
பட மூலாதாரம், AFP
இஸ்ரேலின் தொடர் முற்றுகைக்கு இலக்காகியுள்ள காஸாவில் உணவு, குடிநீர், மின்சாரம் போன்ற அத்தியாவசியப் பொருட்கள் கூட கிடைக்கமாமல் மக்கள் அல்லல்படுகின்றனர். அத்தகைய மக்கள், அங்கு ஐ.நா. சார்பில் வைக்கப்பட்டிருந்த நிவாரணப் பொருட்களை முகாமுக்குள் புகுந்து எடுத்துச் சென்றுள்ளனர்.
ஆயிரக்கணக்கானோர் உள்ளே புகுந்ததால் யாராலும் அவர்களை தடுக்க முடியவில்லை. இதையடுத்து, ஐ.நா. சார்பில் தங்களது முகாம்களுக்கு கூடுதல் பாதுகாப்பு கோரப்பட்டுள்ளது.
ஐ.நா. மையத்திற்குள் புகுந்த மக்கள்
தெற்கு காஸா பகுதியில் உள்ள டெய்ர் எல்-பாலாவில் உள்ள விநியோக மையத்தில் இருந்து சனிக்கிழமையன்று மக்கள் உணவுப் பைகளை எடுத்துச் சென்றதை ஏ.எஃப்.பி செய்தி நிறுவனத்தின் புகைப்படங்கள் காட்டுகின்றன. உணவு மற்றும் ‘அடிப்படை உயிர்வாழும் பொருட்கள்’ விநியோக மையங்களுக்குள் காஸா மக்கள் நுழைவதை படங்கள் உறுதிப்படுத்துகின்றன.
“ரஃபா பகுதியில் நிவாரணப் பொருட்கள் இருந்த கிடங்குக்குள் மக்கள் நுழைந்துவிட்டனர்” என்று ஐ.நா.வின் பாலத்தீன ஏஜென்சி கூறுகிறது. இங்கு உணவு மற்றும் சுகாதார பொருட்கள் சில கையிருப்பில் இருந்தன. ஆனால், கிடங்கில் பொருட்களை மக்கள் எடுத்துச் சென்றுவிட்டதாக UNRWA-இன் செய்திக்குறிப்பு கூறுகிறது.

பட மூலாதாரம், AFP
நாங்கள் ஏன் இதனை செய்தோம்?
ஐ.நா. கிடங்குகளில் இருந்து கோதுமை, மாவு மற்றும் பிற அடிப்படைப் பொருட்களை எடுத்துச் சென்ற காசா மக்கள் சிலர் செய்தியாளர்களிடம் பேசினர்.
“எங்களிடம் மாவு இல்லை, எவ்வித உதவிகளும் கிடைக்கவில்லை, தண்ணீர் இல்லை, கழிவறைகள் கூட இல்லை” என்று அப்துல்ரஹ்மான் அல்-கிலானி ஏ.எஃப்.பி செய்தி முகமையிடம் கூறினார்.
“எங்கள் வீடுகள் அழிக்கப்பட்டன. எங்களைப் பற்றி யாரும் கவலைப்படவில்லை. உலக மக்களிடம் நாங்கள் வேண்டுகோள் விடுக்கிறோம். வல்லரசு நாடுகள் எங்களுக்கு எதிராக உள்ளன. எங்களுக்கு உதவி தேவை, எங்களுக்குத் தேவை இல்லை என்றால் நாங்கள் இதைச் செய்திருக்க மாட்டோம்.” என்று அவர் கூறினார்.

பட மூலாதாரம், AFP
காஸாவின் மையப்பகுதியில் உள்ள டெய்ர் அல்-பலாஹ் விநியோகக் கிடங்கிற்கு வெளியே, உம் சமீர் அல்-அத்தர் அப்பகுதியில் உள்ள மக்கள் எதிர்கொள்ளும் நிலைமைகளை விவரித்தார்.
“எங்களுக்கு சுத்தமான தண்ணீர், உணவு தேவை. நாங்கள் பசியில் வாடுகிறோம். இது முற்றிலும் நியாயமற்றது. (பசி, தாகத்துடன்) எங்கள் குழந்தைகளால் தூங்க முடியாது. அவர்களுக்கு உணவு, தண்ணீர் தேவை ” என்றார்.

பட மூலாதாரம், AFP
“இது எதிர்பார்க்கப்பட்டதே” – உலக உணவுத் திட்ட அமைப்பு
உலக உணவுத் திட்டத்தின் (WFP) மூத்த செய்தித் தொடர்பாளர் அபீர் எடெஃபா, காஸாவில் உள்ள பல உதவி விநியோக மையங்களில் சனிக்கிழமையன்று மக்கள் நிவாரணப் பொருட்களை எடுத்து சென்றது குறித்து பேசும்போது, மக்கள் எதிர்கொள்ளும் கடினமான நிலைமைகள்” காரணமாக இது எதிர்பார்க்கப்பட்டதுதான்” என்று கூறினார்.
முன்னதாக பிபிசியிடம் பேசிய அபீர் எடெஃபா “மக்கள் அவநம்பிக்கையுடன் இருக்கிறார்கள், அவர்கள் பசியுடன் இருக்கிறார்கள்” என்றார்.
சனிக்கிழமை ஏற்பட்ட தொலைபேசி, இணைய முடக்கம் போன்றவையும் இதற்கு பங்காற்றியிருக்கலாம் என்று எடெஃபா கூறினார். தனது குழுக்களுடன் தொடர்புகொள்ள முடியாத சூழல் ஏற்பட்டதால் உணவு விநியோகத்தை டபிள்யூ.எஃப்.பி நிறுத்த வேண்டியதாயிற்று என்றும் அவர் கூறினார்.
“இப்போது சேவை மெதுவாக திரும்பி வருவதால் நாங்கள் இன்று மீண்டும் தொடங்குகிறோம்.”

அபீர் எடெஃபா
காஸாவில் உதவி மையங்களுக்கு பாதுகாப்பு பலப்படுத்தப்படுமா?
காஸாவில் உள்ள உதவி மையங்களுக்கு பாதுகாப்பு பலப்படுத்தப்படுமா என்று ஐ.நா கேட்டுள்ளது
காசாவில் உள்ள பல கிடங்குகளில் சனிக்கிழமை நிகழ்ந்த சம்பவம் பற்றி UNRWA-இன் செய்தித் தொடர்பாளரிடம் பிபிசி செய்தியாளர் ரூத் காமர்ஃபோர்ட் பேசினார்.
டெய்ர் அல்- பாலாவில் மனிதாபிமான உதவிப் பொருட்கள் சேமிக்கப்பட்டு வைக்கப்பட்டிருந்த இடத்திற்குள் ஆயிரக்கணக்கானோர் நுழைந்ததாக கூறப்படுகிறது. பகல் நேரத்தில் அவர்கள் பொருட்களை எடுத்து சென்றதாக ஏஜென்சி உறுதிப்படுத்தியது.
எடுத்துச் செல்லப்பட்ட பொருட்களில் கோதுமை மாவு மற்றும் சுகாதார பொருட்களும் அடங்கும், “எரிபொருள் எதுவும் எடுத்துச்செல்லப்படவில்லை ” என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காஸாவில் உள்ள மற்ற கிடங்குகளில் பாதுகாப்பு கடுமையாக்கப்படுமா அல்லது கூடுதல் பொருட்களை அவர்கள் எதிர்பார்க்கிறார்களா என்பதை UNWRA தெளிவுபடுத்தவில்லை.

பட மூலாதாரம், AFP
இன்றுவரை, நிவாரணப் பொருட்களை ஏற்றிச் செல்லும் 80க்கும் மேற்பட்ட லாரிகள் காஸாவிற்குள் அனுமதிக்கப்பட்டுள்ளன.
ஹமாஸால் பயன்படுத்தப்படக் கூடும் என்பதால் காஸாவிற்குள் எரிபொருளை விநியோகிக்க இஸ்ரேல் அனுமதி மறுத்துள்ளது.
“ நான் காஸாவில் இருந்து சுமார் 10 கிலோமீட்டர் தொலைவில் உள்ளேன், இன்று காலை நான் கண்விழித்ததில் இருந்து, காஸாவுக்குள் இஸ்ரேல் தொடர்ந்து பீரங்கித் துப்பாக்கிச் சூடு நடத்தி வருகிறது ”என்று பிபிசி செய்தியாளர் ரூத் காமர்ஃபோர்ட் கூறுகிறார்.
“காஸாவைப் பொறுத்தவரை இஸ்ரேலின் செயல்பாடுகள் மிகவும் ரகசியமாக இருப்பதால் என்ன நடக்கிறது என்பதை தெரிந்துகொள்வது கடினமாக இருக்கிறது. சில இடங்களில் தொலைத்தொடர்பு சேவைகள் மீட்டெடுக்கப்பட்டாலும், காஸாவின் பொரும்பாலான பகுதிகள் துண்டிக்கப்பட்டு இருக்கின்றன.
இஸ்ரேல் காஸாவுக்கு உள்ளே சென்றது எங்களுக்கு தெரியும், இது தரைவழியான நடவடிக்கை என்பதும் தெரியும். கடந்த மூன்று வாரங்களாக அவர்கள் பேசிக்கொண்டிருக்கும் மிகப்பெரிய நடவடிக்கை இதுதான்.” என்று அவர் கூறினார்.
நன்றி
Publisher: பிபிசிதமிழ்