்களை ஏற்படுத்தினார். ஒருதரப்பினர் செயற்கைகோளை தயாரிப்பார்கள், மற்றொரு தரப்பினர், விண்ணில் செலுத்தும் ராக்கெட் போன்றவற்றை தயாரிப்பார்கள். பின்னர் இவை அனைத்து ஒன்றினைக்கப்பட்டு ஏவுதல் தளத்துக்கு கொண்டு செல்லப்படும். இவ்வாறு தனித் தனியாக பணியாற்ற வைப்பதன் மூலம் விஞ்ஞானிகள் மத்தியில் ஆரோக்கியமான போட்டியை ஏற்படுத்தினார்.” என்று குறிப்பிடுகிறார்.

சதீஷ் தவன்
படக்குறிப்பு,

மயில்சாமி அண்ணாதுரை – சந்திரயான்-1 திட்டத்தின் இயக்குநர்

நிலாவுக்கு செல்வது, செவ்வாய்க்கு செல்வது, ராணுவத்திற்காக பயன்படுத்துவது என்பதை விட சமூகத்தின் தேவைகளுக்காக செயற்கைக்கோள்கள் பயன்பட வேண்டும் என்பதில் சதீஷ் தவன் அதிக அக்கறை செலுத்தியதாகவும் மயில்சாமி அண்ணாதுரை குறிப்பிடுகிறார்.

“சதீஷ் தவன் காலத்தில் நிலா, செவ்வாய் கிரகம் போன்றவை குறித்து பேசப்படவில்லை. எனினும், செயற்கைக்கோள் உருவாக்கம், ராக்கெட் உருவாக்கம் குறித்த அடித்தளம் அவர் காலத்தில் போடப்பட்டது. இந்தியாவால் தனக்கான செயற்கைக்கோள், ராக்கெட் போன்றவற்றை உருவாக்க முடியும் என்பது அவர் காலத்தில் செய்து காட்டப்பட்டது. இந்த தொழில்நுட்பத்தை சமுதாயத்தின் நலனுக்கு எப்படி பயன்படுத்துவது என்று யோசித்தார். எப்போது மழை, புயல் வரும் என்பதை கண்டறிவது, தொலைத்தொடர்புக்கு உதவ வேண்டும் என்று கூறித்தான் விண்வெளி ஆராய்ச்சிகள் தொடங்கப்பட்டன. ” என்கிறார் மயில்சாமி அண்ணாதுரை.

அனைவராலும் அணுகக்கூடியவராகவும் தவன் இருந்ததாக அவர் குறிப்பிடுகிறார். “நான் இஸ்ரோவில் சேர்ந்தபோது அதன் தலைவராக தவன் இருந்தார். அவரை எளித அணுக முடிந்தது. எனக்கு இயக்குநராக இருந்தவர் எனது சிமுலேட்டர் தொடர்பான ஆய்வை ஏற்று அனுப்பும்போது தவன் உடனடியாக அதனை அங்கீகரித்தார். ” என்றார்.

சதீஷ் தவன் – அப்துல் கலாம் இடையேயான உறவு

இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவரும் விஞ்ஞானியுமான அப்துல் கலாம் தனது விருப்பத்துக்கு உரியவராகே சதீஷ் தவானை கருதினார். தனது சுயசரிதையான அக்னிச் சிறகுகள் நூலில் சதீஷ் தவான் பற்றி அப்துல் கலாம் பின்வருமாறு குறிப்பிடுகிறார்.

“கேட்பவரை கிறங்கடிக்கும் அளவுக்கு எந்த விஷயத்தைப் பற்றியும் தர்க்க ரீதியாகவும் அறிவுக்கூர்மையுடனும் அக்குவேறு ஆணிவேராக அலசிப் பேசக்கூடிய நாவன்மை படைத்தவர் அவர். அடுக்கடுக்கான பட்டங்களைக் குவித்தவர். அவருடன் நாங்கள் நடத்தும் அறிவார்ந்த விவாதங்கள் எனக்கும் என் குழுவினருக்கும் உந்து சக்தியாக அமைந்தன. எங்கள் மனதிற்கு சக்தி ஊட்டிய ஊக்க டானிக் அவை”

சதீஷ் தவன்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு,

அப்துல் கலாம் – முன்னாள் குடியரசுத் தலைவர்

ஆகஸ்டு 10, 1979-ல் இந்தியா உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட முதல் செயற்கைக்கோள் ஏவுகலத்தை (SLV 3) விண்ணில் செலுத்தியது. இதன் திட்ட இயக்குநராக அப்துல் கலாம் இருந்தார். 4 கட்டங்களை கொண்ட இந்த சோதனை 2வது கட்டத்திலேயே தோல்வி அடைந்தது. ஏவுகலம் வங்கக்கடலில் விழுந்தது. ஏராளமான தொழிலாளர்களின் 10 ஆண்டுகால உழைப்பு வீணானது. இந்த தோல்விக்கு அப்துல் கலாமின் தவறான கணிப்பும் ஒரு காரணம். ஆனால், இந்த தோல்வியின் சுமையை சதீஷ் தவன் ஏற்றுக்கொண்டார்.

இது பற்றி அப்துல் கலாம் ஒரு நிகழ்ச்சியில் குறிப்பிடும்போது, “எஸ்.எல்.வி.யை விண்ணில் செலுத்துவதற்கு சில நிமிடங்களுக்கு முன்பாக அதனை விண்ணில் ஏவ வேண்டாம் என்று கணினி எச்சரித்தது. கட்டுப்பாட்டு அமைப்பில் கசிவு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இருந்தாலும் எரிபொருள் அதிகமாக இருப்பதால் எந்த பிரச்னையும் ஏற்படாது என்று கருதி, ஏவுதலை தொடர உத்தரவிட்டேன். 2ஆவது கட்டத்திலேயே பிரச்னை ஏற்பட்டு செயற்கைக்கோள் வங்கக் கடலில் விழுந்தது.

அப்போது சிறந்த தலைவரும் சிறந்த நபருமான சதிஷ் தவன் என் அருகில் வந்து, `பத்திரிக்கையாளர்களை சந்திப்போம் வாருங்கள்` என்று அழைத்தார். ஏராளமான பத்திரிகையாளர்கள் காத்துக்கொண்டிருந்தனர். நான்தான் திட்ட இயக்குநர் என்பதால் அச்சத்துடன் இருந்தேன். அப்போது இஸ்ரோவின் தலைவரான சதீஷ் தவன் பத்திரிகையாளர்களிடம், நாங்கள் தோல்வி அடைந்துவிட்டோம். எங்கள் குழுவினர் சிறப்பானவர்கள். அடுத்த ஆண்டு வெற்றி பெறுவோம் என்றார். தோல்விக்கான அனைத்து பழிகளையும் அவர் ஏற்றுக்கொண்டார் ” என்றார்.

அடுத்த ஆண்டு, அதாவது ஜூலை 18, 1980ல் எஸ்.எல்.வி. 3 மீண்டும் விண்ணில் ஏவப்பட்டது. இந்த முறை திட்டம் வெற்றியடைந்தது. உடனடியாக அப்துல் கலாமிடம் சென்ற சதீஷ் தவன் அவரை பத்திரிக்கையாளர்களை சந்திக்க கூறினார். தோல்விக்கான பழியை தான் ஏற்றுக்கொண்டு வெற்றிக்கான பாராட்டை தனது குழுவினருக்கு தவன் அளித்தார்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

Facebook
Facebook
fb-share-icon
Telegram
WhatsApp
TekTamil.com
Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by TekTamil.
நன்றி
Publisher: பிபிசிதமிழ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *