
பட மூலாதாரம், Getty Images
தமிழ்நாடு முழுவதும் சிறார் கூர்நோக்கு இல்லங்களின் நிலை எல்லாவிதங்களிலும் மிக மோசமாக இருப்பதாகச் சொல்கிறது முன்னாள் நீதியரசர் சந்துரு தலைமையில் தமிழ்நாடு அரசு அமைத்த ஒரு நபர் ஆணையத்தின் அறிக்கை.
சட்டத்துடன் முரண்படக்கூடிய செயல்களைச் செய்ததால், 18 வயதுக்கு உட்பட்ட சிறார்கள் அடைக்கப்படும் சிறார் கூர்நோக்குப் பள்ளிகள் மாநிலம் முழுவதுமே மிக மோசமான நிலையில் இருப்பதாகக் கூறுகிறது அந்த அறிக்கை.
மேலும், ஏற்கெனவே மோசமான மன நிலையில் இருப்பவர்களை, இன்னும் மோசமாக்கி வெளியில் அனுப்புவதாகவும் தமிழ்நாடு அரசு அமைத்த ஒரு நபர் ஆணையத்தின் அறிக்கை தெரிவிக்கிறது.
நீதிபதி சந்துரு ஆணையம் அமைக்கப்பட்டதன் பின்னணி

இறந்த சிறுவனின் தாயார் பிரியா
தாம்பரத்திற்கு அருகில் உள்ள கன்னடபாளையம் குப்பை மேடு பகுதியைச் சேர்ந்தவர் ப்ரியா. இவரது கணவர் இறந்துவிட்டார். இவருக்கு ஆறு குழந்தைகள். அதில் மூத்த மகனான 17 வயது சிறுவன் ஓரிடத்தில் ‘வாட்ச் மேனாக’ வேலை செய்தவாறு, அங்கேயே வசித்து வந்தார்.
இவர் கடந்த 2022ஆம் ஆண்டு டிசம்பர் 29ஆம் தேதி தாம்பரம் ரயில் நிலையத்திற்கு வந்தார். அங்கிருந்த ரயில்வே காவலர்கள் அவரை சந்தேகத்தின் பேரில் கைது செய்து, செங்கல்பட்டு கூர்நோக்கு இல்லத்திற்கு அனுப்பி வைத்தனர்.
இந்நிலையில், டிசம்பர் 31ஆம் தேதியன்று ப்ரியாவை அழைத்த கூர்நோக்கு இல்லத்தின் அதிகாரிகள், அவரது மகனுக்கு உடல்நிலை மோசமடைந்திருப்பதால் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருப்பதாகத் தெரிவித்துள்ளனர். சிறிது நேரத்தில் மீண்டும் ப்ரியாவை அழைத்து அவரது மகன் இறந்துவிட்டதாகக் கூறியுள்ளனர்.
தனது மகனின் உடலைப் பார்க்க வந்த ப்ரியாவை, உடலைப் பார்க்கவிடாமல் தடுத்ததோடு, செல்போனை பறித்துக்கொண்டு செங்கல்பட்டில் உள்ள ஒரு வீட்டில் அடைத்து வைத்தனர்.

கூர்நோக்கு இல்லம் குறித்த அறிக்கை
இதற்கு அடுத்த நாள் செங்கல்பட்டு மருத்துவமனையின் பிணவறைக்கு அழைத்துச் செல்லப்பட்ட ப்ரியாவுக்கு அவரது மகனின் உடல் காட்டப்பட்டது. அப்போது தனது மகனின் உதடுகள் கிழிந்து, உடல் முழுவதும் காயங்கள் இருப்பதைப் பார்த்த அவரது தாயார், அவர் அடித்துக் கொலை செய்யப்பட்டிருப்பதாக குற்றம் சாட்டினார்.
இதையடுத்து ப்ரியாவை மீண்டும் ஓரிடத்தில் அடைத்து வைத்து கையெழுத்து வாங்க கூர்நோக்கு இல்ல அதிகாரிகள் முயன்றுள்ளனர்.
இந்த நிலையில் இந்த விவகாரத்தில் தோழமை அமைப்பைச் சேர்ந்த தேவநேயன், மதுரையிலிருந்து இயங்கும் மக்கள் கண்காணிப்பகம் ஆகியோர் தலையிட்டனர்.
இதற்குப் பிறகு, மாவட்ட முதன்மை குற்றவியல் நீதிபதி முன்பாக சிறுவனின் உடல் பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டது. அவர் அடித்துக் கொல்லப்பட்டதாக வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

பட மூலாதாரம், GETTY IMAGES
சித்தரிப்புப் படம்
இந்த விவகாரம் பெரிய சர்ச்சையாக உருவெடுத்த நிலையில், அந்த கூர்நோக்கு இல்லத்தின் பணியாளர்கள் ஆறு பேர் மீது வழக்கு தொடரப்பட்டு, அவர்கள் கைது செய்யப்பட்டனர். சிறுவனின் குடும்பத்திற்கு 10 லட்ச ரூபாய் நிதி உதவி அளிக்கப்பட்டது. வசிக்க ஒரு வீடும் ஒதுக்கப்பட்டது.
மேலும், கூர்நோக்கு இல்லங்கள், சிறப்பு இல்லங்கள், பாதுகாப்பு இல்லங்கள் ஆகியவற்றின் செயல்பாடுகள் குறித்து ஆராய ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி சந்துரு தலைமையில் உயர்மட்ட ஆணையம் ஒன்று அமைக்கப்பட்டது. இந்த ஆணையம்தான் தற்போது தனது பரிந்துரைகளை அரசிடம் அளித்துள்ளது.
சுமார் 500 பக்கங்களைக் கொண்ட இந்த ஆணையத்தின் அறிக்கை, தமிழ்நாட்டில் உள்ள சிறார் கூர்நோக்கு இல்லங்கள் குறித்த பல அதிர வைக்கும் தகவல்களை அளிக்கிறது. அங்குள்ள கட்டடங்கள், பணியாளர்கள் போன்ற எல்லாமே மோசமாக இருப்பதாகக் கூறுகிறது இந்த அறிக்கை.
தமிழ்நாட்டில் கூர்நோக்கு இல்லங்கள்

முன்னாள் நீதியரசர் சந்துரு
தமிழ்நாட்டில் சட்டத்துடன் முரண்படும் 18 வயதுக்குக் குறைவானோரை நீதிமன்ற விசாரணை முடியும்வரை வைத்திருக்கவும், அரவணைப்பும் பாதுகாப்பும் தேவைப்படும் சிறார்களை வைத்திருக்கவும் மூன்று வகையான இல்லங்கள் செயல்பட்டு வருகின்றன.
- Government Observation Homes எனப்படும் அரசினர் கூர்நோக்கு இல்லங்கள்
- Government Special Homes எனப்படும் அரசினர் சிறப்பு இல்லங்கள்
- Government Place of Safety எனப்படும் அரசினர் பாதுகாப்பு இல்லங்கள்
தற்போது தமிழ்நாட்டில் அரசினர் கூர்நோக்கு இல்லங்கள் எட்டு, சிறப்பு இல்லங்கள் இரண்டு, பாதுகாப்பு இல்லங்கள் மூன்று இயங்கி வருகின்றன. இவை அனைத்தும் சமூக நலன் மற்றும் பெண்களுக்கு அதிகாரமளித்தல் அமைச்சகத்தின் கீழ் உள்ள சமூக பாதுகாப்புத் துறையின் கீழ் செயல்பட்டு வருகின்றன.
இந்த இல்லங்களில் ஒட்டுமொத்தமாக 500 பேரை தங்க வைக்க முடியும் என்றாலும் தற்போது 130-160 சிறார்கள் இந்த இல்லங்களில் இருந்து வருகிறார்கள். இந்த எண்ணிக்கை மாறிக்கொண்டே இருக்கக்கூடியது.
கூர்நோக்கு இல்லங்களில் நடக்கும் கொடுமைகள்

பட மூலாதாரம், GETTY IMAGES
சித்தரிப்புப் படம்
நீதிபதி சந்துரு இந்த இல்லங்களுக்குப் பயணம் செய்து, அங்குள்ள கட்டடங்களின் நிலை, அவை செயல்படும் விதம், ஊழியர்கள் செயல்படும் விதம், உள்ளிருக்கும் இளஞ்சிறாரின் நிலை ஆகியவற்றை ஆய்வு செய்தார்.
இதுதவிர, இந்த இல்லங்களில் பணியாற்றுவோர், இந்தத் துறையின் அதிகாரிகள், இளஞ்சிறார் மத்தியில் பணியாற்றும் அரசு சாரா அமைப்புகள், பொதுமக்கள் ஆகியோரிடமும் கருத்துகளைப் பெற்றார். இவற்றின் அடிப்படையில், இந்த கூர்நோக்கு இல்லங்களின் தற்போதைய மோசமான நிலை, அவற்றை மாற்ற என்ன செய்ய வேண்டும் என்பது குறித்த பரிந்துரைகளை அரசிடம் அளித்துள்ளார்.
கூர்நோக்கு இல்லங்கள் இளஞ்சிறார் நீதிச் சட்டத்தின்படியே செயல்படுகின்றன. இங்கு வரும் சிறார்களை திருத்துவதும் சட்டத்துடன் முரண்படும் செயல்களில் இருந்து மடைமாற்றம் செய்வதும்தான் இந்த இல்லங்களின் அடிப்படையான நோக்கம். ஆனால், இந்த இல்லங்கள் அவற்றின் அடிப்படை நோக்கங்களுக்கே மாறாகச் செயல்பட்டு வருகின்றன என்கிறது இந்த அறிக்கை.
சட்டத்துடன் முரண்படும் ஒரு சிறுவன் கூர்நோக்கு இல்லத்திற்குக் கொண்டு வரப்படும்போது, அவர் எதற்காக அங்கே கொண்டுவரப்பட்டிருக்கிறார், அந்த இல்லத்தில் என்ன நடக்கும் என்பதை நல்ல முறையில் அவருக்கு விளக்க வேண்டும்.
கூர்நோக்கு இல்லங்களில் பொதுவாக கண்காணிப்பாளர்கள் இருக்க வேண்டும். உளவியல் ஆலோசகர்கள் இருக்க வேண்டும். ஆனால், இந்த கூர்நோக்கு இல்லங்களில் நடக்கும் சம்பவங்கள் முற்றிலும் வேறுவிதமாக இருப்பதாகக் கூறுகிறது அறிக்கை.

உள்ளே வரும் சிறுவர்களுக்கு யாரும், எந்த அறிவுரையும் சொல்வதில்லை. உள்ளே நுழையும் எல்லா சிறுவர்களும் நிர்வாணமாக்கப்பட்டு சோதிக்கப்படுகிறார்கள். இதுவே அந்த சிறுவர்களுக்குப் பெரும் மன உளைச்சலை ஏற்படுத்துகிறது.
செங்கல்பட்டு கூர்நோக்கு இல்லத்திற்கு வரும் ஒரு சிறுவன், Admission beating என்ற பெயரில், அங்கிருக்கும் பாதுகாவலர்களால் அடித்து நொறுக்கப்படுகிறார். இம்மாதிரியான ஒரு நிகழ்வில்தான் டிசம்பர் மாத இறுதியில் கன்னடபாளையத்தைச் சேர்ந்த சிறுவன் அடித்துக் கொல்லப்பட்டார்.
சிறுவர்கள் கூர்நோக்கு இல்லங்களுக்கு அழைத்து வரப்படும்போது, அவர்களது பெற்றோருக்கு எந்தத் தகவலும் சொல்லப்படுவதில்லை. முதல் தகவல் அறிக்கையின் பிரதிகளும் வழங்கப்படுவதில்லை.
தமிழ்நாட்டில் உள்ள பெரும்பாலான இல்லங்கள் காலனிய காலத்தில் கட்டப்பட்டவை. அதனால், அவை சிறைச்சாலையின் பாணியிலேயே இருக்கின்றன. சிறுவர்கள் காற்றுப்போக்கு, வெளிச்சம் இல்லாத அறைகளிலேயே அடைக்கப்படுகிறார்கள். மிகக் குறைவான உணவே அளிக்கப்படுகிறது. பல கூர்நோக்கு இல்லங்களில் கழிப்பறைக்கு கதவுகளே இருப்பதில்லை.
இதன் காரணமாக இந்த கூர்நோக்கு இல்லங்களில் இருந்து சிறுவர்கள் தப்பிச் செல்லவோ, தற்கொலை செய்யவோ முயல்கிறார்கள். 2023இல் மட்டும் பல்வேறு இல்லங்களில் இருந்து 32 சிறுவர்கள் தப்பிச் சென்றுள்ளனர். செங்கல்பட்டு இல்லத்தில் மட்டும் மூன்று பேர் இறந்துள்ளனர். கடலூரில் 17 வயது சிறுவன் இறந்து போயிருக்கிறான்.
இம்மாதிரியான கூர்நோக்கு இல்லங்களில், சிறுவர்கள் அவர்களது வயதின் அடிப்படையிலும் செய்த குற்றங்களின் அடிப்படையிலும் பிரித்து வைக்கப்பட வேண்டும். ஆனால், அப்படி இல்லாமல் எல்லோரும் ஒன்றாக அடைக்கப்படுவதால், வயது முதிர்ந்த சிறுவர்களுடன் இளஞ் சிறார்களுக்கு ஏற்படும் பழக்கம் அவர்களைத் தொடர் குற்றவாளியாக்கும் சூழலுக்கு இட்டுச் செல்கிறது.
ஏற்கெனவே இந்த இல்லங்களில் அடைபட்டிருந்தவர்களுக்கு இதே இல்லத்தில் வேலை வாய்ப்பு அளிக்கப்படுகிறது. இது பல்வேறு சிக்கல்களுக்கு இட்டுச் செல்கிறது.
பெருமளவில் நிதி ஒதுக்கியும் மோசமான நிலை

பட மூலாதாரம், FACEBOOK
இந்த இல்லங்களில் தங்கியிருக்கும் ஒவ்வொரு சிறாருக்கும் அரசு சராசரியாக சுமார் 7 லட்சத்து 26 ஆயிரம் ரூபாயைச் செலவழிக்கிறது, “ஒவ்வொரு குழந்தைக்கும் அரசு இவ்வளவு பெரிய நிதியைச் செலவழிக்கும் நிலையில், நிலைமை மிகச் சிறப்பாக இருக்க வேண்டும். ஆனால், நான் இந்த இல்லங்களுக்குச் சென்று பார்த்தபோது நிலைமை வேறு மாதிரியாக இருந்தது,” என்கிறார் நீதிபதி சந்துரு.
குறிப்பாக செங்கல்பட்டு கூர்நோக்கு இல்லத்தில் சிறப்பு இல்லம், பாதுகாப்பு இல்லம் ஆகியவையும் விதிகளுக்கு முரணாக ஒரே இடத்தில் செயல்பட்டு வரும் நிலையில், எல்லா மோசமான நடவடிக்கைகளும் அங்கு நடப்பதாகக் குறிப்பிடுகிறது நீதிபதி சந்துருவின் அறிக்கை. சமீபத்தில் ஒருவர் இறந்திருக்கும் நிலையில், பலர் தப்பிச் சென்றிருக்கிறார்கள்.
அதேபோல கோயம்புத்தூரில் உள்ள இல்லத்திலும் ஒரு சிறுவன் மற்ற சிறுவர்களால் கொல்லப்பட்டதோடு, பலர் தப்பிச் செல்வதும் வாடிக்கையாக இருக்கிறது. மூன்று சிறுவர்கள் தற்கொலை செய்யவும் முயன்றிருக்கிறார்கள். இங்குள்ள மைதானத்தில் சிறுவர்கள் விளையாட அனுமதிக்கப்படுவதில்லை. இது சிறுவர்களின் மன நிலையைக் கடுமையாகப் பாதிக்கிறது.
மதுரையில் உள்ள கூர்நோக்கு இல்லத்தை ஒரு தனியார் அமைப்பு நிர்வகித்து வந்தது. சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரைக் கிளை நீதிபதியான பி. ஜோதிமணி அங்கு திடீரென ஆய்வு செய்தபோது சுட்டிக்காட்டிய குறைகளை அடுத்து, இந்த இல்லத்தை அரசே நேரடியாக நடத்த ஆரம்பித்தது.
இந்த இல்லங்களை நடத்தும் சமூகப் பாதுகாப்புத் துறையில், பல பாதுகாப்புப் பணியிடங்கள் முன்னாள் மாணவர்களைக் கொண்டே நிரப்பப்படுகின்றன.
இவர்கள் தங்களுடைய காலத்தில் அனுபவித்த தண்டனைகளையே இப்போது கூர்நோக்கு இல்லத்தில் தங்கும் குழந்தைகளுக்கு அளிப்பதன் மூலமே அவர்களைக் கட்டுப்பாடாக வைத்திருக்க முடியும் எனக் கருதுகின்றனர்.
மேலும் குழந்தைகள் இல்லத்தின் அனுமதிக்கப்பட்ட முதல் ஒரு சில நாட்களில் கடுமையான தண்டனை வழங்குவது ஒரு பழக்கமாகவே உள்ளது. இது குழந்தையின் மனநிலையைக் கடுமையாகப் பாதிக்கிறது என இந்த ஆணையத்திடம் பலர் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இதுபோல பல முறைகேடுகள், சீர்கேடுகளை சந்துருவின் அறிக்கைச் சுட்டிக்காட்டுகிறது.
நீதிபதி சந்துரு குழுவின் பரிந்துரைகள்

சிறார் கூர்நோக்கு இல்லங்களைச் சீர்திருத்த நீதிபதி சந்துரு ஆணையம் பல்வேறு பரிந்துரைகளை இந்த அறிக்கையில் அளித்துள்ளது.
- கூர்நோக்கு இல்லங்களை சமூக பாதுகாப்புத் துறையே நடத்துவதற்குப் பதிலாக சிறப்பு சேவைகள் என்ற புதிய துறையை உருவாக்கி, அதற்குப் பொறுப்பாக ஒரு ஐ.ஏ.எஸ். அதிகாரியை நியமிக்க வேண்டும். அவரது குறைந்தபட்ச பணிக்காலம் 3 ஆண்டுகளாக இருக்க வேண்டும்.
- முன்பு இந்த இல்லங்களில் அடைபட்டிருந்தவர்களுக்கு கூர்நோக்கு இல்லப் பணிகளில் முன்னுரிமை தருவதை நிறுத்த வேண்டும். முறையான விதிகளை வகுத்து அதன்படி பணிச் சேர்க்கை நடக்க வேண்டும். இந்தப் பணியாளர்களுக்கு அவ்வப்போது முறைப்படி பயிற்சியளிக்க வேண்டும். அதற்கான பயிற்சித் திட்டத்தை உருவாக்க வேண்டும்.
- தற்போதுள்ள எல்லா இல்லங்களின் கட்டடங்களையும் இடித்துத் தள்ளிவிட்டு, இதற்கென உள்ள கட்டடக் கலை நிபுணர்களை வைத்து புதிய கட்டடங்களைக் கட்ட வேண்டும். எல்லா வருவாய் மாவட்டங்களிலும் ஒரு கூர்நோக்கு இல்லக் கட்டடம் கட்டப்பட வேண்டும். இந்தக் கட்டடங்கள் ஒரு சிறைச்சாலையைப் போல இருக்கக்கூடாது.
- ஒவ்வொரு இல்லத்திலும் மனநல நிபுணர்கள், ஆலோசகர்கள் ஆகியோர் நியமிக்கப்பட வேண்டும். மருத்துவர் ஒருவரை முழுநேரப் பணியில் நியமிக்க வேண்டும்.
- கூர்நோக்கு இல்லங்களில் எல்லா நேரங்களிலும் கண்காணிப்பாளரோ, துணை கண்காணிப்பாளரோ இருக்க வேண்டும். தற்போதுள்ள எல்லா காவலர்கள், பாதுகாவலர்களை வேறு துறைக்கு மாற்றிவிட்டு, ரிசர்வ் காவலர்களை சாதாரண உடையில் காவல் பணிக்கு நியமிக்க வேண்டும். அவர்களுக்கு இளஞ்சிறார் சட்டத்தின் பல்வேறு அம்சங்கள் குறித்துப் பயிற்சியளிக்க வேண்டும்.

தேவநேயன்
- சிறார்கள் 13 – 16 என ஒரு பிரிவாகவும் 16 – 18 என இன்னொரு பிரிவாகவும் பிரிக்கப்பட வேண்டும். இந்தப் பிரிவுகளுக்குள் குற்றங்களின் அடிப்படையிலும் அவர்கள் பிரிக்கப்பட வேண்டும். அவர்கள் இல்லத்தில் வந்து சேரும்போது நல்ல உடைகளை வழங்க வேண்டும்.
- சிறுவர்கள் போதைப் பழக்கத்திற்கு ஆட்பட்டிருந்தால், அவர்களை அதிலிருந்து மீட்பதற்கான சிகிச்சை அளிக்கப்படவேண்டும்.
- நல்ல உணவு அளிக்கப்படுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும். கழிப்பறைகள் நவீன முறையில் அமைக்கப்பட வேண்டும். துணிகளைத் துவைக்க எந்திரங்கள் வைக்கப்பட வேண்டும்.
- சிறுவர்களுக்குப் போதுமான பொழுதுபோக்கு வசதிகள் ஏற்படுத்தித் தரப்பட வேண்டும். விளையாட அனுமதிக்க வேண்டும். நூலக வசதி ஏற்படுத்தப்பட வேண்டும். சிறுவர்களை டிவி பார்க்க அனுமதிக்கலாம். ஆனால், அவர்கள் பார்க்கக்கூடிய படங்கள் என்ன என்பதைத் தேர்வு செய்து அளிக்க வேண்டும்.
- தற்போது எந்த சந்தை மதிப்பும் இல்லாத விஷயங்களைக் கற்றுக்கொடுப்பதை நிறுத்த வேண்டும். அவர்கள் வெளியில் சென்றதும், முறைசாரா கல்வி நிறுவனங்களில் சேர்ந்து பயில அரசு உதவி செய்யலாம்.
‘சட்டம் மாறினாலும் மன நிலை மாறவில்லை’
இந்த ஆணையம் அளித்திருக்கும் அறிக்கையை வரவேற்கிறார் குழந்தைகள் உரிமை ஆர்வலரும் தோழமை அமைப்பின் ஒருங்கிணைப்பாளருமான தேவநேயன். “தமிழ்நாட்டில் சிறார் நலச் சட்டம் சிறப்பாகத்தான் இருக்கிறது. ஆனால், இந்த இல்லங்களை நடத்துவோரின் மனநிலை காலனிய காலத்திலேயே இருக்கிறது. இங்கிருப்பவர்கள் குழந்தையின் நலனை மனதில் வைத்து வேலை பார்ப்பதில்லை.
இந்தக் குழந்தைகளை திருடன் என்றுகூட சொல்லக்கூடாது. ஆனால், இந்த இல்லங்களில் இருப்பவர்கள் குழந்தைகளை குற்றவாளியாகத்தான் நடத்துகிறார்கள்,” என்கிறார் தேவநேயன்.
சந்துரு தன் பரிந்துரைகளில் குறிப்பிட்டிருக்கும் சில விஷயங்களை உடனடியாகச் செயல்படுத்த வேண்டும் என்கிறார் தேவநேயன். “அறிக்கை சொல்வதைப் போல இங்கு பணியாற்றும் அலுவலர்கள் மொத்தமாக மாற்றப்பட வேண்டும். உள்ளே இருந்த சிறார்களுக்கு வேறு இடங்களில் வேலை தரலாம்.
இந்த இல்லங்களுக்கு உள்ளேயே கொடுக்கக்கூடாது. அது பல்வேறு பிரச்னைகளை ஏற்படுத்தும். அதேபோல, சமூக நல அலுவலர்கள் ஏதாவது மோசமான சம்பவம் நடந்தால் மட்டும் போய் பார்க்கக்கூடாது. அடிக்கடி ஆய்வு நடத்த வேண்டும். ஒவ்வொரு குழந்தையும் இங்கே சேர்க்கப்படும்போது முழுமையான உடல்நலப் பரிசோதனை நடத்தப்பட வேண்டும்,” என்றார்.

பட மூலாதாரம், Getty Images
ஆனால், அறிக்கை சொல்வதைப் போல எல்லா மாவட்டங்களிலும் கூர்நோக்கு இல்லங்கள் தேவையில்லை என்று கூறும் அவர், “இந்த இல்லங்கள் எல்லாம் வந்து சேரும் குழந்தையை மறுகட்டமைப்பு செய்யும் அமைப்பாக மாறவேண்டும். அதேபோல, சமூகநல அமைப்புகள் இங்கே வந்து குழந்தைகளைப் பார்ப்பதையும் பழகுவதையும் எளிமைப்படுத்த வேண்டும்.
இப்போது சமூக அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் வந்தால், அந்த இல்லத்தைச் சேர்ந்த ஆட்கள் கூடவே இருக்கிறார்கள். அப்படியிருக்கக் கூடாது.
அதேபோல, இந்த இல்லத்திலிருந்து வெளியேறிய குழந்தைகள் என்ன நிலையில் இருக்கிறார்கள் என்பதைப் பார்க்க வேண்டும். அவர்களை மூன்று ஆண்டுகள் கண்காணிக்க வேண்டும் என்று சொன்னாலும் அது நடப்பதில்லை. அந்தக் குழந்தைகள் மீது சமூகப் புறக்கணிப்பு இருக்கிறதா என்றும் பார்க்க வேண்டும்,” என்கிறார்.
இளஞ்சிறார்கள் சட்டத்துடன் முரண்படும் நிகழ்வுகள் அதிகரித்திருக்கும் நிலையில், அதை எதிர்கொள்ளும் வகையில் மாநிலத்தின் இளஞ்சிறார் சீர்திருத்த அமைப்புகள் இல்லை என்கிறார் இளைஞர் நீதிக் குழுமத்தின் உறுப்பினரான எஸ். ராமலிங்கம்.
“இப்போது சிறார்கள் சட்டத்துடன் முரண்படும் நிகழ்வுகள் அதிகரித்துள்ளன. ஆனால், அவர்களை மாற்ற வேண்டிய அமைப்பு ஒழுங்காக இல்லை. இங்கே வரும் சிறார்கள் மீண்டும் குற்றம் செய்யத் தூண்டப்படுவது போலத்தான் நிலைமை இருக்கிறது. எந்த இல்லத்திலும் தகுதி வாய்ந்த உளவியலாளர் கிடையாது.
இங்கு வரும் குழந்தைகளிடம் தொடர்ந்து பேசுவது, அவர்களைப் பல நடவடிக்கைகளில் பங்கேற்கச் செய்து என எப்போதுமே அவர்களை ஒரு செயலில் ஈடுபடுத்திக்கொண்டிருக்க வேண்டும். ஆனால், அதற்கெல்லாம் ஆட்களே கிடையாது. மொத்தமாக மாற வேண்டியது நிறைய இருக்கிறது,” என்கிறார் இளைஞர் நீதிக் குழுமத்தின் உறுப்பினர் எஸ். ராமலிங்கம்.
இதுபோன்ற கூர்நோக்கு இல்லத்தில் இருந்து வெளியேறிய சிலரிடம் கேட்டபோது, சந்துருவின் அறிக்கையை வரவேற்பதாகவே தெரிவித்தார்கள். “இந்த அறிக்கையில் இருப்பது போல நடந்தால் சட்டத்துடன் முரண்படும் இளஞ்சிறாரே இருக்க மாட்டார்கள்,” என்கிறார்கள் அவர்கள்.
இவர்களுமே, கூர்நோக்குப் பள்ளியில் இருந்தவர்களையே கூர்நோக்கு இல்லங்களில் பணியில் அமர்த்துவதை நிறுத்த வேண்டும் என்பதை வலியுறுத்துகிறார்கள். தவிர, கூர்நோக்கு இல்லங்களில் நடக்கும் ஊழல்களைக் கண்காணிக்கும் அமைப்பும் தேவை என்கிறார்கள் இவர்கள்.
நன்றி
Publisher: பிபிசிதமிழ்