பிக்பாஸ் சீசன் 7 பார்ப்பது ஆபத்தானதா? டாக்சிக் மனநிலையை பரப்புகிறதா?

பிக்பாஸ் சீசன் 7 பார்ப்பது ஆபத்தானதா? டாக்சிக் மனநிலையை பரப்புகிறதா?

பிக் பாஸ் சீசன் 7

பட மூலாதாரம், Vijay television/Twitter

விஜய் தொலைக்காட்சியில் பிக் பாஸ் சீசன் 7 தொடங்கியதிலிருந்தே சர்ச்சைகளுக்கும் விமர்சனங்களுக்கும் பஞ்சமில்லை. எந்த சீசனிலும் இல்லாத அளவுக்கு 18 வயதுக்கு மேற்பட்டோருக்கான கிண்டல் – கேலிகள் (அடல்ட் கண்டெண்ட்), பாலியல் சீண்டல்கள் – அத்துமீறல் புகார்கள், உருவ கேலி உள்ளிட்டவை தொடர்ந்து நிகழ்ந்து கொண்டிருக்கின்றன.

எந்த சீசனிலும் நிகழாத ஒன்றும் இந்த சீசனில் நிகழ்ந்திருக்கிறது. தகாத வார்த்தைகளில் பேசி தங்களின் பாதுகாப்புக்கு பிரதீப் ஆண்டனி அச்சுறுத்தலாக இருப்பதாக எழுந்த புகாரின் அடிப்படையில் ’ரெட் கார்டு’ கொடுக்கப்பட்டு அவர் வெளியேற்றப்பட்டார்.

ஒரு வாரம் கடந்தும் அது தொடர்பான விவாதங்கள் நிகழ்ச்சிக்கு உள்ளேயும் வெளியேயும் தொடர்ந்துகொண்டிருக்கின்றன. போட்டியாளர் விசித்ரா, பாலியல் வல்லுறவு தொடர்பாகக் கூறிய ”அபத்தமான” கருத்தும் சமீபத்திய சர்ச்சையாக மாறியுள்ளது.

பிக் பாஸ் சீசன் 7

பட மூலாதாரம், Vijay television/Twitter

மாயா, பூர்ணிமாவுடன் ஓர் அணியாகவும், தற்போது விசித்ரா, அர்ச்சனாவுடன் இன்னோர் அணியாகவும் ‘பிக் பாஸ்’ வீடு பிரிந்து இருக்கிறது. இதில், போட்டியாளர்கள் பலரை எள்ளி நகையாடுதல், கிண்டல் செய்தல் உள்ளிட்டவற்றில் மாயா, பூர்ணிமா உள்ளிட்டோர் ஈடுபடுவதாகவும் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

மேலும், எந்த சீசனிலும் இல்லாத அளவுக்கு இந்த சீசன் ‘டாக்சிக்காக’ (மனவலியை ஏற்படுத்தும் வகையில்) இருப்பதாகப் பரவலாக கருத்து நிலவுகிறது. உபயோகிக்கக்கூடாத வார்த்தைகள் பலவற்றையும் போட்டியாளர்கள் நிகழ்ச்சியில் பேசி வருகின்றனர். இதற்கு ஆதாரங்களாக சில உதாரணங்களைக் கூறலாம்.

கேலி செய்வது அதிகரிக்கிறதா?

இரண்டு வாரங்களுக்கு முன் ‘வைல்ட் கார்டு’ என்ட்ரியாக நிகழ்ச்சிக்குள் நுழைந்த சின்னத்திரை நடிகை அர்ச்சனா, வந்த நாளிலிருந்து தன்னால் சக போட்டியாளர்கள் கொடுக்கும் அழுத்தத்தைத் தாங்கிக்கொள்ள முடியவில்லை எனக்கூறி அழுதுகொண்டே இருக்கிறார்.

பிக் பாஸ் சீசன் 7

பட மூலாதாரம், Vijay television/Twitter

அவரை மனநலம் சரியில்லாதவர் போன்றே மாயா, ஜோவிகா போன்ற போட்டியாளர்கள் சித்தரித்து வருகின்றனர். ‘நீ போய் டாக்டர பாரு’ எனக் கூறுகின்றனர். மனநல வளர்ச்சி குன்றியவர் என்பதற்கான பயன்படுத்தக் கூடாத வார்த்தையால் அவரைப் பேசுகின்றனர்.

‘வைல்ட் கார்டு’ எண்ட்ரியில் வந்தவுடனேயே அவர் ‘ஸ்மால் பாஸ்’ இல்லத்திற்குச் சென்றதால், சிறிய இடத்தில் அடைபட்டுக் கிடப்பதால் தனக்கு பயமாக இருப்பதாகவும் அர்ச்சனா கூறியதை அவர்கள் கேலி செய்துள்ளனர்.

இதனால், மாயா, பூர்ணிமா, ஜோவிகா, ஐஷூ உள்ளிட்டோரை ‘புல்லி கேங்’ என சமூக ஊடகங்களில் பலரும் பதிவிட்டு வருகின்றனர். பிக் பாஸ் நிகழ்ச்சியின் முன்னாள் போட்டியாளர்களான காஜல், தாமரை உள்ளிட்டோரும் ஊடகங்களுக்கு அளித்த பேட்டிகளில் இதே கருத்தைத் தெரிவித்துள்ளனர்.

தொடரும் உருவகேலி புகார்கள்

பிக் பாஸ் சீசன் 7

பட மூலாதாரம், Vinusha devi/Instagram

படக்குறிப்பு,

நிக்சனின் உருவகேலி கருத்து குறித்துப் பதிவிட்டுள்ள வினுஷா தேவி.

இரண்டு நாட்களுக்கு முன் ஒளிபரப்பட்ட நிகழ்ச்சியில் ஒரு போட்டியாளர் குறித்து வேறொருவர் பேசியதை திரையில் காட்டி இதை யார் சொன்னது என அவரே ஒப்புக்கொள்ளுமாறு ’பிக் பாஸ்’ கூறினார்.

அதில், பலரும் மற்ற போட்டியாளர்கள் குறித்து மோசமான கருத்துகளைக் கூறியிருந்தது பிக் பாஸ் இல்லத்தில் இருந்தவர்களையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது. குறிப்பாக, பிக் பாஸ் போட்டியிலிருந்து ஏற்கெனவே வெளியேற்றப்பட்ட சின்னத்திரை நடிகை வினுஷா குறித்து நிக்சன் சொன்ன கருத்து மோசமாக இருந்தது.

அவருடைய உடலமைப்பு குறித்து பூர்ணிமாவுடன் ஒப்பிட்டு நிக்சன் பேசியிருந்தார். அதுகுறித்து விசித்ரா தவிர்த்து யாரும் கேள்வி எழுப்பவில்லை.

நிக்சன் பேசியது குறித்து தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ள வினுஷா, “நான் எனக்காகப் பேச விரும்புகிறேன். ஆரம்பத்தில் எனக்கும் நிக்சனுக்கும் நல்ல புரிதல் இருந்தது. அவரை நான் என் தம்பியாகவே நினைத்தேன். ஆனால், அவர் என்னை ‘ட்ரோல்’ செய்ய ஆரம்பித்தவுடன் எல்லை தாண்ட ஆரம்பித்துவிட்டார்.

அவை என்னை காயமடையச் செய்ததால் அதை நிறுத்துமாறு கேட்டுக்கொண்டேன். ஒருநாள் அவர் என்னிடம் மன்னிப்பு கேட்டார். அது என்னை ட்ரோல் செய்ததற்காக மட்டுமே, உருவ கேலி செய்ததற்காக அல்ல,” எனத் தெரிவித்திருக்கிறார்.

பாதிக்கப்பட்டவரையே குற்றம் சாட்டும் போக்கு

பிக் பாஸ்

பட மூலாதாரம், Twitter

படக்குறிப்பு,

பாலியல் வல்லுறவு குறித்த விசித்ராவின் கருத்துக்கு எதிராக சமூக ஊடகங்களில் பலரும் பதிவிட்டு வருகின்றனர்.

அர்ச்சனா, விசித்ரா போன்றோர் பாலியல் அத்துமீறல்களில் பாதிக்கப்பட்டோருக்கு எதிராக பேசுவதாகவும் ஒரு கருத்து நிலவுகிறது.

பிரதீப்புக்கு ‘ரெட் கார்டு’ கொடுத்தது குறித்து விசித்ராவுக்கும் மாயா, பூர்ணிமா, ஐஷூ உள்ளிட்டோருக்கும் இடையே கருத்து மோதல் நிலவி வருகிறது. பிரதீப் ஆண்டனி தகாத வார்த்தைகளால் பேசியிருந்தால் அப்போதே அதற்கு எதிர்வினையாற்றியிருக்க வேண்டும் என்பது விசித்ராவின் கருத்தாக உள்ளது.

அதேபோன்று, பிரதீப்பிடம் நன்றாகப் பேசிக்கொண்டே அவருக்கு ‘ரெட் கார்டு’ கொடுத்துவிட்டனர் என அர்ச்சனாவும் கூறியிருந்தார். அப்போது, பாலியல் வல்லுறவு நடந்தால் உடனேயே புகார் கூறவில்லையெனில் அதனால் ஏற்படும் காயம் ஆறிவிடும், அவர்களுடைய புகாரை ஏற்க மாட்டார்கள் என விசித்ரா பேசியதை சமூக ஊடகங்களில் பலரும் கண்டித்திருந்தனர்.

விசித்ராவின் கருத்து பாதிக்கப்பட்டவர்களையே குற்றம் சாட்டும் மனநிலையில் இருப்பதாகப் பலரும் கருத்து தெரிவித்தனர். மேலும், நிகழ்ச்சியில் ஆண்களைக் கேலி செய்து பேசி வரும் மாயா, நிகழ்ச்சியில் உள்ள ஆண் போட்டியாளர்கள் அனைவருமே இந்த சீசனில் ‘வேஸ்ட்’ என்றும் கூறியிருக்கிறார்.

சீசன் தொடங்கிய ஆரம்பத்திலேயே விசித்ரா, போட்டியாளர் அனன்யாவின் ‘டாட்டூ’ குறித்துப் பேசி ‘கலாசார காவலர்’ போன்று நடந்துகொண்டதாகவும் கருத்து எழுந்தது.

போட்டியிலிருந்து வெளியேற்றப்பட்ட யுகேந்திரன், தன் மனைவி ஹேமமாலினியிடம் கலந்துரையாடிய காணொளி ஒன்றில், ‘பிக் பாஸ்’ இல்லம் ‘டாக்சிக்’ ஆனது எனக் கூறுகிறார்.

இப்படி இந்த சீசனில் பல சர்ச்சைக் கருத்துகள் எழுந்துள்ளன. இந்த நிகழ்ச்சியை 18 வயதுக்கு உட்பட்டோர் பலரும் பார்த்து வருவதாக நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கும் நடிகர் கமல்ஹாசனே கூறியிருந்தார்.

குழந்தைகளிடையே எதிர்மறை தாக்கத்தை ஏற்படுத்துகிறதா?

தேவநேயன்
படக்குறிப்பு,

தேவநேயன்

இந்த நிகழ்ச்சியை குழந்தைகள் பார்த்தால் அவர்களின் குழந்தைமையே போய்விடும் என்கிறார், பிபிசி தமிழிடம் பேசிய குழந்தைகள் நல ஆர்வலர் தேவநேயன்.

அவர் கூறுகையில், ”குடும்பச் சூழல், சமூக சூழல் இரண்டிலும் இருந்துதான் குழந்தைகள் பலவற்றைக் கற்றுக்கொள்கின்றனர். இதில் ஊடக வெளி என்பது சமூக சூழல். எது சரி, எது தவறு எனத் தெரியாத பருவத்தில் குழந்தைகள் இருக்கின்றனர்.

இப்போது குழந்தைகள் பெரும்பாலும் ஊடகங்களை சார்ந்தவர்களைத்தான் தங்கள் முன்மாதிரியாகக் கருதுகின்றனர். அதில் ஒரு கவர்ச்சி இருக்கிறது.

‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியில் நகைச்சுவை என்ற பெயரில் மற்றவர்களை உருவகேலி செய்தல், இழிவுபடுத்துதல் அதிகமாகி வருகிறது. ஆணாதிக்க சிந்தனையின் எச்சங்களும் நிகழ்ச்சியில் பரவியுள்ளன.

வீட்டுக்குள்ளேயே தினமும் இந்த நிகழ்ச்சியை குழந்தைகள் பார்க்கும்போது, அவர்களின் மனநலம் பாதிக்கப்படுகிறது. இது குழந்தைகளிடையே வன்மத்தை வளர்த்தெடுப்பதற்கான வாய்ப்பை அதிகரிக்கும்,” எனத் தெரிவித்தார்.

‘மனநல சிக்கல்களை அதிகரிக்கும்’

மனநலம்

பட மூலாதாரம், Getty Images

இதுதொடர்பாக பிபிசி தமிழிடம் பேசிய மனநல ஆலோசகர் சுஜாதா, “டாக்சிக்கான சூழலை போட்டியாளர்கள் சாதாரண சூழலாக மாற்றுவது போல் உள்ளது. தணிக்கை செய்யப்படாமல் இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது. குழந்தைகள் முதல் இந்த நிகழ்ச்சியைப் பார்க்கின்றனர்.

பதின்பருவத்தினரிடையே இந்த நிகழ்ச்சி பெருமளவில் தாக்கத்தை ஏற்படுத்தும். அவர்கள் ’டாக்சிக்காக’ பேசுவதெல்லாம் சாதாரணம்தான் என எடுத்துக்கொள்வார்கள். ஒவ்வொருவரின் தனித்தன்மையை வெளிக்கொண்டு வருவதற்கான எண்ணத்தில் தொடங்கப்பட்ட இந்த நிகழ்ச்சி தற்போது டாக்சிக் மனநிலையை ஊக்குவிப்பதாக உள்ளது.

போட்டியாளர்களுள் ஒருவர் (அர்ச்சனா) தனக்கு குறிப்பிட்ட ஃபோபியா (பயம்) இருக்கிறது என்று கூறியும் அதை மற்றவர்கள் குழுவாக சேர்ந்துகொண்டு கேலி செய்கின்றனர். மனநல பிரச்னை உடையவர்களுக்கு ஆதரவான போக்கு ‘பிக் பாஸ்’ வீட்டில் இல்லை.

மனநலம் குறித்து தொடர்ந்து எவ்வளவோ பேசினாலும் அதை மீண்டும் பொதுபுத்தி மனப்பான்மையில் இருந்து அணுகுவது போன்றே இந்நிகழ்ச்சி உள்ளது,” எனத் தெரிவித்தார்.

மேலும், பொதுவெளியில் ஒருவரை தரம் தாழ்ந்து பேசுபவர்கள், ’தான் நினைப்பதைப் பேசிவிட்டேன்’ என்ற மனநிலையிலேயே கேமராக்கள் இருந்தும் அவ்வாறு செய்வதாகவும் அது ஒரு டிரெண்டாக மாறி வருவதாகவும் சுஜாதா கூறுகிறார்.

”மனதில் நினைப்பதைப் பேசுவது ‘நேர்மையானது’ என்ற ஒரு பொதுக் கருத்து இங்கு நிலவுகிறது. அதனால்தான், தகாத வார்த்தைகளால் பேசுபவர்கள் வெளியில் தங்கள் பெயருக்கு களங்கம் வந்தாலும் பரவாயில்லை என அவ்வாறு பேசுகின்றனர். அவர்களுக்கு சமூக விழிப்புணர்வு இல்லை. உணர்ச்சிவயப்பட்ட மனநிலையில் அவ்வாறு பேசுகின்றனர்,” எனத் தெரிவித்தார்.

ஏற்கெனவே மனநல சிக்கல்கள் உடையவர்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டாலோ அல்லது நிகழ்ச்சியைப் பார்த்தாலோ மேலும் அந்த பிரச்னைகள் அதிகரிக்கும் எனவும் அவர் கூறினார்.

Facebook
Facebook
fb-share-icon
Telegram
WhatsApp
TekTamil.com
Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by TekTamil.
நன்றி
Publisher: பிபிசிதமிழ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *