புதுச்சேரி: குழந்தை கொல்லப்பட்ட விவகாரத்தில் என்ன நடந்தது? புதிய தகவல்கள் – பிபிசி கள ஆய்வு

புதுச்சேரி: குழந்தை கொல்லப்பட்ட விவகாரத்தில் என்ன நடந்தது? புதிய தகவல்கள் - பிபிசி கள ஆய்வு

புதுச்சேரி
படக்குறிப்பு,

கை கால்கள் கட்டப்பட்ட நிலையில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்ட சிறுமி.

புதுச்சேரியில் 9 வயதுக் குழந்தை பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டு கொலைசெய்யப்பட்ட வழக்கில் இரண்டு பேர் கைதுசெய்யப்பட்டிருக்கிறார்கள் என்றாலும் மாநிலத்தில் போதைப் பொருள் பரவல் குறித்த கவலை பரவலாகக் காணப்படுகிறது.

கடந்த இரண்டாம் தேதி காணாமல் போன குழந்தை, பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டு, கொல்லப்பட்டு சில நாட்களுக்குப் பிறகு சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அந்த பிரதேசத்தை மட்டுமல்லாமல் தமிழகத்தையும் அதிரவைத்திருக்கிறது.

இந்தச் சம்பவத்தில் என்ன நடந்தது என்பது குறித்து பிபிசி தமிழ் அந்தப் பகுதியில் கள ஆய்வு நடத்தியது.

புதுச்சேரியில் நடந்தது என்ன?

புதுச்சேரி முத்தியால்பேட்டை பகுதியைச் சேர்ந்த ஒரு தம்பதியின் 9 வயது குழந்தை கடந்த சனிக்கிழமை – மார்ச் 2ஆம் தேதி – காணாமல் போனது. குழந்தையின் தாயார் அருகில் உள்ள மருத்துவமனை ஒன்றில் வேலை பார்த்து வருகிறார். மாலையில், அவர் வேலையிலிருந்து திரும்பியதும் குழந்தையைக் காணவில்லை எனத் தேட ஆரம்பித்தவர், இரண்டு மணி நேரத்திற்குப் பிறகு காவல்துறையில் புகார் அளித்துள்ளார்.

“என் குழந்தை சாப்பிட்டுவிட்டு, எங்கள் சந்தில் விளையாடிக் கொண்டிருந்தது. நண்பகல் 12 மணி வரை குழந்தை விளையாடிக் கொண்டிருப்பதை அங்கிருந்த ஆட்கள் பார்த்திருக்கிறார்கள். அதற்குப் பிறகு யார் கண்ணிலும் குழந்தை படவில்லை. இதற்குப் பிறகுதான் குழந்தை கடத்தப்பட்டிருக்க வேண்டும்.” என்கிறார் குழந்தையின் தாயார்.

புதுச்சேரி
படக்குறிப்பு,

சிறுமிக்கு நீதி கேட்டு பொதுமக்கள் போராட்டம்

மூன்று நாள் தேடுதல்

குழந்தையின் பெற்றோர் இருவருமே வேலைக்குச் செல்பவர்கள். இவர்களது இரு குழந்தைகளும் அருகில் உள்ள அரசுப் பள்ளிக்கூடத்தில் சென்று படித்துவிட்டு, வீடு திரும்புவது வழக்கம். அதற்குப் பிறகு, இவர்கள் வசிக்கும் தெருவுக்கு அருகில் உள்ள இன்னொரு தெருவில் இருக்கும் சரணா என்ற மையத்தில் டியூஷன் படிப்பது வழக்கம்.

“வேலைக்குப் போய்விட்டு நான் ஐந்து மணிக்கு திரும்பி வந்தேன். குழந்தையைக் காணவில்லையெனத் தெரிந்ததும் தேட ஆரம்பித்தோம். பிறகு ஏழேகால் மணியளவில் காவல்துறையில் புகார் கொடுத்தோம். அவர்கள் இந்தத் தெருவிலும் அடுத்த தெருவிலும் மாறி மாறி தேடினார்கள். வீட்டிற்குள் தேடினார்கள். குழந்தை கிடைக்கவில்லை.”

“ஞாயிற்றுக்கிழமை, திங்கட்கிழமை, செவ்வாய்க்கிழமை என அடுத்த மூன்று நாட்களுக்குத் தேடியும் குழந்தை கிடைக்கவில்லை. புதன்கிழமை மதியம் 2.45 மணிக்குத் குழந்தையின் சடலம் கிடைத்தது” என்கிறார் குழந்தையின் தாய்.

குழந்தை காணாமல் போன தினத்தன்று சனிக்கிழமை என்பதால் பள்ளிக்கூடம் இல்லாத நிலையில், குழந்தை விளையாடிவந்த போதுதான் காணாமல் போனது. இரு நாட்கள் தேடியும் குழந்தை கிடைக்காத நிலையில், திங்கட்கிழமையன்று பெற்றோர், உறவினர், பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இதற்குப் பிறகு, காவல்துறை கண்காணிப்பாளர்கள் லட்சுமி, ஜிந்தா கோதண்டராமன் ஆகியோர் தலைமையில் தனிப்படைகள் அமைக்கப்பட்டு, அந்தப் பகுதியில் இருந்த அனைத்து சிசிடிவி கேமரா பதிவுகளும் ஆராயப்பட்டன.

அதில், அந்தக் குழந்தை அந்தப் பகுதியை விட்டு வெளியேறவில்லை என்பது தெரிந்ததும், சோலை நகர் பகுதியில் இருந்த ஒவ்வொரு வீடாக காவல்துறை சோதனை நடத்தியது. கால்வாய்கள், கடற்கரை போன்ற இடங்களிலும் தேடுதல் வேட்டை நடத்தப்பட்டது. கைவிடப்பட்ட இடங்களிலும் சோதனை நடந்தது.

இந்த நிலையில், குழந்தை டியூஷன் படிக்கும் பகுதியில் இருந்த மாட்டுத் தொழுவத்திற்கு அருகில் இருந்த கால்வாயில் ஒரு சாக்கு மூட்டையில் இருந்து குழந்தையின் சடலம் மீட்கப்பட்டது.

தேடுதல் வேட்டை நடந்துகொண்டிருந்த தருணத்தில், அந்தப் பகுதியில் இருந்த சந்தேகத்திற்கிடமான சிலரை அழைத்துச் சென்று காவல்துறை விசாரித்தது. அதில் குடும்பத்தினர் ரும் இல்லாமல், மாட்டுத் தொழுவம் அருகில் ஒரு சிறிய வீட்டில் வசித்துவந்த 59 வயதான விவேகானந்தன் என்பவர் சில விஷயங்களை ஒப்புக்கொண்டதாக காவல்துறை கூறுகிறது.

அதாவது, அதே பகுதியில் வசித்துவந்த கருணாஸ் என்ற 19 வயது இளைஞர் தனது இடத்தில் வைத்து குழந்தை ஒன்றுக்கு பாலியல் தொல்லை தந்துகொண்டிருந்ததை தான் பார்த்ததாக அந்த நபர் கூறியிருக்கிறார்.

புதுச்சேரி
படக்குறிப்பு,

சிறுமியின் வீட்டின் முன் குவிந்துள்ள மக்கள்

காவல்துறை விசாரணை

இதையடுத்து காவல்துறை கருணாஸைப் பிடித்து விசாரித்தது. அவர், தன்னுடன் சேர்ந்து விவேகானந்தனும் குழந்தையை பாலியல் துன்புறுத்தல் செய்ததாகவும், மயங்கிவிட்ட குழந்தையை இருவரும் கொலைசெய்து கால்வாயில் வீசியதாகவும் தெரிவித்ததாக காவல்துறை வட்டாரங்கள் கூறுகின்றன.

பொதுமக்கள் போராட்டம்

இந்த விவகாரம் புதுச்சேரி முழுவதும் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியது. பொதுமக்கள் ஆங்காங்கே மறியலில் ஈடுபட்டனர். குற்றவாளிகள் கடுமையாக தண்டிக்கப்படுவார்கள் என அரசுத் தரப்பு அளித்த வாக்குறுதியை அடுத்தே அவர்கள் கலைந்துசென்றனர். குற்றவாளிகளைக் கடுமையாக தண்டிக்க வேண்டும் என்றும் புதுச்சேரியில் போதை பரவலை தடுக்க வேண்டும் என்றும் கூறி, முழு அடைப்புப் போராட்டமும் நடைபெற்றது.

குழந்தையை கொன்றதாக கைதுசெய்யப்பட்டிருப்பவர்கள் கஞ்சா போதையில் இந்தச் செயலில் ஈடுபட்டதாகச் சொல்லப்படுவதால், புதுச்சேரியில் போதைப் பொருட்களின் நடமாட்டத்தைக் முழுமையாகக் கட்டுப்படுத்த வேண்டும் என்ற பேச்சு எழுந்திருக்கிறது.

“முதலில் புதுச்சேரியில் மது விற்பனை செய்யப்படும் நேரத்தைக் குறைக்க வேண்டும். சமீபத்தில் பல ரெஸ்டோ பார்களை 12 மணிக்கு மேலும் நடத்த அனுமதித்திருக்கிறார்கள். புதுச்சேரிக்கு வரி வருவாய் வேண்டும் என்பதற்காக இப்படிச் செய்கிறார்கள்.” என்கிறார் புதுச்சேரியைச் சேர்ந்த சமூக ஆர்வலரான அசோக் ராஜா.

“இதுபோன்ற பார்கள் சிலவற்றில், மது மட்டுமல்லாமல் எல்லாவிதமான போதைப் பொருட்களும் கிடைக்கின்றன. இதற்காக தமிழ்நாடு மட்டுமின்றி பல வெளிமாநிலங்களில் இருந்தும் ஆட்கள் இதற்காக இங்கே வருகிறார்கள். மற்றொரு பக்கம் புதுச்சேரி முழுக்கவும் கஞ்சா சர்வ சாதாரணமாகக் கிடைக்கிறது.”

“ஒரு காலத்தில் மதுவுக்குத்தான் புதுச்சேரி பிரபலம் என்பார்கள். இப்போது எல்லா போதைப் பொருட்களுக்கும் புதுச்சேரி பிரபலமான இடம் என்பதைப் போல ஆகிவிட்டது. கஞ்சா விற்பவர்களைப் பிடிக்க பல அணிகளை உருவாக்கினார்கள். அவர்கள் சிறு வியாபாரிகளைப் பிடிக்கிறார்களே தவிர, பெரிய வியாபாரிகளைப் பிடிப்பதில்லை. இப்படி கஞ்சா கிடைப்பதுதான் இது போன்ற குற்றங்களுக்குக் காரணம்” என்கிறார் புதுச்சேரியைச் சேர்ந்த சமூக ஆர்வலரான அசோக் ராஜா.

ஆளுநருக்கு எதிர்ப்பு தெரிவித்த மக்கள்

குழந்தையின் பெற்றோருக்கு ஆறுதல் சொல்ல புதுச்சேரியின் துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் வந்தபோது சிலர் எதிர்ப்புக் கோஷங்களை எழுப்பினர். இருந்தபோதும் அவர் குழந்தையின் பெற்றோரைச் சந்தித்து ஆறுதல் தெரிவித்துச் சென்றார். குற்றவாளிகளை விரைவில் விசாரித்துத் தண்டிக்க விரைவு நீதிமன்றம் ஒன்றை அமைக்கப்போவதாகவும் வாக்குறுதி அளித்தார்.

“அரசியல்வாதிகளும் காவல்துறையும் நினைத்திருந்தால் கஞ்சாவை ஒழித்திருக்கலாம். புதுச்சேரியில் சின்னச்சின்ன பெட்டிக் கடைகளில்கூட கஞ்சா கிடைக்கிறது. பள்ளிக்கூடங்களில் சின்னச் சின்ன பையன்கள் கூல் லிப், போதை ஸ்டாம்பு குறித்துப் பேசுகிறார்கள். இந்த விஷயத்தில் அரசுக்கு மட்டும் பொறுப்பு இல்லை. பெற்றோர்களும் தனது ஆண் குழந்தை எங்கே போகிறான், என்ன செய்கிறான் என்பதைக் கவனிக்கவேண்டும். நம் பிள்ளை ஒழுக்கமாக இருக்கலாம் என்ற எண்ணம் பெற்றோருக்கு இருக்கலாம். ஆனால், எல்லாத் தருணங்களிலும் உண்மையாக இருக்காது. ஒவ்வொரு பெற்றோரும் தனது குழந்தையை கூர்ந்து கவனிக்க வேண்டும்” என்கிறார் புதுச்சேரியைச் சேர்ந்த சமூக ஆர்வலரான தனலக்ஷ்மி.

புதுச்சேரி

பட மூலாதாரம், TWITTER

படக்குறிப்பு,

புதுச்சேரி உள்துறை அமைச்சர் நமச்சிவாயம்

‘காவலர்கள் மீது குற்றம் சுமத்தாதீர்கள்’

குழந்தையின் குடும்பத்தினருக்கு 20 லட்ச ரூபாயை ஆறுதல் தொகையாக புதுச்சேரி அரசு அறிவித்துள்ளது. இந்த விவகாரத்தில் காவல்துறை மீது குற்றம்சாட்டப்படுவதை உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் மறுக்கிறார்.

“இதுபோல நடக்கும்போதெல்லாம் காவல்துறை மீது குற்றம்சாட்டுவது வழக்கம்தான். காவல்துறை தொடர்ந்து உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டிருக்கிறது. புதுச்சேரியில் கஞ்சாவைக் கட்டுப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்பது தவறான குற்றச்சாட்டு. அரசியல் உள்நோக்கத்தோடு சிலர் அப்படிச் சொல்லலாம். இந்த அரசு வந்த பிறகு கஞ்சா கடத்துபவர்கள் நிறையப் பேரைப் பிடித்திருக்கிறோம். மற்ற மாநிலத்தைச் சேர்ந்த குற்றவாளிகளை அந்த மாநிலத்திலேயே சென்று பிடித்திருக்கிறோம். கஞ்சா பழக்கத்தை கட்டுக்குள் கொண்டுவந்திருக்கிறோம். இருந்தாலும் வேறு மாநிலங்களில் இருந்து புதுச்சேரிக்குள் வரும் சூழல் இருக்கிறது. தொடர்ந்து கண்காணிக்கிறோம் என்று தெரிவித்திருக்கிறார்.

இந்த விவகாரத்தில் தடயவியல் ரீதியான விசாரணைகள் தீவிரமடைந்திருக்கும் நிலையில், முத்தியால்பேட்டை காவல் நிலையத்தைச் சேர்ந்த 11 காவலர்களையும் இடமாற்றம் செய்து அரசு உத்தரவு பிறப்பித்திருக்கிறது.

Facebook
Facebook
fb-share-icon
Telegram
WhatsApp
TekTamil.com
Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by TekTamil.
நன்றி
Publisher: பிபிசிதமிழ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *